உடல்நலம் காக்க உகந்த வழிகள்

ஜூலை 16-31

உடல் எடையைக் குறைக்கும் பார்லி கஞ்சி

நாளுக்கு நாள் அதிகமாக உடல் பருக்கிறதே என நீங்கள் எத்தனையோ உணவு மற்றும் உடற்பயிற்சி செய்து பார்த்திருப்பீர்கள். உடல் குறைவது போல் தோன்றினாலும், திரும்பவும் உடல் பருமனாகி விடும்.

வெறும் உடற்பயிற்சியும் டயட்டும் மட்டும் தீவிர கொழுப்பினைக் கரைக்க போதாது. வயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் செயல்புரிந்து, அங்கேயிருக்கும் பிடிவாதமான கொழுப்பினை அகற்ற என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். அப்படிப்பட்ட கொழுப்பினைக் கரைக்க உதவும் எளிய உணவு வகை என்ன தெரியுமா? பார்லி.

பார்லியை, அரிசிக்குப் பதிலாக உபயோகப்படுத்தலாம். ஓட்ஸ், கோதுமை வகையறாப்போல குறைந்த கார்போஹைட்ரேட் சத்துக்களைக் கொண்டுள்ளது. பார்லி எவ்வாறு கொழுப்பு கரைய உதவுகிறது?

பார்லி மற்றும் நீரினைக் கொண்டு தயாரிக்கும் ஒரு கப் பார்லி கஞ்சியில், 600_750 கலோரிச் சத்து உள்ளது. இந்தளவு கலோரியை எளிதாகக் கரைத்து விடலாம். பார்லி அரிசியில் பீட்டர் குளுகான் என்ற நார்ச்சத்து உள்ளது.

பார்லியை எப்படி சமைத்தாலும் அழியாது. இது நரம்புகளை பலப்படுத்துகிறது. மேலும் உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது. நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பிவிடும். அங்கே கெட்ட கொலஸ்ட்ரால் முழுவதும் செரிமானத்திற்கு உட்பட்டு கரைந்துவிடும். இவ்வாறு பார்லி கஞ்சி உடல் கொழுப்புகளை குறைக்க உதவும் எளிதான உணவு வகை என்பதில் சந்தேகமேயில்லை. பசி எடுக்காமல் அதிக நேரம் தாக்குப் பிடிக்க வைக்கும்.

குடல்களின் இயக்கம்:

பார்லி கஞ்சி உணவு, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றின் செயல்களை நன்றாகத் தூண்டுகிறது. குடல்களை சுத்தப்படுத்துகிறது. நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது.

பார்லி அரிசியை நன்றாகக் களைந்து, 4 கப் அளவுள்ள நல்ல நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் ஊறவைத்த நீருடனே அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேகவிடுங்கள். குறைந்த தீயிலேயே அடுப்பை வைக்கவும். அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளற வேண்டும். பார்லி நன்றாக வெந்ததும், இறக்கி அந்த நீரினை வடித்துக் கொள்ளுங்கள். 4 கப் நீர் ஒரு கப்பாக இப்போது இருக்கும். அந்த நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பாக குடியுங்கள். இது சிறந்த முறையில் பலனைத் தரும். காபி தேநீர்க்கு பதிலாக தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் இந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்.

உடற்பயிற்சிக்கு ஏற்ற உணவுகள்

விளையாட்டு வீரர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு உணவுச் சத்துகளும், கலோரி அளவும் உணவில் இருக்கின்றபடி பார்த்துக் கொள்வது மிக அவசியமாகிறது.

இவர்கள் தினமும் மற்றவர்களைப் போல மூன்று நேரமும் அதிக உணவை உட்கொள்ளாமல், குறைந்த உணவைப் பலமுறை இடைவெளி விட்டு உண்பது நல்லது. இவர்கள் தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறைக்குப் பதிலாக ஐந்து முறை உணவு உண்பது நல்லது.

இவர்கள் அதிக அளவு கார்-போஹைட்ரேட் உணவைச் சாப்பிட்டால் அது போதுமான சக்தியை அவர்களுக்குத் தரும்..

இவர்கள் கோடைக்காலங்களில் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடுகின்றபோது, தாது உப்புகள்அதிகம் வெளியேறும். எனவே, இவர்கள் விளையாட்டின் முன்பும், இடையிடையேவும் தாது உப்புகளை ஈடு செய்யக்கூடிய பானங்களை, பழ ரசங்களைப் பருகுவது நல்லது.

இவ்வாறு பருகும் பானங்களில் குளுக்கோஸ் சர்க்கரைச் சத்து, வைட்டமின் ‘சி’ ஆகியவை நிறைந்து இருந்தால் அவை இவர்கள் விளையாடும்போது உடற் திரவத்தை அதிகரிக்க உதவும்.
விளையாட்டு வீரர்கள் பொதுவாக காப்பி, தேநீர், மது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. இவை ஆரம்பத்தில் உற்சாகம் தருவதுபோலத் தோன்றினாலும் பிறகு உடல் தசைகள் மற்றும் இயக்கங்களைப் பாதிக்கிறது. அதனால் உடல் வேலை செய்யும் திறன் குறைந்து விடுகிறது.

தினமும், இவர்களுக்கு 3000 முதல் 3500 வரை கி.கலோரி சத்து கொடுக்கக்கூடிய உணவு தேவைப்படுகிறது. இவர்கள் தாராளமாகப் பழங்கள், பழரசங்கள், கரும்பு, குளுக்கோஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை உடலில் சென்று விளையாடுகின்றபோது செலவாகும். அதிகமான சக்தி இழப்பைச் சரி செய்கின்றன. இதை விளையாட்டிற்கு முன்பும், அதன் பிறகும் பயன்படுத்தலாம். இத்துடன் புரோட்டீன், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவற்றையும் போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பல்வேறு வைட்டமின் நிறைந்த மாத்திரைகளையும் இவர்கள் சாப்பிடலாம். இதன் மூலமாக அதிகப்படியாகத் தேவைப்படும் வைட்டமின் சத்து இவர்களுக்குக் கிடைக்கிறது.

இரத்த சோகையைத் தவிர்க்க

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச் செய்வது உடல்நலன் காக்கும். சிவப்பு ரத்த செல்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்தசோகை ஏற்பட பல காரணங்கள் இருப்பினும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் அனீமியாவால்தான் பாதிக்கப் படுகிறார்கள்.

ரத்தசோகை வராமல் தவிர்க்க நாம் சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, புதினா, அவல், கடலைப்பருப்பு, பூசணி விதை, உலர் பழங்கள், சோயா, பயிர் வகைகள், நண்டு, ஆட்டு ஈரல் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் இருமுறையாவது கீரை, காய்கறி, பழங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் நாம் உண்ணும் இரும்புச் சத்து உடலில் சேர வைட்டமின் ‘சி’ நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, முருங்கைக் கீரை, தக்காளி, முட்டைக்கோஸ், முளை கட்டிய பயிறுகள் ஆகியவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளல் அவசியம். சைவ உணவைவிட அசைவ உணவில் உள்ள இரும்புச் சத்து உடலில் நன்கு சேரும்.

எனவே, சைவ உணவை உண்பவர்கள் அதை ஈடுசெய்ய வேண்டியது அவசியம். இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது டீ, காபி போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *