Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சிந்துவெளியின் துறைமுகம்

லோதல்: சிந்து சமவெளியின் சான்று 3

சிந்துவெளியின் துறைமுகம்

-ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர்

 

லோதல்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஹரப்பா நாகரிகத்து துறைமுக நகரமாகும். கேம்பே வளைகுடாவின் வாயிலில் அமைந்துள்ள இந்த நகரம் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் சபர்மதி ஆற்றின் அருகே கண்டறியப்பட்டது.

லோதல் ஒரு முக்கியமான வணிக நகரமாகவும், தொழில் மய்யமாகவும் இருந்துள்ளது. மணிகள், பானைகள், கிளிஞ்சல்கள், மற்றும் இதர தாமிரக் கலைப் பொருள்கள் அங்கு தயாரிக்கப்பட்டுள்ளன.

காம்பே வளைகுடாவில் அமைந்திருக்கும் லோதலின் புவியியல் அமைப்பு அங்கு துறைமுகத்துக்கும், படகுப் போக்குவரத்துக்கும் மிக உகந்த இடமாக அமையப் பெறவில்லை.

ஆதலால், லோதல் என்ற பெயருக்கு சவங்களின் மலை என்றே பொருள். காம்பே வளைகுடா பகுதியில் குடியிருப்பு அமைந்ததன் காரணமே, விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் கிடைக்குமிடம் அது என்பதுதான்.

தொடக்ககால ஹரப்பா நாகரிக மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்தனர் என்பதை அந்த இடத்தின் அகழாய்வு காட்டுகிறது. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மற்ற ஹரப்பா நாகரிக நகரங்களின் திட்டங்களிலிருந்து லோதல் நகரத் திட்டம் மாறுபட்டதாக இருப்பதாகும். முதல் நிலையில் அது களிமண் கரையால் பாதுகாக்கப்பட்ட ஒரு சிறு கிராமமாக இருந்தது.

ஆனால் அதன் மக்கள் குடியிருப்பு வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டது. அதனால், இரண்டாவது நிலையில் இந்நகரம் உருவாக்கப்படும் போது, உட்புற அரண் மற்றும் வெளிநகரம் உள்ளிட்ட  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கி.மு. 1900இல் இந்தக் குடியிருப்பு முழுமையாக வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டது.

வெளிநகரம் _- கோட்டைப் பகுதி: (Agopolis): 125 ஜ் 118 மீட்டர் பரப்புக் கொண்ட உள்அரண், இந்த நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. 3.60 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மேடை மீது அமைந்திருந்த இந்த உள்அரணில் விரிவான வடிகால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதனை ஒட்டி அதன் தெற்குப் பக்கத்தில் இருக்கும் கிடங்கில் 9.20 மீட்டர் அகலப் பாதைகள் கொண்ட 12 வளாகப் பகுதிகள் இருக்கின்றன; அவற்றில் இருந்த 65 முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலத்தில் சரக்கு வைக்கப்படும் இடமாக அது இருந்திருக்க வேண்டும்.

உள்நகரம் (Lower Town): வெளிநகரம் வளாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது போன்ற 7 பகுதிகள் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளன. 1.20 முதல் 3.60 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட மேடையின் மீது வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன.

அவற்றுக்கும் விரிவான வடிகால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குளியல் அறைகளும், நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் பீப்பாய்களுக்குக் கழிவு நீரைச் செலுத்தும் சாக்கடைகளும் அனைத்து வீடுகளிலும் அமைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த சாலைகளில் பிரதான சாலை 12 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்தது. குறுகிய தெருக்கள் 3.60 மீட்டர் அகலத்தைக் கொண்டிருந்தன. அங்காடி நகரத்தின் மய்யத்தில் அமைந்திருந்தது. தொழிற்சாலைப் பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சற்றே தள்ளி அமைந்திருந்தன.

கிளிஞ்சல் வெட்டுபவர்கள், தந்தப் பொருள்கள் செதுக்குபவர்கள், உலோகப் பொருள்கள் தயாரிக்கும் கொல்லர்கள் தொழிற்சாலைப் பகுதிகளில் வாழ்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் முழுவதுமே 13 மீட்டர் அகலம் கொண்ட மண் மற்றும் செங்கற்கள் கொண்ட சுவரால் சூழப்பட்டிருந்தது.

கப்பல் கட்டுமிடம் (Dockyard): உள்அரணுக்குக் கிழக்குப் பக்கத்தில், மிகப் பெரிய கட்டுமானமாக (223 மீட்டர் நீளமும், 36 மீட்டர் அகலமும்,  8 மீட்டர் ஆழமும் கொண்ட) கப்பல் துறைமுகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இத் துறைமுகத்துக்கு உள்ளே நீரைச் செலுத்துவதற்கான கால்வாய்கள் இரண்டு இருந்தன. இவற்றின் மூலம் கப்பல்துறைக்குள் இருக்கும் நீரின் ஆழத்தைக் கட்டுப்படுத்த இயலும்.  இந்தக் கட்டுமானம் மொத்தமும், நான்கு முறை சுடப்பட்ட செங்கற்களால் இரண்டாம் கட்டமைப்பு நிலையில் கட்டப்பட்டதாகும்.

60 டன் எடை கொண்ட 30 கப்பல்களை இந்தத் துறையில் ஒரே நேரத்தில் நிறுத்த இயலும் என்று கூறப்படுகிறது. அந்த அமைப்பு கப்பல் கட்டுமிடம் அல்ல;  தண்ணீர் சேமிக்கும் தொட்டி என்று சில கல்வியாளர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான எண்ணற்ற கிணறுகள் லோதலில் உள்ளன என்பதால் அது நீர்த் தொட்டியாக இருக்க முடியாது. கப்பல் துறையினை அடுத்து மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள 12.8 மீட்டர் ஜ் 243 மீட்டர் அளவு கொண்ட மண்ணாலான திறந்த நடைமேடை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நடைமேடை சரக்குகளை ஏற்றும் மேடைதான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. மேலும், கடல்வாழ் உயிரினங்கள் அந்த இடத்தில் இருந்ததும் அது ஒரு கப்பல் துறைமுகம்தான் என்பதை அடையாளப்படுத்தி மெய்ப்பித்-துள்ளது.

கலைப் பொருட்கள்: குறிப்பாக, மிகச் சிறிய அளவிலான ரத்ன மணிகளுக்குப் புகழ் பெற்றது லோதல். அழகு நிறைந்த, சிறுசிறு  மணிகள் கொண்ட, ஈடு இணையற்ற  தங்க நெக்லஸ்களும் அங்கு செய்யப்பட்டன.

அவற்றில் சில 0.25 மில்லி மீட்டர் குறுக்களவு கொண்டவை. முலாம் பூசப்பட்ட தாமிர வயர்களில் கோர்க்கப்பட்டிருந்த சில மணி மாலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

கிளிஞ்சல்கள், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட நகைகளும் அகழாய்வின்போது  அடையாளம் காணப்பட்டன. தாமிர கருமாரப் பணியும், பானை தயாரிப்பும் வெளிநகரத்தில் உயர்ந்த ஓரளவில் முன்னேற்றம் அடைந்-திருந்தன.

லோதல் கருமார்கள், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  100 சதவிகிதம் சுத்தமான தாமிரத்தைப் பயன்படுத்தினார்கள். தகரத்துடன் அதனைக் கலந்து அம்பு முனைகள், ஈட்டிகள், மீன் தூண்டில்கள், தளவாடங்கள் மற்றும் நகைகள் செய்யப்பட்டன.

பொதுவாக சிந்து சமவெளி நாகரிகத்தில், குறிப்பாக லோதல் நகரத்திலும் ஈடு இணையற்ற மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், எடைகள் மற்றும் அளவுக் கருவிகள் ஒரே மாதிரி பயன்படுத்தப்பட்டதுதான்.

லோதல் அகழாய்வின்போது எண்ணற்ற எடை மற்றும் அளவுக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

லோதல் அருங்காட்சியகத்தில் வெண்கலம் மற்றும் தாமிரத்தினால் செய்யப்பட்ட கண்ணாடிகளும்,  கற்கள், படிகங்கள், கிளிஞ்சல்கள், எலும்புகள் போன்றவற்றால் செய்யப்பட்ட பலவகைப்பட்ட கலைப் பொருட்களும் உள்ளன.

பானை தயாரிப்பின் சிறப்பம்சம்: லோதலில் இருந்த மற்றொரு முக்கியமான தொழில் பானை தயாரிப்பதுதான்.  மான்கள், எருதுகள், பசுக்கள், குதிரைகள், உட்கார்ந்திருக்கும் பறவைகள் ஆகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட அழகு மிகுந்த மண் ஜாடிகளும்,  சுடுமண் விளையாட்டுப் பொருள்களும், உருவங்களும் இவற்றில் அடங்கும்.

லோதலில் இரண்டு வகையான இரண்டு விதமான கலைப்பாணியில் தயாரிக்கப்பட்ட பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பிடி கொண்ட குழிவான பானையும்,  சிறுகழுத்துக் கொண்ட மண் கூஜாவும்தான் அவை.

பாத்திரங்களில் ஓவியம் தீட்டும்போது,  படுக்கைவாட்டு, குறுக்குவாட்டு வடிவமைப்புகள் தீட்டப்-பட்டிருந்தன. சிவப்பு அல்லது பழுப்பு நிற முரட்டுத்தோல் போன்ற மேற்புறத்தில் கருப்பு வண்ணத்தில்  மயில்கள், மலர்வடிவங்கள்  தனியே வரைந்திணைக்கப்படும்  பூத்தையல் வேலைகள் மிகவும் பிரபலமானவை. இவை லோதல் அருங்காட்சியகத்தில் உள்ளன.

சவஅடக்கம்: லோதலில் அகழாய்வு செய்யப்பட்ட 14 சவக்குழிகளும், அவற்றில் மூன்றைத் தவிர மற்றவை,  நீண்டசதுர வடிவம் கொண்ட தனிநபரின் சவக் குழிகளாகவே இருந்தன.

மற்ற மூன்று மட்டும் Double burial எனப்படும் இரண்டு நபர்களைச் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட சவக்குழிகளாக இருந்தன. இவ்வாறு இரண்டு நபர் சவக்குழிகளில் இருவரும் கட்டித் தழுவிய நிலையில் எலும்புக் கூடுகள் இருந்தன.

என்றாலும் இவர்கள் இரண்டு பேரும் எதிர்பால் ஆட்கள் என்பது இன்னமும் இறுதியாக மெய்ப்பிக்கப்படவில்லை.

– தமிழில்: த.க.பாலகிருட்டிணன்