ஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்!

ஜூன் 01-15 2019

கே.       திராவிடர் இயக்கங்களுக்கு முன்னோடி அயோத்திதாசர் பண்டிதர் என்றும்; தந்தை பெரியாரை முன்னிருத்தி அவரை பின்னுக்கு தள்ளுகின்றனர் என்றும் வரும் விமர்சனத்திற்கு அய்யா  பதில் என்ன?

                      – பா.மணியம்மை, சென்னை

ப. திட்டமிட்டு செய்யப்படும் ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டு. ‘குடிஅரசு’ (பச்சை அட்டையில்) பல கட்டுரைகள் _ தகவல்கள் பதிவாகியுள்ளன. புத்தரின் சீடரும் சீரிய எழுத்தாளருமான கோலார் தங்கவயல் ஜி.அப்பாதுரையார் பற்றி எல்லாம் தந்தை பெரியார் பாராட்டியிருப்பதே இன்றைய ‘தமிழ்த்தேசியவாதிகளுக்கு’ சரியான பதிலே. அயோத்திதாசர் என்கிறபோது திராவிடர் கழகம் எப்படி அவரை இருட்டடிக்கும்? விஷமப் பிரச்சாரத்தின் முதுகெலும்பை உடையுங்கள்!

ஜி.அப்பாதுரையார்

அயோத்திதாசர்

கே.       திராவிடம், தமிழ் தேசியம் மோதல் ஏன்? இது பார்ப்பனர்க்கு எந்த அளவு இலாபம்?

– நந்தினி, சென்னை

ப:           விபீஷணர்களை பார்ப்பனர்கள் திசை திருப்புவர், திராவிட எதிர்ப்பாளர்களாக்கி திராவிடர் கழகத்தை எதிர்க்க, அந்த அரைவேக்காடுகளை ஆயுதமாகப் பயன்படுத்துவர். கவைக்குதவாத வேலை அது!            

கே.       ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சுயமரியாதை இயக்கமும் ஒரே காலகட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டாலும், அவர்கள் அதிகமாகவும், நாம் குறைவாகவும் வேரூன்றியுள்ளோம் இதற்கான காரணம், தீர்வு என்ன?

                – விஜய், ஆவடி

ப:           அவர்கள் அகில இந்திய இயக்கம். நாம் தமிழ்நாடு அமைப்பு. நாம் முதலில் நம் பூமியைப் பண்படுத்திடவே அதிக கவலை எடுத்தோம். தமிழ்நாட்டில் ஒப்பிட்டால் நம் பலமும் அவர்கள் பலமும் எப்படி என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. மக்கள் இயக்கம் நம்முடையது. கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள். கண்ணுக்குத் தெரியாமல் நம் கொள்கையை ஏற்றோர் என்று உண்டே அதையும் புரிந்துகொள்ளுங்கள்.

கே.       ஜாதி மறுப்புத் திருமணங்களை இளைஞர்கள் செய்து கொள்ள முன்வரும் போது குடும்பத்தினர் தடுக்கின்றனர் இதனை சரி செய்ய என்ன வழி?

                – சு.விமல்ராஜ், கரூர்

ப:           ஜாதி போதை ஏறிய பெற்றோர்கள் உட்பட பலருக்கும் விளங்கும் வண்ணம் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.      

கே.       ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்ததுபோல வேறு ஏதேனும் நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனரா?                                                                      

  – சி.கிருபாகரராஜ், பம்மல்

ஹிட்லர்

ப:           ஏன் ஹிட்லர் தன்னை ஆரியப் பரம்பரை என்று கூறினாரே; ஈரான் போன்ற நாடுகளிலும் ஆரியர் குடியேற்றம் உண்டே!

கே.       எனது நண்பர் பார்ப்பனர் அவர் எப்போதும் பெரியாரை அவர்களை புகழ்ந்து பேசுவார் இதுபோன்ற பார்ப்பனர்களை நம்பலாமா?

– சீனிவாசன், ஊரப்பாக்கம்

ப:           பாராட்டுக்கள். இயக்கத்திற்குள் கொண்டு வருவதன்மூலம் ஊடுருவலுக்கு இடம் தராதீர்!

கே.       மக்களிடம் மூடபழக்க வழக்கங்கள் அதிகமாக இருக்கிறதே அகற்ற என்ன செய்ய வேண்டும்?

– இ.தமிழ் உதயா, தாம்பரம்

ப:           வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

கே:       ஜாதியை மட்டும் வைத்து தமிழர்கள் சிலரை ‘நீ தெலுங்கன்’ எனக் கூறுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

– ராமசாமி, சென்னை

ப:           மொழியால் தெலுங்கர்களும் திராவிடர்களே! பின் ஏன் குழப்பம்! பண்பாடு முக்கியம் _ மொழியை விட!

கே.       பெரியார் பயிற்சி வகுப்புகளைச் சென்னை போன்ற பெருநகரங்களில் வெவ்வேறு இடங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தினால் நிறைய இளைஞர்களை வார்க்கப் பயன்படும் செய்வீர்களா?

– கந்தசாமி, சென்னை

ப.           நல்ல கருத்து; தவறாமல் செய்யலாம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *