திராவிடர்களை இழிவுபடுத்தவே தீபாவளி!-தந்தை பெரியார்

2024 அக்டோபர் 16-30 2024 பெரியார் பேசுகிறார்

தீபாவளிக் கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறேன். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை; என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம். தீபாவளிக் கதை மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத் தன்மையும் பொருந்தியதாகும்.

பார்ப்பனர் சாபமாம்!

மகாவிஷ்ணுவுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளே விட மறுக்கப்பட்ட இரண்டு பார்ப்பனர்கள் சாபத்தால் இரணியன் – இரண்யாட்சன் என்ற இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தான்; இளையவன் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக(பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டு வந்து பழையபடி விரித்துவிட்டுப் போய்விட்டார்.

இனிமேல் நடப்பது ஆபாசம்

இதுவரை கதையில் அதிசயம் – அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை; இனிமேல் நடப்பதுதான் ஆபாசம். என்னவென்றால், விஷ்ணு பல அவதாரம், பல ரூபம்எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும் பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்தவுடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின் மீது ஆசை வந்து – அவர் பின் திரிந்து மோகினி இணங்காமல் போய் – இருவரும் பலாத்காரம் செய்து சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி, தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்! அய்யனார் பிறந்தார் மற்றொரு சமயம் சிவன் பத்மாசுரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலே கையை வைத்து சிவனைக் கொல்ல வர, சிவன் ஓடி ஒளிந்து விஷ்ணுவைக் கூப்பிட, விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசுரனை இறக்கும்படிச் செய்துவிட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது  அய்யனார் பிறந்தார்.

பூமியைப் பன்றி புணர்ந்ததாம்!

இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்புங்காலையில் பன்றி, தான் கொண்டுவந்த பூமியைத் தனக்கு என்னவேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்தப் பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்றுவிட்டதாம்.

நரகல் தின்பதால் நரகாசுரன்

அக்குழந்தைக்கு நரகாசுரன் என்று பெயரிட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும் நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத் துக்கும், அசாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மா மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக்கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கி வர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்குத் தொல்லைகொடுத்தானாம். உலகத்தையும் துன்புறுத்தினானாம்.

தேவர்களுக்காக கிருஷ்ணபகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

உருண்டையைச் சுருட்ட முடியுமா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன? பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக்கொண்டல்லவா போயிருக்கவேண்டும்!

அப்படியே சுருட்டினதாக வைத்துக்கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்துகொண்டு பூமியைச் சுருட்டி இருப்பான்; ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாகச் சுருட்டப்பட்ட பாய்க்குள் சிக்கியிருக்க வேண்டும். அப்படியிருக்க, அவன் பூமியைத் தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரமிருந்தால் அது எதன் மீது இருந்திருக்கும்?

பன்றியுடன் போகமா?

அப்படி வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியைத் திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதார மெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு?

அப்போது அது ஆகாரமாக எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும். இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்? கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியே தான் இருக்கட்டும்; இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?

திராவிடர்- ஆரியர்

மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும்
முன்பு திராவிடர்கள்தான் ஆண்டு கொண்டிருந் திருக்க வேண்டும்! ஆரியர்கள் திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல்
மிருகங்களுடன் புணர்ந்தாலும் சரி; மலத்தைத்தின்றாலும் சரி; “எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம்” என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்குப் போதிக்க வந்த மனு நூல் போன்ற ஒரு ‘கோட்’ தானே ஒழிய, இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்துச் சொல்ல முடியும்?
ஆகவே, அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசுரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக்கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக்கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அளவிற்கு மான ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இனமக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள்! கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடுவீதியில் வைத்து
ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்!

(“குடிஅரசு’ – 7.10.1944 இதழில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரில் எழுதியது)