மீண்டும் அவசரநிலையா?

ஜூலை 01-15

1975 நெருக்கடி காலம் மீண்டும் வருமா? அத்வானியின் கருத்தைப் புறந்தள்ள முடியாது!

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

1975 ஜூன் 25இல் நெருக்கடி  காலம் (Emergency) பிரகடனப்படுத்தப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர். பத்திரிக்கைககள் தணிக்கை (Censor)  க்கு உட்படுத்தப்பட்டு, அரசு விரும்பும் செய்திகளை மட்டுமே அவர்களது அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகியது. கருத்துச் சுதந்திரம் காற்றில் பறந்தது. பாசீசம் தலை விரித்தாடியது.

அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் எல்லாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

தி.மு.க. ஆட்சி கலைப்பு!

1975இல் தி.மு.க. ஆட்சி கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆட்சி, மத்திய அரசின் இந்த நெருக்கடி பிரகடனத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி ஜனநாயகக் காவலனாக உயர்ந்து நின்றது. இதனால் பிரதமரின் வெறுப்புக்கும், உருட்டல் மிரட்டலுக்கும் ஆளாகிய நிலை ஏற்பட்டது. 1975 – இந்த நெருக்கடியை எதிர்த்து ஒரு மாநாடுகூட பெரியார் திடலில் நடைபெற்றது. ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கலைஞர்போன்றவர்கள் கலந்து கொண்டு பேசினர். 1976 ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. (356ஆவது பிரிவின்படி)

அன்று இரவே தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திராவிடர் கழகத்தவரில் சென்னையில் என்னையும் மற்றும் 9 முக்கியஸ்தர்களையும் நள்ளிரவில் கைது செய்து, அடுத்த நாள் சென்னை மத்திய சிறைச்சாலையில் கொண்டு போய் அடைத்தனர். (மற்ற சிறைச் சாலைகளிலும் பலர் கைது செய்யப்பட்டனர்)

எட்டடி கொட்டடியில் 8 பேர்கள் – இரண்டு பானைகள்; ஒன்றில் தண்ணீர் – மற்றொன்று சிறுநீர் கழிக்க; சாப்பாடு தரும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எங்கள்அறைகள் பூட்டப்பட்டே இருக்கும். காலைக் கடன்கள் கழிக்கக்கூட குறிப்பிட்ட நேரம்தான். உடனே உள்ளே போய் விடுவோம். எங்களது உடைகள் எதுவும் 15 நாட்கள் வரை தரப்படாததால், கட்டிய வேட்டி, உடையையே நாங்கள் பயன்படுத்திய நிலையில் இருந்த பரிதாபம்!  அது எங்களை மிகவும் பக்குவப்படுத்தி விட்டது! பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 9 மணி; எங்கள் அறைகள் திடீரென்று திறக்கப்பட்டன. ஆயுள் கைதிகளான காணிக் வார்டர்கள் என்பவர்களைக் கொண்டு எங்களை வரிசையாக (File) உட்கார வைத்து, திடீரென்று மூர்க்கத்தனமாகத் தாக்கினர்கள்.

எங்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! எனக்கு லட்டியின் தாக்குதல் கண்ணுக்கு கீழே! தோழர் N.S. சம்பந்தம் முதுகுத் தண்டு வடம் அறுவை சிகிச்சை செய்தவரை அடிக்காதீர் என்று கெஞ்சிக் கேட்ட எனக்கு அந்த லட்டிக் குத்து! இன்று வரை அதன் பாதிப்பு! தி.மு.க. தி.க. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் (காங்கிரஸ்-ஓ) முக்கிய தோழர்கள் சுமார் 300 பேர்களுக்கு பக்கமாக இருந்தோம்! நடிகவேள் எம்.ஆர். ராதாவும் எங்களுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

உணவில் திட்டமிட்டே கல் போடப்பட்டது. சிறுநீரும் கலக்கப்பட்டது (இது ஜஸ்டீஸ் இஸ்மாயில் விசாரணைக் கமிஷன் அறிக்கையிலும் உள்ளது) தி.மு.க. தோழர்கள் குறிப்பாக மேயர் சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, முரசொலி அடியார் போன்றவர்கள் வெகு கடுமையாகத் தாக்கப்பட்டனர். எட்டி உதைக்கப்பட்டனர். கடுமையான காயங்களுக்கு ஆளாகினர்.

விடுதலை முரசொலி போன்ற ஏடுகள் தணிக்கை என்ற பெயரால் மிகவும் அச்சுறுத்தப்பட்ட அவலம் மறக்கப்பட முடியாத ஒன்று! அடுத்த நாள் இரவு சகோதரர் மு.க. ஸ்டாலினை அடித்து அவர் ரத்தம் சொட்டச் சொட்ட இரவு எங்கள் கொட்டடியில் கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த எங்கள்மீது தள்ளினர். திடீரென்று பார்த்தபோது ஸ்டாலின் ரத்தக் கோலத்தில், இக்கோலத்தில் ஆறுதல் கூறி அரவணைத்தோம் – நானும் நண்பர் சிட்டி பாபுவும்.

நாங்கள் எந்த சிறையில் இருக்கிறோம் என்ற தகவல்கூட எங்கள் வீட்டாருக்குத் தெரியாது! இந்த கொடுமை ஒரு மாதத்திற்குமேல் நீடித்து – பிறகே அதிகாரிகள் பல மாற்றத்திற்குப்பின் நிலைமை மாறியது.

சென்னையில் தான் இப்படி – அதி தீவிர கொடுமையின் அட்டகாசம்!

தோழர் சிட்டிபாபுவின் மரணம், சாத்தூர் பாலகிருஷ்ணன் மரணம்  – சிறைச்சாலை விளைவுகள். எப்படியே 1977 மார்ச் 17 நெருக்கடி காலம் அகற்றப்பட்டது!

நாங்கள் சுமார் ஒரு ஆண்டுகால சிறை வாசத்திற்குப் பிறகு கெட்டுப் போய் இருந்த வெளிக்காற்றை சுவாசிக்க முடிந்தது. இப்படிப்பட்ட இருண்ட காலம் மீண்டும் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் – முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி அவர்களே கூறுவது – புறந்தள்ளக் கூடிய ஒன்றா?

நாட்டில் மீண்டும் மீண்டும் அவசரச் சட்டத்தையே புதுப்பிக்கும் போக்கு அரும்புகிறதோ என்ற அய்யம் – மக்கள் ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்குகிறது!

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் எந்த விலையும் கொடுக்க எப்போதும் தயார் நிலையில் இருப்பதே ஒரே வழி – இருண்ட காலம் மீண்டும் வந்து கதவைத் தட்டாமல் இருக்க.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
25.6.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *