யார் தவறு

ஜூலை 16-31 2013

மாமியார்க்காரி கத்திக்கொண்டு இருந்தாள். என் பையன் சிங்கம்டி. உன்னைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சேன்னா, எண்ணிப் பத்தாவது மாசத்தில் புள்ளையக் கொடுத்துருவான். ஏதோ போனாப்போகுது ஆதரவில்லாத பெண்ணாச்சே, நாமளும் ஒதுக்கிட்டா, வாழவழியில்லாமல் தவிச்சு நிப்பியேன்னு யோசனை சொன்னோம்னா ரொம்பத்தான் ராங்கு காட்டிக்கிட்டு நிக்கிறயே!

கண்ணம்மா கண்கலங்கி நின்றுகொண்டு இருந்தாள். திருமணம் நடந்து அய்ந்து ஆண்டுகளாகிவிட்டது. கண்ட பெண்களிடமெல்லாம்  வம்பு செய்து கொண்டு ஊருக்குள் மைனர் என்று பேர் வாங்கித் திரிந்த கனகுக்குக் கல்யாணம் செய்து குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து, கண்ணம்மாவை மணம் முடித்து வைத்தாள். மாதாமாதம் வீட்டுக்கு விலக்கானாளே தவிர, விசேடமாக எதுவுமில்லை.

மாமியாருக்கு எப்படி விளக்குவது? அவன்தான் இரவானால் புறமுதுகைக் காமிச்சுக்கிட்டுப் புரண்டு படுத்துவிடுகிறானே! பிறகு, எங்கிருந்து குழந்தை பெத்துக்கிறது? மகன் சிங்கமாம். வெளியில் சொன்னா அசிங்கம். வெளியில் டபடப என்று டீசல் புல்லட் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திவிட்டு வந்த மகனிடம், இந்தாப்பா கனகு, ஒம் பொண்டாட்டி நான் சொல்றதைக் கேட்கமாட்டிங்கிறா. ஒன்னு இவளை அறுத்துவிட்டுட்டு வேற ஒருத்தியக் கட்டு. இல்லைன்னா நான் சொல்றபடி கேட்கச் சொல்லு. ஆஸ்தியெல்லாம் ஆள்றதுக்கு, ஒரு புள்ள வேண்டாமாயா?

மலடியைக் கட்டி வச்சுட்டு வயிறு வீங்கலையான்னு கேட்டா அவ எப்படிப் பதில் சொல்லுவா? நீங்க சொல்றபடி கேட்கலைன்னா, பிறகு எதுக்கு அவ இங்க இருக்கணும்? கைகால்களை அலம்பிக் கொண்டே கனகு அம்மாவிற்குப் பதில் சொன்னான். கண்ணம்மா ஆத்திரமும் அழுகையுமாக வெடித்துச் சொன்னாள். வாங்க, அத்தை சாமியாரைப் பார்த்துட்டு வந்துடலாம். இதைத்தானடி நானும் இம்புட்டு நேரமா கத்திக்கொண்டு இருக்கேன். எப்பா கனகு நாங்க போய் சாமியாரைப் பார்த்துவிட்டு வந்துறோம்பா!

போய்ட்டு வாங்க…. இதுலையும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால் கழுதையைக் கழட்டி விட்டுவிட்டு ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். நம்ம பரம்பரையில அய்ந்தாறு பொம்பளையுடன் வாழறது எல்லாம் சகஜம்தானே! எகத்தாளமாக கண்ணம்மாவைப் பார்த்தான்.

ச்சே! என்ன ஆம்பளை இவன்? எப்படி வாய்கூசாமல் இவனால் இப்படி எல்லாம் பேசமுடிகிறது? எப்போதுமே தண்டனை பெண்களுக்குத்தானா? அழுதழுது கண்கள் சிவந்து போயின. மதுரையிலிருந்து சக்கிமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி கருப்பாயூரணியில் இறங்கினார்கள். பேருந்து நிறுத்தத்திலேயே சாமியாரின் ஆசிரமத்திற்குச் செல்லும் வழிக்கு  அம்புக்குறி போட்டிருந்தார்கள். மாலை நேரமாக இருந்தாலும் ஆசிரமத்தில் ஆண்களும் பெண்களும் சாமியாரிடம் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டு இருந்தார்கள். அதில் பாதிப் பேர் சாமியாருடைய ஆட்கள் என்பதும், இவர்களுடைய குறைகளைத் தெரிந்துகொண்டு சாமியாருக்கு முன்கூட்டியே தெரிவிப்பவர்கள் என்பதும் மீதிப் பேருக்குத் தெரியாது.

உள் அறையில் தன்னைத் தரிசிப்பவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் பொன்னுக்கும் பொருளுக்கும் பதிலாக திருநீறையும், குங்குமத்தையும், பூவையும் கொடுத்து ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார் சுவாமி மாயானந்தா!

40 வயதுக்கு மேல் இருந்தாலும் நல்ல பளபளப்பாக இருந்தார். பன்னீரில் குளித்து நல்ல பசு நெய் கலந்த உணவுகளைத் தின்று கொழுத்துப் போய் ஒரு பொலிகாளையைப் போல காட்சியளித்துக் கொண்டு இருந்தார். மாலை மங்கி இரவு தொடங்கிய நேரம்! சாமியாருக்கு முன்னால் கண்ணம்மாளும் அவரது மாமியாரும் நின்றுகொண்டு இருந்தார்கள். சாமியார் தன்னுடைய வலதுகை விரல்களை மடக்கி நெற்றிக்கு நேராக வைத்து ஏதோ செய்தியைத் தெரிந்து கொள்வதைப்போல் சிறிது நேரம் இருந்துவிட்டு, இந்தப் பெண்ணுக்குக் குழந்தைப் பாக்கியமில்லை என்பதற்காக ஆண்டவனின் அருள்நாடி வந்திருக்கிறீர்கள், நான் சொல்வது சரிதானே என்றார்!

மாமியாரும் மருமகளும் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் கலந்த நிலையில் உறைந்து போய் இருந்தார்கள். சாமிகளுடைய ஞான திருஷ்டியைக் கண்டு பரவசமடைந்து, சாமி நீங்கதான் இந்தக் குறையைத் தீர்த்து வைக்கணும் என்று பவ்யமாக வேண்டினார்கள். எல்லாம் இறைவனுடைய சித்தம். அவனால் இயக்கப்படும் ஒரு கருவிதானம்மா நான் என்று சொல்லிக் கொண்டே கண்ணம்மாவின் கையைப் பிடித்து நாடி பார்த்தார். பின் அவளுடைய இமைகளை மேலே தூக்கி கண்களை நன்றாகப் பார்த்தார். நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தார். அவளுடைய உடல்வாகை தலையிலிருந்து கால்வரை நோட்டமிட்டவர் இன்னும் கைபடாத கன்னியாகத்தான் உள்ளாள் என்பதைத் தெரிந்து கொண்டார். (இதுக்கு மட்டும் நல்ல டிரெயினிங் எடுத்துக்குவானுங்க)

வீட்டுக்கு விலக்காகி எத்தனை நாளம்மா ஆயிற்று? 10 நாள் ஆச்சு சாமி என்றாள் கண்ணம்மா. பத்திக்கொள்கிற காலம்தான் என்பதைத் தெரிந்துகொண்ட மாயானந்தா மண்டபத்திற்குப் பின்னால் உள்ள சிறிய குளத்தில் மூழ்கி வரச் சொன்னார்.

சீடனிடம் ஏதோ ஒரு பொடியை எடுத்து வரச் சொன்னார். மூழ்கி வந்தவளுக்குச் சீடன் கொடுத்த பொடியை தூய பசும்பாலில் கலந்து குடிக்க வைத்தார். மாமியாரிடம், இன்று ஓர் இரவு மட்டும் உன் மருமகள் இந்த உள் அறையில் தூங்கட்டும் என்று அறையைக் காட்டினார். மாமியார் உள்ளே கூட்டிச் சென்று அங்குள்ள ஒரு கட்டிலில் படுக்க வைத்தார். சீடனிடம் அறையின் கதவைப் பூட்டி சாவியை மாமியாரிடம் கொடுக்கச் சொன்னார்.

எதுக்கு சாமி, என்னிடம் போய் சாவி கொடுக்கிறீர்கள்? சாமியார்களை நம்பாத காலமாயிற்றே இது. எனவே சாவி உன்னிடம் இருப்பதுதான் சரியானது. இன்று இரவு ஆண்டவனின் அருள் உன் மருமகளுக்குப் பரிபூரணமாகக் கிட்டும் என்று கூறிய சாமியாரின் வாக்கு மாமியாருக்கு இன்னும் நம்பிக்கையைக் கூட்டியது. மாமியாருக்குத் தங்குவதற்கு வேறு பக்கம் இடம் கொடுத்தார்கள்.

மகனிடம் சாமியாரின் அருமை, பெருமையெல்லாம் செல்பேசியில் அளந்தாள். காலையில் ஊருக்கு வருகிறோம் என்று கூறிவிட்டு சீடன் கொடுத்த ஜாதிக்காய் ஊறிய பாலைக் குடித்துவிட்டு என்ன நடக்கும் என்பது பற்றி ஏதும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்குள் போனாள்.

இரவு 11 மணி இருக்கும். மாயானந்தா கட்டிலில் தூங்கும் கண்ணம்மாவின் அருகில் இருந்தார். போதை கலந்த பாலைக் குடித்தவளுக்கு எல்லாம் கனவு போலத் தோன்றியது. சாமியாரின் உடலில் பூசியிருந்த  வாசனைத் திரவியங்களின் மணம் அவளின் நாசித் துவாரங்களில் ஏறி, அவளைக் கிளர்ச்சியடைய வைத்தது. இதுவரை அவள் எதற்காக ஏங்கிக் கொண்டு இருந்தாளோ, அந்த ஆசைகள் எல்லாம் மாயானந்தாவின் மூலமாக போதை மயக்கத்திலேயே நிறைவேறியது. எல்லாம் முடிந்ததும், கிறக்கத்தில் இருந்த கண்ணம்மாவின் ஆடைகளைச் சரி செய்துவிட்டு, தான் வந்த நிலவறைப்பாதை வழியாக தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

காலையில் கண்விழித்த மாமியார், மருமகள் இருந்த அறையைத் திறந்தார். கூடவந்த சீடன், மருமகளைக் குளிக்கவைத்து சாமியாரின் அறைக்கு அழைத்து வரச் சொன்னான். சாமியாரின் அறையெங்கும் ஊதுபத்தி, சாம்பிராணி வாசனை. குளித்துவிட்டு வந்த கண்ணம்மாவிடம் 10 பொட்டலங்கள் கொடுத்து, இதில் உள்ள மருந்தைத் தினமும் இரவில் பாலில் கலந்து குடித்துவா! உனக்கு நிச்சயம் பிள்ளை பிறக்கும் என்று சொன்ன மாயானந்தாவிடம், அவளை அறியாமலேயே ஒரு நாணத்தோடு பெற்றுக் கொண்டாள். மாமியாருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சாமிக்கு என்ன தட்சணை கொடுக்க வேண்டும் என்று கேட்டாள்.

ஒன்றும் வேண்டாம் எல்லாம் கடவுளுடைய கைவண்ணம் என்று அமைதியாகச் சொன்னார். அவர்தான் மொத்தமாக மருமகளிடம் இரவில் வாங்கி விட்டாரே?

ஒன்றரை மாதம் கழித்து திடீரென்று மயக்கமடைந்த கண்ணம்மாவின் கையைப் பிடித்து நாடி பார்த்து, கண்ணம்மா உண்டாகி இருக்கிறாள் என்று பக்கத்து வீட்டுக் கிழவி கூறினாள்.
கனகுவின் வீடு அமர்க்களப்பட்டது. பாண்டி கோயிலுக்குக் கடா வெட்டி விருந்து வைத்தார்கள். கனகுவின் மாமா ஒருவர் நல்லி எலும்பைக் கடித்துக்கொண்டே, மாப்பிள்ளை ஜல்லிக்கட்டில் எத்தனை மாட்டை அடக்கினவரு? ஆம்பளைச் சிங்கமாச்சே….. அவருக்குப் போய் குழந்தை பிறக்காமல் போய்விடுமா? இன்னும் நான்கு, அய்ந்து கறித்துண்டுகளை வாங்குவதற்கு மனம் போன போக்கில் கனகுவைப் புகழ்ந்து கொண்டு இருந்தார். கூட உட்கார்ந்து சாப்பிட்டவரெல்லாம் ஆமாம்… ஆமாம் என்று கோரஸ் பாடினார்கள்.

பாவம் கனகு, மாடுபிடிச் சண்டையில் ஒரு மாடு, தன் கொம்புகளால் அவனைத் தூக்கி வீசி ஓங்கி ஒரு மிதிமிதித்து, குழந்தை பெற்றுக் கொள்ளவே தகுதியில்லாதவனாய் ஆக்கிவிட்டது என்பதை எப்படிச் சொல்வான்? என்ன இருந்தாலும் ஆண் பிள்ளையாயிற்றே! ஆண்மை பறிபோனதை ஒப்புக்கொள்வானா?
இப்போதெல்லாம் மாமியார், மருமகளைத் தாங்கு தாங்கென்று தாங்கிக் கொண்டு இருக்கின்றார். கண்ணம்மா மகிழ்ச்சியுடன் வீட்டை வளைய வளைய வருகின்றாள்.

குழந்தை பிறக்கும் காலம் நெருங்கிவிட்டது. கனகு பித்துப் பிடித்தவன் போல் தாடியுடன் அலைந்து கொண்டு இருந்தான். ஊர் மக்களோ அவனைப் பார்க்கும் போதெல்லாம் பிள்ளை நன்றாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக சாமிக்கு நேர்ந்துகொண்டு மயிரை வளர்ப்பதாகப் பேசிக் கொண்டார்கள். போதாதகுறைக்கு, பக்கத்தில் உள்ள டீக்கடையில் எப்போது பார்த்தாலும், எனக்கொரு மகன் பிறப்பான் _ அவன் என்னைப் போலவே இருப்பான் என்ற பாட்டையே போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

திருடனுக்குத் தேள் கொட்டியது போலாகிவிட்டது கனகுவின் நிலைமை!

மாயானந்தா ஆசிரமத்தில், சாமியார் தியானம் செய்வதற்கு இமயமலை சென்றுவிட்டார் என்று கூறி அவரை நிலவறையில் போட்டு மூடி அவர் கதையை முடித்துவிட்டு கிரானைட் கற்களைப் பதித்து, ஊரை ஏய்த்து, இப்பொழுது கார்ப்பரேட் சாமியாராக வலம் வருகிறான் அவரது சீடன்  கர்ப்பானந்தா என்ற பெயரில்.

எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும் மருத்துவம் முன்னேறி இருந்தாலும் கடவுள் அருளால்தான் குழந்தை பிறக்கும் என்ற மூடநம்பிக்கை மக்கள் மனதிலிருந்து விலகாத வரை இந்த மாதிரி சாமியார்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *