நாங்கள் நாத்திகர்கள்

ஜூன் 16-30

-சு.அறிவுக்கரசு

உலகம் ஒருவனாலும் படைக்கப்பட்டது அல்ல என்று கூறுபவர்கள்.

மனிதன் படைக்கப்பட்டவன் அல்ல; பரிணாம வளர்ச்சியால் உருவானவன் என்பவர்கள்.

கடவுளும் இல்லை, நரகமோ சொர்க்கமோ கிடையாது என்பவர்கள்.

இறப்புக்குப்பின் ஒரு வாழ்க்கையும் கிடையாது. நரகத் துன்பமோ சொர்க்க இன்பமோ இல்லை என்பவர்கள்.

பாபம் செய்தால் நோய் வரும் என நம்பாதவர்கள் மருத்துவம் செய்தால் நோய் தீரும் என்பவர்கள்.

பிரார்த்தனையால் எதுவும் நடக்காது என்பவர்கள்.

சாமியார்கள், மடத் தலைவர்கள் என்போர் மோசடிப் பேர்வழிகள். எத்தர்கள். பிறரை நம்பச் செய்து ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்பதைக் கண்டு உணர்த்துபவர்கள்.

பொய் நம்பிக்கைகளுக்கு எதிரிகள். சூரியன் உதிப்பதையோ மறைவதையோ மறுப்பவர்கள்.

சூரியன் நிலையாக நிற்பது. பூமிதான் அதனைச் சுற்றி வருகிறது என்பதை ஏற்பவர்கள்.

சூரிய ஒளியும் மழைப் பொழிவும் இயற்கை எழிலுக்கு மட்டுமே காரணிகள் என்பதை ஏற்காமல் நச்சுச் செடிகளுக்கும் உயிர் போக்கும் விதையுள்ள தாவரங்களும்கூட அவ்விரண்டினால்தான் வளர்கின்றன என்பதைப் புரிந்தவர்கள்.

வாய்ப்புகள் ஏற்படும்போது எளிய உயிர்களைக் கொன்று, தின்று உயிர் வாழ்கின்றன கொடிய விலங்குகள். அதைப்போலவே வாய்ப்புகள் ஏற்படும்போது, கொடிய விலங்குகளைக் கொனறு மகிழ்கிறான் மனிதன் -_ வேட்டை எனும் பெயரில் என்பவர்கள்.

சொல்லிக் கொடுத்தால்தான் குழந்தைகள் பேசும். இல்லாவிட்டால் அவற்றின் உறுமல் பன்றிகளுடையதைப் போன்றே புரிந்துகொள்ள இயலாமல் இருக்கும். அதைப்போலவேதான் கடவுள் நம்பிக்கையும் சொல்லிக் கொடுப்பதால்தான் வருகிறது என்பவர்கள்.

படிப்புதான் பண்பாட்டை வளர்க்கிறது. கடவுள் நம்பிக்கையைத் தகர்க்கிறது. ஆகவேதான் படிப்பதை, மதவாதிகள் ஊக்கப்படுத்துவதில்லை என்பவர்கள். 4    ஒரு நாளில் வந்துவிடுவதல்ல, அறிவு! எனவேதான், பாடங்களில் மூடநம்பிக்கைகள் மதவாதிகளால் திணிக்கப்படுகின்றன என்பவர்கள்.

அச்சமும் மடமையும் தீராத தொற்று நோய்கள் என்பவர்கள்.

மானுடரின் அறியாமையும் பயமும் மதவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவைத்தன என்பவர்கள்.

கடவுள் சொன்ன வேதம் என்று கூறி, அதனை நம்ப மறுத்தால் மீளாத துன்பம்தான் என்று மிரட்டினர் எனப் புரிந்துகொண்டோர்.

இருந்தாலும் வேதங்களை நீ படிக்காதே, சாமியார்கள் கூறுவதை நம்பு எனக்கூறி மவுடீகத்தில் கிடத்தினார்கள் என்பவர்கள்.

இவற்றின் துணைகொண்டு அரசும், மத பீடங்களும் கொழுத்துக் கொண்டிருக்கின்றன எனப் புரிந்தவர்கள்.

கடவுளை நேசிப்பது என்பது வீண்வேலை என்பவர்கள்.

கடவுள் எனும் சொல்தான், மானுடம் உச்சரிக்கும் மிகக் கெட்ட வார்த்தை எனக் கூறுபவர்கள்.

கடவுள் என்பதைப் போன்ற அர்த்தமற்ற வார்த்தை வேறு எதுவும் இல்லை என்பவர்கள்.

முதலும் முடிவுமான, முட்டாள்தனமான சொல் அதுவே என்பவர்கள்.

மனித மூளையைச் செயல்படவிடாமல் முடமாக்கிய சொல் அதுவே என்பவர்கள்.

மனித மூளையை முடமாக்கிய மற்றொ சொல் மதம் என்பவர்கள்.

அறிவில் சிறந்தோர், கடவுள், மதநம்பிக்கை அற்றோர்தாம்! மூன்று விஞ்ஞானிகளில் இரண்டுபேர் நாத்திகர்கள் என்பது முதுமொழி.

எகிப்தின் பாரோ மன்னர்களும், கிரேக்க ரோமின் அரசர்களும் ஆண்ட காலத்தில் புதிய கண்டுபிடிப்புகள் எதுவுமில்லை. 17ஆம் நூற்றாண்டில் அறிவு யுகம் பிறந்தது. 18ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவைதான் ஏராளம் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள்.

அறுவை மருத்துவத்திற்கும் பயன்படும் மயக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே வலியின் கொடுமையிலிருந்து நோயாளியைக் காப்பாற்றுவது. இதைக் கண்டுபிடித்த டாக்டர் கீ.ஜி.நி. மார்ட்டனுக்கு மனிதகுலம் கடமைப்பட்டது.

வலியால் மனிதன் துடிக்கவேண்டும், அவன் செய்த பாவங்களின் விளைவு அது என்று மதவாதிகள் கூறியதற்கு எதிர்ப்பாக அமைந்த கண்டுபிடிப்பு இது என்பவர்கள்.

வில்ஹம் ராண்ட்ஜன் எக்ஸ்_ரே கண்டுபிடித்ததன் விளைவாக மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

கார்ல் லான்ஸ்டீனர் கண்டுபிடிப்பு _ ரத்தம் எவற்றை உள்ளடக்கியது என்பதுதான் இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் உயிர்களைக் காக்க உதவுகிறது என்பதை உணர்ந்தவர்கள்.

நோய்த்தடுப்பு மருந்துகள், ஊட்டச்சத்து உணவு முறைகள் எல்லாமே மானுடத்தை வாழவைக்கின்றன எனக் கூறுபவர்கள்.

இதயக்கோளாறுகளுக்கான காரணிகளை டாக்டர் ஜேம்ஸ் ஹெர்ரிக் கண்டுபிடித்துக் கூறியதால் தானே மாரடைப்பு எனும் உயிர்க்கொல்லி நோயின் கொடுமை குறைந்தே போனது என்பதைப் புரிந்தவர்கள்.

நீராவி எந்திரம், மோட்டார் எந்திரம், ரேடியோ, டி.வி., மின்னணுக் கருவிகள் போன்றவற்றின் கண்டுபிடிப்புகள். மனித  குலத்துக்கு எவ்வளவு மகத்தான சேவை செய்துள்ளன என்பதை விளங்கிக் கொண்டவர்கள்.

மின்னலும் மின்சாரமும் தொடர்பாக பெஞ்சமின் பிராங்க்ளின் கண்டுபிடிப்பு எவ்வளவு பயன் உள்ளது?

கடவுளின் இருப்பிடத்தில் பறந்துபோகும்  வாய்ப்பைத் தரும் வானூர்தியைக் கண்டுபிடித்த ஆர்வில்ரைட், வில்பர்ரைட் செய்த சேவை சாதாரணமானதா?

கடவுளின் கடும் ஆயுதம் எனப்பட்ட இடி மின்னலை, சோதனைச் சாலையில் ஏற்படச் செய்த சார்லஸ் ஸ்டீன்மெட்ஸ் எங்களைப் போன்றே நாத்திகர் எனப் பெருமைப்படுவோர்.

தொலைபேசி, கம்பியில்லாத் தந்தி, குளிரூட்டுப் பெட்டி, துணி நெய்யும் எந்திரம் போன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகள் கடவுள் தேவையற்ற குப்பை என்பதைக் கூறிவிட்டனவே!

மின்சார ஒளியைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் _ கடவுளுக்குப் போட்டியாக இரவில் வெளிச்சம் தருகிறாரே!

கடவுள் தந்த கொடை, மனிதனின் குரல் என்றனர் மதவாதிகள் _ அதையே ஒரு முனையில் பேசினால் மறுமுனையில் கேட்கச் செய்த எடிசன், கடவுள் பற்றிய பொய்நம்பிக்கையைப் போக்கிடச் செய்யவில்லையா?

இன்றைய உலகில் நோய் இல்லாமல் நோயின் வலி இல்லாமல் சிகிச்சை பெற்று, சகல வசதிகளோடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், கடவுளை நினைக்கிறார்களா? கண்டுபிடிப் பாளர்களான கடவுளை நம்பாதவர்களை நினைக்கிறார்களா? எனக் கேட்பவர்கள்.

கடவுள், மதம், கோயில்கள் எனக் கொட்டி அழுத செல்வத்தைப் பயனுள்ள ஆய்வுகளில் செலவழித்திருந்தால், மனித குலம் எவ்வளவோ மேன்மையான நிலையை அடைந்திருக்குமே என நினைப்பவர்கள்.

கடவுளைப் பற்றிய பயமும் மதக்கொள்கைகளின் மீது பயபக்தியும் அகற்றப்பட்டு இருந்திருந்தால் _ சகமனிதனிடம் பற்றும் பாசமும் ஏற்பட்டுப் பண்பு வளர்ச்சி பெற்றிருக்குமே என நினைப்பவர்கள்.

கோயில்களைக் கட்டிக்கொண்டே போவதைவிட, கல்விக்கூடங்களைக் கட்டினால் மனிதர் அறிவு வளருமே என ஏங்குபவர்கள்.

125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில், பதிவுபெற்ற டாக்டர்கள் ஏழரை லட்சம் என்றும் இந்தியாவில் தொழில் செய்வோர் ஆறரை லட்சம் பேர் மட்டுமே எனும்போது கோயில்கள் தேவையா? லட்சக்கணக்கான கோடி சொத்துகள் கோயில்களுக்குத் தேவையா? மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவமனைகளும் அல்லவா தேவை? என்ற கேள்வியைக் கேட்பவர்கள்.

தேவை கடவுளா? மனிதனா? என்ற கேள்வியைக் கேட்கச் சொல்பவர்கள்.

கடவுளைத் தந்தையாகக் கொண்டால், சகமனிதனை உடன் பிறந்தோனாகக் கருத முடியாது எனக் கூறுகிறோம்.

மதம் ஆதிக்கம் செலுத்தும்போது, மனிதன் அடிமை; காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்தியவன் என்பதை எடுத்துக் காட்டியவர்கள்.

அறிவு யுகமும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் மனித குலத்தை மேம்படுத்தின என்பவர்கள்.

எப்படி வணங்குவது என்பதைவிட, எப்படி வாழ்வது என்பதைக் கற்பதுதான் அவசியம் என்பவர்கள்.

நாங்களும் வானத்தைப் பார்க்கிறோம். வானம் நீலமாக இருக்கிறது. அங்கே கடவுளைக் காணோம். சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை என்கிறோம்.

அங்கே தெரியும் நட்சத்திரங்கள் மனித வாழ்வில் விளையாடுபவை அல்ல; எதிர்காலத்தை நிர்ணயிப்பவை அல்ல.

வாழ்வில் தவறுகளும், அநியாயங்களும் மட்டுமே உண்டு; பாவங்கள் என எதுவுமில்லை என்பவர்கள். அது மதவாதிகளின் புளுகு.

மன்னிக்கப்படக் கூடியதாகவோ, தண்டிக்கப்படக் கூடியதாகவோ பாபம் ஏதும் கிடையாது. எனவே அச்சம் வேண்டாம்.

ஆவிகளும் இல்லை, பேய், பிசாசுகளும் இல்லை. அவைபற்றிய அச்சத்தை அகற்றுக.

மதம்பற்றிய கருத்துகள் உங்கள் குழந்தைகளைக் கெடுக்காமல் தடுத்திடுங்கள்.

மனிதனாக வாழுங்கள் மனித குலத்துக்காக வாழுங்கள் எனக் கேட்டுக் கொள்பவர்கள்.

நாங்கள் நாத்திகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *