சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஜனவரி 16-31 2019

மாதவிடாய் நின்றுபோன

நிலை

 நூல்:         அனைவரும் அறிந்துகொள்ள  வேண்டிய முக்கிய நோய்கள்

ஆசிரியர்:   டாக்டர் பூ.பழனியப்பன், டாக்டர் ப.சுமங்கலி

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,    பெரியார் திடல்,                          

                    84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி,                                       

                    சென்னை- 600 007.

                    தொலைபேசி: 044 – 2661 8161.

                    பக்கங்கள்: 200            விலை: ரூ.100/-

 

 

 

“மாதவிடாய் என்பது கருப்பையிலிருந்து (Uterus) கருப்பையின் சுவர்களில் படிந்துள்ள குருதியும் வேறு சத்துப் பொருள்களும் உரிய பருவத்தில் – பருவந்தோறும் – முறையாகப் பெண்குறி வழியாக வெளியேறும் செயலாகும். இச்செயல் கரு உண்டாகத் தகுதியுள்ள பெண்களிடத்தில் மட்டும் நடைபெறுகின்றது.

பொதுவாகப் பெண்களுக்கு முதல்முறையாக மாதவிடாய் ஏற்படல் _ பூப்பெய்தல் என்பது 11 _ 16 வயதுக்குள் நடைபெறும். 11 வயதுக்கு முன்னும் நடைபெறலாம். மாதவிடாய் ஏற்படல் ஒரு மாதத்திற்கு _ 28 நாள்களுக்கு ஒருமுறை என்ற நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயலாகும். வேறுபட்டும் நடைபெறுவது உண்டு. மாதவிடாய் பெண்களுக்கு

45 வயதுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கும்; சிலருக்கு 40 வயதிலேயே கூட நின்று விடும்; சிலருக்கு 45 வயதுக்குப் பின்னரும் தொடரும்.

மாதவிடாய் ஏற்படுதலில் எத்தகைய சிக்கலும் இல்லையென்றால் தான் கரு உண்டாகும்; மகப்பேறு நிகழும். மாதவிடாய் இல்லையெனில் மகப்பேறு இல்லை. குழந்தை பிறந்து சில மாதங்களில், மாதவிடாய் வராமலே (இல்லாமலே) கரு உண்டாக வாய்ப்பு உண்டு.

மனித உயிரி – கரு

ஒவ்வொரு மனித உயிரியும்  (Human being) பெண் முட்டை செல் Egg cell   _ பெண்ணின் உயிர் உற்பத்தி செல் என்கிற (Ovum) ஒன்றும், ஆணின் உயிர் உற்பத்தி செல் என்கிற Sperm ஒன்றும் இணைந்து கருவாவதன் மூலமே உண்டாகின்றது. கருவுறுதல் இல்லையெனில் உயிர்களின் உற்பத்தியில்லை.

பெண்களிடத்தில் இந்த உயிர் உற்பத்தி முட்டைகளை (Ova) உற்பத்தி செய்பவை இரு முட்டைப் பைகளேயாகும்  (Ovaries) முட்டைப் பைகளினுள் இருக்கும் முட்டைகள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறுபைகளில் (Sac) – உறைகளில் இருக்கின்றது. இந்தச் சிறுபைகளுக்கு ஆங்கிலத்தில் ஃபாலிக்கள்ஸ் (Follicles) என்று பெயர். ஒவ்வொரு மாதமும் முட்டைகளில் ஒன்று மட்டுமே முதிர்ச்சியடைகின்றது. முதிர்ச்சியடைந்த முட்டை – Ovum -யின் சிறுபை  உறை வெடிக்கின்றது; முட்டை வெளிவருகின்றது. பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு முட்டை மட்டுமே முதிர்ச்சியடைந்து வெளிவரும். இச்செயலுக்கு – முட்டை வெளியேற்றப்படும் செயல் -Ovulation – என்று பெயர்.

சிறுபையிலிருந்து வெளியில் தள்ளப்பட்ட முட்டை வெளியேறும் குழாய்கள் ஒன்றின் வழியாக பாதைகள் ஒன்றின் வழியாக  – Fallopian tube or Oviduct – வெளிவரும். இப்பயணம் முடிய 4, 5 நாள்கள் ஆகும். அப்பொழுது பெண்குறி வழியே கருப்பையைக் கடந்து (Uterus) இந்த வெளியேறும் குழாய்க்கு (Fallopian tube) ஆணின் உயிர் உற்பத்தி செல் (Sperm)- உடல் உறவு நிகழ்ந்தால் வரும். அவ்வாறு அது  Sperm வந்திருந்தால் முட்டை – செல் அதை (Sperm)ச் சந்திக்கின்றது. இரு செல்களும் (பெண் _ ஆண்) இணைந்து கரு (Zygote) உண்டாகின்றது. இவ்வாறு உண்டாகும் கரு, கருப்பைக்குள் வருவதற்கு முன்னரே, இக்கருவை வளர்க்க கருப்பை தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

அதாவது கருப்பையின் சுவர் பஞ்சு போன்று உறிஞ்சும் இயல்பைப் பெறுகின்றது. அச்சுவரில் குருதியும் சத்துப் பொருள்களும் – திசுக்கள் படிகின்றன; சுவர் தடிப்பாகின்றது. கருப்பைக்குள் வந்த கரு கருப்பையில் ஊன்றி விடுகின்றது. படிந்த பொருள்கள் கருவுக்கு உணவாகின்றன.

ஹார்மோன்கள் இயக்குநீர்

வெளியேறும் குழாய் ஒன்றின் வழியே பயணஞ் செய்து கொண்டிருக்கும் முட்டை – (Zygote) ஆணின் உயிர் உற்பத்தி செல்லைப் பெற்றுக் (Sperm) கருவாகும் என்று உறுதியாகத் கூற முடியாது. ஆனால் கரு உருவாகாத நிலையிலும் கருப்பை  (Uterus) கருவை ஏற்கத் தன்னைத் தயார்நிலையில் வைத்துக் கொள்கின்றது. கருவாக உருவாகாத முட்டை கருப்பையை அடைந்து உடைந்து விடுகின்றது.

கரு வராத நிலையில் – கரு இல்லாத நிலையில் கருப்பையில் படிந்துள்ள பொருள்கள் பயனற்றதாகி விடுகின்றன. எனவே சுவரில் படிந்த பொருள்களாகிய குருதி, திசுக்களின் இளகிய கூழ்ப் பகுதி ஆகியவை பெண்குறி வழியே வெளியேறுகின்றன. இதுவே மாதவிடாயாகும். ஒவ்வொரு மாதவிடாய் முடிந்தவுடனே கருப்பை கருவை ஏற்கத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் வேலையைச் செய்கின்றது.

ஹார்மோன்கள் என்பவை நாளமில்லாத சுரப்பிகள்  (Ductless glands – Endocrine glands)    சுரக்கும் இயக்குநீராகும். இது நேரிடையாகவே குருதியில் கலக்கின்றது.

நாளமில்லாத சுரப்பிகளைத் தவிர திசுக்களில் இருக்கும் சில தனிவகை செல்களும் – Special cells – ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த செல்கள் நாளமில்லாத சுரப்பி வகைகளைச் சேர்ந்தவை அல்ல. இங்கு இருவகை ஹார்மோன்களும் செயல்படுகின்றன. உடல் இயல்பான நிலையில் இயங்க ஹார்மோன்கள் காரணமாக அமைகின்றன என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.

வாசோ மோட்டார் என்பது குருதிக்குழாய்ச் சுவர்களின் தசைகளைக் கட்டுப்படுத்திக் குறுக்களவைச் சரி செய்தலாகும். இதில் கோளாறு ஏற்படின் தோலின் நுண்குருதிக் குழாய்கள் முறையாகத் திடீரென்று விரிவடைகின்றன. அப்பொழுது உடல் மீது அனல் வீசுதல் போன்ற உணர்ச்சி ஏற்படும்; எரியும்; அனல் வீசும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதுபோல் இருக்கும்; வியர்த்துக் கொட்டும்.

ஹார்மோன்களின் வேலை

மாதவிடாய் முறையாக நடைபெற காரணமாக அமைபவை பிட்சுட்டரி சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களேயாகும். சான்றாக ஒவ்வொரு முட்டையையும் சுற்றி உறை போன்றிருக்கும் சிறுபையின் செயலைத் தூண்டுவது ஃபாலிகள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனாகும் (Follicle Stimulating Hormone) (FSH). இந்த ஹார்மோன் தூண்டுவதால்தான் முட்டையுறைப்பை (ஃபாலிக்ளஸ்) எஸ்ட்ரோஜன் (Estrogen) என்னும் ஹார்மோனைச் சுரக்கின்றது. அதனால்தான் கருப்பை, கருவை ஏற்கும் நிலையை அடைகின்றது. அடுத்து லூட்டினைசிங் ஹார்மோன்  (Luteinizing Hormone) (LH)  முட்டையுறைப்பையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றது.

மேலும், லூட்டினைசிங் ஹார்மோன்(LH) ஃபாலிக்ளஸ்களைத் தூண்டுவதால் கார்பஸ் லூட்டியம்  (Corpus Luteum) என்ற ஒரு புதிய அமைப்பு உண்டாகின்றது. இங்கு பிட்சுட்டரி சுரப்பி சுரக்கும் லூட்டியோட்ராபிக் ஹார்மோன்  (Luteotropic Hormone – LH) கார்பஸ் லூட்டியத்தைத் தூண்டி, புரோகெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்களைச் சுரக்குமாறு செய்கிறது. இந்த புரோகெஸ்ட்ரோன் தான் முட்டையை ஏற்க கருப்பையைப் பக்குவப்படுத்துகின்றது.

மாதவிடாய் நின்றுபோதல்

பெண்களின் ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், முட்டைப் பைகள் (Ovaries)  நான்கு வாரங்களுக்கு ஒருமுறை, ஒரு முட்டையை உற்பத்தி செய்யும் தன்மையை இழந்து விடுகின்றன. ஆதலின் முட்டை (பெண்ணின் உயிர் உற்பத்தி செல்) உண்டாவதில்லை. முட்டை  (Ovum)   இல்லை யெனில் அது தொடர்பான வேலைகளும் இல்லை. எனவே மாதவிடாய் நின்று விடுகின்றது. மாதவிடாய் 40 வயதுக்கு முன்னும் நின்று போகலாம்; 45 வயதுக்குப் பிறகும் நின்று போகலாம்.

இறுதியான மாதவிடாய் என்பதற்குப் பின்னர் 12 மாதங்கள் சென்ற பிறகுதான் அவள் முடிவாக, கடைசியான மாதவிடாய் நின்று போதலை அடைகிறாள் என்று கூறுதல் வேண்டும். மாதவிடாய் நின்று போதல் (Menopause) என்பதற்குரிய இலக்கணமும் இது தான்.

மாதவிடாய் நின்று போதல் சிலருக்குத் தொல்லையின்றி இயல்பாக – சிறுகச்சிறுக நாளடைவில் நின்றுபோகும்; சிலருக்குத் திடீரென நின்று போகலாம். சிலருக்கு மாதவிடாய் போக்கு பல நாள்கள் தொடர்ந்த பின்னர் நின்றுபோகலாம். மாதவிடாய் நின்றுபோதல் என்பது சில காரணங்களால் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதாலும் ஏற்படுகின்றது. கருப்பை நீக்கப்பட்டாலும் முட்டைப் பைகள் அவற்றின் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆக முட்டைப் பைகள் (Ovaries) நீக்கப்பட்டாலும் மாதவிடாய் நின்றுபோகும்  (Surgical Menopause).

சில நோய்களுக்காகக் கதிர்வீச்சு மருத்துவத்தைப் (Radiotherapy)  பயன்படுத்து கின்றபொழுது கதிர்வீச்சால் முட்டைப்பைகள் பாதிக்கப்பட்டு எஸ்ட்ரோஜென் (Estrogen)    என்ற ஹார்மோன் உற்பத்தியாவதில்லை. அதனால் மாதவிடாய் நின்று போகின்றது. ஆக, மாதவிடாய் 1. இயற்கையாகவும், 2. கருப்பை, முட்டைப் பைகள் ஆகியவை நீக்கப்படுவதாலும், 3. கதிர்வீச்சால் முட்டைப் பைகள் பாதிக்கப்படுவதாலும் நின்று போகின்றது.

வாசோ மோட்டார் என்பது குருதிக்குழாய்ச் சுவர்களின் தசைகளைக் கட்டுப்படுத்திக் குறுக்களவைச் சரி செய்தலாகும். இதில் கோளாறு ஏற்படின் தோலின் நுண்குருதிக் குழாய்கள் முறையாகத் திடீரென்று விரிவடைகின்றன. அப்பொழுது உடல் மீது அனல் வீசுதல் போன்ற உணர்ச்சி ஏற்படும்; எரியும்; அனல் வீசும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதுபோல் இருக்கும்; வியர்த்துக் கொட்டும்.

விளைவுகள்

மாதவிடாய் நின்றுபோகும் சமயத்தில் சிலருக்குப் பல தொல்லைகள் உண்டாகின்றன. மாதவிடாய்க்கும் ஹார்மோன்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் திடீரென ஏற்பட்ட புதிய நிலையை உடல் சரிசெய்து கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.

மேலும், பெண்கள் பெண்மையுடனும், மகிழ்வுடனும், உறுதியுடனும், உடல் வலிமையுடனும் வாழக் காரணமாக அமைபவை ஹார்மோன்களேயாகும். அவற்றுள் மிக முக்கியமானது எஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனேயாகும். இந்த எஸ்ட்ரோஜென் இன்மையால் பலவகை இன்னல்கள் ஏற்படுகின்றன.

வாசோ மோட்டார் – Vasomotor

வாசோ மோட்டார் என்பது குருதிக்குழாய்ச் சுவர்களின் தசைகளைக் கட்டுப்படுத்திக் குறுக்களவைச் சரி செய்தலாகும். இதில் கோளாறு ஏற்படின் தோலின் நுண்குருதிக் குழாய்கள் முறையாகத் திடீரென்று விரிவடைகின்றன. அப்பொழுது உடல் மீது அனல் வீசுதல் போன்ற உணர்ச்சி ஏற்படும்; எரியும்; அனல் வீசும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதுபோல் இருக்கும்; வியர்த்துக் கொட்டும். இரவில் ஆடைகள் நனைந்து போகுமளவுக்கு வியர்வை உண்டாகும். இத்துடன் மயக்கம், படபடப்பு ஆகியவையும் ஏற்படும்.

நீயூரோ என்டோக்ரின் NEUROENDOCRINE

நரம்பு செல்களில் தனித்தன்மை வாய்ந்த சில செல்கள் இருக்கின்றன. அவை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. சான்றாக ஆக்சிடோசின் (Oxytocin), வாசோ பிரசின் (Vaso pressin) ஆகியவை நரம்பு செல்கள் சுரக்கும் ஹார்மோன்களாகும். இவை குருதியுடன் கலக்கின்றன. உடலின் தேவையான பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கு உடலின் செயல்களைக் கட்டுப்படுத்தும் வேலையை நரம்புகளும் நரம்பு செல்கள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களும் செய்கின்றன. இந்த நிலையில் மாறுதல்கள் ஏற்படும்பொழுது கடுகடுப்பு, மறதி, கவனக்குறைவு, தன்னம்பிக்கை இன்மை ஆகியவை ஏற்படும்.

முட்டைப் பைகளில் ஏற்படும் மாறுபாடுகள்

1.            மகப்பேறு ஏற்படும் வாய்ப்புக் குறைதல்

2.            கருமுட்டையில்லாத  (Ovum)  மாதவிடாய்ச் சுழற்சிகள்.

ஒரு மாதவிடாய் தொடங்கி முடிந்து அடுத்த மாதவிடாய் ஏற்பட 28 நாள்கள் ஆகும். இதை ஒரு சுழற்சி (Cycle) என்போம். முதல் 14 நாள்களைச் சுழற்சியின் முதல்பாகம் என்றும், இரண்டாவது 14 நாள்களைச் சுழற்சியின் இரண்டாம் பாகம் என்றும் கூறுகிறோம். சுழற்சியின் இரண்டாம் பாகமாகிய 14 நாள்களில் ஹார்மோன்கள் சுரப்பது குறைகின்றது. ஆதலின் இந்த இரண்டாம் பாகச் சுழற்சியை வலுவிழந்த சுழற்சிப்பாகம் என்கிறோம் (மாதவிடாயின் ஒரு சுழற்சி 14+14 = 28 நாள்களைக் கொண்டது). இது சிறிதே மாறுபடலாம்.

இன வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்கள் (Sex Steriods), எஸ்ட்ரோஜென்ஸ்  (Oestrogens) புரோ ஜெஸ்டிரோன்  (Progesterone), பிட்டுயூட்டரி சுரப்பிகள் Inhibin ஆகியவற்றில் மாறுதல்கள் ஏற்படும்.

நரம்பு செல்கள் ஹார்மோன்களைச் சுரப்பதிலும் மாறுதல்கள் உண்டாகும்.

உடலின் வெப்ப நிலை, தூக்கம், மனநிலை, செயல்கள் – (Behaviour)ஆகியவற்றிலும் வேறுபாடுகள் ஏற்படும்.

மாதவிடாய் நின்றுபோதலின் மாறுதல்கள்

குருதியிலுள்ள முட்டையுறைத் தூண்டு ஹார்மோன்  (FSH) அளவு மாதவிடாய் நின்றுவிட்ட பிறகும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை இயல்பான அளவுக்குமேல் பத்து மடங்கு அதிகமாக உயருகின்றது. அதாவது முட்டையுறைத் தூண்டு ஹார்மோனின் (FSH)  உற்பத்தி அதிகமாகின்றது. இத்துடன் லூட்டியோட்ராஃபிஹார்மோனின் (LH) உற்பத்தியும் கணிசமான அளவுக்கு உயருகின்றது.

ஹார்மோன்கள் அதிகமான இந்த நிலை ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கின்றது. பிறகு இந்த ஹார்மோன்களின் அளவு பெருமளவில் குறைகின்றது. மேலும் மாதவிடாய் நின்ற பின்னர் எஸ்ட்ரோஜன், ஆண்டரோஜென் (Androgen) ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தியும் குறைந்து விடுகின்றது. குருதியிலிருக்கும் எஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவுக்கும் உடலின் பருமனுக்கும் எப்பொழுதும் ஓர் உடன்பாடான தொடர்பு(Positive) உண்டு. மற்றபடி தைராய்டு, அட்ரீனல், பாரா தைராய்டு ஆகிய மூன்று சுரப்பிகளில் எத்தகைய மாற்றமும் நிகழ்வது இல்லை.

இந்தியப் பெண்களுக்கு மேல்நாட்டுப் பெண்களை விட ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாதவிடாய் நின்று விடுகின்றது என்பதை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். பொதுவாக இந்தியப் பெண்களுக்கு 44-_48 வயதளவில் மாதவிடாய் நின்று போகின்றது. மேல்நாட்டுப் பெண்களுக்கு 50 -_ 51 வயதளவில் மாதவிடாய் நின்றுவிடுகிறது. மனநிலைப் பாதிப்பில், இந்தியப் பெண்களைவிட மேலை நாட்டுப் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் நமது நாட்டுப் பெண்கள், சிறுநீர்ப் பாதை பாதிப்பு, பெண்குறி வழிப் பாதிப்பு ஆகியவற்றில் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த வகைப் பாதிப்பு மேல்நாட்டுப் பெண்களுக்குக் குறைவாகவே ஏற்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *