முகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்!

ஜனவரி 16-31 2020

மஞ்சை வசந்தன்

தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.

அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.

இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துகளை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.

பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத் திருநாள் ஆகும்.

ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பால் அனைத்தும் பாழ்!

ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்கிற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளை யிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையைப் பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்கிற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருள்களைப் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உள்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டுத் தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.

ஆக, ஆரியப் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகிக் கேடு பயக்கிறது.

சூரியத் திருநாளை மகர சங்கராந்தியாக மாற்றிய சதி:

பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும்.

காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது.

அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்த, தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.

“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருள்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்

வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.

காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன் படுகின்றன என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.

ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட்ட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.

அடுத்த நாள் கொண்டாடப்படும்  காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதாகும்.

அன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்தியை பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலவும் வழங்கிச் சிறப்பிப்பர்.

இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறிப் புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.

கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதுவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.

ஆண்_பெண் உறுப்பு வழிபாட்டை சிவ வழிபாடாக்க லிங்க புராணம் புனைந்ததுபோல, உற்பத்திக் காரணிகளான மழை, சூரியன், மாடு, உழைப்பாளர் என்ற நான்கு காரணிகளுக்கு நன்றி கூறி, அவற்றைச் சிறப்பிக்கக் கொண்டாடப்பட்ட பகுத்தறிவின் பாற்பட்ட தமிழரின் பண்பாட்டு விழாவை, புராணக் கதைகளைக் கூறி தங்கள் பண்பாட்டுப் பண்டிகையாகத் திரித்து, தமிழர் பண்பாட்டைச் சீரழித்தனர்.

தமிழ்ப் புத்தாண்டையும் மாற்றினர்

தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.

காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.

மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்னும் பெயர் மாதத்திற்கு வந்தது.

முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.

அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால், பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)

உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.

சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.

ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.

அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்கிற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, ‘பிரபவ’ தொடங்கி ‘அட்சய’ முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அருவெறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர்.

அர்த்தமுள்ள தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பது மாற்றப்பட்டு சித்திரை முதல் நாள் ஆக்கப்பட்டது.

திராவிடர் திருநாள் என்றழைப்பது ஏன்?

திராவிடர் திருநாள் என்று நாம் கூறும்போது தமிழர் திருநாள் என்று ஏன் கூறக் கூடாது என்கின்றனர் சிலர். தமிழர் என்று சொல்லும்போது தமிழ் இனத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நம்மை விட்டு விலக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக இன்றைய கேரளா அன்றைய சேரநாடு. அங்கு வாழ்பவர்கள் தூய தமிழர்கள். ஆனால், தமிழ்  சமஸ்கிருதத்தோடு பின்னாளில் கலந்து மலையாளம் உருவான பின் அவர்களை மலையாளி என்று அழைக்கிறோம். மொழி திரிந்து மாறினாலும் அவர்களும் தமிழர்கள்தானே! அப்படித்தான் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாழும் மக்களும் தூய தமிழர்களே! ஆரியம் போன்ற பிற மொழி கலப்பால் தமிழ் தெலுங்காக, கன்னடமாகத் திரிந்தது. மொழி மாறினாலும் அவர்களும் தமிழர்கள்தானே!

நதிநீர்ச் சிக்கல்களை எதிர்ப்பை வைத்து நம் இனத்தவரை ஒதுக்கக் கூடாது. வாய்க்கால் தகராறு உடன் பிறந்தோரிடமும் உண்டு. அதனால் அவர்கள் அண்ணன் தம்பி இல்லை என்றாகி விடுமா?

ஆக, தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் நம் இன மக்கள். அவர்களையும் நாம் கோத்து, சேர்த்து ஒரே இனம் என்று காட்டவே, நம் இனத்தின் வலுவை சிதையாது காக்கவே திராவிடர் என்று அழைக்கிறோம். திராவிடர் என்னும்போது அவர்கள் நம்மோடு சேர்க்கப்படுகிறார்கள். எனவேதான் பொங்கலைத் திராவிடர் திருநாள் என்கிறோம். திராவிடர்கள் அனைவரும் அக்காலத்தில் பொங்கலைக் கொண்டாடிய தமிழர்கள்தானே! எனவே, இனத்தைக் குறிக்கும்போது திராவிடர் என்று கூறுவதும், சேருவதுமே அறிவின் பாற்பட்ட செயல் ஆகும். எனவே, பொங்கல் திருநாளை திராவிடர் திருநாளாகக் கொண்டாடி, சிறப்பும் பெருமையும் மகிழ்வும் கொள்ள வேண்டும். இன ஒற்றுமையை, இனத்தின் பண்பாட்டைக் காக்க வேண்டும்.

கொண்டாடுவதோடு குறிக்கோளை எட்டச் சூளுரைப்போம்!

பொங்கல் விழா நம் பண்பாட்டின் அடையாளம். நன்றி செலுத்தும் நம் உயரிய பண்பாட்டை உலகிற்கு உணர்த்துவது. உற்பத்திக் காரணிகளுக்கு நன்றி செலுத்த நாம் விழா கொண்டாடினாலும், நாமும் அத்தோடு மகிழ்ச்சியும், உற்சாகமும், மனநிறைவும், அமைதியும் பெறுகிறோம்.

என்றாலும், ஆரிய பார்ப்பனர்களின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தனிப் பெரும்பான்மை வாய்ப்பைப் பெற்றதன் விளைவாய், நாட்டில் பல்வேறு சீர்கேடுகள், வெறியாட்டங்கள், வீழ்ச்சிகள், சூழ்ச்சிகள், சமூக நீதிக்கு எதிரான சதிகள் என்று ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காய் அரங்கேறுவதோடு, தமிழ், தமிழர்களை முதன்மை இலக்காக்கி அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடப்பதால் நாம் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்வதோடு, தமிழையும், தமிழின் அரிய இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றைக் காக்கவும் தமிழருக்கு எதிரான சதித் திட்டங்களை முறியடித்துக் காக்கவும் இவ்விழாக்களின்போது நாம் உறுதி ஏற்க வேண்டும்.

கோயில் விழாக்கள் என்கிற பெயரில் ஆரியப் பார்ப்பனர்கள் எப்படி அவர்களின் கடவுளையும், சாஸ்திரங்களையும், சனாதன தர்மங்களையும் நிலைநிறுத்தி வளர்க்கிறார்களோ அதேபோல், நாமும் நமது விழாக்களில் நம் குறிக்கோள்களை அடைவதற்கான விழிப்பை, ஊக்கத்தை, ஒற்றுமையை வளர்த்து, வலுப்பெற்று சாதிக்க வேண்டும். இது இன்றைய சூழலில் கட்டாயக் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *