பண்பாட்டுப் படையெடுப்பே பார்ப்பனப் பண்டிகைகள்!

அக்டோபர் 01-15

– மஞ்சை வசந்தன்

பார்ப்பனர்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்த அவர்களின் தொடர் முயற்சியின்றி, தானே (Auto) அதற்கான செயல்கள் நடக்கும்படி திட்டமிட்டு சில வேலைகளைச் செய்தனர்.

ஜாதியற்ற சமுதாயத்தில் வருணம், ஜாதிப் பிரிவுகளை உருவாக்கி நம் உள்ளத்தில் ஊன்றிவிட்டார்கள். தொடர்ந்து அவர்கள் ஜாதியை வளர்க்கின்ற முயற்சிகளில் இறங்கவில்லை. ஆனால், ஜாதியைச் சுமந்த மக்களே தங்களுக்குள் மோதி ஜாதியை வளர்த்து வலுப்படுத்தி வரும்படிச் செய்துவிட்டார்கள்.

அதுபோலவே, நம்மை இழிவுபடுத்த அவர்களை உயர்த்திக் காட்ட, பண்டிகைகளை உருவாக்கி நம்மிடையே புகுத்தினர். அதைத் தொடர்ந்து கொண்டாட அவர்கள் முயற்சி செய்யாமலே, இழிவைச் சுமக்கும் மக்களே ஆர்வத்தோடு கொண்டாடும் அவல நிலையை உருவாக்கினர்.

நம் மக்களும் புதுத்துணி, பலகாரம், வேட்டு, பட்டாசு, மத்தாப்பு வாணம் என்று பணத்தைச் செலவிட்டு, நம் இழிவை நாமே கொண்டாடி மகிழும் கேவலத்தை இன்றும் செய்து வருகிறார்கள்.

எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்துப் பார்க்காமலே, மரபு, வழக்கம், முன்னோர் செய்தனர் என்று கண்ணை மூடிக் கொண்டு செய்துவரும் முட்டாள்தனமே இச்சீர்கேடுகளுக்கும், மான இழப்பிற்கும், பொருள் இழப்பிற்கும் காரணம்.

தந்தை பெரியார் அவர்கள் ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கச் சூழ்ச்சியை அறிந்து, அதை அறவே அகற்றி மானமும் அறிவும் உள்ள மக்களாய் நம் மக்களை ஆக்க சாகும்வரைப் போராடினார்கள், பிரச்சாரம் செய்தார்கள், பயணம் செய்தார்கள்.

ஜாதிகள் நம்மை வலுவிழக்கச் செய்யவும், மோதிச் சாகவும், நம்மை நாமே சூத்திரர்களாக ஏற்கவும் உருவாக்கப்பட்டன என்று பல்வேறு சான்றுகளோடு, சாஸ்திர புராண ஆதாரங்களோடு விளக்கினார்கள்.

வருணம், ஜாதிப் பண்டிகை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த, ஒன்றுக்கொன்று வலுவூட்டி வளர்க்கும் திட்டமிட்ட ஏற்பாடுகள் என்பதை கூர்ந்து, ஆழ்ந்து அலசி விளக்கி நமக்கு அறிவும் மானமும் ஊட்டினார்கள்.

தந்தை பெரியார் தந்த அறிவு வெளிச்சத்தில் இவற்றை அறிவுக் கண்கொண்டு நோக்கினால் ஆரிய சூழ்ச்சியும், ஆதிக்கமும், நமது வீழ்ச்சியும் இழிவும் நன்கு விளங்கும்.
பண்டிகைகள் என்பது ஏதோ கொண்டாடி மகிழும் பொழுதுபோக்குகள் அல்ல. அவை பண்பாட்டின் கூறுகள், அடையாளங்கள். அவை, நம் மரபின் பெருமையை, பண்பாட்டின் சிறப்பை, நம் இனத்தின் மேன்மையைச் சொல்வதாய் இருக்க வேண்டும். மாறாக, நம்மை இழிவுபடுத்தவும் இன எதிரிகளை உயர்த்திக் காட்டவும் பயன்படுவதாய் இருக்கக் கூடாது.
இந்த அளவுகோலை வைத்து நாம் கொண்டாடும் பண்டிகைகளைப் பார்த்தால் எது நமக்கான பண்டிகை, எது நமக்கு எதிரான பண்டிகை என்பது நன்கு புலப்படும்.

பொங்கல் பண்டிகை:

மேற்கண்ட நோக்கில், நாம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையொன்றே நம் இனப் பெருமைக்கும், மேன்மைக்கும் அறிவுக்கும், பண்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், நேயத்திற்கும் உகந்ததாக இருப்பதைக் காணலாம். காரணம், அது ஒன்றே தமிழர்க்கு உரிய பண்டிகை.

அது காரணத்தோடு கூடியது. பண்-பாட்டின்படி உருவானது. வேளாண்-குடிகளான தமிழ் மக்களின் வாழ்வு வேளாண்மை சார்ந்தது. வேளாண்மை சார்ந்தே நம் உணவும், வருவாயும், அணிகளும் அமைந்ததால், அந்த வேளாண்மைக்குத் துணை நிற்கும் நான்கு உற்பத்திக் காரணிகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக பொங்கல் விழா கொண்டாடப்-பட்டது.

நன்றி கூறும் தமிழரின் உயர்ந்த பண்பாட்டின் வெளிப்பாடு பொங்கல் பண்டிகை. அதைக் கொண்டாடுவதன் மூலம் நம் பெருமை, பண்பாடு, உயர்வு உலக அளவில் சிறக்கிறது; பாராட்டப்படுகிறது!

ஆனால், தீபாவளி, சரஸ்வதி பூசை போன்றவை எதற்காகக் கொண்டாடப் படுகின்றன? தமிழரின் எந்தப் பண்பாட்டின்படி அது கொண்டாடப்படுகிறது; அதனால் தமிழனுக்கு பெருமையா? சிறுமையா? இழப்பா? இழிவா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

சரஸ்வதி பூசை: தமிழனுக்கும் சரஸ்வதிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? சரஸ்வதி என்பது தமிழ்ச் சொல்லா? “கலைவாணி’’ என தமிழ்ப்படுத்திக் கொண்டால் அது தமிழனுக்கு உயரியதாக ஆகிவிடுமா? தமிழர் வாழ்வில் சரஸ்வதி எவ்வகையிலும் தொடர்வுடையவள் அல்ல. காரணம், அவள் ஓர் ஆரிய கற்பனை.

வேதங்களில்கூட சரஸ்வதி கிடையாது. பிறகு புராணங்களில்தான் வருகின்றாள்.

‘அபிதான சிந்தாமணி’ (தமிழ்க் கலைக் களஞ்சியம்) ஆ.சிங்காரவேலு முதலியார் _- (1910ஆம் ஆண்டு) ‘சரஸ்வதி’ என்ற தலைப்பில் தரப்படும் தகவல்கள் (பக்கம் 723, 2010ஆம் ஆண்டு பதிப்பு).

சரஸ்வதி: A.1.. பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். வித்யாதிஷ்டான தேவதை. இவள் வெண்ணிறமாய், வெள்ளை வஸ்திரம், கைகளில் ஜபமாலை, புத்தகம், வீணை, எழுத்தாணி தரித்து எழுந்தருளி-யிருப்பவள் எ_-ம்., இவளுக்கு ஒரு கரத்தில் ஜபமணி, மற்றொன்றில் புத்தகம், இரு கரங்களில் வீணை எ_-ம் இவட்குப் பிரிமவித்தை, முகம், நான்கு வேதமும் கரங்கள், எண்ணும் எழுத்தும் கண்கள், சங்கீதசாகித்தியம் தனங்கள், ஸ்மிருதிவயிறு, புராண இதிகாசங்கள் பாதங்கள், ஓங்காரம் யாழ் எனவுங் கூறுப.

2. தஷயாகத்தில் காளியால் மூக்கறுப்புண்டு மீண்டும் பெற்றவள்.

3. இவள் தன்னைச் சிருட்டித்துத் தன்னுடன் கூடப் பிரமன் வருகையில் பிரமனுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள். பிரமன் ஆண்மான் உருக்கொண்டு தொடர்ந்து சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள்.

4. பிரமன் தன்னை நீக்கி யாகஞ்செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.

5. ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.

6. பிரமன் காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி மூவருடன் கூடிக் கங்காஸ்நானத்திற்குப்போக சரஸ்வதி ஆகாயவழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்திருந்தனள். சரஸ்வதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கையடைந்து ஸ்நானஞ்-செய்தனர். சரஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரமதேவனிடஞ் சென்று தான் வருமுன் ஸ்நானஞ் செய்ததுபற்றிக் கோபித்தனள். பிரமன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால் (48) அக்ஷரவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியைப் பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச் சாபம் ஏற்றவள்.

7. ஒரு யாகத்தில் இவள் வரத் தாமதித்ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகையைத் தாரமாகப் பெற்றதால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப.

8. இவளும் இலக்குமியும் மாறு கொண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிரமனைக் கேட்கப் பிரமன் இலக்ஷமிதேவிஎன்ன மாறுகொண்டு நதியுருவாயினள்.

9. பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துள்தோன்றியவள், புலத்தியரை அரக்கனாகச்சபித்தவள். சரத்காலத்தில் பூசிக்கப்படுதலால் சாரதை எனவும் பெயர்.

10. இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக்கண்டு, அந்த மோகவார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ யிவ்வாறு தூஷித்துக் கொண்டிருந்ததால் ஒருகாலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவையெனச் சபித்தனள். (சிவமகாபுராணம்)

11. இவளும் கங்கை, லக்ஷ்மி முதலியவர்களும் விஷ்ணுபத்தினிகள். ஒரு கால் விஷ்ணு கங்கையிடம் அதிக ஆசைகொண்டு அவளுடன் நகைமுக மாயிருத்தலைக் கண்ட சரஸ்வதி, பொறாமை கொண்டு லக்ஷ்மியை நோக்க லக்ஷ்மி கங்கைக்குச் சார்பாயிருத்தலைக்கண்டு இவள் லக்ஷ்மியைச் செடியாகவும், நதியாகவும் போகச் சபித்தாள். கங்கை சரஸ்வதியை நதியுருவமாக-வெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்றனள். லஷ்மியிதனால் தர்மத்வஜருக்குக் குமரியாகித் துளசியாகவும் பத்மாவதியென்னும் நதியாகவும் பிறந்தனள். கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர். லஷ்மி சங்க சூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பிரமபத்தினி ஆயினள். சரஸ்வதி பாரத வருஷத்தில் நதியாக வந்தபடியால் பாரதி, பிரமனுக்குப் பத்தினியாதலால் பிராம்மி,  வாக்குகளுக்குத்தேவியாதலால் வாணி, அக்னியைப் போல் பாவத்தைக் கொளுத்தி யாவருங்காண மஞ்சனிறம் பெற்றிருத்தலின் சரஸ்வதியென அழைக்கப் படுகின்றனள், இந்த (3) தேவியரும் பூலோகத்தில் கலி (5000) வருஷஞ்  சென்ற பின் தங்கள் பதமடைவர் (தேவி -_ பா.)

சரஸ்வதி B.1 ஒரு நதி It rises in the hills of Sirmur. It disappears at vinasanatirtha after taking a Westerly course from Thaneshar.

ஸரஸ்வதி நதி இது ருஷிகளின் யாகத்தின் பொருட்டு, சுப்ரபை, காஞ்சனாஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு,  விமலோ-தகையென பிரவகித்தது.
இதனைத் தமிழ்ப்படுத்தி கலைமகள் ஆக்கினர் பிற்காலப் புலவோர்.

பண்பாட்டுப் படையெடுப்புக்கு பிற்காலப் ‘புலவோர்’ ‘முகவர்களாகவே’ செயல்-பட்டுள்ளனர்.
தரவு: மறைமலை அடிகளாரின் ‘முற்காலப் புலவரும் – பிற்காலப் புலவரும்’ நூல்.

டபிள்யூ.ஜே.ஜான்வில்கின்ஸ் (W.J.Wilkins) என்ற மேலைநாட்டவர், 1882 இல் கல்கத்தாவிலிருந்து, சமஸ்கிருத மொழி பயின்று ஆங்கிலத்தில், ‘Hindu Mythology’ என்ற ஒரு நூலை எழுதினார்.

அதில் பல பிரிவுகளாக கடவுள்களை அறிந்து மதம் என்ற ஆரிய சனாதன வேத மதத்தில் எப்படி உள்ளனர் என்பதை விரிவாக எழுதியுள்ளார்.

1. வேத கடவுள்கள் _- வேத கடவுள்கள் சூரியன், வெளிச்சக் கடவுள், புயல் கடவுள்கள்,

2. புராண கடவுள்கள் என்றும் பகுத்து எழுதியுள்ளார்.

அதில் புராண கடவுள்களாகத்தான் மேற்காட்டிய பிரம்மாவும், அவர் உருவாக்கிய மகள் -_ மனைவி ‘சரஸ்வதியும்’ உள்ளனர்!

இந்த இரு கடவுள்கள்பற்றி கதைகள்,
மகாபாரதம்
பிரம்ம புராணம்
பத்ம புராணம்
வராக புராணம்
ஸ்கந்த புராணம்
மச்ச புராணம்.

இப்படி பலப்பலவற்றில் விசித்திரக் கதைகள் உள்ளன! இப்படிப்பட்ட சரஸ்வதிதான் கல்விக்குக் கடவுளாம்.

கடவுள் ஒன்று அது சக்தி மயமானது என்று சொல்லிக்கொண்டு, இப்படி துறை வாரியாக ஒரு கடவுளைக் கற்பிப்பது அயோக்கியத்தனம் அல்லவா?

கல்விக்கு ஒரு கடவுள், விவசாயத்துக்கு ஒரு கடவுள், படைக்கு ஒரு கடவுள், பொருளாதாரத்துக்கு ஒரு கடவுள், மருத்துவத்துக்கு ஒரு கடவுள். என்னே பைத்தியக்காரத்தனம்? எல்லாவற்றையும்விட நோய்களுக்குக்கூட கடவுள்!

அம்மைக்கு மாரியத்தாள்!
காலராவுக்கு காளியாத்தாள்!

இதைவிட கடவுளை யார் கொச்சைப்-படுத்த முடியும்?

கடவுள் தேவடியாள் வீட்டிற்குப் போவதைக்கூட விழாவாகக் கொண்டாடு-கிறார்கள். இதைவிடக் கேவலம் இருக்க முடியுமா?
தீபாவளி: உண்மையில் தீபாவளி ஒரு சமணப் பண்டிகை. 24ஆம் தீர்த்தங்கரர் விடியற்காலை உபதேசம் செய்த நிலையிலே இறந்து போனார். அந்த நாளை ஆண்டு-தோறும் மக்கள் வரிசையாக விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். (தீப + ஆவளி என்றால் விளக்கு வரிசை என்று பொருள்) வடநாட்டில் இன்னமும் இப்படிக் கொண்டாடுகிறார்கள்.
அடுத்தவருடையதை திருடித் தன்னுடையது என்பதே ஆரியர் பழக்கம். அப்படி சமணர் பண்டிகையை நரகாசுரன் கதை கட்டி இந்துப் பண்டிகையாக ஆக்கினர். அப்படி எழுதப்பட்ட கதையாவது அறிவுக்கும், பெருமைக்கும் உகந்ததா?

“பூமியைப் பாயாகச் சுருட்டினான்; அதைக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் இரண்யாட்சதன் (அசுரன்) அதை மீட்க மகாவிஷ்ணு கடவுள் பன்றி (வராக) அவதாரம் எடுத்தார். மீட்ட பிறகு பூமாதேவி, பன்றி மீது காதல் கொண்டாள். இருவரும் சேர பிறந்த பிள்ளை நரகாசுரன் – அவன் தேவர்களை அழிக்க முயன்றான். தேவர்கள் மீண்டும் விஷ்ணுவை வேண்டினர். வேண்டிய பின்னர்,
மகாவிஷ்ணு நரகாசுரனை வதை செய்யப் புறப் படுகிறான். வெல்ல முடியவில்லை; மூர்ச்சையாகிறான். உடனே மகாவிஷ்ணுவின் மனைவியான சத்தியபாமா  அம்பை வீசி தனது மகனான நரகாசுரனைக் கொல்லு கிறாள். அவன் மரணத் தருவாயில், தனது மரண நாளை மக்கள் எல்லாம் கொண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டானாம். அதுதான் தீபாவளியாம்.
இப்படி ஒரு அறிவியலுக்குப் பொருந்தாத ஆபாச, அருவருக்கத்தக்க கதையின் அடிப்படையில், ஒரு தீபாவளி. அதனைக் கொண்டாட அரசு விடுமுறை!

அறிவியல் கட்டுரைகளை வெளியிடும் ஏடுகளேகூட, இம்மூடநம்பிக்கை விழாவுக்கு “தீபாவளி மலர்களை’’ வெளியிடுகின்றன.

இதற்கு வெளிநாட்டிலும் உள்ள இந்துத்துவ சக்திகள் ஒபாமாவைக்கூட ஏமாற்றி -_ தீபாவளி வாழ்த்துகள் சொல்லவைப்பதும்,- வெளிநாட்டுத் தமிழர்கள் இதனை பெருவிழாவாகக் கொண்டாடச் செய்வ-தெல்லாம் அறிவுக்கு முரண் பாடல்லவா?

தந்தை பெரியார் எழுப்பிய வினாக்கள்
முதலில் தந்தை பெரியார்தான் கேட்டார்:

1. ஏண்டா, பூமியை எப்படிப் பாயாகச் சுருட்ட முடியும் – அது உருண்டை என்றால்?

2. எதன்மீது நின்று கொண்டு சுருட்டினான் – அந்த அசுரன்?

3. அதைக் கடலுக்குள் ஒளித்தான் என்றால், கடல் தனியாகவா இருந்தது?

4. மீட்க ‘சப்மெரின்’ அவதாரம் அல்லவா எடுத்திருக்க வேண்டும்; அதை விடுத்து ஒரு பன்றி அவதாரம் எடுத்தால் முடியுமா?

5. தேவனுக்கும், தேவிக்கும் பிறந்த பிள்ளை எப்படி ‘நரக _- அசுரன்’ ஆக முடியும்? -வேறு கோளாறு இருந்தால் ஒழிய என்று கேட்டார்.
இன்றுவரை இக்கேள்விக்குப் பதில் இல்லாமல் மொத்தமாக மக்களை ஏமாற்றிட,

‘தீபாவளி’ _- ‘நன்மைக்கு எதிராகச் செயல்பட்ட தீமையை அழித்த நாள்’ என்று சரடு விடுகின்றனர். பண்டிகை என்பது அசல் ‘புரூடா’வைத் தவிர வேறு என்ன?

பூமா தேவிக்கு பன்றி மீது காதலாம். பூமியும் பன்றியும் சேர்ந்து பிள்ளை பெற்றதாம். அதுதான் நரகாசுரனாம். அவனை விஷ்ணு கொன்றதற்கு பண்டிகையாகும். அதுதான் தீபாவளியாம்!

இந்த விஞ்ஞான யுகத்திலும் இப்படியொரு கதையை ஏற்று பண்டிகை கொண்டாடினால் நம்மைவிட முட்டாள், கேவலமானவர், கீழானவர் யாராவது இருக்க முடியுமா?

பொங்கல் போன்ற பண்பாட்டுப் பண்டிகையைக் கொண்டாடிய தமிழர் மீது இப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத, அபத்தமான பண்டிகைகள் திணிக்கப்பட்டது பண்பாட்டுச் சீரழிவல்லவா?

தீமையை கடவுள் அழித்தார் என்பது தீபாவளித் தத்துவம் என்று அதற்குக் காரணம் கூறுகின்றனர்.

அசுரனை சுரர் (தேவர்) அழித்தார் என்பதே இதன் பொருள்.

பார்ப்பனர் தங்களை சுரர் என்று அழைத்து திராவிடர்களை அசுரர் என்றனர்.

ஆக, தேவாசர யுத்தம் _ வதை என்று புராணக் கற்பிதங்கள், ஆரிய திராவிட போரின் கற்பனைகளே.
கதை கேட்பதில் மக்கள் ஆர்வம் உள்ளவர்கள் என்ற உளவியல் புரிந்து ஆரிய பார்ப்பனர்கள், நம்மை இழிவுபடுத்தும் கதைகளையே நம் மீது திணித்தனர். கதை கேட்கும் ஆர்வத்தில் நம் இழிவை எண்ணாது கதையைப் போற்றினர்.

அன்றைக்கு கல்வி அறிவு இல்லாத மக்கள் கதை கேட்டு ஆரிய சூழ்ச்சிக்கு அடிமையாகினர். ஆனால், இன்றைக்கு அறிவியல் படிக்கும் நாம் இன்னமும் மூடக் கதைகளை ஏற்று தீபாவளி கொண்டாடலாமா? சிந்திப்பீர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *