மாயவரம் சி. நடராசன்

ஜனவரி 1-15 2019

இவர் மறைந்த போது தந்தை பெரியார். எழுதிய வரிகள்

தந்தை பெரியார் தளபதியாகத் திகழ்ந்தவர் மாயவரம் சி.நடராசன். பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்னையில் ஓர் ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து கட்டுரைகளை குடிஅரசுக்குத் தந்தவர்.

அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கலவரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில் எல்லாம் மாயவரம் சி.நடராசன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு அரணாக இருந்து எதிரிகளைப் பந்தாடுவார். நாகைமணி, திருவாரூர் தண்டவாளம் அரங்கராசு என்று ஒரு படையே அவ்வாறு இருந்ததுண்டு.

சர்க்கஸ் கம்பெனியில் ஓராண்டுகாலம் சாகசங்கள் புரிந்து, பின் இராணுவத்துக்குச் சென்று, நாடு திரும்பி, காங்கிரசிலும் சேர்ந்து, தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு வெளியேறியதையொட்டி தந்தை பெரியாருடன் நடந்தவர் மாயவரம் நடராசன். ‘வெற்றி முரசு’ என்ற ஏட்டையும் நடத்தியுள்ளார். மாயவரத்தில் இம்பீரியல் பிரஸ் இவருக்குச் சொந்தமானது.

“பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப்பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி’’.

தந்தை பெரியார் அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்த நிலையில், அன்னை நாகம்மையார் உடல்நலவுற்ற நிலையில், அவர்களை மாயவரம் அழைத்து வந்து தம் வீட்டில் தங்க வைத்து வைத்திய உதவிகளைச் செய்தவர். மகன் லெனின், மகள் மங்கையர்க்கரசி, துணைவர் மீனாம்பாள்.

மயிலாடுதுறையில் (9.3.2002), மாயவரம் நடராசன் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் தலைமையில் வெகுசிறப்பாக திராவிடர் கழகத்-தின் சார்பில் கொண்டாடப்-பட்டது.

மாயவரம் சி.நடராசன் பிறந்த நாள்: ஜனவரி 7, (1902)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *