ஆசிரியர் பதில்கள்

அக்டோபர் 16-31

கேள்வி : ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள ஒற்றுமைக் கருத்துகள் எவை? இரு சாராரும் ஒரே மேடையில் பேசும் வாய்ப்பு ஏற்படுமா?
-_ இரா.மகாலிங்கம், கூடுவாஞ்சேரி

பதில் : மனிதநேயத்திலும் அவரவருக்குள்ள சுயமரியாதையை மதிப்பதிலும் இரு சாராரும் இருந்தால் சாத்தியமே! மனிதநேயத்தில் நம்பிக்கையுள்ள ஆத்திகராக _ தவத்திரு குன்றக்குடி அடிகளார்போல் வாழுபவர்களாக இருப்பின் ஒரே மேடையில் பேசிடலாம்.

 

கேள்வி : வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பற்றி?    – எஸ்.தில்லை சிகாமணி, கோவிந்தகுடி

பதில் : வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது  என்பது வரவேற்கத்தக்கதுதான். வாக்குரிமையைத்தான் பயன்படுத்தாமல் நிராகரிக்கக் கூடாது. அது ஜனநாயகத்திற்குக் கேடு.

கேள்வி : தண்டனை பெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் அவசரச் சட்டம் முட்டாள்தனமானது என ராகுல் காந்தி கூறியுள்ளாரே?
-_ கே.குமரன், திருப்பூர்

பதில் : சொல்லும் சரியில்லை; கருத்தும் ஏற்கக் கூடியதல்ல. திரும்பப் பெற்றது மனித உரிமைக்கு எதிரானது. தவறு செய்தவர் ஒரு கோர்ட்டில் தண்டனை பெற்றாலே பதவி ரத்து என்பது – மேல்முறையீட்டு உரிமையையே கொச்சைப்படுத்துவதாகும்.

அப்பீல் வழக்கில் வெற்றிபெற்றுவிட்டால், சிறை – பதவி இழப்பு, எப்படி சரிக்கட்டப்பட முடியும்?

கேள்வி : எதிர்க் கட்சிகளின் நியாயமான எதிர்ப்புக்களையும் மீறி 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது சரியா?
-_ எஸ்.கோவிந்தசாமி, பெரம்பலுர்

பதில் : துவக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி தி.மு.க.வின் மீது பழிதூற்றி வருகிறது.

கேள்வி : மோகன் பராசரன் முக்கியப் பொறுப்பில் இருந்து கொண்டு மதவெறியுடன் பேசுவது மிகப் பெரிய பதவியைத் தவறாக பயன்படுத்துகிறார் எனக் கருதலாமா?
-_ ஜி.நளினி, பெரியார் நகர்

பதில் : அந்த அரசு வழக்குரைஞர் கூறிய ஒரு காரணம் ஏற்கத்தக்கது; தந்தை எதிர் அணியில் இருக்கிறார் என்பது. மற்றொன்று ஏற்கத்தக்கதல்ல!

கேள்வி : மோடியின் மேஜிக் இந்தியாவைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் என பிஜேபிக்காரர்கள் பிரச்சாரம் செய்கிறார்களே? –  எஸ்.சாந்தி, ஆவூர்

பதில் : அப்துல் கலாம் சொன்னாரே கனவு காணச் சொல்லி; அதைச் செய்கிறார்கள் அவர்கள்!

கேள்வி : பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரைச் சொல்லி ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி அமர்ந்து, ஆட்சி செய்து வருபவர்களின் தொலைக்காட்சிகளில் அண்ணாவின் பிறந்த நாளுக்காக திரைப்படங்களோ… அவரைப் பற்றிய செய்தித் தொகுப்போ இடம் பெறவில்லையே? –  தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : ஏன் சொல்கிறார்களே! கவனிக்கவில்லையா நீங்கள்? அண்ணா நாமம் வாழ்க! அண்ணா நாமம் வாழ்கவென பலமுறை கூறுகிறார்களே!

கேள்வி : அண்ணா 100, கலைஞர் 100 என்று புத்தகங்கள் வந்துள்ளதுபோல் பெரியார் 100 புத்தகம் வெளிவந்துள்ளதா? – ஜி.திவ்யா, வியாசர்பாடி

பதில் : பெரியார் (ஆயிரம்) 1000 வந்துள்ளதே! அதுதானே லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிப் பயன்பெற்றுள்ளனர் நமது தந்தை பெரியார் பிறந்த நாளில்.

கேள்வி : விருத்தாசலம் மாநாட்டில் நடந்த வன்முறை சமீபத்தில் திருச்சியில் நடந்த ஒரு கட்சியின் பொதுக்கூட்டத்தினால் ஏற்பட்ட ஊக்கமா?  – ரா.நிலா, பாப்பையாபுரம்

பதில் : 100க்கு 100 மறுக்க முடியாது, இருக்கலாம்!

கேள்வி : உலகம் முழுவதும் நவீன கண்டுபிடிப்புகள், அறிவியல் செய்திகள் பெருகி வரும் நிலையில் தமிழக தினசரிகளில் ஜோதிடம், ஆன்மீகம் போன்றன அளவிற்கதிகமாக ஆக்கிரமித்து வருகிறதே? மீண்டும் தமிழர்கள் ஆரிய அடிமைகளாக மாறிக்கொண்டு வருகிறார்களா? –  பூ.ராஜேந்திரன், தாழையூத்து

பதில் : மூளைச்சாயம் ஏற்றி, மூடநம்பிக்கைகளில் மூழ்கடித்து முன்னேற முடியாமல் தடுக்கவே இப்படி இந்த ஏடுகள், காசுபலன் காண, ராசிபலன் போட்டு மக்களை மூடத்தனத்தால் மூழ்கடிக்கிறது!

var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *