என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்… – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

2024 கட்டுரைகள் மற்றவர்கள் மே 1-15, 2024

சென்ற இதழ் தொடர்ச்சி….

நிலவில் நீர் கண்டுபிடித்துவிட்டோம், நிலவில் எப்படி பத்திரமாக இறங்கலாம் என்றும் காண்பித்துவிட்டோம்.
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மய்யத்தை ஏன் பூமியைச் சுற்றி அமைக்கவேண்டும்?

நிலவிலேயே அமைத்தால் என்ன?

அந்தக் கேள்விக்கான பதில் – சர்வதேச விண்வெளி மய்யம் பூமியைச் சுற்றி அமைக்கவேண்டிய அவசியமில்லை. நிலவில் அமைக்க முடியும்.
ஏனென்றால், பூமிக்கு அருகில் புதிய சர்வதேச விண்வெளி மய்யம் அமைத்தாலும், இன்னும் 10, 15 ஆண்டுகளில் அதனுடைய ஆயுட்காலமும் முடியும்.
ஆனால், நிலவில் அப்படியில்லை. அங்கே எப்பொழுதும் இருக்கும். பராமரிப்புச் செலவும் குறைவு.

இரண்டாவது, இதனால், என்ன ஆகப் போகிறது என்றால், இப்பொழுது நாம் பூமியில் எப்போது வேண்டுமானாலும் போர் வரப் போகிறது என்று சொல்கிறோம் அல்லவா – அந்தப் போர்களுக்கான ஒரு முடிவை, சூழலை அங்கே உருவாக்க முடியும்.

எப்படியென்றால், இன்றைக்கு நிலவிற்கு அமெரிக்கா போகிறது; ரஷ்யா போகிறது; சீனா போகிறது; இந்தியாவும் போகிறது.
இப்படியெல்லாம் தனித் தனியாகப் போனாலும்கூட, உச்சகட்டமான உக்ரைன் – ரஷ்யா போர் நடந்தாலும்கூட, அமெரிக்க விண்வெளி வீரர்களைப் பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்கர்களால் முடியாமல் போனாலும்கூட, ரஷ்யாவின் விண்வெளி விஞ்ஞானிகள் அதற்கு உதவினார்கள்.
இப்பொழுது அதனுடைய மீட்சியாக எடுத்துக்கொண்டு போனோம் என்றால், எல்லா நாடுகளும் சேர்ந்து, நிலவில் ஓர் அமைதியான ஒரு தளத்தை உருவாக்க முடியுமா? இனிமேல் போர்கள் வராத உலகமாக உருவாக்க முடியுமா? என்று கூடி ஆலோசித்து, அதை உருவாக்கவேண்டும் என்கிறோம்.

திரும்பவும் உலக வெப்பமயமாதலுக்கு என்ன செய்ய முடியும்?

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், வெப்பமயமாதலுக்கான பதிலை நிலவு கொடுக்கும்.
ஏனென்றால், அங்கே ‘ஹீலியம்-3’ நிறைய இருக்கிறது. அதை நாம் இங்கே கொண்டு வந்தோம் என்றால், இங்கே இருக்கக்கூடிய அணுச்சிதைவு கதிர்வீச்சு இல்லாத அணுமின் நிலையங்களை உருவாக்க முடியும். அதேபோன்று, நிலக்கரி தேவையில்லாத மின் சக்தியை உருவாக்க முடியும்.
அப்படி செய்யும்பொழுது, உலக நாடுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் செய்தால், அதைச் சீக்கிரம் செய்ய முடியாது. அப்படி சீக்கிரம் செய்யவேண்டும் என்றால், எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செய்தால்தான் முடியும்.

இதை நான் அய்ந்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதற்கான முதல் அறிவிப்பை இப்பொழுது சீனா அறிவித்திருக்கிறது. இப்பொழுது எல்லா நாடுகளும் சேர்ந்து செய்யவேண்டும் என்று இந்தியா முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதை நோக்கி நாம் சென்றோம் என்றால், இனிவரும் உலகம் – நான் பார்த்த இனிவரும் உலகம் எப்படி இருக்கும் என்றால், பசுமை உலகமாக இருக்க முடியும். நிலவையும், பூமியில் சேர்த்து, அந்த உலகத்தை நாம் உருவாக்க முடியும். அங்கே அமைதி இருப்பதற்கான வாய்ப்புகள் சரியாக இருக்கின்றன என்று நான் பார்க்கிறேன்.

அப்படி பார்க்கும்பொழுது, ‘இனிவரும் உலகம்‘ எப்படி இருக்கும் என்றால், ஒரு காலத்தில், இந்தியாவிற்கான மாற்றுப் பாதையைக் கண்டுபிடிப்பதற்காக கொலம்பஸ் வந்தார்; அந்தக் கொலம்பஸ் தவறுதலாகக் கண்டுபிடித்ததுதான் அமெரிக்கா. அந்த அமெரிக்கா கண்டுபிடிக்கத் தவறிய நீரை, நிலவில் கண்டுபிடித்தது இந்தியா.

இந்தியா கண்டுபிடித்த அடுத்த அமெரிக்காவாக நம்முடைய நிலவாக நான் பார்க்கிறேன்.

சிங்கப்பூரில் எப்படி நாம் ஒன்றிணைந்த இந்தியர்களாகவும், மலேயர்களாகவும் சீனர்களாக இருக்கிறோமோ – அதுபோல, பல நாடுகளிலிருந்து சென்றவர்களால் அமெரிக்கா உருவாயிற்று.

அதேபோன்று, நிலவினுடைய தென் துருவத்தில் அமையக்கூடிய அந்த ஓர் அமைப்பில், உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து போவதற்கான ஒருவாய்ப்பு உருவாக இருக்கிறது.

அது உலக நாடுகளுக்குத் தேவையான – அடுத்த தலைமுறைக்குத் தேவையான எரிபொருளையும் உருவாக்க முடியும்.
இனிவரும் உலகம் என்று பெரியார் சொன்னார் – அதனுடைய மீட்சியாக நான் என்ன சொல்கிறேன் என்றால், இதுபோன்ற ஓர் உலகம் (பூமி, நிலவு, செவ்வாய் – படத்தைக் காண்பித்து) – பூமியில் கடல்களால் பிரிக்கப்பட்ட கண்டங்கள் போன்று, இப்பொழுது விண்வெளியால் பிரிக்கப்பட்ட உலகங்களுடைய பிம்பங்கள் – நிலவு, செவ்வாய் – இதையும்கூட சேர்த்து, இனிவரும் உலகம் என்பது இன்னும் பெரிய உலகமாக இருக்கும். அதுதான் அடுத்த தலைமுறையினருக்குச் சரியாக நாம் விட்டு வைக்கக்கூடிய உலகமாக இருக்கும் என்பதை அறிவியல் ரீதியாக நான் சொல்கிறேன்.

ஏனென்றால், பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பு ‘‘இனிவரும் உலகம்’’ என்று சொன்ன
தைப் பார்த்து அன்றைக்கு எல்லோரும் சிரித்திருப்பார்கள்.

ஆனால், இன்றைக்கு நான் சொன்னது குறித்து யாரும் சிரிக்கவில்லை; பல பேர் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சீனா ஒரு பெரிய அறிவிப்பை இப்பொழுது கொடுத்திருக்கிறது. எல்லா நாடுகளும் ஒன்றாய்ச் சேர்ந்து செய்தோம் என்றால், சீக்கிரமாகச் செய்ய முடியும். இதை 30, 50 ஆண்டுகளுக்குள் செய்ய முடியும். அப்படி செய்யும்பொழுது, இந்தியா – சிங்கப்பூர் வழியில் செய்யப்படவேண்டும்.
ஏனென்றால், நமது தேசங்களில் மனிதநேயம் உருவாகி இருக்கிறது. நம்மிடையே பல மொழிகள் இருக்கலாம், பல மதங்கள் இருக்கலாம். அப்படி இருந்தாலும், எல்லோரும் இந்தியர்கள், சிங்கப்பூரியர்கள் என்று எப்படி சொல்லுகிறோமோ, அதேபோன்ற நிலையை உருவாக்கினால், கண்டிப்பாக அதையும் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
கண்ணதாசன் ஆறே ஆறு வரிகளில் சொல்லியிருப்பார்,
‘‘ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான், ஆஹா !
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்;
நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான் !’’

அவர் சொன்னது எல்லாம் நடந்துவிட்டது. கடைசி வரிதான் இன்னும் நடக்கவில்லை. அந்தக் கடைசி வரியைத்தான் நான் இப்பொழுது சொல்லியிருக்கிறேன்.
நாளை மனிதன் என்பது நாளைய தலைமுறை;
அந்த ஏழு உலகை ஆளப் போவதற்கான ஒரு வாய்ப்பை இன்றைய அறிவியல் உருவாக்கவேண்டும்.
அதுதான் இனிவரும் உலகமாக – பெரியார் சொன்னதினுடைய இனிவரும் உலகத்தினுடைய மீட்சியாக நான் பார்க்கிறேன்.
‘‘என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தை
தயவு செய்து மறந்துவிட்டு, உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையை, தமிழைப் பொருத்துங்கள்’’ என்று தமிழையும் பெரியாரின் கூற்றில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். அதையும் சரியாகச் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால், நாம் மேலே மேலே போனாலும், நம்முடைய உலகத்தைப் பார்க்கின்றபொழுது, எங்கேதான்போனாலும், அவரவர்கள் அவர்களுடைய உடம்பைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அவரவர்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அவரவர்களுடைய சுற்றத்தைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அவரவர்களுடைய அடையாளமான மொழியையும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

அடையாளங்களின் அடையாளமானதாக, இருக்கக்கூடிய தமிழ்மொழி நம்முடையது. அதை நாம் மறக்காமல் இருந்தோம் என்றால், கண்டிப்பாக தமிழ் ஒரு பெரிய பலமாக இருக்கும். நான் எல்லா மேடைகளிலும் சொல்லியிருக்கிறேன் – எனக்கு எந்த இடத்திலும் தமிழ் பலகீனமாக இருந்ததில்லை – தமிழ், தமிழ், தமிழ் மட்டும்தான் எனக்குப் பலமாக இருந்தது.

அடுத்த தலைமுறை அதைச் சரியாகப் புரிந்துகொண்டார்கள் என்றால், அவர்கள் கண்டிப்பாக உயர்வார்கள். அவர்கள் தொடக்கூடிய உயரங்கள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

ஏனென்றால், சரியான வினாக்களைத் தேடி – விடைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
அதேபோன்று, அவர்களுக்கான உயரங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

அதற்காக மெதுவாக மெதுவாக, சரியான திசையில் தினம் தினம் போனால், அந்த உயரத்தை அடைய முடியும். அந்த உயரம் சொர்க்கம் அல்ல; நம்முடைய பூமியைச் ‘சொர்க்கமாக்கக்’ கூடிய இந்த முறை என்பதுதான் இனிவரும் உலகமாக பெரியார் சொன்னது என்பதை என்னுடைய புரிதலாக நான் சொல்லியிருக்கிறேன்.
நன்றி! நன்றி!!

– இவ்வாறு டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் உரையாற்றினார்.
(உரை முடிவுற்றது)