பாடநூலில் திணிக்கப்பட்டுள்ள ஆரிய பார்ப்பன ஆதிக்கம்!

அக்டோபர் 01-15

 

 

ராஜஸ்தான் மாநில பள்ளிகளில் சொல்வழக்கு என்ற பாடத்தில் நாட்டுப்புறக் கதைகள் என்ற பிரிவில் உள்ளது இந்தப் பாடம். புனிதத்தலம் உள்ள மலையடிவாரத்தில் ஒரே ஒரு வீடு. அங்கு ஓர் ஏழைப் பார்ப்பனத்தி மலைக்கு தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் பணியைச் செய்துவந்தார். உணவு சுவை யில்லாமல் இருந்தாலும் தூய்மையான மனதோடு, தெய்வீக அச்சத்துடன் அவர் உணவு வழங்கிவந்தார். அப்பகுதியில் வீடுகளோ அல்லது வேறு எந்த வசதிகளோ கிடையாது. ஆகவே, அனைவரும் அவர் வீட்டில் சாப்பிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துச் சென்றனர். அந்தப் பார்ப்பனத்திக்கு செல்வமும், புகழும் அதிகரித்தது.

அந்த மலைக்கு அப்பால் ஒரு செருப்பு தைக்கும் குடும்பம் வசித்து வந்தது. அவர்களின் நடவடிக்கையால் ஊரார் அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டதால் அவர்களை யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில் ஏழைப் பார்ப்பனத்தி முதுமையின் காரணமாக இறந்துவிட்டார். அந்தப் பார்ப்பனத்தி செத்துப் போன தகவல் எப்படியோ செருப்பு தைக்கும் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு தெரிந்துவிட, அவள் வந்து ஏழைப் பார்ப்பனத்தியின் இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவர் பக்தர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தார். அந்தச் செருப்பு தைப்பவள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்து உணவையும் சுவையாக செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஆகையால், இவருக்கும் அந்தப் பார்ப்பனப் பெண்ணிற்கு கிடைத்த மரியாதை அனைத்தும் கிடைத்தது. கோவிலுக்கு வரும் அனைவரும் இவரும் பார்ப்பனத்தி என்றே நினைத்துக் கொண்டனர்.

ஒரு நாள் இமயமலையிலிருந்து ஒரு வேதம் படித்த மதகுரு அங்கே வருகை புரிந்தார். அவருக்கும் இவர் சாப்பாடு செய்து கொடுத்தார். அந்த மதகுரு இவரின் சாப்பாட்டுச் சுவையில் லயித்துவிட்டார். மனதாரப் பாராட்டி இவ்வளவு சுவையான சாப்பாடு எப்படிச் செய்கிறீர்? இதற்கு முன்பு இருந்தவர் இப்படிச் செய்ததில்லையே என்று கேட்க, அந்தப் பெண்ணும், “நான் கீரைக்கட்டைப் பிரிக்க முன்பிருந்த பெண் போல பல்லால் கடித்துப் பிரிக்கமாட்டேன். அது பக்தர்களுக்கு எச்சிலைப் பரிமாறி அவர்களை இழிவுபடுத்திவிடும். ஆகையால், நான் கீரைக்கட்டைப் பிரிக்க இதோ இந்தக் கத்தியைப் பயன்படுத்துகிறேன்” என்று கூறினார்.

அப்பெண்ணிடம் இருந்த கத்தி செருப்பு தைப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ரப்பி எனப்படும் கத்தி ஆகும். உடனே அந்த மதகுரு அவரைப் பார்த்து, “நீ யார்? நீ பார்ப்பனத்தியா, இல்லையா?” என்று கேட்க, அவரும், “மன்னிக்க வேண்டும். நான் செருப்பு தைக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள். இங்கு வருபவர்களுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லாத காரணத்தால், நான் உணவு சமைத்துக் கொடுக்கும் வேலையைச் செய்தேன்” என்று கூறினார். உடனே அந்த மதகுரு அந்த செருப்புத் தைக்கும் பெண்ணை, “பார்பனத்தி என்று பொய்சொல்லி பக்தர்களை ஏமாற்றினார்” என்று குற்றம் சாட்டி ஊரார் முன் நிறுத்தி தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.

இந்தக் கதையைத்தான் நாட்டுப்புறக் கதை என்று குழந்தைகள் மனதில் திணிக்கிறது, ராஜஸ்தானி நாட்டுப்புறக் கதைகள். தொகுப்பு: கோவிந்த அகர்வால், ராஜஸ்தான் பாடநூல் கழகம், ஜோத்பூர்.

சில நாட்களுக்கு முன்பு புனே நகரில் இந்திய வானியல் ஆய்வுக்கள இணைச் செயலாளர் பதவியில் உள்ள ஒரு பொறியாளர் தனது வீட்டில் நீண்ட காலமாக மராட்டா இனத்தைச் சேர்ந்த பெண், தான் பார்ப்பனர் என்று பொய் கூறி சமையல் வேலைக்குச் சேர்ந்தார் என புகார் அளித்ததன் பேரில் அந்தப் பெண் மீது குற்றவியல் நம்பிக்கைத் துரோகம் (பிரிவு 405, 409), ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420), தாக்குதல் (352) போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புகார் கொடுத்தவர் மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ஒரு பொறியாளர், கைது செய்யப்பட்டவர் தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரே ஒரு பொய்சொல்லி சமையற்காரராக ஓராண்டாக வேலை பார்த்தவர். அந்த பார்ப்பனப் பெண்ணின் செயலை நியாயப்படுத்தவே ராஜஸ்தான் அரசு, “மேலே சொன்ன ஒரு கதையை இவர்களாகவே உருவாக்கி நாட்டுப்புறக் கதை என்ற பெயரில் பிஞ்சு உள்ளங்களில் பார்ப்பனர்களே உயர்வானவர்கள்” என்ற ஒரு மனப்பான்மையை ஊட்டிவருகிறது.

– தகவல்: சரவணா இராசேந்திரன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *