அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?

அக்டோபர் 01-15

 

 


                     வாயால் விந்து விழுங்கப்பட்டால் கருப்பையில் கரு உண்டாகுமா?

அருணகிரிநாதர்! திருப்புகழ் பாடி சந்தக்கவி என்ற பெருமை பெற்றவர். கவியாற்றலையும் தாண்டிய காம வேட்கை உடையவர். அதன் விளைவாய் கட்டுப்பாடில்லா, கண்ட கண்ட பெண்களுடன் உடலுறவு கொண்டதால் தொழுநோய் பெற்றார்.

அப்படிப்பட்ட காமாந்தக அருணகிரிநாதர் ஒரு நாள் ஒரு பெண்ணைப் பார்த்து அவளைப் புணர தவியாய்த் தவித்தார். அந்தப் பெண் எளிதில் சம்மதிக்கவில்லை. அருணிகிரி நாதருக்கே அந்தப் பெண்ணின் கவர்ச்சி காம எழுச்சியை மேலும் மேலும் கிளற, அப்பெண்ணைப் புணருவதற்கு முன்னே அவருடைய விந்து வெளிப்படும் நிலை வந்ததும் அருகிலிருந்த எருக்கு இலையில் அந்த விந்து சிந்தாமல் பிடித்து வைத்தார்.
அருணகிரிநாதருக்கு அப்பெண்ணைப் புணர முடியாத கடுப்பில் இருந்ததால், அப்பெண் மகான் கோபத்திற்கு ஆளாகிவிட்டோம் என்று அஞ்சி அருணகிரிநாதரிடம் செல்கிறாள்.

“உன்னை அழைத்தவன் தொன்னையிலே! என்னிடம் வராதே!’’ என்கிறார் ஏமாற்றத்தால் வந்த சீற்றத்துடன்.

உடனே, அப்பெண் எருக்க இலையில் இருந்த அந்த விந்தை எடுத்துப் பருகிவிட்டாள். அதன் விளைவாய் அவள் கருத்தரித்தாள் என்கிறது இந்து மதம்.

வாயால் விழுங்கப்படும் எதுவும் இரைப்பைக்குள் சென்று, சிறுகுடல், பெருங்குடல் வழியே சென்று மலக்குழாய் வழியே வெளியேறும். வாய்வழியே விழுங்கப்படும் எதுவும் கருப்பைக்குள் செல்லாது.

பெண்குறியின் வழியே ஆண் குறி நுழைக்கப்பட்டு, உடலுறவின் உச்சத்தில் விந்து விரைவாய்ப் பீச்சப்படும்போதுதான், விந்துவிலுள்ள உயிரணு கருப்பைக்குள் செல்லும். மற்றபடி கருப்பைக்குள் எதுவும் செல்லாது, செல்லவும் முடியாது. இது உடற்கூறு படித்தவர்களுக்கு நன்கு தெரியும். பாமர மக்களுக்குக் கூட இந்த உண்மை புரியும். அப்படியிருக்க, வாய்வழியே விழுங்கப்பட்ட விந்து கருப்பைக்குள் சென்று கருத்தரித்தது என்று அறிவியலுக்கு முரணான கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பாம்பு விழுங்குவதாலா?

சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் எப்படி ஏற்படுகிறது என்பது பள்ளியில் அறிவியல் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நன்கு தெரியும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சந்திரன் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் பூமி வருவதால் பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் ஏற்படுவது.

சூரிய கிரகணம் அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் முழு நிலவு அன்றும் வரும்.


இவை அறிவியல் உண்மைகள்.

ஆனால், இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா?

திருப்பாற்கடலை, மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை தாம்புக் கயிராகவும் கொண்டு, அசுரர்கள் பாம்பின் தலைப் பக்கத்தைப் பிடிக்க, தேவர்கள் பாம்பின் வால் பகுதியைப் பிடிக்க (இதில்கூட ஆபத்தில்லாமல் வாலைப் பிடித்திருக்கிறான் பாருங்கள்), திருப்பாற்கடலைக் கடைந்தனர்.

இறுதியில் அமிர்தம் வெளிவந்தது. அத்தோடு பெண்களும் வந்தனர்.

பாற்கடலைக் கடைந்தால் வெண்ணெய் வரும்! பெண்கள் எப்படி வருவார்கள்?

இப்படிச் சொல்லும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையாம்!

அமிர்தமும் பெண்களும் வந்த நிலையில், அசுரர்கள் பெண்களை விரும்பினர். தேவர்கள் அமிர்தம் உண்ண விரும்பினர். பெண்களை அழைத்துக்கொண்டு அசுரர்கள் செல்ல,

தேவர்கள் அமிர்தம் உண்ண பந்தியில் அமர்ந்தனர். மகாவிஷ்ணு அமிர்தத்தை கரண்டியால் அள்ளி அள்ளி தேவர்களுக்குப் பரிமாறினார். அப்போது அப்பந்தியில் ராகு, கேது என்ற இரு அசுரர்கள் திருட்டுத்தனமாக  அமர்ந்து அமிர்தம் சாப்பிட்டனர். இதை, அசுரர்கள் அருகில் அமர்ந்திருந்த சூரியனும் சந்திரனும், மகாவிஷ்ணுவிடம் காட்டிக்கொடுக்க (போட்டுக் கொடுக்க) கோபம் கொண்ட மகாவிஷ்ணு, அமிர்தம் பரிமாறிய அன்ன வெட்டியால், இராகு, கேது என்ற அசுரர்களின் கழுத்தில் ஒரு போடு போட, இருவர் தலையும் துண்டானது. ஒருவர் பாம்பு வடிவம். மற்றவர் மனித வடிவம்.

அவர்கள் அமிர்தம் உண்டதால் இறப்பு கிடையாது என்பதால், அவர்கள் தலையை மீண்டும் பொருத்தும்போது பாம்பு தலை மனித உடலுக்கும், மனிதத் தலை பாம்பு உடலுக்கும் மாற்றிப் பொருத்திவிட்டனர். இவர்களே இராகு, கேது என்று ஆனார்கள்.

தாங்கள் தெரியாமல் அமிர்தம் சாப்பிட்டதை, மகாவிஷ்ணுவிற்குக் காட்டிக் கொடுத்த சூரியனையும், சந்திரனையும் வருடம் ஒருமுறை விழுங்குவோம் என்று கூறினார்கள். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதுதான் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்கிறது இந்து மதம்.

இப்படிப்பட்ட இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

வானவில் அர்ஜூனன் போடுவதா?

வானவில் எப்படி ஏற்படுகிறது என்பது பள்ளி மாணவர்கள் இயற்பியலில் நன்றாகப் படிப்பர்.

நீர்த் திவலையில் சூரிய ஒளி ஊடுருவும்போது நிறப்பிரிகை ஏற்பட்டு ஏழு வண்ண வானவில் ஏற்படுகிறது.
மழைமேகம் வானத்தில் இருக்கும்போது அதிலுள்ள நீர்த் திவலைகளில் சூரிய ஒளி ஊடுருவிச் செல்ல வானவில் உருவாகும். வானவில் சூரியனுக்கு எதிர்த்திசையில்தான் ஏற்படும்.

நாம் வாயில் நீரை வைத்து சூரியனுக்கு எதிர்த்திசையில் நின்று வாயிலுள்ள நீரை “ப்பூ’’ என்று ஊதினால், அந்த நீர்த்திவலைகளில் சூரிய ஒளி ஊடுருவ அதில் வானவில்லின் வடிவம் தோன்றும். இது அறிவியல் உண்மை. ஆனால் இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா? அது அர்ஜூனன் போடும் வில்லாம். அப்படியாயின் அர்ஜூனனுக்கு முன் வானவில் தோன்றவில்லையா?

  (சொடுக்குவோம்)
– சிகரம்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *