தமிழ்த்தாத்தா? பார்ப்போமா மறுபக்கம்

ஜூலை 01-15

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் பல தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார்; தமிழ் வளர்த்த தாத்தா _ சுருக்கமாக, தமிழ்த்தாத்தா(?) என்றெல்லாம் புகழப்படுபவர். இவருக்கு, தாட்சிணாத்திய கலாநிதி, மகாமகோபாத்யாய, டாக்டர் முதலான பட்டங்களும் உண்டு. எல்லாம் சரி! உ.வே.சா.வின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு இவ்வாறெல்லாம் போற்றப்பட்டார். அதேசமயம், இவரது மறுபக்கத்தையும் பார்க்க வேண்டாமா? பார்ப்போமா? பார்ப்போமே! அப்பொழுதுதானே பார்ப்பார் உண்மை புலப்படும். மறுபக்கத்தின் சில பகுதிகளைப் பார்க்கப் போகிறோம்!

 

தமிழ் மரபுக்குத் தவறான விளக்கம்

தமிழ் மரபும் தமிழ்த்தாத்தாவும்:

தமிழ் மரபுகளுள் ஒன்றுக்கு உ.வே.சா. பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

ஏழை வேலைக்காரனிடம், சோறு தின்றாயா? என்று கேட்பது மரபு. கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.

போஜனம் ஆயிற்றா?

நிவேதனம் ஆயிற்றா? என்பதுதான் தமிழ் மரபு.

போஜனம், நிவேதனம் என்ற சமஸ்கிருதச் சொல்லை, ஒரு பணக்காரன், பெரிய மனிதன் ஆகியோரிடம் பயன்படுத்த வேண்டுமாம்! கனவான் என்றால் அவன் பார்ப்பனனாகத்தான் இருக்க வேண்டுமா?

அதுதான் தமிழ் மரபாம்! சொல்கிறார் தமிழ்த்தாத்தா!

உண்மையா-? இது தமிழ் மரபா? நல்ல நகைச்சுவை! கலப்பில்லாத தூய _ தனி வடமொழி _ சமஸ்கிருத மரபு அல்லவா? தமிழ்த்தாத்தாவுக்கு இது ஏன் தெரியாமல் போனது? தெரியாமலா இருக்கும்.

அதுதான் பார்ப்பனப் பண்பு! பார்ப்பன மரபு!

சோறு என்ற சொல்:

ஏழை வேலைக்காரனிடம்தான் சோறு தின்றாயா? _ என்று கேட்க வேண்டுமாம்!

வேலைக்காரன் அதுவும் ஏழை, அவனிடம் மட்டும் சோறு என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமாம்! சோறு என்ற தமிழ்ச்சொல் ஏழை வேலைக்காரனுக்கு மட்டுமே உரியதாம்!

ஏழை என்றாலோ வேலைக்காரன் என்றாலோ அத்துணை இழிவோ?

அதனால் அவனிடம் (அவாள் பார்வையில்) இழிமொழியாகிய சோறு _என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுமா?

என்ன தலைப்பளு? எத்துணை தமிழ் இழிவு?-

இதைத்தானே பார்ப்பனர் பண்பு என்றார் தந்தை பெரியார்.

இவர்தான் துறவி என்பவரா?

மேலும் சொல்கிறார் உ.வே.சா. துறவியிடம் பிக்ஷை ஆயிற்றா? _ என்று கேட்க வேண்டுமாம்! அதுதான் தமிழ் மரபாம்!

பிக்ஷை என்பது சமஸ்கிருதச் சொல்! அதனைப் பார்ப்பனத் துறவியிடம்தானே சொல்ல முடியும்? சொல்ல வேண்டும்?

தமிழ்த் துறவியிடம் இவ்வாறு வடமொழியில் சொல்ல முடியுமா?

வர்ண – ஆசிரம வல்லாண்மை

துறவி என்றால் (சந்நியாசி) அவர் பார்ப்பனராகத்தான் இருக்க வேண்டுமா?

ஆம்! அப்படித்தான்! அதுதான் வர்ண ஆசிரம தர்மம்! அதன் வல்லாண்மை!

அவர், ஒன்று, கொலைக் குற்றம் சாற்றப் பெற்று நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் காஞ்சி காமகே()டிச் சுப்பிரமணிய பீடாதிபதியாக இருத்தல் வேண்டும். அல்லது வானமாமலை அல்லது அஹோபில மடாதிபதியாக இருக்க வேண்டும். தருமபுர மடாதிபதி துறவியாக முடியுமா? திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் துறவியா? அவர்கள்தாம் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். இரண்டும் சைவ சித்தாந்தம் பரப்பும் மடங்கள்.

அடிகளாரிடம் அப்படிக் கேட்போமா?

எல்லாவற்றையும் தள்ளுங்கள்! தந்தை பெரியாரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நம் குன்றக்குடி குருமகா சன்னிதானம் தமிழ் மாமுனிவர் அவர்களும் அவாள் வர்ண ஆசிரமப்படி துறவியல்லர். அவரிடம் எல்லாம் பிக்ஷை கொண்டீர்களா? என்று எவராவது கேட்பார்களா? கேட்போமா?

உணவு கொண்டீர்களா? என்றுதானே கேட்போம்! அவர் மெய்யான தனித் தகைமைப் பச்சைத் தமிழர் ஆயிற்றே?

பார்ப்பனர் அல்லாத _ நாலாம் ஜாதிச் சூத்திரர் துறவி (சந்யாசி) ஆகமுடியாதே? வேதம் ஒத்துக் கொள்ளாதே? மனுநீதி மறுத்துவிடுமே?

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் நல்லது!

பிக்ஷை என்ற சமஸ்கிருதச் சொல்லைத்  துறவியிடம் பயன்படுத்த வேண்டும் என்றால், அந்தத் துறவி யாராக இருக்க முடியும்? பச்சைப் பார்ப்பனர் ஆகத்தானே இருக்க முடியும்? இப்பொழுது புரிகிறதா?

புரிந்துகொள்ள வேண்டிய பூணூல் போடாத சன்னிதானங்களுக்கல்லவா சாமிநாதய்யர் சொன்ன சொல்லின் சூட்சுமம் புரிந்திருக்க வேண்டும்?
புரிந்து கொள்ளாமல் சைவச் சன்னிதானங்கள் இருக்கின்றனவா? இல்லை, புரிந்தும் புரியாமலேயே இருக்கிறார்களா?

வானொலி உரை வண்ணம்

மேலே, நாம் சொன்ன செய்தி இந்த உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் 21.9.1941இல் திருச்சி வானொலியில் பேசிய பேச்சின் ஒரு பகுதியாகும். இதனை, 6.11.1941 சிவநேசன் இதழ் வெளியிட்டுள்ளது.

வடமொழி அடைமொழிக்கு வக்காலத்து அடைமொழி பற்றி அரசின் எதிர்பார்ப்பு

அன்றைய சென்னை மாகாண (இன்றைய தமிழ்நாடு)த்தில் நீதிக்கட்சி ஆட்சி செய்தபோது, தமிழ் மக்களின் பெயர்களுக்கு முன் சிறீ_எனப் போட்டு வந்ததற்கு மாற்றாக திரு_என்-று போடலாமே என்று தமிழ் ஆர்வலர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அரசு, இதுபற்றி மக்களின் கருத்தை அறிய விரும்பியது _ எதிர்பார்த்தது.

எம்மை யார் என்று எண்ணி எண்ணி நீர் பார்க்கிறீர்?

சிறீ என்று போடுவதுதான் சரியான அடைமொழி; அப்படித்தான் போட வேண்டும்; அதுதான் சரி என்று கருத்து வெளியிட்டனர் அறிஞர் பலர். இவர்களுள் முதன்மையான இருவரை மட்டுமே இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைகிறோம்.

அவர்கள் யார் தெரியுமா? திருவாளர்கள்: 1. மு. இராகவய்யங்கார்

2.மகாமகோபாத்யாய. உ.வே. சாமிநாதய்யர்

தமிழினவுணர்வுத் தகையாளர்கள்:

அடைமொழியாக, கட்டாயம் திரு என்பதைத்தான் போடுதல் வேண்டும்; அதுதான் சரி! என்று கருத்து வெளியிட்டனர் பச்சைத் தமிழர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர்கள் இருவர்.

அவர்கள், 1. நாவலர். ச. சோமசுந்தர பாரதியார் 2. பண்டிதமணி மு. கதிரேசன் (செட்டியார்)

யார் உண்மையான தமிழ் ஆர்வலர் என்பதை இதன்மூலம் நாம் இனம் கண்டுவிட்டோம் அல்லவா?

பார்த்தீர்களா, தமிழ்த்தாத்தாவின் தமிழ்ப்பற்றினை? உ.வே.சா.வின் மறுபக்கத்தின் மற்றொரு பகுதி இது!

நம்ப வைத்துக் கழுத்தறுத்த நயவஞ்கம்

பாடும் உனை நான் பாடவைத்தேனே!

சங்கீத நினைவு அலைகள் _ என்ற நூலின் ஆசிரியர் எம்.எஸ். சவுந்தரம் அம்மையார்.

திருவாளர் ஏகாம்பரம் சவுந்தரம் கணவரின் உறவினர். இவர், திருவனந்தபுரம் நீதியரசர் இலக்குமணப் பிள்ளை அவர்களின்  நெருங்கிய நண்பர்.

இசைவாணியாகிய இந்த நூலாசிரியரைப் பாடச்சொல்லிக் கேட்க நீதியரசர் விரும்பினார்; அதற்கான ஏற்பாடுகள் செய்தார். சவுந்தரத்திடம் இசை தொடர்பான நுணுக்கங்களை விளக்கிக் கூறினார். பல இராகங்களில் பாடிக் காட்டினார்.

சவுந்தரமும் தன் பாடல்திறனை அவரிடம் பாடிக்காட்டினார்.

பட்டம் கொடுக்கத் திட்டம்

நீதியரசர் இலக்குமணப் பிள்ளைக்குத் தமிழ்த் தியாகய்யர் என்னும் பட்டம் கொடுக்க இசை ஆர்வலர்கள் திட்டமிட்டனர். தெலுங்குத் தியாகய்யர் இசை வல்லுநர் என்றால் நீதியரசர் தம் இசை வல்லமையால் தமிழ்த் தியாகய்யர் என்ற பட்டம் பெறத் தகுதியானவர் என்பது ஆர்வலர்களின் விருப்பம்;

இந்தப் பட்டத்தை யார் மூலம் வழங்குவது?

பட்டம் வழங்க முடிவு செய்தாயிற்று; இதை யார் வழங்குவது? யார் வழங்கினால் சிறப்பாக _ மதிப்பாக இருக்கும்? எனக் கலந்துரையாடினர் அன்பர்கள்.

இறுதியில், தமிழ்ப்புலவரும் தமிழ்த்தாத்தாவும் ஆன உ.வே.சாமிநாதய்யர் மூலம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்; முடிவை அவருக்குத் தெரிவித்தனர்; அவரும் வருவதாக இசைந்தார்.

பட்டம் திரு. எம்.எஸ்.இராமசாமி என்பவர் இல்லத்தில் கொடுக்கப்படுவதாக ஏற்பாடு. இசைச்சுவைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

கேட்டவர் எல்லாம் கிறங்கிப் போதல்:

நீதியரசர் முதலில் பல தமிழ்க் கீர்த்தனங்களை இசைத்திறனோடு வீணையில் மீட்டிக் காட்டினார்; அவர் மகள் இலட்சுமி அவற்றைப் பாடிக் காட்டினார்.

நீதியரசரும் பாடிக் காட்டினார். இவ்வண்ணம், பக்கவாத்தியங்கள் இல்லாமல் 2 மணி நேரம் கேட்டவர்கள் வியந்து மனம் கிறங்கிப் போயினர். நீதியரசர் பாடி முடித்தார்! அடுத்தது பட்டம் வழங்கும் நிகழ்ச்சி!

நீயே உனக்கு என்றும் நிகரானவன்!

உ.வே.சாமிநாதய்யர் பேச எழுந்தார்; என்ன செய்தார்? என்ன பேசினார்? இதோ நூலாசிரியர் சவுந்தரம் அம்மையார் எழுதியதைப் படியுங்கள்:

திரு. உ.வே.சாமிநாதய்யர், தியாகய்யரின் குணங்கள்; அவருக்கு ஏற்பட்ட அரிய சந்தர்ப்பங்கள்; அவருடைய அரிய கீர்த்தனங்கள்; அவர் பாட்டின் சுவைகள்; மேலும், அவர் வால்மீகியின் மறுபிறப்பு; அவர் கீர்த்தனங்கள் இராமாயணத்தை ஒட்டியது; அவருக்கு அவரே ஈடு! அந்தத் தகுதிக்கு யாரும் இணையாக முடியாது! பிறவியும் எடுக்க முடியாது! _ என்று சொல்லிக் கொண்டே போனார். இறுதியாக நீதியரசர் பற்றி, பிள்ளை பெரிய மேதாவி, ஓர் அரிய ஜட்ஜ்; சங்கீதம் பற்றி நன்றாக ஆராய்ச்சி செய்துள்ளார் _ என்று கூறி, உரையை முடித்து அமர்ந்துவிட்டார்.

எவ்வளவு கைதேர்ந்த ஏமாற்றுக்காரர்!

மேலும் நூலாசிரியர் எழுதியதைப் படியுங்கள்.

சிறீ எம்.எஸ்.இராமசாமிக்கும், பிள்ளைக்கும் ஏமாற்றமே! அவரைக் கவுரவப்படுத்தி, பட்டம் அளித்து, அதை பிவீஸீபீ றிணீஜீமீக்ஷீலும் சுதேசமித்திரனிலும் போட வேண்டும் என்று பிவீஸீபீ ரி.ஷிக்ஷீவீஸீவீஸ்ணீணீஸீ, சுதேசமித்திரன் சி.ஸி. ஷிக்ஷீவீஸீவீஸ்ணீணீ மிஹ்மீஸீரீணீக்ஷீ அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள். பெரிய சிமீக்ஷீவீயீவீநீணீமீ தயார் செய்து உ.வே.சாமிநாதய்யர் கையால் வழங்கிப் பேச வேண்டும் என்று எழுதி வைத்திருந்து கொடுக்கப்படாமலே உ.வே.சாமிநாதய்யர் பேசி மழுப்பி விட்டார்! பாவம்! பெரிய ஏமாற்றம்!!

படித்தீர்களா, சங்கீத நினைவு அலைகள் _ நூலாசிரியர் எழுதியதை?

இலக்குமணப் பிள்ளையின் மார்பில் பூணூல் இல்லையே?

பெரிய தமிழ்ப்புலவர், அறிஞர் உ.வே.சா. ஏன் அப்படிச் செய்தார்? ஏன் அப்படி ஏமாற்றினார்?

நூலாசிரியர் சொல்லவில்லை! நமக்கா தெரியாது?

நீதியரசர் தமிழர்; சூத்திரர்; தியாகய்யர் பார்ப்பனர்; வர்ண தர்மப்படி பிராமணர்.

அப்படிப்பட்ட தியாகய்யருக்கு இணையாக நீதியரசரைக் கருதவில்லை உ.வே.சா.

அதனால், ஏதேதோ தியாகய்யர் பற்றிப் புகழ்பாடி நீதியரசருக்குத் தமிழ்த் தியாகய்யர் பட்டம் தர விரும்பவில்லை?

பட்டமளிப்பு விழாவிலே தியாகய்யர் பற்றி, தம்பட்டம் அடித்து இலக்குமணப் பிள்ளைக்குப் பட்டம் வழங்காமல் அமர்ந்து விட்டதற்குக் காரணம் இப்பொழுது புரிகிறதா?

எல்லாம் பார்ப்பனப் பற்று! பார்ப்பனர் பற்றிப் பெரியார் பேசியதைக் கண்டு கொள்ளாமல் பார்ப்பனர் பற்றிப் பெரிதாகப் பேசித் திரியும் நமது தமிழறிஞர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும்!

உ.வே.சா. பற்றிய உண்மை!

இப்பொழுது உ.வே.சா. பற்றிய உண்மையை அறிந்து கொண்டிருப்பீர்களே?

இதோடு நிறைவு செய்வதே நமக்குப் பெருமை; பெருந்தகைமை; பெருந்தன்மை; பண்பாடு; நயத்தக்க நாகரிகம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *