துணுக்குகள்

துணுக்குகள் ஜுலை 16-31

நன்மை செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கும் சோப்புச் சேர்மம்

கைக்கழுவும் சோப்பு முதல் பொம்மைகள் வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் இருக்கும் ட்ரைக்ளோசான் என்னும் ஒரு பாக்டீரியா – பூஞ்சை எதிர்ப்பு ரசாயனம், நம் குடலில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களை சேர்த்தே அழித்துவிடுவதுடன், சமநிலையையும் குலைப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

ஷாம்பூ, டூத் பேஸ்ட், மவுத் வாஷ், டியோடரண்ட், சோப்பு, சமையலறை பொருட்கள், குழந்தைகளின் பொம்மை என நாம் அன்றாடம் நுகரும் பொருட்களில் இந்த ட்ரைக்ளோசான் உட்பொருளாக இருக்கிறது. ஏற்கனவே ஒரு புற்றுக்காரணியாக அறியப் பட்டிருக்கும் இது, உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் குடல் நுண்ணுயிர்களின் சமநிலையை அழிப்பது மேலும் பல நோய்களுக்கும், தொந்தரவு களுக்கும் காரணமாகிவிடும் ஆபத்து இருக்கிறது.

—————————————————————————————————————————————————————————–

மிளகுப் பால்

பாலில் சிறிதளவு மிளகுப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து, வற்றும்வரை கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் தொண்டை கட்டுதல், குரலில் பிரச்சினை இருந்தால் சரியாகும்.

————————————————————————————————————————————————————————————

வெள்ளரி சாலட்

மிக எளிதாகச் செய்யக்கூடியது வெள்ளரிக்காய் சாலட். காயை நறுக்கி, அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்தாலே போதும், மாதுளம்பழம், சிறிது திராட்சை சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். மாலை நேரத்தில் சிற்றுண்டிக்குப் பதிலாக இதைச் சாப்பிடலாம்.

—————————————————————————————————————————————————————————-

இந்தியாவில் மூன்றில் ஒரு ஏடிஎம் வேலை செய்வதில்லை

இந்தியாவில் உள்ள மூன்று ஏடிஎம் இயந்திரங்களில் ஒரு இயந்திரம் வேலை செய்வதில்லை என்று ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வில்தெரிய வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் இந்திய அளவில் சுமார் 4,000 ஏடிஎம் மய்யங்களில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் பல ஏடிஎம் மய்யங்கள் இயங்காத நிலையில் உள்ளதுடன், மூன்றில் ஒரு பங்கு ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.

பல ஏடிஎம் மய்யங்கள் வாடிக்கை-யாளர்கள் பயன்படுத்தும் வகையிலேயே இல்லை என்றும் அதிகாரிகள் கண்டு-பிடித்துள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இணையம் மூலமான நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களின் பொறுப்புகள் குறித்த புதிய வரையறையை ரிச்ர்வ் வங்கி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்-பட்டுள்ளது.

——————————————————————————————————————————————————————————

எது நல்ல தேன்?

தேன் சுத்தமானது தானா என்பதை எளிதாகப் பரிசோதிக்கலாம். சிறிய குச்சி அல்லது தீக்குச்சியில் தேனைத் தொட்டு, எரியும் விளக்கு முன் வைக்க வேண்டும். தீ பற்றி குச்சி எரிந்தால் அது நல்ல தேன். எரியாமல் அல்லது படபடவென வெடித்தால் அது, கலப்படத்தேன்.

——————————————————————————————————————————————————————————

பிறந்த குழந்தையின் வயிற்றில் கருக்குழந்தை!

சீனாவில் பிறந்த சிசுவின் வயிற்றுப் பகுதியில் ஒரு கருக்குழந்தை இருப்பது தெரியவந்தது. மருத்துவ உலகில் மிக அரிய சம்பவமான இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீன அரசின் இணையதள செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. சீனாவின் ஷான்ஸி மகாணத் தலைநகர் ஜியானில் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தார். அந்த ஆண் இரட்டையர்கள் குறைமாதமாகப் பிறந்தாலும், அவை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த இரட்டையரில் ஒரு சிசுவின் வயிற்றுப் பகுதியில் வளர்ச்சி கண்டறியப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில், அது ஒரு கருக்குழந்தை என்று தெரியவந்தது. அந்தக் கருக்குழந்தைக்கு எலும்புகள், நகங்கள் அமைந்திருந்தன. சிசுவுக்குள் கருக்குழந்தை எனப்படுகிற அரிய சம்பவம், அய்ந்து லட்சத்தில் ஒரு பிரசவத்தில் மட்டுமே நிகழ்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை பிறந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வயிற்றுக்குள் இருந்த கருக்குழந்தை வெற்றிகரமாக நீக்கப்பட்டது. தற்போது இரட்டையர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

——————————————————————————————————————————————————————————–

குழந்தைகளுக்கு...

அறுசுவைகளில் குழந்தைக்குத் தர வேண்டிய முதல் கார உணவு மிளகுதான். குழந்தைக்கு 6  மாதம் ஆனபின், புழுங்கல் அரிசி அல்லது கேழ்வரகுக் கஞ்சி கொடுத்து, சாப்பிடப் பழக்க வேண்டும். அதனுடன் ஓமம், சீரகம், மிளகு சேர்த்துக் கொடுப்பது அவர்கள் ஆரோக்கியமாக வளர உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *