திராவிடமும் தேசியமும்

நவம்பர் 01-15

– புலவர் க.முருகேசன்

வேற்றுமொழிச் சொல்லான வடசொல் ஒலிவடிவிலும், எழுத்துவடிவிலும் மாறுப்-பட்டிருப்பதால் அதைத்தமிழில் கையாளும்-போது தமிழின் ஒலி வடிவம் மாறாமல் கையாள வேண்டுமென்பதற்காக தொல்-காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். எச்சவியல்– -_ நூற்பா – 401 _- வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ _ -எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே.

வடசொல்லைத் தமிழில் பயிலும்போது வடசொல்லிற்கே உரிய எழுத்தை நீக்கி விட்டு அவ்விடத்தில் இருமொழிக்கும் பொதுவான எழுத்தைச் சேர்த்து வழங்கவேண்டும். தேஷ் _ தேஷம் – இதுவடசொல், இச்சொல்லில் உள்ள ஷ வடவெழுத்தாகும். இதை நீக்கி விட்டு அதற்கு மாற்றாக இரு மொழிக்கும் பொதுவான உயிரெழுத்தான எகரத்தை சேர்த்து தேஎம் என்றெழுத வேண்டும் சொல்ல வேண்டு-மென்கிறார் தொல்காப்பியர். இச்சொல் வழக்கில் தேசம் என்றாகியது.

இந்நால்வகைச் சொல்லில் திராவிடம் என்னும் சொல் தமிழின் திரிசொல்லாகும். திரவிடம் அல்லது-திராவிடம் என்னும் சொல் திரிந்த தமிழ்ச்சொல் என்பதற்கான சான்று-களைக் காண்போம். நாட்டுப்பெயர்களும், மொழிப்பெயர்களும் பண்டைய காலத்தில்  அம் ஈறு பெற்றே வழங்கின என்பதற்கான சான்று வருமாறு

அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம் சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் மகதம் கோசலம் மராடம் கொங்கணம்   துளுவம் சாவகம் சீனம் காம்போசம்
பருணம் பப்பரமெனப் பதினென்பாடை
-_- எனும் திவாகர நூற்பாவும்,
சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம்

தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கௌடம் கடுங்குகலம்
தங்கும் புகழ்தமிழ்சூழ்பதி னேழ்புவி தாமிவையே

என்னும் பழஞ்செயுளுமாகும். இம்முறை பற்றியே தமிழும் தமிழம் என வழங்கிற்று. தமிழ் என்னும் சொல் முதலாவது வடமொழியில் திரிந்த வடிவம் த்ரமிளம் என்பதே, ழகரம் வடமொழியில் இல்லை-யதலால் உயிர் முதலை மெய் முதலாக்கி ரகரத்தை இடையில் சேர்த்தல் அம்மொழிக்கு இயல்பாதலாலும் அச்சொல் அம்மொழியில் அவ்வடிவை அடைந்தது, திரமிளம் என்னும் சொல்லிற்கே (1) பஞ்ச திராவிட தேசங்கள் (2) தமிழ் என இரு பொருள் கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி.

வடசொல்லால் திரிந்த வரலாறு தமிழம்-த்ரமிளம்-த்ரவிடம்-த்ராவிடம்-திராவிடம்

த்ரமிளம் என்பது த்ரமிடம் எனத்திரிந்தது. திரமிடம் என்பதும் சிறிது காலத்தின் பின்பு த்ரவிடம் எனத் திரியலாயிற்று இவ்விறு திரிந்த வடிவத்தின் நீட்சியே த்ராவிடம் என்பதாகும். இது தமிழில் திராவிடம் என்றாகும். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவுந் திராவிடத்திலே வந்ததாய் விவகரிப்பேன். வல்ல தமிழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன் என்று பாடியுள்ளார். திரவிடம், தமிழ் இரு சொல்லும் ஒரு பொருளையே குறிக்கின்றன என்பதே இதன் பொருள்.

அய்நூறு ஆண்டுகளுக்கு முன் ஆழ்வார்கள் பாடிய தெய்வப் பாடல்கள் திராவிடவேதம், திராவிடப் பிரபந்தம் எனும் பெயர்களால் வழங்குகின்றன.
பாகவதபுராணத்தில் சத்தியவிரதன் என்னும் பெயரால் குறிப்பிடப்படும் ஒரு தமிழரசன் திராவிடபதி எனப்படுகின்றான். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலப்பட்டர் ஆந்திர திராவிடபாஷா என்று தெலுங்கைக் குறிக்கிறார். தமிழைத் திராவிடமென்றும் தெலுங்கை ஆந்திரத்தின் திராவிடம் என்றும் கூறுகின்றார்.

மனுதருமநூல் ஆரியரல்லாத பல்வேறு இனத்தாரைக் குறிக்குமிடத்து தமிழரையும் தெலுங்கர் கன்னடர் முதலியோரையும் வேறு-படுத்தாமல் திராவிடர் என்றே குறிப்பிடுகிறது. மனுதருமம் தோன்றிய காலத்தில் திராவிட-மென்னும் தமிழிலிருந்து தெலுங்கு கன்னடமாகிய மொழிகள் தோன்றவில்லை. எனவே அவரனைவரையும் திராவிடர் என்றே குறித்தது. மனுவின் காலம் கி.மு.150 என்பர். .

மகாபாரதத்தில் யுதிட்டிரன் யாகம் செய்தபோது திராவிட மன்னர்களும் அதில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மகாபாரதக் காலம் கி.மு. 1100 என்கின்றார் தேவநேயப்பாவாணர்.

இதுகாறுங்கூறியவற்றால் தொன்று தொட்டுத் தமிழையே தனிப்படவும் தலைமை-யாகவும் குறித்து வந்த திராவிடம் என்னும் சொல் தமிழம் என்பதன் திரிபே என்பது வரலாற்றறிவுடையோருக்கெல்லாம் தெற்றென விளங்குவது திண்ணம். இதனையேற்றுத்தான் பேராசிரியர் சுந்தரம்-பிள்ளையவர்கள் தம் மனோன்மணிய மெனும் காவியத்தில் தெக்கணமுமதிற் சிறந்த திராவிட நல்திருநாடு என்று பாடினார். வங்கத்துக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், பஞ்சாபசிந்து சிராட்டமராட்டா திராவிட உத்கலவங்கா எனப் பாடியுள்ளார்.

திராவிடமா அப்படி ஒரு இனமே இல்லை. அப்படி ஒரு மொழியே இல்லையென்று பிதற்றுவோர் மேற்கண்ட சான்றுகளை மறுக்கத்தக்கத் தரவுகளை எடுத்துக்காட்ட-வேண்டும்.

தேசம் என்னும் சொல் தேஷம் என்னும் வட சொல்லிலிருந்து திரிந்த வடசொல் என்பதை முன்னமே தொல்காப்பிய நூற்பா 401அய்க் கொண்டு நிறுவியுள்ளோம். எனினும் ஒரு சொல்லாய்வாளர் நாம்தாம் வடபாற் மொழிகளுக்கும் சமற்கிருதத்திற்கும் நம்தேசத்தையே வழங்கினோம் என்கிறார். இவர் கூற்றுப்படித் தேசமென்னும் தமிழ்ச்சொல்தான். சமற்கிருதம் உள்ளிட்ட வடபால் மொழிகளி-லெல்லாம் நாடு என்னும் பொருளில் பங்களாதேஷ், உத்தரப்பிரதேஷ் என்று வழங்கி வருகிறதென்றால் சொல் பிறந்த இந்தத் தமிழ் நிலப்பகுதியை சோழ தேசம், சேர தேசம், பாண்டிய தேசம் என்று வழங்கியிருக்க வேண்டுமல்லவா! அதற்கான சான்றை அந்தச் சொல்லாய்வாளர் காட்டவில்லையே? அவர் கூற்று எப்படியுள்ளதென்றால் தனக்குடுத்தக் கோவணமின்றி நின்று கொண்டிருக்கும் ஒருவன் நான்தான் எல்லோருக்கும் பட்டு-வேட்டிகளைப் பரிசளித்தேன் என்று கூறுவதற்கொப்பாக உள்ளது.

தேசம் தமிழ்ச் சொல்லாயிருந்தால் இந்தத் தமிழ் நிலத்தின் எந்தப்பகுதியையாவது குறித்து எக்காலத்திலாவது வழங்கி வந்திருக்கவேண்டும். அதற்கான சான்றாவணங்கள் வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகியனவாகும்.

வரலாற்றைக் காண்போம் கடல் கொண்ட தமிழ் நிலத்தில் ஏழ்தெங்குநாடு, ஏழ்மதுரைநாடு ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு ஏழ்குன்றநாடு, ஏழ்குணக்காரைநாடு, ஏற்பனை-நாடு என்று நாற்பத்தி ஒன்பது நாடுகள் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஒன்றேனும் தேசமென்றிருந்ததாகக் கூறவில்லை.

தமிழ் வழங்குமித்தமிழ் நிலம் செந்தமிழ் பேசும் பகுதியாகவும் கொடுந்தமிழ் பேசும் பகுதியாகவும் இருந்ததென்று ஒரு பழம் பாடல் கூறுகிறது. பாடல் வருமாறு,

தென்பாண்டி குட்டம்குடம் கற்கா வேண்பூமி பன்றி அருவா அதன்வடக்கு — நன்றாய சீதம் மலாடு புனநாடு செந்தமிழ்சேர்

ஏதமில் பன்னிரு நாட்டெண்

செந்தமிழிலிருந்து சற்றுத் திரிந்து வழங்கிய பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகளென்று குறித்ததேயன்றி தேசமென்று குறிக்கவில்லை.

நாடு என்னும் செந்தமிழ்ச் சொல் நந்தமிழ் நிலத்தில் வழக்கேறி வழங்கி வருவதை வரலாற்று வழியில் காண்போம். வடக்கில் வேங்கட-மலையும் தெற்கில் குமரியாறும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது.

இம்மூவேந்தர்களும் தங்கள் நாடுகளை பல ஆள்நிலப் பகுதிகளாக, இன்றைய மாவட்டம், வட்டங்களைப் போலப் பிரித்து அவற்றிற்கும் நாடுகளென்றே பெயரிட்டு வழங்கி வந்தனர். சோழ நாட்டில் பல ஊர்களைக் கொண்டது நாடு, பல நாடுகளைக் கொண்டது . வளநாடு, பல வளநாடுகளைக் கொண்டது மண்டலம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கின்றன அவை வருமாறு:

சோழ நாட்டில் மங்கலநாடு, மருகல்நாடு, மழநாடு, புலியூர்நாடு, அழுந்தூர்நாடு, ஆக்கூர்-நாடு, அம்பர்நாடு, அதிகைமங்கலநாடு இடையளநாடு, நரையூர்நாடு, தேவூர்நாடு, பொய்கைநாடு, மண்ணிநாடு, நன்மலிநாடு, புறங்கரம்பைநாடு, பனையூர்நாடு, திரைமூர்நாடு, பிரம்பூர்நாடு, குரும்பூர்நாடு, மிழலைநாடு, குறுக்கை-நாடு, விளத்தூர்நாடு, நாங்கூர்நாடு, ஒக்கூர்-நாடு,  உரத்தநாடு, பாப்பாநாடு, அம்பு-நாடு, காசாநாடு, தென்னமநாடு, மீசெங்கிளிநாடு, புறங்கிளியூர்நாடு, குழித்தண்டலைநாடு, நல்லாற்றூர்நாடு, ஊற்றத்தூர்நாடு, மீகோழை-நாடு, வளநாடுகள் அருண்மொழித் தேவவள-நாடு, பாண்டிய குலோசினி வளநாடு, நித்தவினோதவளநாடு, இராசராசவளநாடு, இராசேந்திர வளநாடு, உய்யக் கொண்டான் வளநாடு, சத்திரியசிகாமணி வளநாடு, கேரளாந்த கவளநாடு, செயசிங்க குலகால வளநாடு, இராசாசிரைய வளநாடு, கடலடையாதிலங்கை கொண்டவளநாடு, என்னும் வளநாடுகள் இருந்ததாகக் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.

பாண்டிய நாட்டில் நாடுகள்

மேல்நாடு, சிறுகுடிநாடு, வெள்ளூர்நாடு, மல்லாக்கோட்டைநாடு, பாகநேரிநாடு, கண்டரமாணிக்கநாடு, கண்டதேவிநாடு, புறமலைநாடு, தென்னிலைநாடு, பழையநாடு, நடுநாடு, அஞ்சூர்நாடு, ஆற்றூர்நாடு பட்டமங்கலநாடு, குன்னக்கோட்டைநாடு, பதிநாலுநாடு,  திருவாதவூர்நாடு, கிழக்குடிநாடு, சிலம்பாநாடு இரும்பாநாடு, தேர்போகிநாடு, ஆங்கரைநாடு, ஏழுகோட்டை நாடு, முத்துநாடு, வல்லநாடு, கானநாடு, கல்வாயில்நாடு, தென்வாரிநாடு தளையூர்நாடு.

சேரநாட்டில் நாடுகள்

கொங்குமண்டலத்தில் பூந்துரைநாடு, காங்கேயநாடு, ஆரைநாடு, திருவானக்குடிநாடு, தலையநாடு, பூவாணிநாடு, ஒருவங்குநாடு, கிழங்குநாடு, வாழவந்திநாடு, வெங்காலநாடு, ஆனைமலைநாடு காஞ்சிகோயில்நாடு, தென்கரைநாடு, பொங்கலூர்நாடு, வாரக்கநாடு, மணநாடு, தட்டையநாடு, அரையநாடு, வடகரைநாடு, நல்லுருக்காநாடு, அண்டநாடு, காவடிக்காநாடு, இராசிபுரநாடு, குறும்புநாடு, பருத்திப்பள்ளிநாடு, ஏமூர்நாடு என மேலும் பல நாடுகள் உள்ளன.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *