அய்யாவின் அடிச்சுவட்டில்… 99

ஆகஸ்ட் 01-15

ராமாயணப் பாத்திரங்கள் நூலின் மீதான வரலாற்றுத் தீர்ப்பு – கி.வீரமணி

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய RAMAYANA- A TRUE READING (ராமாயணப் பாத்திரங்கள் நூலின் மொழிபெயர்ப்பு) என்ற ஆங்கில நூலையும் அதன் இந்தி மொழிபெயர்ப்பினையும் உ.பி.அரசு தடை செய்திருந்தது.

இதை எதிர்த்து உ.பி.மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இது தொடர்பான தீர்ப்பில் உ.பி.அரசு தடை விதித்தது செல்லாது எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உ.பி.அரசு மேல்முறையீடு செய்தது. இதன் மீதான தீர்ப்பிலும் இந்த நூலுக்குத் தடை விதித்தது செல்லாது எனத் தீர்ப்பு அளித்தது. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அளித்த அந்தத் தீர்ப்பின் விவரத்தினை சென்ற இதழில் தெரிவித்திருந்தேன். அதன் தொடர்ச்சியைத் தருகிறேன்.   “சட்டத்தில் மூன்றாவது பிரிவாகக் காட்டப்பட்டுள்ள செய்தி விளக்கங்கள் அறிவிப்பு ஆணையில் தரப்பட்டுள்ளன என்பதனை முடிவு செய்தல் வேண்டும். உயர் நீதிமன்றம், அரசின் ஆணையில் இந்த விளக்கங்கள் தரப்படவில்லையென தள்ளுபடி செய்யப்பட்டதானது சரியில்லை என அரசு தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் வாதித்து, அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் அது விளக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

நம் விருப்பத்திற்கேற்ற சட்ட விளக்கம் முறையல்ல என்றும்,

மேலும் அவ்வாறு வாதிடுகையில், சம்பந்தப்பட்ட புத்தகத்தின் சம்பந்தப்பட்ட பக்கங்களில் உள்ள வரிகள் பறிமுதல் செய்யப்படுவதற்கான போதுமான விளக்கங்களோடு இருப்பதால் அரசின் அறிவிப்பு ஆணையில் இடப்பட்டுள்ள விளக்கம் தேவையில்லை எனினும், தவிர்க்கமுடியாதது எனவும் குறிப்பிட்டார். அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கையில் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்கள் கூறப்பட்டு இருப்பதால் அதுவே சட்டத்தின் மூன்றாவது பகுதியைப் பூர்த்தி செய்வதாக அமைகிறது. ஆகவே, சம்பிரதாய முறைப்படி தனி விளக்கம் கூறுவது தகுதியானது அல்ல என்றும், எதிர் மனுதாரரின் வழக்குரைஞர் எடுத்துக்காட்டிய சட்டப் பிரிவுகளில், விளக்கங்கள் தரப்பட வேண்டுமென வலியுறுத்திக் கூறப்பட்டிருப்பதின் காரணமாக, அவைகளை நிராகரித்துவிட்டு நம் விருப்பத்திற்கு உட்பட்ட வகையில் சட்ட விளக்கம் கூறி பறிமுதல் செய்யப்பட்டது சரியானது என வாதிடுவது முறையல்ல. அது அடிப்படை ஜீவாதார உரிமையின் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதும் சட்டத்திற்குப் புறம்பானதுமாகும் என வாதிட்டார். அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர், வெளியிடப்பட்டுள்ள சில பகுதிகள் அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் காட்டப்பட்டுள்ள மாதிரி தெய்வீகத் தன்மை வாய்ந்த ராமன், சீதை, ஜனகன் முதலியவர்களை இழிவுப்படுத்தும் விதத்திலும் உத்திரப் பிரதேசத்தில்  வாழும் இந்துக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையிலும் இருப்பதால் கோர்ட்டார் அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

நாங்கள் அவருடைய வாதத்தை ஆராயுங்கால், ஜீவாதார உரிமைகள் விலங்கிடப்பட்டுள்ளதா, இல்லையா என்பதனையும், எந்த அடிப்படை உணர்வுகளால் உந்தப்பட்டு உத்திரப் பிரதேச அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும். நமது இந்திய நாடானது, மதச்சார்பற்ற நாடு. எந்த ஒரு மதத்தினையும் தழுவியது அல்ல. இந்த நாடானது எந்த ஒரு மக்களின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படுவதல்ல. ஆனால், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டம், ஒழுங்கு இவைகளை நிலைநாட்டுவதிலும் நாட்டங்கொண்டு அக்கறை கொண்டுள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு வகுப்பு மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும்படியான, தூண்டும்படியான வெளியீடுகள் அல்லது பேசப்படுகின்ற சொற்களைப்பற்றிக் கவலை கொண்டு, மூர்க்கத்தனமான செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு அரசும் அமைதியையும், பாதுகாப்பையும் கட்டிக்காப்பது அவசியம். அப்படி அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் எந்த ஒரு வடிவிலோ பங்கம் ஏற்பட்டு ஆபத்து விளையுமேயானால், அந்த அரசு நீதித்துறையை நாடவேண்டியுள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு தவறல்ல

எங்கள் முன்னால் உள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கை, சட்டரீதியாகவும் பார்க்கின்ற நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது அல்ல. பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இது சம்பந்தப்பட்ட பிரச்சினையைப் பல்வேறு விதங்களில் முடிவு செய்து தீர்ப்பளித்துள்ளன. தனிப்பட்ட ஒரு மனிதன் மீது கடுமையான நடவடிக்கை அல்லது தடைச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்படுமேயானால், அதனால் ஏற்படும் குற்ற விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99A ஏற்படுத்திய அறிஞர்கள், அரசிற்கு முன்னேற்பாடான அதிகாரங்களை வழங்கி உள்ளார்கள். சட்டரீதியாகச் சொல்லப்பட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியக் குடிமக்களின் இருசாராரிடையே பகைமையை வளர்க்கும் அல்லது ஒரு மதத்தினரின் உணர்ச்சியைப் புண்படுத்தும் வெளியீடுகள் இருக்குமேயானால், சட்டரீதியாக அரசு இதனை உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்பட இந்தப் பிரிவு நிர்ப்பந்திப்பதும் அல்லாமல் 99A எந்தக் காரணத்திற்காகப் பறிமுதல் செய்யப்படுகிறது என்பதனையும் விளக்க வேண்டுமென உரைக்கிறது. எந்தக் காரணத்திற்காக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதனை கண்டிப்பாக விளக்கப்பட வேண்டுமென சட்டம் நிர்பந்திப்பதால், காரணத்தை விளக்காமல், அரசு அறிவிப்பாணையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வது கூடாது.

சட்டரீதியாக ஒரு பிரச்சினை கட்டாயமாக் கப்படுமேயானால், நிர்ப்பந்திக்கப்படுமேயானால், அதன் பிரகாரம் அரசு செயல்பட்டே தீரவேண்டும். சட்டரீதியாக ஒரு வெளியீட்டை ஒரு மாநில அரசு பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்குமேயானால், அது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டுமென்பதனை மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரச்சினைகள் விடுபட்டால் சட்டம் செயலிழந்துவிடும்

இதுபோன்ற பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று விடுபடுமேயானால், சட்டம் அங்கு செயலிழந்து விடுகிறது. மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு நாம் திரும்பி வருகின்றபோது, மக்களின் உரிமைகளை உன்னிப்பாகக் கவனிப்பதோடு, பாதுகாக்கப்படுவதும் முறையானதாகும். சட்டரீதியாக இப்படித்தான் செயல்பட வேண்டும் என்-று நிர்ப்பந்திக்கப்படும் போது, அப்படிச் செய்யாமல் செயல்பட்டுவிட்டு விளக்கங்கள் கூறுவது தகுதியானதும் முறையானதும் அல்ல. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99C படி பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தடை உத்தரவைத் தகர்க்க மனு கொடுக்கும் நேரத்தில், அரசு எந்தக் காரணத்திற்காக செயல்பட்டிருக்கிறது என்பதனைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளித்தல் முறையானதாகும்.

நீதிமன்றம் அரசு அறிவிப்பாணையில் உள்ள கருத்துகளைக் கொண்டு கவனித்து, தனது எல்லைக்கு அப்பாற்பட்டு விளக்கமான விசாரணை செய்ய இயலாது. சட்டரீதியாகச் சில சலுகைகள் தனிப்பட்ட ஒருவருக்குக் கொடுப்பதற்குச் சட்டம் குறிப்பிட்ட அளவு இடமளிக்குமேயானால், அதனைத் தடை செய்ய, வெளியீட்டைத்  தடைசெய்ய அதிகாரம் யாருக்குமில்லை.

நாங்கள், தடைசெய்யப்படுபவரின் கருத்தை விரிவாக எடுத்துரைத்துச் செயல்பட வேண்டுமெனச் சொல்ல வரவில்லை. சில வழக்குகளில் குறிப்பாகச் சொல்லப்படுமேயானால், அதுவே போதுமானது. மற்ற வழக்குகளில் விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சொல்லப்படாமல் விடப்படுமேயானால், அந்த ஆணை முறையானது அல்ல.

தனி மனித உரிமை பறிக்கப்படக்கூடாது

தனி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை பறிக்கப்படுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 99A  யைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. தேச நலனைப் பாதுகாப்பதற்குத் தனி மனித உரிமை கட்டுப்படுத்த வேண்டுமென்பதில் அய்யமில்லை.

தனி மனித சுதந்திரத்தைப் பற்றிய கோட்பாடுகள், அரசியலமைப்பில் குறிக்கப்படும்போது, காரணம் பொருந்திய கட்டுப்பாடுகளை விதித்துத்தானிருக்கிறார்கள். குற்றமுறை பிரிவு 99கி  ஏற்படுத்தப்படும்போது அரசியலமைப்பைக் கருத்தில் கொண்டுதான் செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு பொது மக்களின் அமைதியைக் காப்பதற்காக புது ஆணை பிறப்பிக்கப்படும்போது தனி மனித உரிமைபற்றிக் கவலைக் கொள்ளாமல் மூடத்தனமான கொள்கைகள்  தடை செய்யப்பட வேண்டும். அந்த மாதிரியான வெளியீடுகள் சமுதாயத்தில் வெளியிடப்படுமேயானால், பொதுமக்களின் அமைதியையும் நன்மையையும் முன்னிட்டு தடை செய்யப்படுதல் அவசியம்.

கண்மூடித்தனமான, மூடத்தனமான கொள்கைகள் கண்டிக்கப்பட்டு பயமில்லாமல் வெளிக்காட்டப்படுமேயானால் முற்போக்கான எந்த ஒரு மாநில அரசும் முற்போக்கான பொருளாதாரக் கொள்கையையோ, மேற்கண்டவாறு பயமில்லாமல் வெளிக் கொணரப்பட்ட செய்திகளையோ தடை செய்யக் கூடாது. இதுதான் குற்றமுறை 99கி  பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கும் செய்தியாகும்.

தடை செய்வதானால் காரண காரியத்தோடு விளக்கம் வேண்டும்

நம்முடைய அரசியல் அமைப்பு இந்த மாதிரியான பாராட்டத்தக்க கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த காரணத்தினால் கடமை தவறாது, சட்டரீதியாக அது கவனிக்கப்பட வேண்டுமென்பதே ஆகும்.

சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வெளியீடையும் தடை செய்ய அதன்மூலம் பொதுமக்களின் அமைதியைக் காக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, குற்றமுறை 99கி  பிரிவின் நிர்வாகம் செயல்பட தடை செய்யப்பட வேண்டிய விஷயத்தைக் காரண காரியங்களோடு விளக்கப்பட வேண்டுமென்பதேயாகும். அரசின் அறிவிப்பாணை இம்முறையில் இருந்து தவறியிருக்குமேயானால் அது பிறப்பிக்கப்பட்ட ஆணையின் குற்றமேயாகும்.

முடிவாக நாங்கள் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தின் தன்மை பற்றி ஆராயவில்லை.

மூடத்தனத்தில் ஊறிப்போன சிலருக்கு வளர்கின்ற சில கொள்கைகள் நகைப்பிற்குள்ளாக்குவதாக இருக்கலாம்.

அம்மாதிரியான சிலர் சுவாமி விவேகானந்தரின் எங்களுடைய மதம் அடுப்பங்கரையிலும், எங்களுடைய தெய்வம் பானைகளாகவும் இருப்பதால் எந்த மதமும் என்னைத் தொடுவதற்கு அருகதையற்றதாக இருக்கிறது. நான் புனிதத் தன்மையுடையவனாக இருக்கிறேன் என்று பண்டித ஜவகர்லால் நேரு தன்னுடைய Discovery of India என்ற புத்தகத்தில் பக்கம் 339இல் மேற்கோளாகக் காட்டப்பட்ட செய்திகளும் புண்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்லலாம். பொதுமக்களின் நன்மையை முன்னிட்டு சில தடைகள் விதிக்கப்படுவதால் தனி மனிதனுக்கு  நெருக்கடி நேரத்தில் விதிக்கப்படும் தடைகளைப்பற்றிக் குறிப்பிடவில்லை. அப்படியில்லாத நேரத்தில், காலத்தில் விதிக்கப்படும் தடைகளைப்பற்றித்தான் குறிப்பிடுகிறோம்.

முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது

தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டுப் புத்தகத்தைப்பற்றி, மாநில அரசு தடை விதிக்க வேண்டிய காரண காரியங்களை குற்றமுறைப் பிரிவு 99 பிரகாரம், நிர்ப்பந்திக்கப்படுவதால் காட்டப்பட்டிருக்க வேண்டும். குற்றமுறைப் பிரிவு 99A  பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஒவ்வொரு மாநில அரசும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி இருப்பதால், அதனைப்பற்றித் தெளிவான விளக்கத்தைத் தர கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவானது, பலதரப்பட்ட சமுதாயத்தையும், பலதரப்பட்ட மதத் தன்மையையும், பகுத்தறிவுவாதிகளையும், கண்மூடித்தனமான மூடநம்பிக்கை கொண்டவர்களையும் கொண்டுள்ளது. எந்த ஒரு மாநில அரசும் இதனைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு வெளியீடையும் தடை செய்யும்போது முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தாது என நம்புகிறோம்.

இந்த ஒரு நடைமுறைத் தடையானது நெருக்கடிப் பிரகடனத்திற்கு முற்பட்டதாக இருப்பதால், இந்த அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்கிறோம் என்று அந்தத் தீர்ப்பிலே குறிப்பிட்டார்கள். இந்த நிகழ்ச்சி தந்தை பெரியாரின் இயக்கத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதைப் பறைசாற்றுகிறது.

– நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *