ஆசிரியர் பதில்கள் : மக்கள் திரண்டு முறியடிப்பர்!

ஜனவரி 16-31 2020

கே:       ‘அண்ணாவின் அறிவுக் கொடை’ புத்தக வெளியீட்டு விழாவில் தாங்கள் ஆதாரத்துடன் பேசிய அண்ணாவின் கடைசிக் கடிதத்தில் வந்துள்ள கட்டுரையை ‘உண்மை’ இதழில் வெளியிடுவீர்களா?

                – சி.வாஞ்சிநாதன், சிங்கிபுரம்

ப:           நிச்சயம்! வரும் இதழ் ‘உண்மை’க்காகக் காத்திருங்கள் _ அக்கட்டுரையைப் படிப்பதற்கு!

கே:       அண்ணா அறிவாலயம் உள் அரங்கில் கலைஞருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள், வாழ்த்துப் பாக்களைப் பாதுகாக்க கருவூலம் அமைத்துள்ளது போல், பெரியார் திடலிலும் ஓர் அரங்கம் அமைக்க திட்டமுள்ளதா?

                – இரா.முல்லைக்கோ, பெங்களூரு-43

ப:           பல திட்டங்கள் உண்டு. இடநெருக்கடி புதிய கட்டுமானங்களும் வரவேண்டும். இவை களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

நெல்லை கண்ணன்

கே:       நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி; எச்.ராஜாவுக்கு ஒரு நீதி. சட்டப் பார்வையில் இது எப்படி சாத்தியப்படுகிறது?

                – மகிழ்,  சைதை

எச்.ராஜா

ப:           மனுநீதியாரின் மடியில் அமர்ந்து ‘லகானை’ அவாள் கையில் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க. ஆட்சி என்று பெயரளவில் ஆட்சி நடப்பதால் சாத்தியமாகிறது!

கே:       சங்க இலக்கியத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைகளைப் புகுத்த, மத்திய அரசு முயலுவதாகத் தகவல் வருகிறது. இதைத் தடுக்க தாங்கள் கூறுவது என்ன?

                – செல்வகுமார், காட்பாடி

ப:           நமது தன்மானப் பெரும்புலவர்கள் ஓர் அணியில் நின்று எதிர்ப்பர் என்பது உறுதி!

கே:       மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜகவின் தோல்வி எதனைக் காட்டுகிறது?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           பா.ஜ.க. -_ மோடி அரசின் செல்வாக்கு கீழ் இறக்கத்திற்குச் சென்று கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது!

சரத்பவார்

கே:       தங்கள் திட்டங்களை நிறைவேற்றத் தடையாய் – எதிராய் போராடக் கூடாது என்கிற பா.ஜ.க. பாசிச செயல்பாட்டினை முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?

                – சி.வாஞ்சிநாதன், சிங்கிபுரம்

ஹமந்த் சோரன்

ப:           மக்கள் ஓரணியாய்த் திரள வேண்டும். ஆரம்பம் ஆகிவிட்டார்கள்.

ஜவஹர்லால் நேரு

கே:       ஜவஹர்லால் நேருவின் இறுதிக் கால உள்நாட்டு, வெளியுறவு, நிதிக் கொள்கைகளுடன்  தந்தை பெரியார் உடன்பட்டாரா? _ மாறுபட்டாரா?

                – நா.பார்த்திபன், கொளத்தூர்

ப:           பலவற்றில் உடன்பாடு; சிலவற்றில் மாறுபட்ட நிலை! இரண்டும் உண்டு!

நிர்மலா சீதாராமன்

கே:       தற்போதைய இந்தியப் பொருளாதார நிலை என்பது ‘மந்த நிலை’ தானேயன்றி ‘தேக்க நிலை’ இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளாரே… தங்களின் கருத்து என்னவோ?

                – கிருபாகரன், பெருங்களத்தூர்

ப:           இரண்டையும்விட கீழே “அதள பாதாளத்திற்கு’’ச் சென்று கொண்டுள்ள அபாயகரமான நிலை என்பதே சரியானதாகும்!

கே:       குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றத்தில் ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று அமித்ஷா கூறியுள்ள நிலையில், அதை முறியடிக்க நாம் செய்ய வேண்டியவை எவை?

                – ஸ்டீபன், திருப்போரூர்

ப:           மக்களை எழுச்சி பெறச் செய்து பெருந்திரளாக்கினால், எந்தச் சர்வாதிகாரமும் விடைபெற்றே தீர வேண்டியிருக்கும் என்பதே வரலாற்று உண்மை!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *