ஆவணப்படம்
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இயக்கம்: பு.சாரோன் செல்பேசி: 9444285103
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்களை எப்பொழுது கேட்டாலும் வியப்பும், உணர்ச்சியும் ஒருங்கே தோன்றும். மக்கள் கவிஞர் என்ற பட்டம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு மட்டுமே உரியது என்பதை மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது இந்த ஆவணப்படம்.
இவர் வாழ்ந்த காலம் மிக மிகக் குறைவு. அதாவது 1930இல் பிறந்து 10.10.1959இல் இயற்கை அடைந்துவிடுகிறார். இளமையில் மறைந்து-விட்டாலும் அவரது பாடல்கள் இன்றும் அதே வியப்பையும், உணர்ச்சியையும் உண்டாக்கி உயிர்ப்போடு இருக்கின்றன..
பட்டுக்கோட்டையாரின் நண்பர் ஓவியர் இராமச்சந்திரனின் பார்வையில் சொல்லப்-பட்டிருக்கிறது. மக்கள் கவிஞர் திராவிடர் இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்று இரண்டு தளங்களிலும் தடம் பதித்துள்ளார்.
ஒரே ஜாதி ஒரே நீதி என்ற பாடலுடன் இந்த ஆவணப் படம் தொடங்குகிறது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் ஒரு பாட்டாளி காலத்தை வென்ற படைப்பாளி ஆன வரலாற்றைப் பதிவு செய்துள்ளது.
_ உடுமலை
செயலி
கூகுளின் Science Journal (சைன்ஸ் ஜர்னல்)
அறிவியல் ஆர்வம் உள்ள குழந்தைகள் தங்களின் அறிவியல் அறிவை மேம்படுத்திக் கொள்ள இச்செயலி பயன்படுகிறது.
நாம், அன்றாட வாழ்வில் நிகழும் ஒளி, ஒலி, வெப்பம் போன்றவற்றின் வெளிப்பாடுகளை சரியான அளவு ஆய்வு செய்த சோதனை முடிவுகளை வரைபடத்தின் மூலம் காணலாம்.
நமக்குத் தேவையான சோதனைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் நிகழ்த்தலாம்.
எளிமையாகக் கூறினால் ஆன்ட்ராய்டு போனில் ஆராய்ச்சிக் கூடம் அமைந்துள்ளது போன்று!
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.forscience.whistlepunk&hl=en-
அரு.ராமநாதன்
நூல் அறிமுகம்
நூல்: மயிலையும் ஈரோடும் ஆசிரியர்: அசோகா சுப்பிரமணியம்
வெளியீடு: செந்தில் பதிப்பகம், 34, மேட்டுத் தெரு, குறிஞ்சிக்குப்பம், பத்மினி நகர், புதுச்சேரி- 605012.
இந்த நூற்றாண்டில் தோன்றிய இருபெரும் சிந்தனையாளர்களான தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஆகியோரின் வாழ்வியல், சிந்தனைகள், தொண்டற சமூகப் பணிகள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுக் கட்டுரைளின் தொகுப்பு.
இருபெரும் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், பொதுத் தொண்டு, ஜாதி_தீண்டாமை ஒழிப்பு, மத ஒழிப்புக் கருத்துகள், தொழிலாளர் தொழிற்சங்க சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இருபெரும் சிந்தனையாளர்களின் பெண்ணிய கோட்பாடுகள், பெண்ணடிமை ஒழிப்பிற்கான கொள்கைத் திட்டங்கள், பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு உள்ளிட்ட கருத்துகள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.
மேலும் பெரியார் பற்றிய சிங்காரவேலரின் கருத்தும், சிங்காரவேலர் பற்றிய பெரியாரின் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
– உ.வை.க.அரசன்
Leave a Reply