அனிதா…! எம் தமிழ்க்கொழுந்தே!

செப்டம்பர் 16-30

 

 

 

மோடிகளே! எடப்பாடிகளே…!
மண்ணெண்ணெய் வெளிச்சத்தில்
மண்குடிசை சாணத்தில்
மண்டியிட்டுப் படித்து
மதிப்பெண்களால் மதிப்புபெற்ற
‘அனிதா’ எனும் அரும்கொழுந்தை
அறுத்தெறிந்தது உங்கள் ‘நீட்’ என்னும்
சனாதன அரிவாள்!

1151 – மதிப்பெண் பெற்ற
‘பிரியங்கா’ – உங்கள் ‘ப்ரியப்படி’
செங்கல் சுமக்கிறாள்!
1176 – மதிப்பெண் பெற்ற
‘அனிதா’ உங்கள் ‘ஆர்வப்படி’
சூத்திரச்சியாக விரும்பாமல்
சுருக்கிட்டுக் கொண்டாள்!

தமிழ்நிலத்தில் – ஒரு தன்மான மொட்டும்
மலரக் கூடாது.
தமிழ்நிலத்தில் – ஒரு மலரும்
மணக்கக் கூடாது; என்று
அன்று –
கல்வியைப் பறித்தீர்கள்
குலக்கல்வி மூலம்!

இன்று –
உயர்கல்வியை பறித்துவிட்டீர்
உங்கள் சூழ்ச்சித் தேர்வால்!

களை பறித்தவர்கள்
கைகளில் தவழ்ந்த
சுவடிகளை
கபடமாய்க் கைப்பற்றினீர்!

சிறுகச் சிறுக சேமித்த
கனவுகளை எல்லாம்
சிதறடித்து சிரிக்கிறீர்கள்!

டெல்லியின் அதிபர் மோடியின்
கோரைப் பற்களைச்
சாணைப் பிடிக்கும் எடப்பாடி!

எங்கள் கோவணங்களே
உங்களுக்கு ஆடம்பரமாய்த்
தெரிகிறது!

மூத்திரப் பையோடு
உங்கள் முகத்திரையைக்
கிழித்தவனின்
ஆவேச மூச்சுக்காற்று
தமிழனின் சுவாசத்தில்
இன்னும்
அனல் காற்றாய்….!

                       -நாவலன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *