புதிய சவால்களை எதிர்கொள்ள விடுதலையே ஆயுதம்!

ஜூலை 01-15

அருமைக் கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே! கடந்த ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளன்று (24.12.2011) 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டி சாதனை படைத்து என்னிடம் அளித்து மகிழ்ந்தீர்கள்.

இதைவிட சிறந்த பரிசு எனக்கு வேறொன்றும் இருக்க முடியாது என்பதை அறிந்தே அதனைச் சாதித்து முடித்தீர்கள்.

விடுதலை புதிய புதிய வாசகர்களைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. புதிதாக விடுதலையைப் படித்தவர்கள் எல்லாம் மனந்திறந்து பாராட்டுகிறார்கள்.

பல்வேறு தகவல்களையும் திரட்டி பல்சுவைத் தோப்பாக பலகணியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. வேறு ஏடுகளில் வெளிவராத தகவல்களும் திரட்டித் தரப்படுகின்றன.

வாழ்வியல் சிந்தனைகள், செய்திச் சிதறல்கள், வரலாற்றுச் சுவடுகள், பகுத்தறிவரங்கம், இளைஞர் அரங்கம், மகளிர் அரங்கம், அறிவியல் அரங்கம், மருத்துவத் தகவல்கள் என்று அன்றாடம் புதுப்புது மலராக மக்கள் மத்தியில் சென்று கொண்டிருக்கிறது.

நீங்கள் திரட்டித் தந்த ஆறு மாத சந்தாக்கள் இம்மாத இறுதியோடு முடிந்துவிடக் கூடிய நிலை. எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்தாக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது. நடப்பில் இருந்துவரும் சந்தாதாரர்களை அணுகி புதுப்பிக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புதிய புதிய சந்தாதாரர்களையும் கொண்டு வாருங்கள். கூடுமான வரை ஆண்டு சந்தா, ஆயுள் சந்தா என்று திரட்டினால் நல்லது.

வேறு எந்த காலத்திலும் தேவைப்பட்டதைவிட இந்தக் காலத்தில் விடுதலையின் பணி மிக மிக அதிகமாகத் தேவைப்படுகிறது.

புதிய புதிய சவால்கள் கிளம்புகின்றன. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில ஆரிய அடிமைகள் கிளம்பியுள்ளனர்.

அவர்களுக்கு ஆரிய ஊடகங்கள் விளம்பர சடகோபத்தைச் சாத்துகின்றன. இதன் பின்னணியில் ஆழமான பார்ப்பன சதியும் நிதியும் உண்டு.

இமயமலைகளையே எத்தி எறிந்த நமக்கு இந்தக் கூழாங்கற்கள் எம்மாத்திரம்? அதே நேரத்தில்  திசை திருப்பும் சூழ்ச்சிக்கு இளைஞர்களை இரையாக்கி விடக் கூடாதல்லவா!

ஜாதிப் பாம்பு படம் எடுத்துப் பார்க்கிறது. சமூக நீதியில் ஈட்டப்பட வேண்டிய உரிமைகள் பல உண்டு. தனியார்த்துறைகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தே தீர வேண்டிய கட்டாயமும் உண்டு! பார்ப்பன ஊடகங்களால் விசிறி விடப்படும் மூட நம்பிக்கைகள் ஒருபுறம்; சட்டமன்றங்கள், நாடாளு மன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குத் தூக்கிச் சென்றதன் தீய விளைவை மாநிலங்கள் தூக்கிச் சுமக்கின்றன; மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வந்தே  தீர வேண்டிய அவசியப் பணி நம் முன்னே!

அழிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்போல எஞ்சியிருக்கும் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகக் களங்கள் அமைக்கப்பட வேண்டும்.- தனியீழத்தை நோக்கிப் பயணிக்கச் செய்ய வேண்டும். டெசோ புதுப்பிக்கப்பட்டதன் நோக்கமும் அதுதான்! டெசோ மாநாடும் விழுப்புரத்தில் ஆகஸ்டு 5-இல் ஒரு திருப்பமாக அமைய வேண்டும்.

இளைஞர்களைச் சீரழிக்கும் நுகர்வுக் கலாச்சாரம் இறக்கை கட்டிப் பறக்கிறது உலகமயம் மக்களை போதைமயமாக்குகிறது.

எல்லாவற்றிற்கும் நிவாரணம் என்பது மக்களிடத்தே விதைக்கப்படும் விழிப்புணர்வைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இத்திசையில் விடுதலையின் பணி மகத்தானது. வீட்டுக்குவீடு விடுதலையைக் கொண்டு சேர்க்கும் பணியில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். ஓர் இயக்கமாவே இதனை நடத்தியே தீர வேண்டும்.

விடுதலையால் பலன் பெற்றிராத ஒரே ஒரு தமிழன் வீடு உண்டா? ஒற்றைத் தமிழன் உண்டா? இந்தத் தைரியத்தில் ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டுவீர்!

தமிழன் இல்லம் என்பதற்கு அறிவிப்புப் பலகை விடுதலை என்றாரே தவத்திரு குன்றக்குடி அடிகளார் – அதை மனதில் வைத்துச் செயல்படுவீர்!

தந்தை பெரியார் பணி முடிப்போம்! என்று நாம் சொல்லுவது – விடுதலையின் பலத்தையும், நம் உழைப்பையும், தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தானே! அந்த வகையில் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களின் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பீர்!

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது  என்பது வெறும் வார்த்தைகளின் அணிவகுப்பல்ல -_ வாகை முடிக்கும் நமது உண்மையான செயல் திறனின் அறத்துப்பால் பொருள்பால் அது!

அதனை மீண்டும்  ஒரு முறை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதனைக் கருதுவீர்!  செயல்படுவீர்! செயல்படுவீர்!

இந்த வெற்றியில்தான் எம் ஆயுளில் நீட்சி! நன்றி!
மிக்க எதிர்பார்ப்புடன்

கி.வீரமணி,ஆசிரியர்

 

சிறுவாணி ஆற்றின்மீது அணையைக் கட்டாதே! கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை மாநகர மக்களின் குடிநீருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் விவசாயத்தைப் பாதிக்கச் செய்யும் வகையிலும், சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டத் திட்டமிட்டுள்ள கேரள மாநில அரசைக் கண்டித்தும், அதனைத் தடுக்கக் கோரி மத்திய அரசை வலி யுறுத்தியும் கோவை மாநகரில் செஞ்சிலுவைச் சங்கம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஜூன் 25 அன்று நடைபெற்றது. ஏராளமான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றனர். திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிறைநுதல் செல்வி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *