ஜாதி மறுப்புத் திருமணங்கள், பெரியார் கொள்கை தோற்றுவிட்டதா?

ஜனவரி 1-15 2019

கி.வீரமணி

பெற்றோர்களே, பெற்றோர்களே கேளுங்கள்!

அன்பார்ந்த பெற்றோர்களே, வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது  அகத்திலிருந்து _ நம் உள்ளிருந்து _ பெற வேண்டிய ஒன்று. வெளியிலிருந்து _ கடைகளில் பொருள்கள் வாங்கி வருவது போன்றதல்ல _ அவ்வாறு பெறுவது முடியாத ஒன்று!

கஷ்டம், சோதனை வந்தால் மகிழ்ச்சி போய் விடுகிறது என்பது சாதாரண, சராசரி மனிதர்களுக்கு மட்டுமே! சற்று தெளிந்தவர்-களானால் நம் வாழ்க்கைக்கு குறிக்கோள் உண்டு; இலட்சியம் _ இலக்கு _ கொள்கைகள் உண்டு என்று நினைக்கும் அளவுக்கு, சராசரி மனிதர்களைவிட சற்று உயரமாக இருப்பவர்-களுக்கு கஷ்ட, நஷ்டங்கள், கடும் சோதனைகள் துன்பத்தைத் தராது. மாறாக, நெருப்பில் போட்ட பொன்னைப் போல தகத்தகாய ஒளியாகவே மிளிரும்!

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் _ இல்லையா?

ஜாதி வெறி, மத வெறி, மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என்னும் செல்லரித்த பழக்க வழக்கங்கங்கள் ஆகியவை மூளையில் சேர்ந்த குப்பைகளாக இருந்தால், மனதில் தூய்மை இருக்க முடியாத நிலையே ஏற்படும்!

எடுத்துக்காட்டாக,

ஆஸ்திக்கு ஓர் ஆண்; ஆசைக்கு ஒரு பெண் என்பது பத்தாம் பசலித்தனமானது அல்லவா? ஆசைக்கு மட்டும் தான் பெண் மகளா? ஆஸ்தி _ சொத்தில் அவருக்குப் பங்கு கிடையாதா? இன்றுள்ள சட்டத் திருத்தப்படி (தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கலைஞர் அரசு செய்த தொண்டின் காரணமாக) மகனைப் போல மகளுக்கும் பெற்றோர் ஆஸ்தியில் பங்குண்டே, சட்டப்படி!

இன்று அப் பழமொழி அர்த்தமற்றதாகி விட வில்லையா? புத் என்ற நரகத்திற்குத் தகப்பன் போகாமல் இருக்கவே ஆண் பிள்ளை பிறக்க வேண்டும்; புத்திரி ஆனாலும் அவரால் தடுக்க முடியாது என்பது காலாவதியான கருத்தல்லவா?

காலத்திற்கேற்ப பெற்றோர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

குழந்தையாக இருக்கும்போது அந்தப் பெண்ணை  பெற்றோர்களான தாய் _ தந்தையர்களே, எப்படியெல்லாம்  நீங்கள் பாசத்தைக் கொட்டிக் கொட்டி வளர்க்கிறீர்கள்; (பெண்) அவர் கேட்ட பொம்மை, கேட்கும் நகை நட்டுக்கள்! துணிமணிகள்!  அதிலும் புடவை அணிந்தவர்களைவிட சுடிதார், கால்சட்டை, சட்டை அணியும் உடை-மாற்றத்தைக்கூட ஏற்றுக்கொண்டு, பூப்பெய்திய பெண்களை வீட்டிலா இப்போது பூட்டி வைக்கிறீர்கள்? _ இல்லையே! நீங்கள் ஒப்புக் கொண்டுதானே வாங்கித் தருகிறீர்கள்?

அதுபோல, உணவு வகைகளைக்கூட அப் பெண் விரும்புவது போலத்தானே வாங்கித் தருகிறீர்கள்? படிப்புக்கான விருப்பம் அறிந்துதானே பள்ளி, கல்லூரிகள் கூட தேர்வு செய்து அழைத்துச் சென்று சேர்க்கிறீர்கள்! 18 வயது அடைந்த அவர்களுக்கு வாக்குரிமை உள்ளது. பிள்ளைகள்  _ மகன் _ மகள் _ யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? இன்றையச் சூழ்நிலையில் முடியாதே!

ஆனால், அவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வேலையும் தேடி சம்பாதித்து தனி வாழ்க்கை நடத்தும் அளவுக்கு முதிர்ந்து முற்றிய நிலையில், ஒருவரை விரும்பி, இருவரும் காதலித்துப் பழகி மணமக்களாக வாழ விரும்பினால், ஜாதி, மத, மூடப் பழக்க வழக்கங்கள் _ மூளைக் குப்பை-களாக ஏற்றப்பட்ட ஒரே காரணத்திற்காக, நமது பெண்களை கொலைக்கோ, தற்கொலைக்கோ ஆளாக்கலாமா?

அதிலும் கொடுமை, கூலிப்படைகளை ஏவி நாம் கண்ணும் கருத்துமாய் வளர்த்த நமது செல்வங்களை சதிவலைப் பிண்ணியோ, கொலைசெய்தோ, விஷங்கொடுத்தோ, எரித்தோ, கொல்லத் துணியலாமா?

நம் இரத்தத்தின் இரத்தம்; சதையின் சதை _ உன் கண்ணில் நீர் வழிந்தால் எம் நெஞ்சில் உதிரம் கொட்டுதம்மா! என்று வளர்த்து, ஆளாக்கிய அருஞ்செல்வங்களை ஜாதி வெறி, மதவெறி, பண வெறி காரணமாக சாகடிக்க எப்படித்தான் முடிகிறது?

நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் அல்லவா? மனிதத்தை மரணப் படுகுழியில் தள்ள எப்படித்தான் மனம் வரும்? அருமைப் பெற்றோர்களே, ஒரு கணம் சிந்தியுங்கள்;  கொன்ற பின் வாழ்நாள் முழுவதும் குற்றமுள்ள நெஞ்சத்தோடு உங்களால் எப்படி வாழ முடியும்?

கண்தானம், இரத்த தானம், உடல் உறுப்புக் கொடைகளை தரும்போது என் ஜாதியக்காரனுக்கு, என் மதத்தவருக்கு மட்டும்தான் அதைப் பொருத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியுமா உங்களால்? இப்போது  புரிகிறதா? எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை, இடையில் வந்த   சதியாளர்களது சூழ்ச்சிதான்  ஜாதியும் மதமும்  என்று!

டாக்டர்களிடம் போகிறீர்கள். சொந்த ஜாதி பார்த்தா போகிறீர்கள்? என் ஜாதிக்காரன்தான் என் நோய் தீர்க்க அனுமதிப்பேன் என்று கூற முடியுமா உங்களால்?

பின் ஏன் 18 வயது தாண்டி, 21 வயது தாண்டிய அவர்கள் _ நம் காலத்தை விட உலக அறிவு, இணையதளம், டுவிட்டர், பேஸ்புக், கூகுள், வாட்ஸ்அப் என்ற காலத்தில் வாழும் அவர்கள் நம்மை விட அறிவாளிகள் _ முடிவு செய்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்று ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்?

“திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமே என்ற கவலை தான்” என்று ஒரு பொய்யான _ போலிக் காரணத்தைக் கூறுகிறீர்கள் _ மனச்சாட்சியை மறைத்து விட்டு!

பெற்றோர்கள் பார்த்து நடத்திய திருமணங்கள் எல்லாம் தோல்வியே அடைவதில்லையா? எல்லாம் வெற்றியா? இன்னும் சொல்லப்போனால் பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணங்களில் மணமக்களின் விருப்பம் இல்லாமல் வாழ்க்கை திணிக்கப்படுகிறது. தவறானால் அதைத் திருத்தி மாற்றுவழி கண்டறிய அச்செல்வங்களுக்கு உரிமையும் தரமுடியுமே! அதை ஏன் மறந்து விடுகிறீர்கள்?

தாராள மனதுடன் மனிதாபிமானத்தைக் கொன்று, மிருக அவதாரம் எடுத்து விடாதீர்! மனிதர்களாக வாழ்ந்து, தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்த பிறகு தோழர்களாக நடத்தி, மகிழ்ச்சியை அறுவடை செய்யுங்கள்!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *