கடவுள் கதை – தந்தை பெரியார்

மார்ச் 01-15

கதை சொல்லுகிறவன்:- அப்புறம்தான் விசேஷமான வேலை செய்கிறார். அதாவது ஆறாவது நாள் உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து மிருகங்களும், மனிதர்களும் உண்டாகக் கடவது என்றார்! உடனே மிருகங்களும், மனிதர்களும் உண்டாகி விட்டார்கள்!

கதை கேட்கிறவன்:- அப்பாடா? கடவுள் வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாரே? ஒரு வாரம் போல் ஆறு நாள் விடாமல் கஷ்டப்பட்டு வெளிச்சம், சமம், காற்று, சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன், மீன்கள், பட்சிகள், மிருகங்கள், மனிதர்கள் ஆகிய எவ்வளவு பண்டங்களையும், ஜீவன்களையும் சிருஷ்டித்திருக்கிறார்! என்ன கஷ்டம்? இதற்கு ஆக அவருக்கு களைப்பு, இளைப்பு ஏற்படவில்லையா?

கதை சொல்லுகிறவன்:- சொல்லுகிறேன், கேள். நமக்கு இருக்கிற புத்தி கடவுளுக்கு  இருக்காதா? ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்.  அதனால் தான் இப்போது கூட ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் ஆகக் கருதப்படுகிறது.

கதை கேட்கிறவன்:- சரி, புரிஞ்சுது. கடவுள் தயவினால், வேலை செய்யாதவன் கூட இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுத்துக் கொள்ளுகிறான். கடவுள் எவ்வளவு கருணை உடையவர்? சரி, அப்புறம்.

கதை சொல்லுகிறவன்:- மனிதரைக் கடவுள் சிருஷ்டித்தாரென்றால் எப்படி சிருஷ்டித்தார் தெரியுமா?

கதை கேட்கிறவன்:- அதைக் கேட்க வேண்டும் என்று தான் நினைத்தேன். நீ அதை அதிகப் பிரசங்கக் கேள்வியென்று சொல்லி விடுவாயே என்று விட்டு விட்டேன். ஆனாலும், நல்லவேளையாய் நீயே சொல்லப் புறப்பட்டு விட்டாய். அதுவும் அந்தக் கடவுள் செயலாகத்தான் இருக்க வேண்டும். சொல்லு, சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- முதல் முதலில் ஒரே ஒரு மனிதனை சிருஷ்டித்தார். பிறகு அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அந்த எலும்பிலிருந்து ஒரு பெண்ணை சிருஷ்டித்து இரண்டு பேரையும் ஷோக்காய் ஒரு நந்தவனத்தில் உலாவச் சொன்னார். அந்த நந்தவனத்தில் சில பழச்செடிகள் இருந்தன. அந்தப் பழச்செடிகளில் ஒரு பழச்செடியின் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று கடவுள் அந்த ஆண், பெண் இருவருக்கும் சொல்லி வைத்தார்.  கடைசியாக அந்த ஜோடி, கடவுள் வார்த்தையைத் தட்டிவிட்டு பிசாசு வார்த்தையைக் கேட்டு அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட்டது.

கதை கேட்கிறவன்:- நில்லு, நில்லு. இங்கே எனக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் ஆறினால் தான் மேல்கொண்டு கதை கேட்க முடியும்.

கதை சொல்லுகிறவன்:- என்ன கோபம்?

கதை கேட்கிறவன்:- அதெப்படி அங்கே சாத்தான் வந்தான்? அவனை யார் சிருஷ்டித்தது? மேல்படி ஆறு நாள் வேலையிலும் கடவுள் சாத்தானைச் சிருஷ்டிக்கவே இல்லையே! அந்தப் பயலை வேறு எந்தப் பயலோ சிருஷ்டித்தல்லவா கடவுளுடன் போட்டி போட அந்த நந்தவனத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்? அந்தப் பயலைக் கண்டுபிடித்து அவனுக்குத் தகுந்த புத்தி கற்பிக்க வேண்டாமா? ஒருசமயம் கடவுளும் தனது பெருந்தன்மையில் அந்த சாத்தானையும் அவனைச் சிருஷ்டித்த மற்றொரு சாத்தானையும் சும்மா விட்டிருப்பார்! நமக்குப் புத்தியும், ரோசமும் வேண்டாமா? அந்த சாத்தானையும் அவனைச் சிருஷ்டித்தவனையும் கண்டுபிடித்து தகுந்தபடி புத்தி கற்பிக்கா விட்டால் நமக்கும் மற்ற மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுதான் என்னுடைய ஆத்திரம்! இதற்கு ஒரு வழி சொல்லு! எனக்குக் கோபம் வந்து வந்து போகிறது.
கதை சொல்லுகிறவன்:- ஆத்திரப்படாதே, நான் சொல்வதைப் பூராவும் கேள். பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம்.

கதை கேட்கிறவன்:- சரி, சொல்லித் தொலை. நமக்கென்ன மானமா, வெட்கமா, அறிவா? என்ன இருக்கிறது? அவன் வந்து என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு சாமி மாடு மாதிரி தலையை ஆட்ட வேண்டியது தானே! அப்புறம்? கதை சொல்லுகிறவன்:- அந்தப் பழத்தைச் சாப்பிட்ட இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

கதை கேட்கிறவன்:- சரி, அப்புறம் என்ன ஆச்சுது?

கதை சொல்லுகிறவன்:- என்ன ஆவது? பிசாசு பேச்சைக் கேட்டதால் பிறந்த பிள்ளை யோக்கியமாக இருக்குமா? அவை ஒன்றோடொன்று சண்டை இட்டுக் கொண்டு இளையது மூத்ததைக் கொன்று விட்டது.

கதை கேட்கிறவன்:- காலம் கலிகாலமல்லவா? மூத்தது மோளை, இளையது காளை! கொல்லாமல் இருக்குமா? அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- இளையவனைக் கடவுள்  உன் அண்ணன் எங்கே? என்று கேட்டார். இளையவன் எனக்குத் தெரியாது என்று சொன்னான். உடனே கடவுள் கோபித்துக் கொண்டு அந்த ஆதி ஆண் பெண் ஆகியவர்களிடத்தில் மறுபடியும் ஒரு குழந்தை உண்டாகும்படிச் செய்தார்.

கதை கேட்கிறவன்:- எப்படியோ செய்தார்! அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- இதற்குள்ளாக கொச கொசவென்று குழந்தைகள் பெருகிவிட்டன. இவற்றை எல்லாம் அயோக்கியர்களாக இருந்தன. இவை ஒன்று தவிர, மற்றவை எல்லாம் இறந்து போயின.

கதை கேட்கிறவன்:- அய்யய்யோ! அப்புறம் கடவுள் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- என்ன செய்தார்? மிஞ்சின குழந்தையை ஒரு கப்பல் தயார் செய்யச் செய்து அதில் கடவுள் முன் உற்பத்தி செய்த பொருள்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு தண்ணீரில் மிதக்கச் சொன்னார். அந்தப்படியே மிதந்தன.  இந்தச் சந்தர்ப்பத்தில் பெரிய மழை பெய்து எங்கும் பிரளயமாக ஆகி உலகமே அழிந்துவிட்டது. இந்தக் கப்பல் மாத்திரம் மிஞ்சிற்று. மீதியான கப்பலினாலும் அதிலிருந்தவர்களாலும் இப்பொழுது காணப்படுகிற உலகமும் அதிலுள்ள சகலமும் உண்டாயின.

கதை கேட்கிறவன்:- அந்தக் கப்பலில் சந்திரன், சூரியன், நட்சத்திரம் முதலிய எல்லாம் ஏற்றப்பட்டு எல்லாம் முழுகிப் போச்சாக்கும்!

கதை சொல்லுகிறவன்:- ஆம்! எல்லாம் அடியோடு முழுகி விட்டது.

கதை கேட்கிறவன்:- போதுமப்பா, இன்னம் இதற்கு மேல் சொன்னால் என்னால் கேட்க முடியாது! நல்ல தங்கமான கதை இது!

கதை சொல்லுகிறவன்:- சரி, அப்படியானால் இப்போது நிறுத்தி விட்டு மற்றொரு நாளைக்கு இன்னொரு கடவுளுடைய கதையை நான் சொல்லுகிறேன், நீ கேளு!

– தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை (விடுதலை 27.12.1953.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *