Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அன்னை நாகம்மையார்!- முனைவர் கடவூர் மணிமாறன்

ய்யா பெரியார் வாழ்வின் இணையராய்

மெய்யாய்த் திகழ்ந்து மேன்மை சேர்த்தவர்!

சிந்தனைச் செழுமையர்; செந்தமிழ்ப் பற்றினர்;

இந்தியச் சமூகச் செயல்பாட் டாளர்;

 

கடவுள் மறுப்புக் கொள்கை யாளர்;

மடமை எதிர்ப்பினர்; மகளிர் உரிமை

வேண்டிக் களத்தினில் நின்றநா கம்மை

மாண்புறு மனித நேயம் மிக்கவர்;

 

ஒப்பிலாத் தலைவரின் இல்லற வாழ்வில்

முப்பத் தைந்தாண் டுகளைக் கழித்தவர்!

கொள்கை வழியிலும் துணையாய் இருந்தவர்;

கள்ளுக் கடைமுன் மறியல் போரில்

 

கலந்து கொண்டதால் கைதும் ஆனவர்;

உளத்தால் புரட்சி உணர்வு மிக்கவர்;

காதல் மணத்தால் களிப்புக் கொண்டவர்;

சாதி மறுப்புத் திருமணம் நடத்தியும்

 

சுயமரி யாதை இயக்கப் பணிகளில்

வியத்தகு ஈடுபாட் டாலும் உயர்ந்தவர்;

கனிவுடன் இல்லம் வருவோர்க் கெல்லாம்

உணவினை வழங்கி உவகை கொண்டவர்;

 

பெரியார் சிறைக்குச் சென்றதன் பின்னர்

அரியதோர் வைக்கம் போரைத் தொடர்ந்தவர்;

அரியன ஆற்றும் ஆர்வம் மிகவே

பெரியார் தங்கை கண்ணம் மாளுடன்

 

ஒத்துழை யாமை இயக்கம் தன்னில்

ஒத்த கருத்துடன் உழைப்பைத் தந்தவர்;

கதரா டையினைக் கனிவுடன் ஏற்றவர்;

உதவும் மனத்தர்; உயரிய குணத்தர்;

 

அயலகப் பயணம் அய்யா உடனே

நயத்தகு முறையில் மேற்கொண் டிருந்தவர்;

மதிப்புடன் அந்நாள்குடியரசுஇதழின்

பதிப்பா சிரியர், வெளியீட் டாளராய்

 

அரும்பணி ஆற்றிய அன்னைநா கம்மையார்!

திறத்தால் ஒளிர்வார் திராவிடர் நெஞ்சிலே! w