நோய்த்தடுப்பு முறைகளைக் கண்டுபிடித்தது யார்?

ஏப்ரல் 16-30

கண்டுபிடித்தது… கடவுள் அல்ல! – 2

– மதிமன்னன்

நோய்த்தடுப்பு முறைகளைக் கண்டுபிடித்தது யார்?


அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒலித்த ஒரு திரைப்படப் பாடல் – கோடானுகோடி மக்களுக்கு ஒரு தந்தை என்றாலே, சில கூன், குருடு, நொண்டி, முடம் பிறப்பது எதாலே? இதற்கான விடை என்ன? அமெரிக்காவில் இருக்கும் சில கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளின் படைப்பு என்பதை அறிவார்ந்த படைப்பு எனும் பொருள்பட Intelligent Design என்கிறார்கள்.

அவர்கள் இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறமுடியும்? இப்படிக் குறைபாடான பிறவிகளைச் சரி செய்திட மனிதன்தான் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளான். கடவுளிடம் ஸ்பேர் உறுப்புகள் உற்பத்தி கிடையாதே! அதனால் மனிதன்தான் அவற்றைக் கண்டுபிடித்துச் செய்து பொருத்திச் சீர் செய்கிறான்!

அறுவைச் சிகிச்சை செய்கிறான். மருந்து கண்டுபிடித்து நோய் போக்குகிறான். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறான். கண் பார்வைக் குறையைச் சரி செய்கிறான். பற்களில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து மருத்துவம் செய்கிறான். ஒழுங்கற்ற, உடைந்த பற்களுக்குப் பதில் மனிதன் கண்டுபிடித்த பற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கால், கை போன்ற உறுப்புகளை மனிதனே செய்து பொருத்தி ஊனம் தெரியாமல் மறைக்கிறான். இப்படியே வளர்ந்து முழு உயிர்களையே உற்பத்தி செய்யக் கண்டுபிடித்துவிட்டான். ஆட்டில் ஆரம்பித்துப் பல விலங்குகளைப் படைத்துவிட்டான். மனிதனையும் படைக்கத் தயார் என்றான்! பரமண்டலங்களில் இருக்கும் பரமபிதாவும் அல்லாவும் பிரம்மாவும் வேலை இழக்கும் அபாயத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றிட போப் முதல் கடைசி அழுக்கு மூட்டை (Dirt Bag) வரை குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டன. உலக வல்லரசு நாடுகள் ஒருமித்த குரலில் தடை போட்டுவிட்டன. மனிதனை மனிதனே உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் (Technology) தயார்! உற்பத்திதான் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது!

முதல் மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவனாக எல்லா மதங்களும் கூறுகின்றன. மேலைநாட்டு மதங்களாகக் கருதப்படும் யூத, கிறித்துவ, முகமதிய மதங்களின் நூல்கள் அவ்வாறே கூறுகின்றன. ஆணைப் படைத்த கடவுளால் பெண்ணையும் அதே பாணியில் படைக்க இயலவில்லை போலும்! முதல் மனிதன் ஆதம் என்பவன் தூங்கும்போது அவனது விலா எலும்பை எடுத்துச் சதையால் மூடிவிட்டதாம் கடவுள். அந்த விலா எலும்பைக் கொண்டு பெண்ணைப் படைத்ததாம் கடவுள். அப்படித்தான் கிறித்துவ பைபிள் கூறுகிறது. (ஆதி 2_21). கத்தியின்றி ரத்தமின்றி மட்டுமல்லாமல் வலியுமின்றியும் விலா எலும்பு எடுக்கப்பட்டு பெண் படைக்கப்-பட்டிருக்கிறாள். இது முடியுமா? யூத மதகுரு ரப்பி, கிறித்துவ மதகுரு போப், முசுலிம் மதகுரு இமாம் போன்றோரின் விலா எலும்பை இப்படி எடுத்துப் பார்க்கலாமா? எடுத்தால் வலியால் துடிப்பார்கள். அதிகமான ரத்தப் போக்கினால் செத்துப் போவார்கள் அல்லவா? ஆனாலும் கடவுள் செய்ததாக நம்புகிறார்கள். நம்பச் சொல்கிறார்கள்.

மனிதன் இதற்கு மாற்று கண்டுபிடித்து விட்டானே! இதயமாற்று சிகிச்சை, பழுதுபட்ட மூட்டு மாற்று சிகிச்சை, குருதிக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கிப் புதுக்குழாய் மூலம் ரத்த ஓட்டம் நடைபெறச் செய்தல் போன்ற நிறைய சிக்கலான அறுவைகளை வலியின்றிச் செய்திடும் மயக்க முறையைக் கண்டுபிடித்துவிட்டான் மனிதன். எகிப்திய, அசிரிய மருத்துவர்கள், தலைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பெரிய (ஆர்டரி) குழாய்களை இறுக்கி ரத்த ஓட்டத்தைத் தடுத்து மயக்க நிலைக்கு நோயாளியை ஆக்கினர். வலி நீக்கியாக அபின் இருக்கும் என்பதை எகிப்தியர்கள் அறிந்திருந்ததால் அதனையும் பயன்படுத்தினர். அசிரியர்கள் மயக்கம் தரும் பல்வேறு மூலிகைகளையும் வேர்களையும் பயன்படுத்தினர்.

18ஆம் நூற்றாண்டில் ஜோசப் பிரீஸ்ட்லி என்பவர் நைட்ரஸ் ஆக்ஸைடைப் பிரித்தெடுத்தார். அமெரிக்கப் பல் மருத்துவர் ஒருவர் வலியில்லாமல் பல்லைப் பிடுங்கப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு டைஎதில் ஈதர் பல் மருத்துவத்திலும் மற்ற அறுவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. குளோரபார்ம் எனும் மயக்க மருந்தும் பயன்படுத்தப்பட்டது. என்றாலும் இது பக்க விளைவுகளைத் தந்தது.

சர் ஹம்ப்ரி டேவி என்பார், நைட்ரஸ் ஆக்சைடு என்பது சிரிக்க வைக்கும் வாயு என்பதையும் கண்டறிந்தார். ஆகவே சுமார் 40 ஆண்டுகளுக்கு இது அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படவில்லை. அமெரிக்கப் பல் மருத்துவர் ஹொராஸ் வெல்ஸ் என்பவர் நைட்ரஸ் ஆக்சைடை சுவாசித்துக் கொண்டே ஒரு பல்லைப் பிடுங்கிக் கொண்டார், வலியில்லாமல்! 1845இல் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் இதனைப் பயன்படுத்துவதுபற்றிச் செயல் விளக்கம் தந்தார். வில்லியம் மார்டன் என்பவர் கழுத்துக் கட்டியை அகற்ற நைட்ரஸ் ஆக்சைடைப் பயன்படுத்திக் காட்டினார். பின்னர் இம்முறை லண்டனுக்கும் பாரிசுக்கும் பரவியது.

1842இல் கிராஃபோர்டு லாங் எனும் மருத்துவர் நைட்ரஸ் ஆக்சைடுக்குப் பதில் ஈதர் (Ether) என்பதைக் கண்டுபிடித்தார். இவரைப் போலவே மருத்துவர்கள் வில்லியம் மார்டன், ஹொராஸ் வெல்ஸ், சார்லஸ் ஜாக்சன் என்பவர்களும் ஈதர் பயன்படுத்தி அறுவை செய்துள்ளனர். 1879இல் கிராஃபோர்டு இந்த மயக்கமுறையின் தந்தை என அங்கீகரிக்கப்பட்டார்.

குழந்தைப் பேறின்போது குளோரபாரம் எனும் மயக்கமுறையை முதன்முதலில் ஜேம்ஸ் சிம்ப்சன் எனும் மகப்பேறு இயல் பேராசிரியர் பயன்படுத்தினார். 1847இல் ஈதருக்கு மாற்றாக இதனை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். பிரசவத்திற்கு வந்த 30 பெண்களுக்குப் பயன்படுத்தி வலியின்றி பிள்ளை பெறச் செய்தார். வந்தது சிக்கல்! மதவாதிகளும் சர்ச்களும் கூக்குரல் எழுப்பினர். பெண்களுக்குக் கடவுள் தந்த சாபம் என்னவென்றால், வலியுடன்தான் பிள்ளை பெற வேண்டும் என்பதாம். அதனை எதிர்க்கும் வகையில் மருத்துவர் செய்யலாமா? கடவுளுக்கு எதிர்ப்பாகச் செயல்படலாமா? எனவே அது பரவலாகக் கையாளப்படவில்லை.

1853இல் இங்கிலாந்து ராணி விக்டோரியா தனது கடைசிப் பிள்ளையைப் பெற்றெடுத்தபோது குளோரபாரம் தரப்பட்டது. வலியின்றி எல்லாம் நடந்தது. அரசியே கையாண்டார் என்றதும் உலகெங்கும் பரவியது. கடைசியில் குளோரபாரம் பலர் விசயத்தில் இருதய அடைப்புக்குக் காரணமாகி உயிர் இழப்பும் நடந்ததால் குளோரபாரம் தற்போது தரப்படுவது கிடையாது.

நோய்கள் கடவுளால் மனிதர்க்குத் தரப்படும் தண்டனை என்று ஒரு மத நம்பிக்கை உண்டு. இந்தக் காரணத்தினால் நோய்க்கு மருத்துவம் செய்துகொள்வது தடை செய்யப்பட்ட மதப்பிரிவுகள் கிறித்துவத்தில் உண்டு. பாம்பு கடித்தால்கூட மருத்துவம் செய்து கொள்ளாமல் இறந்துபோன மடத்தனங்களும் மத நம்பிக்கையாளர்களிடம் உண்டு. மருத்துவம் பார்த்துக் கொள்வது கடவுளுக்கு எதிராக மனிதன் செயல்படுகிறான் எனப் பொருள்-படுமாம். இன்னொரு வகையில் -_ நோய் தீர்க்கும் மருத்துவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் ஆகிவிடுகிறார்கள். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் உரையாற்றும்போது தந்தை பெரியார் அவர்கள், என் அன்பார்ந்த கடவுளின் எதிரிகளே! என்றுதான் விளித்துப் பேசினார்.

அப்படிப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி-யாளர்கள் கடவுளின் தண்டனைக்கு (முன் ஜாமீன் வாங்கி விடுவதைப்போல) தடுப்பு நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். நோய் வராமல் தடுக்கும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆம், நோய்த் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்துவிட்டார்கள். பெரியம்மை என்பது குளிர் நாடுகளில் பெரும் அளவில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோயாக இருந்தது. இங்கிலீஷில் இந்த நோயை Small Pox என்பார்கள். மாரியாத்தாள் எனும் கடவுளச்சியின் கோபத்தால் ஏற்படுவது அம்மை நோய் என்றொரு மூடநம்பிக்கை. ஆத்தாளுக்குக் கரண்டி எண்ணெய் கொடுத்துவிட்டால் ஆத்தா குளிர்ச்சி பெற்று இறங்கிப் போய்விடும், அம்மை குணமாகிவிடும் என்று சொல்லியே ஆயிரக்கணக்கானவர்கள் சாக வழிவிடப்-பட்டது முன்நாள்களில். அம்மை நோயால் இறந்தவர்களை இறந்துவிட்டனர் என்றுகூடச் சொல்லாமல், ஆத்தா குளிர்ந்து போய்விட்டாள் என்று சொல்லி, மாரியாத்தாளைக் காப்பாற்றிக் கொண்டு இருந்தனர்.

அத்தகைய கொடிய கொள்ளை நோயைத் தடுப்பூசி போட்டு பாதிக்காமல் தற்காத்துக் கொள்ளும் முறையையும்கூட மனிதன்தான் கண்டுபிடித்தான். எட்வர்ட் ஜென்னர் என்பவர் இங்கிலாந்து நாட்டு மருத்துவர். அம்மை நோய்க்கும் பசு அம்மை நோய்க்கும் (Cow Pox) தொடர்பு உண்டு என்ற கருத்து அவருக்கு உண்டு. சாரா நெல்ம்ஸ் எனும் பால்காரிக்கு பசு அம்மை நோய்ப் பாதிப்பு. ஜென்னரிடம் மருத்துவம் செய்து கொள்ள வந்தபோது, அவளின் கையில் கொப்புளங்கள் இருந்தன. கொப்புளங்களிலிருந்து சீழ் எடுத்து வேறொரு சிறுவனின் கைகளில் தடவிவிட்டார். அவனுக்குச் சில நாள்களில் பசு அம்மை நோய் தாக்கியது. பசு அம்மை தொற்றக்கூடியது என்பதைக் கண்டுபிடித்தார். அம்மை நோய்க்குத் தரப்படும் மருந்தை அவனுக்குக் கொடுத்தார். அவனும் நோயிலிருந்து குணமாகிவிட்டான்.

பெரியம்மை நோய் பொதுக்கணக்காண்டுக்கு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது. பொது ஆண்டுக்கு 1157ஆம் ஆண்டில் (கி.மு.1157) ராம்சேஸ் V எனும் மன்னன் இந்நோயால் இறந்துபட்டிருக்கிறான் என நம்பிட அவனது மம்மியில் அடையாளங்கள் காணப்படுகின்றன.

லண்டன் நகரில் அம்மைத் தடுப்பு மருந்து 1700ஆம் ஆண்டுவாக்கில் பரவத் தொடங்கியது. அம்மை நோய்ப் பாதிப்பு உள்ளவர்களின் உடலில் உள்ள அம்மைக் கொப்புளங்களின் காய்ந்த பொருக்குகளைக்  (Scab) கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து ஊசிமூலம் உடலுக்குள் செலுத்தப்பட்டது. பின்னர் பெரியம்மை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைக்கு அவர்கள் ஆளான-போதும் நோய் தொற்றவில்லை. கடும் குற்றம் புரிந்து மரண தண்டனை எதிர்நோக்கி இருந்த நான்கு கைதிகளுக்கு இம்மருந்து செலுத்தப்-பட்டது. அவர்கள் பெரியம்மை நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. வேல்ஸ்     இளவரசி ஒர்ட்லி மான்டேகு என்பாரின் ஆணைப்படி இச்சோதனை நடத்தப்பட்டது. மருந்துமுறை வெற்றி எனக் கண்டறியப்பட்டது.

ஆனாலும் பிரான்சு நாட்டு அறிஞர் வால்டேர் இம்மருத்துவ முறையைப் பரிகசித்தார். பெரியம்மை நோயைத் தடுத்திட அதையே அவர்களின் குழந்தைகளுக்குத் தருகிறார்கள். பிரிட்டிஷார் முட்டாள்கள் என்றார் அவர். யார் முட்டாள்கள் என்பதை உலகம் 280 ஆண்டுகளாகக் கண்டு வருகிறது.

அதைப்போலவே காலரா நோய். குடிநீரின் அசுத்தத்தால் பரவும் கொடிய கொள்ளை நோய். இதனைக் குணப்படுத்த பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர் லூயி பாய்ச்சர் முயற்சி செய்தார். வெற்றி பெற்றார். பெரியம்மைக்கு மருந்து கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் பற்றி இவர் தெரிந்து வைத்திருந்தார். கோழிகளுக்கு வயிற்றுப் போக்கு (காலரா) நோய் வருவது பற்றி ஆய்ந்து கொண்டிருந்தவர். காலராவுக்குக் காரணமான பாக்டீரியாக்களைக் கோழிகளுக்குள் செலுத்துமாறு தன் உதவியாளரிடம் கூறியிருந்தார். அவர் மறந்துவிட்டார்.

ஒரு மாதம் கழித்து அதே பாக்டீரியாக்களைப் பறவைகளுக்குச் செலுத்தினார். பறவைகளுக்கு உடல்நலம் குன்றியதே தவிர, அவை சாகவில்லை. இதனால் துணிவுபெற்ற அவர், புதிய பாக்டீரியாக்களைப் புதிய கோழிகளுக்குள் செலுத்தினார். அவை இறந்துவிட்டன. எட்வர்ட் ஜென்னரைப் போலவே, லூயி பாய்ச்சரும் பலவீனமான பாக்டீரியா நோய்த் தடுப்புச் சக்தி பெற்றிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். ஒரே ஒரு வேறுபாடு இருவருக்கும் – ஜென்னர் பயன்படுத்தியது இயற்கை பாக்டீரியா. பாய்ச்சர் பயன்படுத்தியது செயற்கை பாக்டீரியா. அதிக அளவில் பாக்டீரியாக்களை உபயோகித்தால் நிச்சயமாக பலன் கிடைக்கிறது. எனவே, காலராவைப் போலவே, அந்த்ராக்ஸ் நோய், வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் போன்ற-வற்றுக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்தார்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *