வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு தோல்விகளால் நாம் துவண்டு விடுகிறபோதெல்லாம் நமக்கு நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களும் வழிகாட்டுவார்கள். அதுபோல இந்தச் சமூகத்தில் எத்தனையோ தோல்விகளுக்குப் பிறகும், தனது லட்சியக் கனவில் தொடர்ந்து முயற்சி செய்த ஆளுமைகளின் வெற்றியும் நமக்கான புதிய நம்பிக்கை கொடுக்கும். அதுபோன்று நம்மிடையே வெற்றி பெற்று வலம் வரும் பெண் ஒருவரைப் பற்றிப் பார்ப்போம்.
மரபணுக் குறைபாடு காரணமாக உடல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளானவர் தரணி. தளராத தன்னம்பிக்கையால் தமிழக அரசு ‘குரூப் 2’ போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். தன் வெற்றிப் பயணம் பற்றிக் கூறுகையில்,
“எனக்கு இப்போ 37 வயசாகுது. இத்தனை வருஷத்துல ஒருநாள்கூட நான் ரெண்டடிதான் இருக்கேன்னு வருத்தப்பட்டதே இல்லை. என்னோட அடையாளம்ங்கிறது உயரம் இல்ல, என் வெற்றிதான் என்பதில் சின்ன வயசிலிருந்தே ரொம்ப உறுதியா இருந்தேன். பிறக்கும்போது நான் மற்ற குழந்தைகள் மாதிரி இயல்பாத்தான் இருந்தேனாம். ஆனா, வயசு ஆக ஆக என் உயரம் அதிகரிக்காததால டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிருக்காங்க. மரபணுக் குறைபாடு காரணமாக இயல்பான குழந்தைகளுக்கான உடல் வளர்ச்சி எனக்கு இருக்காதுனு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அக்கா, நான், தங்கச்சினு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததால் என்னை எங்க தாத்தா பாட்டி தான் வளர்த்தாங்க. சென்னையிலதான் படிச்சேன்.
குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம்தான் எனக்கு மத்தவங்க மாதிரி இயல்பான வளர்ச்சி யில்லைனு புரிய ஆரம்பிச்சுது. எனக்குத் தாழ்வு மனப்பான்மை வரக் கூடாதுனு எங்க தாத்தா என்னை ரொம்ப தன்னம்பிக்கையோட வளர்த்தாரு. நான் குழந்தையா இருந்த போதே, தாத்தா என்னை அவர் கையைப் பிடிச்சுட்டு நடக்க அனுமதிக்க மாட்டாரு. `நீ தைரியமான பொண்ணு. நீ முன்னாடி நடந்து போ, நான் பின்னாடி வர்றேன்’னு சொல்லுவாரு. தனியா கடைக்குப் போயிட்டு வரச் சொல்லுவாரு. அதனால அடுத்தவங்க கிண்டல் பண்ணாகூட நான் ரொம்ப ஈஸியா கடந்து போயிடுவேன்.
ஸ்கூல்ல எல்லா விஷயத்துக்கும் முதல் ஆளா தன்னம்பிக்கையோடு நிப்பேன். எனக்குன்னு ஸ்கூல்ல தனி ‘டேபிள் சேர்’ ரெடி பண்ணிக் கொடுத்தாங்க. 80 சதவிகித மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணி, அப்புறம் கரெஸ்ல பி.காம் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும், அப்பாவோட சொந்த ஊரான விழுப்புரம் வந்துட்டேன். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கிட்ட மனு கொடுத்து தற்காலிக ஊழியரா அரசு மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தேன். எனக்குன்னு ஓர் அடையாளம் இருக்கணும், என்மேல யாரும் இரக்கப்படக் கூடாது, யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன்.
நான் பார்த்துட்டிருந்தது தற்காலிக வேலைதான். அதனால் பயிற்சி வகுப்புகளுக்குப் போய் அரசு போட்டித் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாதான் இருந்துச்சு. ஆனா, நான் ஜெயிச்சா, என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கும் ஊக்கமாக இருக்குமேனு நினைச்சுப்பேன். ஆரம்பத்துல சில தேர்வுகள்ல தோல்வியைச் சந்திச்சேன். ஆனா, நம்பிக்கையை இழக்கல. மூணு வருஷ முயற்சிக்குப் பிறகு, ‘குரூப் -2’ தேர்வுல வெற்றி பெற்று காஞ்சிபுரத்தில் வருவாய்த் துறை உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்து எட்டு வருஷங்களாச்சு. அரசு போட்டித் தேர்வுக்குப் படிக்கிற நிறைய பேருக்கு என்னால் முடிஞ்ச ஆலோசனைகளை வழங்கி ஊக்கம் கொடுத்துட்டு இருக்கேன்.
இப்போ பதவி உயர்வுக்காகக் காத்திட்டிருக்கேன். ஒவ்வொரு நாளும் நிறைவா இருக்கு. கனவுகளுக்காகப் போராடத் தயாராகிட்டா, நம்ம வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நிச்சயம் ஜெயிப்போம்’’ என்கிறார். பலருடைய கேலி, கிண்டல்களையும் குப்பையில் புறம்தள்ளிவிட்டு தன்னம்பிக்கைப் பெண்ணாய் ஒளிர்கிறார். முன்னேறப் போராடும் பெண்களின் முன் மாதிரியாய் தரணியிலே முன் நிற்கிறார் இந்தத் தரணி!
தகவல் : சந்தோஷ்
Leave a Reply