எரிமலை வெடிப்பா? எரிதழல் சிவனா?

செப்டம்பர் 01-15

திருவண்ணாமலை  என்றாலே தீபம் எல்லார் நினைவிற்கும் வரும் _தற்போது நித்தியாநந்தா நினைவுக்கு வருவது வேறு!

அந்தத் தீபத்திற்கு ஒரு புராண கதை உண்டு.

சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலையுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவாய் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே பறவையாகவும், பன்றியாகவும் தோன்றினர் என்பதே அப்புராணம்.

 

அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாய்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

நிகழ்விற்கான காரணம் புரியாதவர்கள், தங்கள் கற்பனையான காரணங்களைச் சொல்லிப் புனைந்தவையே புராணங்கள்.

சூரிய கிரகணம், சந்திர கிரஹணம் இரண்டிற்கும் காரணம் புரியாதவர்கள், திருப்பாற்கடல் கடைந்து, அமிர்தம் கிடைத்தது, இராகும் கேதும் தெரியாமல் உண்டன. அதைச் சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்தன, அதை விஷ்ணு தண்டித்தார், அதனால் ஆத்திரமுற்ற இராகு கேது ஆண்டுக்கொருமுறை சந்திரசூரியனோடு சண்டையிடுவதே மேற்கண்ட இரண்டு கிரஹணங்கள் என்றது புராணம். ஆனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுவது சந்திர கிரஹணம், பூமியின் குறுக்கே சந்திரன் வருவது சூரிய கிரஹணம் என்றது அறிவியல். அறிவியல் கூறியது உண்மையானது. புராணம் பொய்யானது.

இதேபோல், திருவண்ணாமலையில் நிகழ்ந்த உண்மை தெரியாது, அதற்கு புராணம் எழுதினர். அயல்நாடுகளில் அடிக்கடி நிகழும் எரிமலை வெடிப்பு இந்தியாவில் இல்லை. காரணம் இது (தமிழகம் – இந்தியா) நில மாற்றங்கள் பல நிகழ்ந்து வலுப்பெற்ற பூமி. ஆகவேதான் இங்கு நிலநடுக்கமும் அதிகம் இல்லை. எரிமலை வெடிப்பும் இல்லை.

ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது திருவண்ணாமலை. அறிவியல் ஆய்வுப்படிச் சொல்லவேண்டுமானால் இமயமலை. உருவாவதற்குமுன் உருவான மிகப் பழமையான மலை திருவண்ணாமலை.

புராணக் கதையின் அடிப்படையை ஆய்வு செய்த நான், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு உண்மையை ஊகித்து கவிதையில் சொன்னேன். அதன்பின் விடுதலை நாளேட்டில் கட்டுரையாய் எழுதினேன்.

சிவன் பூமிக்கும் வானுக்கும் நெருப்பாய் நின்றார் என்று புராணம் சொல்வதால், உண்மை நிகழ்வு என்னவாய் இருக்கும் என்று சிந்தித்த எனக்கு அங்கு மிகப் பெரிய அளவில் எரிமலை வெடித்திருக்க வேண்டும். அதன் காரணம் புரியாதவர்கள், கடவுள் சோதியாய் எழுந்ததாய் எண்ணியிருப்பர் என்றும், கனிம வளத்துறை அல்லது, நிலவியல் துறை அறிஞர்கள் ஆய்வு செய்தால் நான் கூறுவது உண்மை என்பதை உறுதி செய்யலாம் என்று எழுதினேன். இதோ அந்தக் கவிதையும், விடுதலைக் கட்டுரையின் பகுதியும்:

திருவண்ணாமலை
மண்மூட வேண்டிய
கண்மூடி வழக்கங்கள்
விண்முட்டி எரிகின்ற
விபரீத நிலை
விரயத்தின் உலை!

எரிமலை வெடிப்பின்
இயல்பறியா மக்கள்
அரிபிரம்மன் காணா
அரன் (அழல்) வடிவு என்றார்.
அடிக்கடி வெடிக்கும்
அயல் நாட்டிலெல்லாம்
படியளக்கும் பரமனென்று
பக்தி கொள்வதில்லை!

கிரிவல ம(கி)டைமை என்னும் தலைப்பில் 17.04.2001 முதல் மூன்று நாள்கள் விடுதலையில் நான் எழுதிய கட்டுரையில்.

எரிமலை வெடிப்பு சிவன் நெருப்பாக நின்றார் என்று திரிக்கப்பட்டது…

மலையிலிருந்து நெருப்பு வெடித்து வெளிவந்ததும் இறைவன் ஜோதியாய் நிற்கிறார் என்று வணங்கினர். அதையொட்டி அருணாசல புராணம் எழுதப்பட்டது. ஆக, திருவண்ணாமலை என்பது எரிமலை வெடிப்பின் விளைவாகும்.

பெருஞ்சுடராக நெருப்பு வெளிப்பட்டதால், அதைக் கொண்டாட மலை உச்சியில் பெரும் தீபம் ஏற்றினர். காரணம் எரிமலை வெடிப்பு மலையுச்சியில் தான் நிகழும்.
திருவண்ணாமலை மண்ணை அகழ் ஆய்வு செய்தால் இந்த உண்மைப் புலப்படும். என்று அக்கட்டுரையில் 12 ஆண்டுகளுக்குமுன் எழுதினேன்.

தற்போது திருவண்ணாமலையை ஆய்வு செய்த கனிம வளத்துறை ஆய்வாளர்கள், திருவண்ணாமலை பாறைகள் எரிமலை வெடிப்பில் உருவானவை என்று உறுதிசெய்துள்ளனர். இது இமயமலையைவிட மிகப் பழமையான மலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

(ஆதாரம் _ தினமணி-, 01.08.2012, பக். 7)

பெரியார் தொண்டரின் கணிப்பு பிழையாகாது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

அருணா ஜலம் என்பது அருணா + அஜலம் என்று புரியும். அருணா என்றால் நெருப்பு. அஜலம் என்றால் மலை. நெருப்பு மலை (எரிமலை) என்ற பெயர் காரணப் பெயர் ஆகும். புராணம் எழுதித்தான் அதை ஆரியர்கள் மாற்றி (ஏமாற்றி) விட்டனர்.

அருணகிரி என்றாலும் அதே பொருள்தான்.

ஆக, திருவண்ணாமலை தீபம் என்பது எரிமலை வெடிப்பின் அடையாளமேயன்றி அதில் கடவுள் கற்பிதத்திற்குக் கடுகளவும் இடமில்லை. எனவே, கிரிவலமும் வேண்டாம், தீபமும் வேண்டாம்.

அண்ணாமலையில் தீபச்சுடர் ஏற்றும் மடமையை மாற்றி, அய்யா பெரியாரின் அறிவுச் சுடர் ஏற்றுவோம்!

– மஞ்சை வசந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *