திராவிடர்களை வீழ்த்தும் மூட மதப் பண்டிகைகள் !- மஞ்சை வசந்தன்

2024 அக்டோபர் 16-30 2024 முகப்பு கட்டுரை

ஆரியர்கள் இந்தியாவிற்குள் பிழைப்பிற்காக நுழைந்து பரவி வாழத் தலைப்படுவதற்கு முன்னமேயே, கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்த தொல்குடி மக்கள் தமிழர்கள். உலகில் மற்ற மக்கள் நாகரிகம் பெறுவதற்கு முன்பே நகர நாகரிக வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

கடல் கடந்து பாய்மரக் கப்பல்கள் மூலம் வணிகம் செய்தனர்; சிறந்த கட்டடக்கலை வல்லமையும் பெற்றிருந்தனர். பிரமிடுகள் தமிழர்கள் கட்டியவை என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பிரமிடு என்பதே தூய தமிழ்ச் சொல்தான். பெரும் இடு என்பதுதான் பிரமிடு என்று திரிந்தது.

எகிப்திய, மெசப்பட்டோமிய நாகரிகங்களும் தமிழர்களுடையதே! மிசைப்பட்டணம் என்பதே மெசப்பட்டோமியா என்று திரிந்தது.
கல்லணை தமிழர்கள் நீர் மேலாண்மைக்கும், கட்டுமானப் பொறியியல் நுட்பத்திற்கும் சரியான சான்றாகும்.

மருத்துவத்தில் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கினர். வான் ஆய்வில் தமிழர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். சூரியன், நிலவு இவற்றை அடிப்படையாக வைத்து நாள், மாதம், ஆண்டு இவற்றைக் கணக்கிட்டனர்.

தமிழர் மொழியான தமிழே உலகின் மூத்தமொழி. உலகிலுள்ள பல மொழிகள் தமிழிலிருந்து உருவானவையே! “ஆங்கிலத்தில் 75% சொற்கள் தமிழிலிருந்து வந்தவையே!“ என்று ஆங்கில மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர்.

ஜப்பான் மொழி தமிழிலிருந்தே வந்தது என்று ஜப்பானிய மொழியியல் அறிஞர் சுசுமோ ஓனோ ஆய்வு செய்து கூறியுள்ளார். இன்றைக்கும் தமிழ்தான் செம்மொழி என்ற உண்மையான தகுதியைப் பெற்று விளங்குகிறது. அரசியல் நிர்ப்பந்தங்களால் இன்றைக்குச் சில மொழிகள் செம்மொழியென்று அறிவிக்கப்பட்டாலும், தமிழ் மட்டுமே உண்மையில் செம்மொழி என்பதை ஆய்வு நுட்பமும், நேர்மையும், உண்மையும் கொண்டவர்கள் கூறுவர்.
கணிதத்தில் தமிழர்கள் உலகில் சிறந்த விளங்கினர். பித்தாகரஸ் தேற்றமே தமிழரின் கணித சூத்திரத்திலிருந்துதான் உருவாக்கப்பட்டது என்பது பலரும் அறியாத உண்மையாகும்.

“ஓடியநீளந்தன்னை ஓரெட்டுக் கூறாக்கி
கூறினில் ஒன்றைத் தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால்
நீடிய கர்ணம்தானே”

என்பதே அச்சூத்திரம். கோதையர் என்ற தமிழரின் கணித சூத்திரத்தை அடிப் படையாக வைத்தே, பித்தாகரஸ் தேற்றம் உருவாக்கப்பட்டது.
மொழிக்கு இலக்கணம் வகுத்ததில் தொல்காப்பியத் திற்கு இணையான இலக்கண நூல் உலகில் வேறு எதுவும் இல்லை.
திருக்குறளுக்கு இணையான வாழ்வியல் நூல் உலகில் வேறு எதுவும் இல்லை.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

போன்ற உயரிய சமத்துவ சிந்தனைகளை தமிழர்களைத் தவிர, உலகில் வேறு எவரும் வழங்கியதில்லை. வாழ்வியல் முறையிலும் தமிழர்கள் சீரிய பகுத்தறிவு வாழ்வும், மனித நேய வாழ்வும், சமத்துவ வாழ்வும் வாழ்ந்தனர். அவர்களிடம் எந்த மூட நம்பிக்கைகளும், உயர்வு தாழ்வும் இல்லை.
சமுதாயத்தில் பெண்கள் உயர்நிலையில் இருந்தனர். தாய்வழிச் சமுதாயம் தமிழர்களுடையது என்பதால் பெண்கள் சொத்துக்கும் (உடைமைக்கும்) வீரத்திற்கும், நிருவாகத்திற்கும் உரியவர்களாய் இருந்தனர்.

நிலத் தலைவர்கள், சாதனைப் பெண்கள், படைவீரர்கள் மதித்து வணங்கப்பட்டனர். மக்களுக்குத் தொண்டாற்றிய பெருமக்கள் அந்தணர்கள் எனப்பட்டனர்.
நிலத்தை நிருவாகம் செய்தவர் அரசர் எனப்பட்டனர். படைகளை வீரத்துடன் நடத்தியவர்களாகவும் அவர்கள் இருந்தனர். பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கும், விளையும் இடங்களில் இருந்து மக்கள் வாழும் இடங்களுக்கும் கொண்டு சென்று வணிகம் செய்தவர்கள் வணிகர்கள். உழுது பயிரிட்டு பொருட்களை விளைவித்தவர்கள் வேளாளர்கள் எனப்பட்டனர்.

சுசுமோ ஓனோ

இந்த அரசர், வணிகர், வேளாளர் மூன்றும் தொழிற்பிரிவுகளேயன்றி ஜாதிப் பிரிவுகள் அல்ல. காரணம், அரசர், வணிகர், வேளாளர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக்கொண்டனர். இந்த மூன்று பிரிவினரிடமிருந்தும் தொண்டு செய்ய வந்தவர்கள்தான் அந்தணர்கள் எனப்பட்டனர். இதுவும் ஜாதிப் பிரிவு அன்று.

இந்நிலையில் தமிழர்களிடம் எந்தக் கடவுள் நம்பிக்கையும் இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமையால் அது சார்ந்த எந்தச் சடங்குகளும் இல்லை. தங்களுக்குப் பயன்படுபவர்கள், பயன்படுவனவற்றிற்கு நன்றி பாராட்டுவது மட்டுமே தமிழர் மரபாக இருந்தது. வீரர்கள், சாதனைப் பெண்கள், நிலத் தலைவர்களுக்கு நடுகல் நட்டு மரியாதை செலுத்தினர். உடல் இன்பத்திற்கும், வாரிசுகளைப் பெறுவதற்கும் பயன்பட்ட ஆண்- பெண் உறுப்புகளைப் பொருத்தி மரியாதை செலுத்தினர். குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த பெரியவர்களை நினைத்து மரியாதை செலுத்தும் வழக்கமும் தமிழரிடையே இருந்தது. எனவே, தமிழர்களிடம் எந்த மூடநம்பிக்கைகளும் இல்லை.

ஆரியர் வருகையால் தமிழர் சிறப்பிழத்தல்

இப்படி அறிவார்ந்த, சமத்துவ, மனிதநேய சமுதாயமாய் வாழ்ந்த தமிழர்களிடையே பிழைப்
பதற்காக அயல்நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியர்கள், தொடக்க காலத்தில் தமிழர்களிடையே பிச்சையெடுத்தே வாழ்ந்தனர். ஆரியர்கள் தங்களை பரதேசி என்று தமிழர்களிடை,யே அறிமுகம் செய்து கொண்டனர். பரதேசி என்ற அறிமுகத்தோடு ஆரியர்கள் பிச்சையெடுத்ததால், பின்னாளில் பிச்சையெடுத்தவர்களைக் குறிக்க பரதேசி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

பிச்சையெடுத்துப் பிழைத்த ஆரியர்கள் சிறுசிறு கூட்டமாக ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கினர். அந்நிலையில் ஆரியர்கள் மிகமிகச் சிறு எண்ணிக்கையில் இருந்தனர். தமிழர்கள் மண்ணின் மக்கள் என்பதால் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தனர்.

ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தபோது ஆண்களாகவே வந்ததால், அவர்கள் தங்கள் வாரிசுகளைப் பெற, இம்மண்ணின் பெண்களோடு சேர்ந்து குழந்தைகளைப் பெற்றனர். எனவே, பெண்களை ஆரியர்கள் ஒரு விளை நிலம் போலக் கருதி அவர்களை நடத்தினர். பெண்களுக்கு உரிமைகள் தரமறுத்தனர்.

தமிழர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையிலும், ஆரியர்கள் மிகச்சிறு எண்ணிக்கையிலும் இருந்ததால்,
தங்களுக்கு அது பாதுகாப்பாக அமையாது என்று எண்ணி சில சூழ்ச்சிகளைச் செய்தனர். தமிழர்களிடையே இருந்த நிலத் தலைவர் வழிபாடு, பெண்டிர் வழிபாடு, வீரர்கள் வழிபாடு இவற்றை கடவுள் வழிபாடாக மாற்றினர். ஆண்- பெண் உறுப்பு வழிபாட்டை லிங்கபுராணம் எழுதி, சிவலிங்க வழிபாடாக ஆக்கினர்.

பொதுப்பணி என்ற மக்கள் பணி என்பதை மாற்றி, கடவுள் பணியென்று ஆக்கி, அது தங்களுக்கே உரியது என்றாக்கினர். அந்தணர் பிரிவை பிராமணப் பிரிவாக மாற்றி, கடவுள் பணியே பிராமணர் பணி என்று மாற்றினர். பிராமணர் பிரிவு ஆரியர்களுக்கு மட்டுமே என்று உறுதிசெய்து, தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.

அரசப் பிரிவை ஷத்திரியர் என்றும், வணிகப் பிரிவை வைசியப் பிரிவு என்றும், வேளாண் பிரிவை சூத்திரப் பிரிவு என்றும் ஆக்கி, பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பிரிவுகளை வருணப் பிரிவுகளாக்கினர்.

கடவுளும், ஜாதியும் இல்லாத தமிழ்ச் சமுதாயத்தில் கடவுளும், ஜாதியும் உருவாக்கப்பட்டன. கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சாஸ்திரங்கள், சடங்குகள், யாகங்கள் என்று பலவற்றை உருவாக்கினர். கடவுளின் பெயராலும், சாஸ்திரங்களின் பெயராலும், தமிழர்களைத் தாழ்த்தி இழிவு செய்ததோடு, தமிழர்களின் உரிமைகளைப் பறித்து, தங்களை உயர் ஜாதியினர், தங்களுக்கே கல்வி, கடவுள் பணி எல்லாம் உரியது என்று ஆக்கினர்.

ஆரியர் அல்லாத மண்ணின் மக்களை அடிமைப்படுத்துவதற்கு முன், அதிகாரத்தை வைத்துள்ள அரசர் போன்றோரைத் தங்கள் வசப்படுத்தினர். அவர்களுக்கு கடவுள், சடங்கு, மூடநம்பிக்கைகளைப் புகுத்தினர். அவர்களின் மூலம் நாட்டு மக்களை மூடநம்பிக்கையில், சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தனர்.

மக்களிடையே மூடநம்பிக்கைகள் மங்கி மறையாமல் என்றென்றும் நிலை நிறுத்தப்பட கடவுள் விழாக்களையும் பண்டிகைகளையும் உருவாக்கி ஒவ்வோர் ஆண்டும் அவற்றைத் தவறாது செய்யும் நிலையை உருவாக்கினர்.

தமிழர்களும், தமிழ் மன்னர்களும் தூய பகுத்தறிவு வாழ்க்கை வாழ்ந்தனர். முதலில் அவர்கள் உள்ளத்தில் கடவுள் நம்பிக்கையை ஊட்டி, அதன்வழி மடமைகளைப் புகுத்தினர்.

கடவுளைக் காரணமாக்கினர்

வர்ணப் பிரிவுகளைக் கடவுளே படைத்தார். அவரே பிராமணர்களை உயர் வர்ணத்தாராகவும், உரிமைகள் அனைத்தும் உள்ளவர்களாகவும் படைத்தார் என்று சாஸ்திரங்களில் எழுதி அதை மக்கள் ஏற்கும்படிச் செய்தனர். மற்ற மூன்று வர்ணத்தாரும் பிராமணர்களுக்குக் கீழானவர்கள், பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று ஏற்கச் செய்தனர். குறிப்பாக சூத்திரர்கள் பிராமணர்களுக்கு அடிமை வேலை செய்வதற்கென்றே படைக்கப்பட்ட வர்கள் என்று கூறினர். சூத்திரர்களுக்கு கல்வி கற்கும் உரிமையோ, நல்ல, உயர்ந்தவற்றை பெறும் உரிமையோ இல்லையென்று ஆக்கினர்.

தங்களைத் தேவர்கள் என்றும், மண்ணின் மக்களை அசுரர்கள் என்றும் அழைத்தனர். தங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த மண்ணின் மக்கள் தலைவர்களை கடவுள் அவதாரம் எடுத்து வந்து அழித்தாகக் கதை கூறினர். அக்கதைகளை ஆரியர் அல்லாத மக்களே கொண்டாடும்படி செய்தனர்.
தீபாவளி, ஓணம் போன்ற பண்டிகைகளை அதன் அடிப்படையிலே உருவாக்கினர். எது தங்களை இழிவுபடுத்துகிறதோ, எது தங்களுக்கு எதிரானதோ அதையே அம்மக்கள் கொண்டாடும்படி செய்தனர்.

வீரத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தமிழ் மன்னர்களை, யாகங்களின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்து, அவர்கள் யாகங்கள் நடத்தும்படி செய்தனர். அவர்களுக்கு வெற்றியை அளிக்க வேதமந்திரங்கள், யாகங்களால் முடியும் என்று நம்பச் செய்தனர்.

கப்பல் கட்டி வணிகம் செய்த மன்னர்களை-அணைகட்டி வேளாண்மையைச் செழிக்கச்செய்த மன்னர்களை- கோயில் கட்டி, யாகம் செய்யும்படி செய்து, அவர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.

தங்கள் ஆதிக்கதை, உயர்வை, உரிமையை நிலைநிறுத்தவும், வர்ணப் பிரிவை வலுப்படுத்தவும் கோயில்களைக் கருவியாகப் பயன்படுத்தினர்.

தன்னம்பிக்கையைத் தகர்த்து மூடநம்பிக்கையை வளர்த்தனர்

தங்கள் உழைப்பிலும், அறிவிலும், ஆற்றலிலும் நம்பிக்கை கொண்டிருந்த மக்களை, பூசை, படையல், விரதம், நேர்த்திக்கடன், சடங்குகள் போன்றவற்றின் மூலம் நன்மைகளைப் பெற முடியும் என்று நம்பச் செய்து அதன்படி செயல்படவும் வைத்தனர்.

சரஸ்வதியை கல்விக்குக் கடவுளாக்கினர், லட்சுமியை செல்வத்திற்கும், துர்க்கையை வீரத்திற்கும் கடவுள்களாக்கினர். எல்லா நன்மையும் கிடைக்க விநாயகரை உருவாக்கினர். சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும், துர்க்கைக்கும், விநாயகருக்கும் தனித்தனியே விழாக்கள் கொண்டாடும்படிச் செய்தனர்.
சரஸ்வதி வராத காலத்தில் கல்வியில் சிறந்த தமிழர்கள், துர்க்கை வராதபோது வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள், லட்சுமி வராதபோது வளமையோடு வாழ்ந்த தமிழர்கள், இக்கடவுள்கள் வந்தபின், தன்னம்பிக்கை இழந்து மூடநம்பிக்கைகளால் வீழ்த்தப்பட்டனர்.

கல்விக்குச் சரஸ்வதியைப் படைத்த ஆரியர்கள், கடவுள் பெயரால், சாஸ்திரங்கள் பெயரால் தமிழர்களின் கல்வியைப் பறித்து, கல்வி கற்க உரிமையற்றவர்கள் என்று அறிவித்தனர். கல்வி தங்களுக்கே உரியது என்றாக்கினர்.

தமிழர்கள் என்பவர்களே திராவிடர்கள்!

ஆரியர்கள் வருவதற்குமுன் இம்மண்ணில் முழுக்க முழுக்க தமிழர்களே வாழ்ந்தனர். ஆரியர்கள் இம்மண்ணில் நுழைந்தபோது அவர்களுக்கென்று எழுத்து வடிவிலான மொழி இல்லை. தமிழர்களின் தொன்மொழியையே மாற்றித் திரித்து சமஸ்கிருதத்தை உருவாக்கினர். அப்படிச் செயற்கையாக அவர்களால் உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் தமிழ்மொழியோடு கலந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தெற்கே உருவாயின. வடக்கே ஒரியா, வங்காளி, மராட்டியென்ற மொழிகள் உருவாகின. பின்னாளில் இஸ்லாமியர் வருகையால் அவர்கள் மொழியும் கலந்து ஹிந்தி உருவாயிற்று.

தமிழர்கள் இந்த மொழிக்கலப்பால், மதத்தால் பிரிந்தனர். எப்படிப் பிரிந்தாலும் இனத்தால் இந்தியாவில் இரு இனங்கள்தான். ஒன்று திராவிடர்; மற்றொன்று ஆரியர். பண்பாட்டு ரீதியிலும், வாழ்வியல் அடிப்படையிலும் இந்த இருபெரும் பிரிவுகள் இருப்பதைக் கூர்ந்து நோக்கி அறியலாம்.
தமிழர்கள் இன்று மொழியால் பலவாறு பிரிந்து நிற்பதால், அவர்கள் திராவிடர்கள் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றனர் என்ற நுட்பமான உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தூய தமிழர்கள் வாழ்ந்த கேரளா இன்று மலையாளிகள் வாழும் மாநிலமாய் மாறி நிற்பதை ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மையை நாம் அறியலாம்.

ஆக, தமிழ் இனம் என்பதுதான் திராவிட இனம். இங்கு இனத்தின் எதிராளிகள் ஆரியர்கள்தான். இந்தியாவில் நடைபெறும் அனைத்து சிக்கல்களும் திராவிட – ஆரியப் போராட்டங்களின் வெவ்வேறு விளைவுகள்தான்.

திராவிடர்களை வீழ்த்தும் மூடவிழாக்கள்

சிறுபான்மை இனத்தவரான ஆரியர்கள், பெரும்பான்மை இனத்தவர்களான தமிழர்களை (திராவிடர்களை) வீழ்த்த கடவுள், மதம், ஜாதி, சடங்கு, சம்பிரதாயங்களை உருவாக்கினர்.

தீபாவளி

அறிவுக்குச் சற்றும் பொருந்தாத பண்டிகை இது. பூமி உருண்டையானது. அதைப் பாயாய்ச் சுருட்டி கடலுக்குள் சென்றான் இரண்யாட்சன் என்றால் கடல் தனியாகவா இருக்கிறது? அது பூமியில் தானே இருக்கிறது? பூமியைச் சுருட்டும் போது கடலும் சேர்ந்துதானே சுருளும்! தட்டையாகப் பூமி இருந்தால்தான் சுருட்டமுடியும். பூமி தட்டையில்லை. ஆக, எதுவும் அறிவுக்கு ஏற்ற கருத்து இல்லை!
இப்படி அறிவுக்கு அறவே ஒவ்வாத பண்டிகையை இந்தியா முழுக்கக் கொண்டாடச் செய்து, மக்களின் அறிவு, பொருள், பொழுது, உழைப்பு என்று எல்லாவற்றையும் பாழாக்குகின்றனர்.

சபரிமலை ஜோதி

இவர்களே மலையில் தீபம் ஏற்றிவிட்டு, மகரஜோதி தானே தெரிகிறது என்று ஒரு பொய்யைக் கட்டமைத்து, அதற்கு விழா நடத்தி மக்களை மடையராக்கி, அவர்களைச் சிந்திக்கவிடாமல், வளரவிடாமல் பாழாக்குகின்றனர். முயன்று முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி, விரதம் இருந்தால் முன்னுக்கு வரலாம் என்ற மூடநம்பிக்கையை உருவாக்கி அவர்களின் முயற்சியை, வளர்ச்சியைக் கெடுக்கின்றனர்.

திருவண்ணாமலைத் தீபம்

திருவண்ணாமலை இமயமலையைவிட பழைமையான மலை என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அம்மலையின் உச்சியில் எரிமலை வெடித்து தீப்பிழம்பு மிக உயர்ந்து எழுந்தது. இதை அறியாத மக்களை, சிவன் நெருப்பு வடிவில் எழுந்துள்ளார் என்று ஏமாற்றி, அதற்குப் புராணம் எழுதி கார்த்திகை தீபம், திருவண்ணாமலைத் தீபம் என்று கொண்டாடச்செய்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எண்ணெயை வீணாக்கச் செய்கின்றனர்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்றனர். ஆரியர்களின் சாஸ்திரக் கோட்பாட்டிற்கே இது முரண். பெண்களையே படிக்கக்கூடாது என்று சாஸ்திரம் எழுதிவிட்டு, கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்பது மோசடியல்லவா?

கல்விக்குக் கடவுள் சரஸ்வதியென்றால் அவள் கனடாவில் ஏன் இல்லை. சரஸ்வதிக்குப் பூஜை போட்டால் படிப்பு எப்படி வரும்? படித்தால்தானே வரும்!
சரஸ்வதி கல்விக்குக் கடவுள் என்று கூறும் நாட்டில் தான் கல்வி கற்றோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

சரஸ்வதியை ஓரம் கட்டிவிட்டு, பெரியார் போராடி கல்வி உரிமை பெற்றுத் தந்த பின்தான் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் படிக்கின்றனர்; படித்துச் சாதிக்கின்றனர். எனவே, மூடப்பண்டிகைகளைக் கைவிட்டு, முயற்சி செய்தால்தான் உயர்வு கிடைக்கும் என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு.

ஆயுத பூஜை என்பது நாம் பயன்படுத்தும் கருவிகளுக்குப் படையல் போடுவது. கருவிகளுக்கு உயிர் இல்லை, உணர்வும் இல்லை. எனவே, அவற்றை வணங்குவதால் எப்பயனும் இல்லை. அதற்குப் பதிலாக கருவிகளைப் பயன்பாட்டுக்கு ஏற்ப அவற்றைச் செப்பனிட்டு புதுப்பிப்பதுதான் அறிவுக்கு உகந்த செயலாகும்.

வினாயகர் சதுர்த்தி

மனித உடலில் யானைத் தலை. இதுவே அறிவுக்கு ஏற்புடையது அல்ல. புத்தர் சிலையைச் சிதைத்து யானைத் தலை வைத்து வினாயகர் உருவத்தை உருவாக்கினர். புத்தத்தை அழிக்க உருவாக்கப்பட்டதே வினாயகர். வழிபடும் கடவுளை அடித்து நொறுக்கி ஆற்றில், கடலில் வீசுவது பக்தியா? இது கலவரத்திற்கு உருவாக்கப்பட்ட நடைமுறை. வீட்டில் படைப்பதை விட்டுவிட்டு, வீதியில் வைத்து, ஊர்வலம் நடத்தி மதமோதல் உருவாக்குவதுதான் பண்டிகைக்கு அழகா? இன்றைக்கு போட்டி போட்டுக்கொண்டு, தங்கள் செல்வாக்கைக் காட்ட பெரிய பெரிய வினாயகர் சிலைகளை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வாங்கி, லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு ஊர்வலம் நடத்தி பணத்தையும், பொழுதையும் வீணடிக்கின்றனர். இச்செயல்களை எந்த ஆரியப் பார்ப்பனராவது செய்கிறார்களா?

கருப்புத்துணி கட்டிக்கொண்டு மகரஜோதிக்குச் செல்வது, திருவண்ணாமலை தீபம் பார்க்க முட்டி மோதுவது, பட்டாசு வெடித்து பணத்தைக் கரியாக்குவது போன்ற எல்லாவற்றையும் செய்வது திராவிட மக்களே! பணம், உழைப்பு, காலம் என்று எல்லாவற்றையும் இதன்மூலம் இழப்பதோடு அறிவையும் இழக்கின்றனர்.

பண்டிகைகள் எல்லாம் பண்பாட்டுப் படையெடுப்புகளே!

தீபாவளி மூடத்தனத்தின் மொத்த வடிவம். இப்பண்டிகையைக் கொண்டாடுவதன் மூலம் திராவிட மக்கள் தங்களுக்குத் தாங்களே இழிவைத் தேடிக்கொள்வதோடு அறிவார்ந்த தங்கள் வாழ்க்கை முறையை இதன்மூலம் தொலைத்தனர்; தொலைத்து வருகின்றனர்.
பொங்கல் அறுவடைத் திருநாள். அதை மகரசங்கராந்தி, போகி என்று ஆரியர்கள் மாற்ற, அதன் உண்மை நோக்கம் சிதைந்து மூடச் செயல்கள் குடிகொள்கின்றன.

தமிழ் வருடப் பிறப்பு என்பது தமிழர் மீது திணிக்கப்பட்ட பெரும் பண்பாட்டுத் தாக்குதல். தை முதல் நாள் என்பதை மாற்றி சித்திரை முதல் நாள் என்று ஆக்கி, ஆணுக்கும்(விஷ்ணு) ஆணுக்கும்(நாரதர்) பிறந்த அறுபது குழந்தைகளே தமிழ் வருடங்கள் என்று கேவலப்படுத்தி நமது பெருமைக்குரிய பண்பாட்டு மரபைப் பாழாக்கியுள்ளனர்.

எனவே, தமிழர் இனமான திராவிட மக்கள், நம்மை வீழ்த்தும் இதுபோன்ற பண்பாட்டுப் படையெடுப்புப் பண்டிகைகளை அறவே விலக்கி, அறிவார்ந்த விழாக்களை அறிவுக்கும், வளர்ச்சிக்கும், விழிப்புணர்வுக்கும் ஏற்ற வகையில் கொண்டாட வேண்டும். மூடநம்பிக்கைகளை, மூடச்செயல்களைக் கைவிட வேண்டும். அதுவே நம் இனம் சிறக்க, உயர உகந்த வழி!