சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சமூகநீதிச் சுடரை இந்தியா எங்கும் ஏற்றுவோம் ! – மஞ்சை வசந்தன்

2024 Uncategorized கட்டுரைகள் மற்றவர்கள் மே 1-15, 2024

1925 இந்திய வரலாற்றில் ஒரு முதன்மையான ஆண்டு. பலநூறு ஆண்டுகள் வேத, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி, கூறுபடுத்தி, உயர்வு தாழ்வு கற்பித்து, இழிவுபடுத்தி, தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்த நிலைக்கு எதிராய் புத்தர் காலத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அந்த எழுச்சியும் புஷ்யமித்திரன் காலத்தில் முறியடிக்கப்பட்டு, மனுசாஸ்திரம் என்னும் மனித விரோத சாஸ்திரம் ஆரியர்களின் மேன்மைக்கும், ஆதிக்கத்திற்கும் உரிய வகையில் எழுதப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாமியர் ஆட்சிக் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்நிலையே நீடித்தது.

திருப்பாதிரிப்புலியூர்
ஞானியார் அடிகளார்

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமூகப் புரட்சியாளர்கள் இதை எதிர்த்துப் போராடியதன் விளைவாய், சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் போன்ற சில கொடிய வழக்கங்கள் நீக்கப்பட்டன. என்றாலும் தீண்டாமை, சமவாய்ப்பு மறுப்பு, சமஉரிமை மறுப்பு போன்றவை நீடித்தன.

ஷாகு மகராஜ், அயோத்திதாசர், அம்பேத்கர், தந்தை பெரியார், டி.எம்.நாயர், சர்.பிட்டி தியாகராயர் போன்றவர்கள் மனித உரிமைக்கும், சமத்துவத்திற்கும் குரல் கொடுத்ததோடு ஆதிக்கம் அழிக்கத் திட்டங்கள் தீட்டி இயக்கம் கண்டனர். சமூகநீதிக்கான குரல் போராட்டம் ஓங்கின.
இதற்கு எதிர்த் திசையில் சனாதனம், ஆரிய மேலாதிக்கம் இவற்றைக் காத்து, நடைமுறைப்படுத்தி இந்தியாவை இந்துராஷ்ட்ராவாக ஆக்க சித்பவன் பிராமணர்கள். ஆர்.எஸ்.எஸ். என்னும் அமைப்பை 1925இல் உருவாக்கினர்.

அதே 1925ஆம் ஆண்டில் தந்தை பெரியார் சனாதனத்திற்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். இயக்கத்தின் கொள்கைகளை வென்றெடுக்க, மக்களிடம் பரப்ப ‘குடிஅரசு’ என்னும் ஏட்டை அதே ஆண்டில் வெளியிட்டார்.

ஆக, ஆங்கிலேயர் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சனாதனத்திற்கும் அதற்கு எதிரான சுயமரியாதைக் கொள்கைகளுக்கும் நேரடிப் போர் தொடங்கியது.
ஆக, இந்தியா அளவில் சனாதனத்திற்கு எதிரான இயக்கமும், ஏடும் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவற்றைப் பற்றி நாம் இன்றைக்கு அறிந்து தெளிவு பெற வேண்டியது கட்டாயக் கடமையாகும். சுயமரியாதை இயக்கத்தின் நிறுவனரான தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தையும், ‘குடிஅரசு’ ஏட்டையும் தொடங்கியது. 1925இல் என்றாலும், அவருள் சுயமரியாதை உணர்வும், எழுச்சியும், அதனடிப்படையிலான செயல்களும், போராட்டங்களும் அவரது பள்ளிப்பருவத்தில் 10 வயதிலேயே தொடங்கிவிட்டன.

ஈரோட்டில், நான்காம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் தீண்டாமைக்கு எதிராய் பெரியார் செயல்பட்டார். அதனால் அவர் வீட்டில் உள்ளவர்களால் தண்டிக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் அஞ்சாது தீண்டாமையை, ஜாதி ஏற்றத்தாழ்வை, ஜாதி இழிவை எதிர்த்தார்; தாழ்ந்த ஜாதிப் பிள்ளைகளோடு நெருங்கிப் பழகினார்.

 

தன் வீட்டிற்கு வரும் சனாதன பண்டிதர்களுடன் எதிர்வாதம் செய்தார். வைதீகக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சமூக ஏற்றத்தாழ்விற்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எதிராய் கருத்துகளைக் கூறினார். சமூக சமத்துவத்தை, பகுத்தறிவை வலியுறுத்தினார்.

அதன்பின் அவரது வாலிபப்பருவத்தில் காங்கிரஸில் இருந்தபோது சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வைக்கப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றார்.
1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இராமாயணத்திற்கும் மனுதர்மத்திற்கும் எதிராய்க் குரல் கொடுத்தார்.
1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில், சமூக நீதிக்கு தீர்மானம் கொண்டுவர முயன்று அது நடக்காமல் போகவே காங்கிரசை விட்டே வெளியேறினார்.
ஆக, சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் சற்றேறக் குறைய 30 ஆண்டு காலம் சுயமரியாதைக் கொள்கைகளுக்காகவே முழங்கினார், களம் கண்டார், போராடினார். இவற்றின் உச்சநிலை செயல் வடிவாகத்தான் சுயமரியாதை இயக்கம் 1925இல் உருப்பெற்றது.

“சுயமரியாதை” சொல்லின் உள்ளடக்கம் உயர்வானது

சுயமரியாதை என்பது ஒரு நூற்றாண்டுச் சொல். அது ஒரு நெடிய வரலாற்றின் அடையாளம், ஆதிக்கத்திற்கு எதிரான தத்துவப் பிரகடனம், 95% மக்களின் உரிமை முழக்கம், மனித உரிமையின் மறுபெயர்.

சுயமரியாதை என்னும் சொல் தன்மானம், சமத்துவம், பகுத்தறிவு, மனிதநேயம் ஆதிக்க ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, உலகநோக்கு, ஒப்புரவு, அன்பு, கருணை, துணிவு, ஆளுமை, விழிப்புணர்வு, எழுச்சி, போராட்டம் என்று பலவற்றை உள்ளடக்கிய ஒற்றைச் சொல். சுருங்கச் சொன்னால் ‘திராவிடம்’ என்ற கருத்தியலுக்குச் சூட்டப்பட்ட ஒற்றைச்சொல் சனாதனத்திற்கு நேர் எதிர்ச்சொல்.

‘குடிஅரசு’ ஏட்டுக்கும் நூற்றாண்டு!

கொள்கைக் கொள்கலனாம் ‘சுயமரியாதை’ என்ற சொல் ஓர் இயக்கத்தின் பெயராகவும் கொள்ளப்பட்டது, சொல்லப்பட்டது. அந்த இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்ப தந்தை பெரியார் தொடங்கிய ஏடுதான் ‘குடிஅரசு’. 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதும், அதே ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் ‘குடிஅரசு’ ஏட்டை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரை வெளியிடச் செய்தார். அது பக்தியின்பாற் பட்டதன்று, இனப்பற்றின் காரணமாய் செய்யப்பட்டது.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை, தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு செல்ல ‘குடிஅரசு’ ஏடே பெரும் கருவியாக அமைந்தது.


1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில், “சுயராஜ்யமா? சுயமரியாதையா?’’ என்ற தலையங்கம் பெரியாரால் எழுதப்பட்டது. அத்தலையங்கம் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைப் பிரகடனம் போல் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

“ஒரு சமுதாயத்தை ஒடுக்கி சுயமரியாதை அற்று வைத்திருக்கும் சமூகத்தார் சுயராச்சியம் (விடுதலை) அடைவது மற்றைய சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்டவருக்கும் சேர்த்துத்தான் சுயராச்சியம் தேடுவது என்று சொல்லுவோமானால், அவர்கள் தெய்வங்களைக் காணவும், தரிசிக்கவும் முடியாதபடியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாதபடியும் வைத்திருப்பதற்குக் காரணம் சுயராச்சியம் இல்லாமைதானா?…..
மகாத்மாகாந்தி அவர்கள் சுமார் அய்ந்து வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது “என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை இல்லாமல் இருக்குமானால் நான் சுயராச்சியத்தை விரும்புவதில் அர்த்தமேயில்லை” என்று சொல்லியிருக்கிறார்…..
“தீண்டாமை ஒழிய வேண்டும் என்று காந்தியடிகள் சொல்வதும், கதர் அணியவேண்டும் என்று கட்டாயப் படுத்துவதும் நம் நாட்டு மக்கள் சுயமரியாதையின் ஜீவநாடிகள்… ஆகவே, நமது தேசம் உண்மையான உரிமை பெறவேண்டுமானால் மக்களின் சுயமரியாதைக்குத்தான் முதலில் பாடுபடவேண்டும்” என்று எழுதியிருந்தார்.

“மனிதன், மானிடன் என்ற சொற்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானம் உடையவன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமை உடையதே மானம்தான்.”

“தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமான கடனாகும். ஏனென்றால் தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணர் அல்லாதாரின் முன்னேற்றம். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணர் அல்லாதாரின் துன்பமாகும். எனவே, தீண்டாமை ஒழிவதன் மூலந்தான் நாடு சுயராச்சியம் அடையும்” என்றும் ஈ.வெ.ரா. விளக்கினார்.
தெருவில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது, பிராமணர்கள் குடியிருக்கும் பக்கம் செல்லக் கூடாது என்று தாழ்த்தப்பட்டோர் கொடுமைப்படுத்தப்படும் நிலை உச்சநிலையில் இருந்ததால் ஈ.வெ.ரா. வேறு எல்லா பிரச்சினைகளையும் விட சுயமரியாதைப் பிரச்சினையை முதன்மையானதாகக் கொண்டு பிரச்சாரம் செய்தார்.

காந்தியாருடன் கடும் மோதல்:

காங்கிரசை விட்டு வந்தாலுங்கூட ஈ.வெ.ரா. காந்தியார் மீது மதிப்பும் பற்றுங் கொண்டேயிருந்தார். ஆனால் 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘சுதேசமித்திரன்’ என்ற நாளிதழில் வெளிவந்த காந்தியாரின் உரையைப் படித்த ஈ.வெ.ரா. அதிர்ச்சியடைந்தார்.
“ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்யவேண்டும். அப்படி செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.
பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவன் ஆகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.

எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனுடைய முக்கிய தர்மம். அத்தர்மத்தை அவன் செய்யுபோது அவன் மற்றோரிலும் மேம்பட்டவனாகிறான்.
இப்படியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களை – கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.
இப்படியிருக்கும் போது உயர்வு-தாழ்வு எங்கிருந்து வருகிறது? வருணாசிரம தர்மம் சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல.”
மேற்கண்ட காந்தியாரின் கருத்துகளைக் கண்ணுற்ற ஈ.வெ.ரா. கடுங்கோபங் கொண்டார். காந்தியாரை நேரில் சந்தித்து விவாதிக்க முடிவு செய்து பெங்களூருக்குப் போய் காந்தியைச் சந்தித்தார்.

அப்போது மூன்று கருத்துகளை காந்தியிடம் வற்புறுத்தினார்.
1. காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும்
2. ஜாதியை ஒழிக்க வேண்டும்
3. இந்துமதத்தை ஒழிக்க வேண்டும்.
அப்போது காந்தியாருக்கும் ஈ.வெ.ரா. விற்கும் நடந்த விவாதத்தின் ஒரு பகுதியைக் கீழே படியுங்கள்.
ஈ.வெ.ரா. : இந்துமதம் ஒழிய வேண்டும்
காந்தி : ஏன்?
ஈ.வெ.ரா. : இந்துமதம் என்று எதுவும் கிடையாது.
காந்தி : இருக்கிறது
ஈ.வெ.ரா. : அது பிராமணன் உருவாக்கிய பிரமை
காந்தி : அனைத்து மதங்களும் அதைப் போன்றதுதான்
ஈ.வெ.ரா. : இல்லை, மற்ற மதங்களுக்கு வரலாறு, லட்சியங்கள், கோட்பாடுகள் உள்ளன. மக்கள் அவைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
காந்தி : இந்துமதத்தில் அத்தகையது எதுவும் இல்லையா?
ஈ.வெ.ரா. : சொல்வதற்கு என்ன இருக்கிறது? பிராமணன், சூத்திரன், வைசியன் போன்ற ஜாதிய உட்கூறுகள் தவிர அதில் வேறெந்த விதியோ,சான்றோ கிடையாது.
காந்தி : அது குறைந்தபட்சம் இக்கோட்பாட்டைக் கொண்டுள்ளது.
ஈ.வெ.ரா.: இந்துமதம் இருக்கும்வரை சமத்துவத்தைப் பெற முடியாது.
காந்தி : இந்துமதத்தின் மூலமாக எவரும் இதைப் பெற முடியும்.
ஈ.வெ.ரா. : அப்படியானால் பிராமணர் – சூத்திரர் வேறுபாட்டை நிரூபிக்கும் மதச்சான்றுகள் குறித்து என்ன சொல்வது?
காந்தி : நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இந்துமதம் என்று எதுவும் இல்லையென்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கென்று திட்டவட்டமான விதியில்லை என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால், இந்துக்கள் என்று நம்மை நாம் கூறிக் கொள்வதன் மூலம் நாம் விரும்பும் முறையில் அதற்காக பொதுவான லட்சியங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்….
ஈ.வெ.ரா. : மன்னிக்கவும். அதைச் செய்ய முடியாது.
காந்தி : ஏன்?
ஈ.வெ.ரா.: இந்துமதத்திலுள்ள சுயநலக் கும்பல் அவ்வாறு செய்ய
உங்களை அனுமதிக்காது.
காந்தி : (சிரித்துக் கொண்டே) : யார் அவர்கள்?
ஈ.வெ.ரா.: பிராமணர்கள் அனைவரும்.
காந்தி : அவ்வாறு சொல்லாதீர்கள்! நான் ஒரு பிராமணனைப் பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர் என்றே இன்றும் கருதுகிறேன். அவர்தான் கோபாலகிருஷ்ண கோகலே.
ஈ.வெ.ரா.: உங்களைப் போன்ற மகாத்மாவிற்கு இந்த உலகில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாயிருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரண பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?
காந்தி : (சிரித்துக் கொண்டே)… பிராமணர்கள் படித்த மக்கள். அவர்கள் என்றென்றும் மற்றவர் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவார்கள். எனவே, அவர்களை விமர்சிப்பதை விட்டு நாமும் அந்த மட்டத்தை அடைய வேண்டும்.
ஈ.வெ.ரா. : பிராமணர்கள் முழுமையும் அறிவு ஜீவியாய் இருந்து கொண்டு 90 சதவிகிதம் மக்களைக் கல்லாதவர்களாக்கி, அவர்களுக்கு ஊறுவிளைவித்தல் சரியா? எனவே இந்நிலைக்குக் காரணமான மதத்தை ஒழிக்க வேண்டும்.
காந்தி : நீங்கள் பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பைக் கொண்டுள்ளீர்கள். அதுதான் உங்கள் சிந்தையில் பிரதானமாக நிற்கிறது. நம்முடைய விவாதம் மூலம் நாம் இதுவரை எந்த உடன்பாட்டுக்கும் வரவில்லை. எனினும் எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்துப் பேசுவோம். நமது நிலை குறித்துத் தீர்மானிப்போம்.
இவ்வாறு காந்தியுடன் கருத்து வேறுபாடு முற்றவே ஈ.வெ.ரா. கடுப்புடன் வெளியே வந்துவிட்டார். காந்தியின் மீதிருந்த மரியாதை ஈ.வெ.ரா.வை விட்டு விலகியது. அதுவரை ‘மகாத்மா’ என்று எழுதி வந்தவர் அதன்பின் அதை நீக்கி எழுதினார்.
“என்றைக்கு மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவை பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வர்ணத்தாருக்கும் ஒரு தர்மம் உண்டு என்று சொன்னாரோ அன்றே அவரிடம் மகாத்மா தன்மை இல்லை என்று தீர்மானித்து விட்டோம்… மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும் நடவடிக்கையையும் பொருத்துத்தான் வழங்கப்படுவதே தவிர, வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல” என்று ஈ.வெ.ரா. வே கூறினார்.
காந்தியைச் சந்தித்து வந்தபின் ஈ.வெ.ரா. போக்கில் மட்டுமல்ல, ‘குடிஅரசு’ ஏட்டிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
சுயமரியாதை இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளாக கீழ்க்கண்டவற்றை ஈ.வெ.ரா. வரையறுத்தார்.

1. மனிதருள் உயர்வு-தாழ்வு பிறப்பால் இல்லை
2. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவுடைமைச் சமுதாயம் வேண்டும்.
3. ஆணும் பெண்ணும் சமவாய்ப்பும் சம உரிமையும் உடையவர்கள்.
4. ஜாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை ஒழிந்த- அறிவும் ஒற்றுமையும் உடைய- சமுதாயம் அமைக்க வேண்டும்.
5. உழைப்பாளி- முதலாளி என்ற வேறுபாடு இல்லாமல் உழைத்து உழைப்பின் பயனைச் சமமாக அனுபவிக்க வேண்டும்.
6. யாரும் யாருக்கும் அடிமையல்ல. அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க அனைத்து சுதந்திரமும் வேண்டும்.
இந்நோக்கங்களை அடைய அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

சுயமரியாதை மாநாடுகள்:

1928ஆம் ஆண்டு முதல் ஈ.வெ.ரா.வின் தீவிரப் பிரச்சாரத்தால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுயமரியாதை இயக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அவரின் முதன்மை நடவடிக்கையாக அமைந்தது.

பார்ப்பனர் இல்லாத திருமணம், பார்ப்பனர் இல்லாத நினைவு நாள், பார்ப்பனர் இல்லாத புதுமனை புகுவிழா என்று புரட்சிச் செயல்பாடுகள் பரவின. இவ்வாறு காரியங்கள் செய்வோர் பற்றிய விவரம் ‘குடிஅரசு’ இதழில் வெளியிடப்பட்டது.

‘Revolt’ என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றையும் ஈ.வெ.ரா. தொடங்கினார். சுயமரியாதைக் கொள்கை தமிழ் தெரியாத மக்களுக்கும் பரவ வேண்டும் என்ற நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது.

1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடந்தது. டபிள்யூ. பி.ஏ சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ‘நீதிக்கட்சி’யின் கொடியை பி.டி.இராஜன் ஏற்றி வைத்து உரையாற்றினார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தும் தீர்மானம் உட்பட 34 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மக்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது, மதம், வேதம், சாஸ்திரம், புராணம் இவற்றை மக்கள் ஏற்கக் கூடாது, நால்வருணம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்களும் அதில் அடங்கும்.

பொது இடங்களில் அனைத்து ஜாதியினரும் புழங்க உரிமை வேண்டும். அதற்கு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 16 வயதுக்கு மேல்தான் பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும். விவாகரத்து, விதவை மணம், சிக்கனத் திருமணம் ஆகியவையும் வலியுறுத்தப்பட்டன. தாய் மொழிக் கல்வியும் வலியுறுத்தப்பட்டது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பதவி முழுவதும் பெண்களுக்கே தரப்பட வேண்டும். மூடநம்பிக்கையைப் பரப்பும் கருத்துகள் பாடத்திட்டத்தில் இடம்பெறக் கூடாது என்பனவும் தீர்மானம் செய்யப்பட்டன.
தொழிலாளர் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

1930 இல் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடும், 1931இல் விருதுநகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாடும் நடத்தப்பட்டன.
இவற்றைத் தொடர்ந்து ‘சுயமரியாதைப் பெண்கள் மாநாடு,’ ‘சுயமரியாதை வாலிபர் மாநாடு’ நடைபெற்றன. ஆயிரக்கணக்கில் பெண்களைத் திரட்டி எழுச்சிக் கருத்துகளை ஊட்ட இம்மாநாடுகள் பயன்பட்டன. இளைஞர்களும் வெகுவாகக் கவரப்பட்டு அணி திரண்டனர்.

தாம் எடுத்துக் கொண்ட பணி எத்தகையது என்பதை 1933ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறுகிறார்:

ஏழை – பணக்காரத் தன்மையையும், கீழ்-மேல் ஜாதியையும், முதலாளி – அடிமையையும் கொண்ட தான நிலைமைகள் நடைபெற ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன், தர்மம், சட்டம் ஒழிந்தே ஆக வேண்டும். ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன் என்பவைகள் மாத்திரமல்ல; இவைகளை அனுமதித்துக் கொண்டிருக்கும் அரசாங்கமும், நீதி, ஒழுக்கம், பழக்கம், வழக்கம் முதலியன என்பவைகளையும், நாங்கள் அழித்தே தீருவோம். ராஜத் துரோகி, கடவுள் துரோகி, மதத் துரோகி பூச்சாண்டிகள் இனி சுயமரியாதைக்காரர்களிடம் செல்லாது.

சுயமரியாதைக்காரர்களிடம் மாத்திரமல்ல, வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே அவைகளுக்கு இடமில்லாமல் போகப்போகின்றது. இதுகால வரையும் கஷ்டப்படும் மக்கள் தங்கள் தலை விதியின்மீதும், கடவுள் மீதும் பழி போட்டுக் கொண்டு தலைவிதியை மாற்றவும், கடவுள் தயவு பெறவும் என்று மேலும் மேலும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்து வந்தார்கள். ஆனால், இப்போது சுயமரியாதைக்காரர்களால் – நாத்திகர் களால் – கடவுள், மதத் துரோகிகளால் ஜனங்கள் உண்மையை உணர்ந்துகொண்டார்கள். இவைகள் சோம்பேறிகளும், பணக்கார முதலாளிகளும் செய்யும் சூழ்ச்சியும், பித்தலாட்டமுமே யொழிய வேறல்ல என்றும், கடவுளும் மதமும் இந்தப் பித்தலாட்டக்காரர் கற்பனைகளேதவிர வேறு யில்லை என்றும் உணர்ந்து கொண்டார்கள். நன்றாய் உணர்ந்து கொண்டார்கள். இப்பொழுது இவைகளை எப்படி ஒழிப்பது? என்பதில்தான் கவலையாய் இருக்கிறார்கள்.

வேகமாய்ப் போக வேண்டி – போவதற்குத் தயாராய் இருக்கிற மோட்டார் காருக்கு முன்னால் பனை மரத்தைக் கொண்டுவந்து போட்டதுபோல், இன்று கடவுளும், மதமும், அரசாங்கமும் குறுக்கே கொண்டு வந்து போடப்பட்டு இருக்கின்றன. இவை வெகு நாளைய கடவுளாய் இருந்தாலென்ன? அவதாரப் புருடர்களால் உண்டாக்கப்பட்ட மதமாய் இருந்தாலென்ன? சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கமாய் இருந்தாலென்ன? ஒழிய வேண்டும் என்று முடிவுக்கு வந்தபின் அவை தானாக ஏற்பட்டால் என்ன? சட்டப்படி ஏற்பட்டால் என்ன? சும்மா ஏற்பட்டால் என்ன?
ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதானே முக்கிய விஷயம்.

(‘குடிஅரசு’ – 5.2.1933)

‘குடிஅரசு’ இதழ் மக்களிடையே ஏற்படுத்திய புரட்சி மகத்தானது. தந்தை பெரியார் கையில் சுழன்ற போராயுதமாக அது மின்னியது!

ஜாதி, மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம், மூடநம்பிக்கைகள், பெண்ணடிமை இவற்றைச் சக்கை சக்கையாகக் கழித்தது.
சிந்தனையாளர் ம.சிங்காரவேலர், சுவாமி கைவல்யம், சந்திரசேகரப் பாவலர் என்ற படை வரிசை இருந்தது. அவர்களின் எழுத்தாணிகள் எதிரிகளின் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டன!

தந்தை பெரியாரின் அந்தக் கைவாள் மலேசிய மண்ணிலும் கால் பதித்தது. அது சென்ற இடங்களில் எல்லாம் விவாதப் புயலைத் தட்டி எழுப்பியது! தேநீர்க் கடைகளிலும், முடி திருத்தும் நிலையங் களிலும், திருமண வீடுகளிலும், கருமாதித் துறைகளிலும் கூட விவாதத் தலைப்பின் மய்யப் புள்ளியாக ‘குடிஅரசு’ தான் நிமிர்ந்திருந்தது.

சமுதாயத்தின் அவலங்களையெல்லாம் சற்றும் மறைக்காமல் பிறந்த மேனியாக வெளிப்படுத்தியது!

எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூற முடியும். 1936 மே மாதம் 25ஆம் நாளிட்ட (பக்கம் 10) ‘குடிஅரசு’ ஒரு தகவலைக் கூறுகிறது.
சென்னை ஜார்ஜ் டவுனிலும், மவுண்ட் ரோட்டிலும் பஞ்சமர்களும், நாய்களும், பெரு வியாதியஸ்தர்களும் பிரவேசிக்கக் கூடாது உணவு விடுதிகளில். சில இடங்களில் மகமதியர்களும் பிரவேசிக்கக் கூடாது; மேட்டுப் பாளையம் ரயில்வே ஓட்டலில் பிராமணர்க்கு என்றும், சூத்திரர்க்கு என்றும் போர்டு போட்டு இருந்தது. சென்னை நகரம் முழுவதும் “வீடு காலி – பிராமணர்க்கு மாத்திரம்” என்று இருந்தது என்கிற தகவலை ‘குடிஅரசு’ வெளியிட்டிருந்தது.
*1935-இல் கும்பகோணம் நகராட்சியில் அக்கிர காரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது -அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானம் போட்ட தையும் ‘குடிஅரசு’ தெரிவிக்கிறது. (6.10.1935)
* உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களை ஜாதியைக் காரணம் காட்டி கீழே உட்கார வைத்தார்கள்

(‘குடிஅரசு’ 27.1.1929)

லண்டன் பத்திரிகை பாராட்டு !

1931ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வெளிவந்த ‘ஆர்பிஏ’ பத்திரிகையானது இந்திய வரலாற்றில் சுயமரியாதை இயக்கம் அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இந்த மண்ணில் செய்த புரட்சியைப் பாராட்டி செய்தி வெளியிட்டது. மேலும் 1977ஆம் ஆண்டு அசோக் மேத்தா அவர்கள் தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள்மீது பார்ப்பனர்கள் நடத்திய் கொடுமைகளுக்கு எல்லாம் சுயமரியாதை இயக்கம் ஆற்றிய எதிர்வினையையும் மற்றும் இந்த இயக்கத்தால் வடஇந்தியாவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படி இந்திய வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய புரட்சியைச் செய்து அதன்மூலம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின சுயமரியாதை இயக்கமும், ‘குடிஅரசு’ இதழும்.

டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோரை குளத்தில் தண்ணீரை எடுக்க அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்தியதற்கு தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வுகளே காரணமாய் அமைந்தன என்று அவரே ஒப்புக்கொண்டு கூறியுள்ளார்.

சுயமரியாதை இயக்கம்தான் திராவிடர் கழகமாக ஆக்கப்பட்டு, அதிலிருந்து திராவிட முன்னேற்றக்கழகம் உருவாக்கப்பட்டு, சமுதாய மாற்றத்திற்கு திராவிடர் கழகமும், அரசியல் அதிகாரம் மூலம் சாதனை புரிய தி.மு.கழகமும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன. இந்த இரண்டும் தமிழ்நாட்டிலும் இந்தியா அளவிலும் ஏற்படுத்திய மாற்றங்கள், வளர்ச்சிகள், நிலைநாட்டிய சமூகநீதிகள் ஏராளம்.

இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் இயக்கங்களாய் இந்த இரண்டும் நிமிர்ந்து நிற்கின்றன. திராவிட மாடல் ஆட்சி, மாட்சி என்று இந்தியாவே பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

10 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இயங்கும் பி.ஜே.பி. ஆட்சியில் சனாதனம் தலைதூக்கி, மனுதர்மத்தை நடைமுறைப்படுத்தி, இந்திய அரசியல் அமைப்பையே ஒழித்துகட்ட உக்கிரமாய் நிற்கும் நிலையில், அதைத் தகர்த்து சமூகநீதி, ஜனநாயக அமைப்பு, மதச்சார்பின்மையைக் காத்து, ஆதிக்கம், ஜாதி இவற்றை ஒழித்து சமத்துவ சமுதாயம் அமைய, மாநில உரிமைகள் காக்கப்பட சுயமரியாதைச் சுடரொளியை இந்தியா முழுவதும் ஏற்ற வேண்டியது இன்றைய கட்டாயக் கடமையாகும். சுயமரியாதை என்பது மனிதம் என்பதன் மறுபெயர். எனவே, மனிதம் காக்க சுயமரியாதைச் சுடர் இந்தியா முழுவதும் ஏற்றப்பட வேண்டும்.

தமிழர் தலைவரின் முன்னெடுப்பு

சுயமரியாதைக் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது உயரிய இலக்காக இருந்தாலும் முதல் கட்டமாக இந்தியா முழுக்கக் கொண்டு செல்ல வேண்டியது கட்டாயமாகும். அந்த முயற்சியின் முதல் திட்டமாக தமிழ்நாடு முழுவதும் பரப்புரைக்கான செயல்திட்டத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வகுத்துக் கொடுத்து அதற்கான முதல் பரப்புரையையும் 25.04.2024 அன்று பெரியார் திடலில் தொடங்கினார். இதை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சமூகநீதி அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் மாநிலங்களில் முன்னெடுத்து சுயமரியாதை உணர்வு ஊட்டவேண்டும். அது ஆரிய ஆதிக்கம் அகற்றவும், சமூக நீதி காக்கவும் உதவும். 