ஈரோட்டுச் சூரியன் – 15

ஜூன் 01-15

வீட்டை விட்டு வெளியேரிய இராமசாமி

குழந்தை இறந்த துக்கம்
கொஞ்சம் கொஞ்சமாக
மறைந்தது;
மகவின் நினைவுகள்
மனதிலிருந்து மெதுவாகக் கரைந்தது.
இராமசாமி
வியாபாரத்தில்
முழுக்கவனம் செலுத்தினார்;
முடிந்தவரை
வார்த்தைகளாலே மூட
நம்பிக்கைகளைக் கொளுத்தினார்;
சமுதாயத்தின் மீது
இராமசாமியின் பார்வை
ஆழமாய்ப் பதிந்தது;
அதில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என மனம் நினைந்தது;
ஜாதிப் பிரச்சனை
தீண்டாமை
மூட நம்பிக்கைகள் என
தலைவிரித்தாடியது.
அவற்றிற்கொரு கடிவாளம் கட்ட நினைத்தார்;
சமுதாயப் பிரிவினைக்கும்
தீண்டாமைக்கும்
கடவுளைக் காரணம் காட்டியதால்
கடவுளையும் கண்டித்தார்;
அவ்வெண்ணங்களை
துண்டித்தார்;
பேச்சளவில் இல்லாமல் செயலானார்;
விவாதத்தில் புயலானார்;
கருத்துகளைக்
காரசாரமாக முன் வைத்தார்;
பஜனை பாடும் பாகவதர்களைக் கேள்விகளால் தைத்தார்;
பார்ப்பனர்களின் தீண்டாமையைத்
தீண்டிப் பார்த்தார்;
அவர்களிடம் தன் சந்தேகங்களை
வேண்டிக் கேட்டார்;
இறை நம்பிக்கை என்பது
குருட்டுத் தனம் என்றார்;
இப்படிக் கேட்பது
முரட்டுத் தனம் என்றனர்;
ஆம்..
இராமசாமியின்
சந்தேகங்களுக்கு
எந்தப் பாகவதனும்
விடையளிக்கவில்லை;
அவர்களுக்கு விடை
தெரியவில்லை;
பார்ப்பனர்
சமுதாயத்தின்
உயர் குடி என்பதைக்
கடுமையாகக் கண்டித்தார்;
வார்த்தைகளால்
தண்டித்தார்;
வெங்கட்டருக்குத் தகவல் வந்தது;
தகவல் அவருக்கு
வருத்தத்தைத் தந்தது;
முதல்முறையாக
இருவருக்கும் கடும்
வாக்குவாதம் நடந்தது;
வார்த்தைப் போரிட்டு
சண்டை முடிந்தது;
குடும்பத்தாருக்கும்
இராமசாமியின் மீது
வெறுப்பு உண்டானது;
இராமசாமியின் மனம்
பறக்கும் வண்டானது;
இவரது யோசனை
அகலக் கால் வைத்தது..
புத்திசாலித்தனத்தையும்
முற்போக்குச் சிந்தனையையும்
தூக்கி எறியச் சொல்லும்
குடும்பத்தாரை வெறுத்தார்;
தன் சுயமரியாதை இழக்கும் வரை பொறுத்தார்; வேகமான சிந்தனை
அவரை வேறுமாதிரி
யோசிக்கச் சொல்லின;
குடும்ப உறவை விட்டே கொஞ்சம் தள்ளின;
பொன் பொருள்
மனைவி குடும்பம்
அனைத்தையும் உதறிவிட்டுத்
துறவறம் மேற்கொள்ள எண்ணினார்;
யோசித்து யோசித்து
காசிக்கே செல்லலாம் என முடிவு பண்ணினார்;

மதுமதி

சூரியன் உதிக்கும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *