மாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி! அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை!

பிப்ரவரி 16-28 2019

பசு மாட்டை ‘கோமாதா _ குலமாதா’ என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வணங்குவதுடன், பசு பாதுகாப்புக் குழு _ காவல் படை என்ற பெயரில் மற்றவர்களை _ குறிப்பாக தலித்துகளை _ முசுலீம்களைக் கொல்லும் நிகழ்வுகளும், குஜராத்திலும், உ.பி.யிலும், வடமாநிலங்களிலும் (பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்) இதற்குத் தனியே ஒரு அமைச்சகமும், அமைச்சர் எல்லாம்கூட ஏற்படுத்தி, கூத்தடிக்கின்றனர்!’’ எதிர்த்துப் போட்டியிடும் எதிர்கட்சிகள்கூட அதனையே தாங்கள் செய்வதாகக் காட்டி, வாக்கு வங்கி அரசியல் நடத்துவது அதைவிட _ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்சைவிட மகாமகா கேலிக் கூத்தாகும்!

வெப்ப சலனத்தால் ஏற்படும் தீங்குகள்!

இன்று வந்துள்ள ஆங்கில நாளேடு இந்து’ பத்திரிகையில் (கோவை பதிப்பு 7ஆம் பக்கம், (31.1.2019) உள்ள ஒரு செய்தி _ அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் திடுக்கிடுவதாக இருக்கிறது.

நாட்டின் பல்வேறு அசாதாரண இயற்கை நிகழ்வுகள் _ பருவ மழை தவறுதல், புயல், சுனாமிச் சீற்றங்கள் போன்றவை ஏற்படுவதற்கு மூலகாரணம் வெப்ப சலனம்  (Global Warming) ஆகும் என்பது நிலைநாட்டப்பட்ட உறுதியான அறிவியல் கருத்தாகும்.

மாட்டு மூத்திரத்தால் மிகப்பெரிய கேடு – பேராபத்துகள்!

பசு மாட்டின் மூத்திரம் கிருமிகளைக் கொல்லுகிறது _ மருத்துவமனைகளில் கிருமி நாசினிகளாகப் பயன் படுகிறது  (Disinfectant)    _ இது பயிரை வளர்க்கிறது  _ நோய்களைத் தீர்க்கிறது  என்று அளந்து கொட்டியவர்கள் முகத்திரையைக் கிழிக்கும் அறிவியல் தகவல் இன்று (31.1.2019) வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு சதவிகிதம் பலன்  அவற்றால் என்றால், பல மடங்கு இந்த மாட்டு மூத்திரத்தால் ஏற்படும் ‘நைட்ரஜன்’ N2O என்ற Nitrous oxide emissions என்பது வெப்ப சலனத்தை உருவாக்கக் காரணமான கரியமில வாயுவை விட 300 மடங்கு அதிகமான ஆபத்தை உருவாக்கக் கூடிய சக்தியுள்ளதாக  உள்ளது என்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை அதிகம் உபயோகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பதால், குறிப்பாக இந்த நைட்ரோ ஆக்சைடுமூலம் ஏற்படும் தீமை மிக அதிகம் என்பதை, கொலம்பியா, அர்ஜென்டினா, பிரேசில், நிகரகுவா, டிரினிடாட், டோபோகோ ஆகிய நாடுகளின் ஆய்வுகள் தொகுப்பாக  ‘Scientific Reports’ (விஞ்ஞான அறிக்கைகள்) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது!

இந்த அறிவியல் அறிக்கைகள்மூலம் பசு மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம் உள்பட) எவ்வளவு ஆபத்தான ஒன்று என்பது புரிகிறதா?

உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!

எனவே, கோமாதா மூத்திரம் _ உலக அழிவு _ வெப்ப சலனம்மூலம் ஏற்பட முக்கிய காரணம் என்றால், இதைத் தடுப்பது _ மாற்றுவதுபற்றி விஞ்ஞானிகள் கூடிக் கலந்து தடுப்புப் பரிகாரம் தேடவேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோள்.

டில்லி இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழக பயோ-டெக்னாலஜித் துறை பேராசிரியரும்,  சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலை வருமான என்.இரகுராம் இதுபற்றி மேலும் ஆய்வுகளும், மாற்றுப் பரிகார, தடுப்புக்கான வழிவகைகளைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் இதுவும் முக்கியமாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *