மருத்துவம் : இளநரையைப் போக்க எளிய, இனிய மருத்துவம்!

மார்ச் 1-15 2019

 

அறிவியல்பூர்வமாக பார்த்தால் ‘மெலனின்’ எனும் கருப்பு நிறத்தை தரும் நிறமிசத்து குறைவாவதே இளநரைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இளநரையிலிருந்து மீள்வது எப்படி? வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பித்தத்தை தூண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக காரசாரமான, மசாலா சேர்ந்த உணவினை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை தொடக்கூடாது. நேரத்துக்கு சரியாக சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், கொய்யா, நார்த்தை, மாதுளை, வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளி, இரும்பு சத்துக்கு முருங்கை கீரை, கறிவேப்பிலை, பேரிச்சம் பழம், அத்திப் பழம், சர்க்கரைக்கு பதில் இரும்புச் சத்து நிறைந்த பனைவெல்லம், வைட்டமின் பி 12 அதிகம் உள்ள பால் மற்றும் மாமிச சூப் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கல்லீரலை பலப்படுத்தும் கரிசலாங்கண்ணி கீரை, வைட்டமின் ஏ நிறைந்த சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். டீ, காபி இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக புரதச்சத்து நிறைந்த பாதாம்பருப்பு அல்லது முளை கட்டிய தானியங்கள் இவற்றில் பனைவெல்லம் சேர்த்து உண்ணும்போது நல்ல பலன் கிடைக்கும்.

பயோட்டின் எனும் வைட்டமின் பி_7 உள்ள மீன், உப்பு சேர்த்து வறுத்த பாதாம், காலி பிளவர், முட்டை கரு, காளான், பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இளநரையை போக்குவதில் செம்புச் சத்து முக்கிய பங்காற்றுகிறது. சிறுகீரை, மூக்கிரட்டை, கரிசாலை, அவுரி இலை போன்ற மூலிகைகள் செம்புச்சத்து நிறைந்தது. இவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதுடன் இவை சேர்ந்த உள் _ வெளி மருந்துகளை பயன்படுத்தலாம்.

பயோட்டின் எனும் வைட்டமின் பி – 7 உள்ள மீன், உப்பு சேர்த்து வறுத்த பாதாம், காலி பிளவர், முட்டை கரு, காளான், பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இளநரையை போக்குவதில் செம்புச் சத்து முக்கிய பங்காற்றுகிறது.

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள கையான் தைலம், நீலி பிருங்காதி தைலம், மருதாணி தைலம், அவுரி தைலம், அறுகீரை விதை தைலம் இவற்றில் ஒன்றை வாங்கி பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலையை அல்லது அவுரி இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்து தலைமுடி தைலமாக பயன்படுத்தலாம். நீலாவரை இலை, மருதானி இலை, கடுக்காய் பொடி இவற்றை வெந்நீரில் ஊற வைத்து பசையாக்கி தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம். மன அழுத்தத்தையும், பித்தத்தையும் குறைக்கும் சீரகதைலம், வில்வாதி தைலம், தாமரை தைலம், நெல்லிக்காய் தைலம் இவற்றில் ஒன்றை எண்ணெய் குளியலுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறாக இளநரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் மேற்கூறிய பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துகளையும் எடுத்துக்கொண்டால் நரை மட்டுமல்ல, திரை, மூப்பு, பிணி போன்ற அனைத்திலும் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *