இதயம் இதயமாய் இயங்க…- 3

மார்ச் 01-15

மாரடைப்பைத் தவிர்ப்பது எப்படி?

பேராசிரியர். மருத்துவர் வெ.குழந்தவேலு
MD.phD.,Dlitt. DHSc-Echocardio., FCCP.,
கங்கை மருத்துவத் தொழில்நுட்பக் கல்வி நிலையம், நெய்வேலி

நெஞ்சுவலியை எப்பொழுதும் புறக்கணிக்கக் கூடாது!

இதயவலி போன்று தோன்றக்கூடிய அனைத்துமே நெஞ்சுவலிகளில் அடங்குவனவாகும். ஆகவே, நெஞ்சுவலிகள் அனைத்துமே இதயவலிகளாகி விடாது; மாரடைப்பின் அறிகுறிகளாகவும் ஆகிவிடாது. இதயவலியால் தோன்றக்கூடிய நெஞ்சுவலியையும் பிற காரணங்களினால் தோன்றிவிடும் நெஞ்சுவலியையும் எளிதில் வேறுபடுத்திப் பார்க்கமுடியாத சூழ்நிலைகள் உண்டு. இதயவலியை, இயல்பான (சாதாரண) நெஞ்சுவலியாகவும், இயல்பான (சாதாரண) நெஞ்சுவலியை, கடுமையான இதயவலியாகவும் நினைக்கின்ற மக்கள் பெருமளவில் உள்ளனர். இதய நெஞ்சுவலியானது கடுமையானதாக இல்லையென்றாலும், சில வேளைகளில் விபரீத விளைவுகளை உண்டுபண்ணி விடுவதுண்டு. ஆகவே, இதயத்தசைப் பாதிப்பின் அடிப்படையில் ஏற்படும் நெஞ்சுவலி, இயல்பானதாகத் (சாதாரணமாக) தோன்றினாலும், சில வேளைகளில், விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடுவதுண்டு என்பதனை நினைவில் கொண்டு, நெஞ்சுவலிதானே!” என்று புறக்கணித்திடல் கூடாது.

மாரடைப்பு ஏற்பட்டிருப்பின் உறுதி செய்வது எப்படி?

ஒருவருக்கு உடலில் ஏற்பட்டிருக்கும் நெஞ்சுவலி, வியர்த்துக் கொட்டுதல், உடல் சில்லிட்டுப்போதல் உள்ளிட்ட உடல் மாற்றம் பற்றிய விவரிப்பு மாரடைப்பிற்கான அறிகுறிகள்; எந்தச் சூழ்நிலையில், நெஞ்சுவலி தோன்றியது என்பன பற்றிய உண்மை, மருத்துவரின் ஆழ்ந்த மருத்துவக் கணிப்பின்பால் எழும் சந்தேகம் போன்ற அழுத்தமான கணிப்புகளின் அடிப்படையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என அறியலாம். அந்த வகையில் மேற்கொள்ளக்கூடிய பரிசோதனைகளும் பெரிதும் உதவிடும்.

ஈ.சி.ஜி (E.C.G.) எனும் இதய இயக்க மின்அலை வரைபடம், மயோகுளோபின் (Myoglobin), கார்டியாக் ட்ரெபோனின் (Cardiac Troponin), கிரயாட்டின் பாஸ்போ கைனேஸ்-எம்.பி (Creatinine Phospho Kinase – MB – CPK-MB), சீரம் குளுட்டமிக் ஆக்ஸலோ அசிட்டிக் டிரான்ஸ் அமைனேஸ் (Serum Glutamic Oxaloacetic Transaminase – SGOT) என்று அழைக்கப்பட்ட இஸ்பார்டேட் டிரான்ஸ் அமைனேஸ் (Aspartate Transaminase – AST), லேக்டிக் டீஹைட்ரோ ஜெனேஸ் (Lactic De Hydrogenase – LDH) போன்ற இரத்தத்திலுள்ள சில புரதப்பொருட்கள் மற்றும் என்சைம்களுக்கான பரிசோதனைகள் அவற்றின் அளவுகள், இதயத் தசைகளுக்கான இரத்த நாளங்களைப் பற்றிய உள்ளாய்வுப் படங்களான கொரோனரி ஆஞ்சியோகிராபி (Coronary Angiography), கார்டியாக் கேத்தட்டரிசேசன் Cardiac Catheterisation), எக்கோ கார்டியோகிராபி (Echo – CardioGraphy) போன்ற நவீன பரிசோதனைகளில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தகும் மாற்றங்களின் அடிப்படையில், இதயத்தில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை உறுதிப்படுத்தலாம். மாரடைப்பிற்கான மருத்துவத்தில் பல நுணுக்கங்கள் உண்டு. அதுபோலவே, தடுப்பு முறைகளும் பராமரிப்பிற்கான வழிவகைகளும் இதயத்தை இதமாய் இயங்கச் செய்வதற்கு வழிவகுக்கும்.

மரபுத் தன்மைக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பு

  • மரபுத்தன்மைக்கும் (பரம்பரைத் தன்மைக்கும்) மாரடைப்பிற்கும் நேரடித் தொடர்பு உண்டு.
  • தாய் தந்தை இருவருக்கும் இதய மாரடைப்பு ஏற்பட்டிருப்பின், அவர்களுக்குப் பிறந்திடும் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
  • பெற்றோர்களில் தாயிடமோ, தந்தையிடமோ மாரடைப்பு ஏற்பட்டிருப்பின், பிறக்கும் குழந்தைகளில் சிலருக்கு    மட்டும் அல்லது பெரும்பாலான குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
  • அதுபோலவே, ஒருவருடைய உடன் பிறப்போ (சகோதரனோ சகோதரியோ) மாரடைப்பிற்குள்ளாகி இருந்தாலும்,            அவருக்கும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
  • ஒருவரின் நேரடி மூதாதையினரான தாத்தா, பாட்டி, இரத்தபாச உறவினர்களான மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, தாயோடு பிறந்த அக்கா – தங்கை ஆகியோருக்கு இதய மாரடைப்பு ஏற்பட்டிருப்பின், அவரும் மாரடைப்பிற்கு ஆளாக வாய்ப்புகள் உண்டு.
  • அதுவும் மாரடைப்பு உண்டாவதற்கு, ஜீன் (gene)” எனப்படும் உடலமைப்பு உடலியக்க நிர்ணய உட்கருப் பகுதியை எந்தக் குழந்தை பெறுகிறதோ, அந்தக் குழந்தை எதிர்காலத்தில் மாரடைப்பினால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு, எந்தக் குழந்தை அந்த, ஜீன்(gene)”னைப் பெற்றிருக்கிறது என்று அறுதியிட்டுக் கூற முடியாதென்றாலும் இரத்தத்தில் மிகுதியான கொலஸ்டிரால் – டிரைகிளிசரைட்; தோலில், குறிப்பாக, கண் இமை வெளிப்பகுதியில் காணப்படும் கொழுப்புப் படிமங்கள் போன்ற அறிகுறிகளைக் கொண்டு சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளலாம்.
  • மாரடைப்பிற்கான மரபுத்தன்மையிருப்பினும் தூண்டுதல் காரணங்களினாலேயே, மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலைகள் பெருகுகின்றன; விபரீத விளைவுகள் கட்டுக்குள் வராமல் போய்விடுகின்றன.
  • இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நீரிழிவு, இரத்தத்தில் கொழுப்பு மிகுதல் பருமனான உடம்பு போன்ற நோய்களெல்லாம் மரபுத்தன்மையின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைவதால், இந்த நோய்கள் வராமல் தடுக்கவும் நோயினைக் கட்டுக்குள் கொணரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
  • உடல் பெருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்
  • மரபணுவின்பாற்பட்ட பரம்பரைத் தன்மைக்கு ஆளாகக் கூடிய குடும்பத்தில் உள்ளவர்கள் இரத்த நாளங்களில் கொழுப்புத் திவலைகள் படிதல், சர்க்கரை நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் பருமனாதல் போன்ற தூண்டுதல் காரண நோய்களையும்; அவற்றினால் ஏற்படும் இதய மாரடைப்பினையும் தடுத்திடல் வேண்டும் என்பதற்காக, இளமையிலிருந்தே உணவு வகைகளில் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்து வரவேண்டும். ஏனெனில், பெரும்பாலும் தூண்டுதல் காரணிகள் நீண்ட நெடிய முற்கால அடிப்படையிலேயே வெளிப்படக் கூடியவையாகும்.

  • இரத்தத்தில் கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட் போன்ற கொழுப்புப் பொருட்கள் மிகுவதற்கு, மரபணுத் தன்மை இருக்கக்கூடும் என்கிற நிலையிருப்பின், கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட் போன்ற கொழுப்புப்பொருட்கள் இரத்தத்தில் மிகுதியாக இருக்கின்றனவா, என்பது பற்றி இளமையிலேயே தெளிவுபெற வேண்டும்.
  • அதற்கேற்ப கொலஸ்ட்ரால் நிறைந்த கொழுப்புப் பொருட்களை உணவில் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், கொழுப்புப் பொருட்களெல்லாம் இரத்தத்தில் மிகுவதோடு, சக்திகள் கூடியிருப்பதை அறியலாம்.
  • மீன், கோழி இறைச்சிகளில் பொதுவாக கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவு என்றாலும் அவற்றின் தோல்பகுதி கொலஸ்ட்ரால் நிறைந்தவை.
  • தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகிய கொலஸ்ட்ரால் நிறைந்த எண்ணெய்கள் நீங்கலாக, பிற தாவர எண்ணெய்களில் கொலஸ்ட்ரால் கிடையாது என்றாலும், வனஸ்பதியாக மாற்றங்கள் செய்திடும்போது அவையும் பூரிதத்தன்மை (saturation) பெற்றுவிடும். ஆகவே, வனஸ்பதியாக மாற்றம் அடையும் தாவர எண்ணெய்களும் கொலஸ்ட்ரால் நிறைந்தவைகளாகிவிடும் என்பதனை நினைவில் கொண்டு, வனஸ்பதி எண்ணெய்களை உணவினில் தவிர்த்தல் வேண்டும்.
  • கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப்பகுதிப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் இரத்த நாளங்களில் கொழுப்புத் திவலைகள் படியும் என்கிற நிலை இருப்பதால், அந்த வகையிலான கொழுப்புப் பொருட்களை முழு அளவில் உணவில் தவிர்த்தல் வேண்டும் அல்லது அரிதாக எப்போதாவது மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உணவில் தேவையான கொழுப்புப் பொருளினைப் பெற, நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சனோலா எண்ணெய், ரிபைன்ட் எண்ணெய் போன்ற கொலஸ்ட்ராலற்ற எண்ணெய் வகைகளைப் பயன்படுத்திடல் வேண்டும்.
  • ஆடை எடுத்த பால், தயிர், மோர் போன்றவைகளையே மேற்கொண்டு வர வேண்டும்.
  • ஊட்டம் நிறைந்த பழவகைகள், காய்கறிகள், கீரைவகைகள் போன்றவற்றையும், பட்டாணி, மொச்சை, சுண்டல், கடலை, பொட்டுக்கடலை போன்ற புரதம் நிறைந்த பருப்பு உணவுப் பொருட்களையும் போதிய அளவில் உட்கொண்டு உடலுக்குத் தேவையான வைட்டமின்களையும் சக்தியைத் தரும் பொருள்களையும் முறையே பெறலாம்.
  • அடிக்கடி தேநீர், காபி மற்றும் சக்தியைத்தரும் சுவைநீர்களைப் பருகக்கூடாது; நொறுக்குத் தீனிகளுக்கும் இடம் தரக்கூடாது. ஏனெனில், நொறுக்குத்தீனி _ சுவைநீர்கள் மூலம் அதிக அளவிலான கலோரி சக்திகள் கூடியிருப்பதை அறியலாம்.
  • அடிக்கடி தேநீர், காபி, சுவைநீர்ப் பருகுதல், அடிக்கடி உண்ணுதல் போன்ற செயல்பாடுகள் காரணமாக எடை கூடும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
  • ஒருவருக்கு இரத்தக்கொதிப்புத் தூண்டுதல் காரணமாயிருப்பின், இரத்தக் கொதிப்பினைக் கட்டுப்படுத்திட, உணவினில் உப்பினைக் கட்டுப்படுத்திடல் வேண்டும்.
  • நாம் உட்கொள்ளும் பெரும்பான்மையான உணவுப் பொருட்களில் ஓரளவிற்கேனும் உப்புப் பொருட்கள் இருக்கக் கூடும் என்பதால் எத்தனை கிராம் உப்பினை உட்கொள்கிறோம் என்று துல்லியமாகக் கூறமுடியாது.
  • இருப்பினும், நேரடியாக உணவில் சேர்க்கும் உப்பின் அளவுகளில் கவனம் செலுத்திடல் வேண்டும்.
  • நாளொன்றிற்கு ஏழு கிராம் (7gms) அளவில் உப்பு இருந்திடுமாறு பார்த்துக்கொள்ளும்போது, இரத்தக்கொதிப்பு கட்டுக்குள்வரின், அந்த அளவிற்கே, அனுமதிக்கலாம்.
  • இரத்தக்கொதிப்பு கட்டுக்குள் வரவில்லையெனில், மேலும் உப்பு அளவினை நாள் ஒன்றிற்கு, ஒரு கிராம் (1gms) அளவிற்குக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • பால், இறைச்சி, பாலாடை, முட்டை, சிப்ஸ், அப்பளம், பப்படம், ஊறுகாய், வறுவல், சாஸ், பேக்கிங்சோடா கொண்டு சமைத்த உணவு வகைகள் போன்ற உணவுப் பொருட்களில் உப்பின் அளவு மிகவும் உயர்ந்து இருப்பதால், அவற்றை முழு அளவில் தவிர்த்தல் வேண்டும் அல்லது எப்போதாவது அரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • எடையைச் சீராக வைத்திருக்க உணவினில் பொதுவான அணுகுமுறை சிறந்தது.
  • உண்ணுவதற்குமுன் ஒரு குவளை தண்ணீர் பருகுங்கள்.
  • உணவை நன்றாக மென்று பொறுமையாக உண்ணுங்கள்; இதன்மூலம் குறைவான உணவு அளவிலேயே மன நிறைவு ஏற்பட்டுவிடும்.
  • முறையாக அமர்ந்து வேளை உணவுகளை மட்டுமே உண்ணக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உணவு உண்ணுவதற்குப் பயன்படுத்திடும் தட்டு சிறியதாக இருந்திடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
  • நொறுக்குத்தீனிக்கு இடம் தராதீர்!
  • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படம், நாடகம், விளையாட்டு போன்றவைகளைப் பார்க்கும்போது உணவு வகைகளை உண்ணாதீர்கள்.
  • உடலுழைப்பிற்கேற்ற – உடலியக்கத்திற்குத் தேவையான உணவினை மட்டுமே உட்கொள்ளும் உணவுகளிலிருந்தே பெற முனைப்பாக இருந்திடல் வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் நிறைவான உணவாக மூன்று வேளைக்கு உட்கொண்டு வரும்போது இயல்பாகவே தேவையற்ற கூடுதலான உணவு உடலில் குளுக்கோஸ் சர்க்கரையாகவும். குளுக்கோசிலிருந்து மாற்றம் பெரும் கொழுப்புப் பொருள்களாகவும் உடலில் தேக்கம் ஏற்பட்டுவிடும். அதனால் குருதிச் சர்க்கரை அளவும், உடல் பருமனும் கூடிவிடும்.
  • மூன்று வேளைக்கு வயிறு முட்ட உண்ணுவதைத் தவிர்த்து நாளொன்றிற்கு அய்ந்து வேளைக்கு, குறைவான அளவிற்கு, தேவையான உணவினைப் பகிர்ந்து உண்ண வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • நீரிழிவு நோயுடையோர், குறிப்பாக இன்சுலின் ஊசி செலுத்தி வருவோர் கூடுதலாக நள்ளிரவில் கலோரி சக்தியைக் கூடுதலாக்காத – சர்க்கரையைக் கூட்டாத உணவினைத் தேர்ந்தெடுத்து உண்டு வரலாம்.
  • குறைந்த அளவிலான காலை, மதியம், இரவு உணவோடு கூடுதலாக, காலை 10_11 மணி அளவிலும் மாலை 4_5 மணி அளவினில் சிற்றுண்டிகளை மேற்கொண்டு வரலாம். அந்த சிற்றுண்டிகளில் அவித்த கொண்டைக்கடலை, மொச்சை, பட்டாணி, பச்சைப் பயறு போன்ற கலோரி சக்தியைக் கூடுதலாக்காத -சர்க்கரையைக் கூட்டாத உணவாக தொடர்ந்து உட்கொண்டுவரலாம்.
  • குறிப்பிட்ட கொண்டைக்கடலை, பட்டாணி, பயறு போன்ற உணவுகள் கிட்டாதபோது எளிதில் கிடைக்கக்கூடிய பொட்டுக்கடலை, பட்டாணி போன்றவற்றையோ, கீரை வடை, சர்க்கரை குறைவான மேரி பிஸ்கட் போன்றவற்றையோ உண்டு வரலாம்.
  • குறிப்பிட்ட இந்த அணுகுமுறைகள் ஏற்புடையதாக அமைவதோடு கடுமையான பசி ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளலாம்; உடலுக்குத் தேவையான உணவினையும் நிறைவாகப் பெறலாம்.
  • என்னென்ன உணவுகளை, எந்தெந்த அளவுகளில் நாள் முழுவதும் உட்கொண்டோம் என்பதற்கான குறிப்பெடுத்துக் கொண்டு அதற்கான உணவுக் கலோரி அளவுகளைக் கணக்கிட்டுப் பாருங்கள்!
  • உண்ணுவதற்காகவே வாழாமல் வாழ்வதற்காகவே உண்ண வேண்டும்!

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *