மான உணர்வும் ஒற்றுமையும் பார்ப்பனரல்லாதார்க்கு வேண்டும்! … குமரன் தாஸ் …

2024 கட்டுரைகள் ஜுலை1-15-2024

திராவிட இயக்கத்தை எதிர்த்துத் தாக்குதல் தொடுக்கும் நிலைக்கு வந்து விட்ட சூழலில், திராவிட இயக்கம் தற்காப்பு நிலை எடுக்க வேண்டியதாகிவிட்டது.

அதேசமயம் ஆட்சிக் கட்டிலில் திராவிடச் சிந்தனை கொண்டவர்கள் (பார்ப்பனரல்லாதார்)100 சதவிகிதம் அமர்ந்து விட முடிந்தபோதும், அரசு அதிகாரிகளாகத் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப, உரிய எண்ணிக்கையில் முழுமையாக இதுவரை அமர முடியவில்லை என்பதோடு, அவ்வாறு அதிகாரத்தில் போய் அமர்பவர்களில்

நமது தமிழ்ச் சமூகம் முதன்மையாகப் பார்ப்பனர் X பார்ப்பனரல்லாதார் எனப் பிரிந்து முரண்பட்டு இயங்கி வருவதை நாமறிவோம். 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வரும்வரை பார்ப்பனர்களே ஆட்சியாளர்களாகவும், (பெரும்பான்மையாக) அதிகார வர்க்கத்தினராகவும் இருந்து வந்ததையும் நாம் அறிவோம். அப்போது பார்ப்பனரல்லாத மக்களைத் தலைமை தாங்கி வழிநடத்திய திராவிட இயக்கம் பார்ப்பனர்களின் அனைத்து ஆதிக்கத்திற்கும் எதிரான (Offensive) நிலை எடுத்துப் போராடியது.

ஆனால் 1967இல் தி.மு.க. ஆட்சியமைத்து, அதிகாரத் துறைகளில் படிப்படியாக பார்ப்பனரல்லாத மக்களுக்கான பங்கைப் பெற்றுத் தந்தது. அந்தப் பணி இன்னும் முழுமை பெறாமல் தொடர்ந்து நடைபெற்றும் வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிட இயக்கங்கள் பல தடைகளுக்கு இடையிலும் ஆட்சியில் தொடரும் நிலையில், பார்ப்பனர்களும் அவர்களது அரசியல் அமைப்பான – பா.ஜ.கவானது திராவிட இயக்கத்தை எதிர்த்துத் தாக்குதல் தொடுக்கும் நிலைக்கு வந்து விட்ட சூழலில், திராவிட இயக்கம் தற்காப்பு நிலை எடுக்க வேண்டியதாகிவிட்டது.

அதேசமயம் ஆட்சிக் கட்டிலில் திராவிடச் சிந்தனை கொண்டவர்கள் (பார்ப்பனரல்லாதார்)100 சதவிகிதம் அமர்ந்து விட முடிந்தபோதும், அரசு அதிகாரிகளாகத் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப, உரிய எண்ணிக்கையில் முழுமையாக இதுவரை அமர முடியவில்லை என்பதோடு, அவ்வாறு அதிகாரத்தில் போய் அமர்பவர்களில் பலர் தாங்கள் பார்ப்பனரல்லாதார் என்ற மன ஓர்மை கொண்டவர்களாக இல்லாமல் பார்ப்பன அடிமைச் சிந்தனை கொண்டவர்களாக மாறிவிடும் அவலநிலை தொடர்வதைக் காண்கிறோம்.

3 சதவிகிதப் பார்ப்பனர்கள் எங்கு இருந்தாலும் 100 சதவிகிதம் ‘தாம் பார்ப்பனர்’ என்ற சிந்தனையுடன் செயல்பட்டு பார்ப்பனர் நலனுக்கும் அதிகாரத்திற்கும் சேவை செய்வதோடு பார்ப்பனரல்லாதார் நலனுக்கு எதிராகவும் உணர்வுப் பூர்வமாகச் செயல்படுவதைக் காண்கிறோம். ஆனால் 97 சதவிகிதம் உள்ள பார்ப்பனரல்லாதாரில் இருந்து அதிகார நிலைக்குப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனரல்லாதார் நலனுக்கும் அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் கேடு செய்பவர்களாக ஆகிவிடுகின்றனர். அதாவது தங்களது நீண்டகால நலனுக்கும் விடுதலைக்கும் எதிராகச் செயல்பட்டு தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்.

தங்களுக்கு எதிராகப் பார்ப்பனர்களும் அவர்களது கைப்பாவையான ஒன்றிய அரசும் செயல்படும்போது மட்டும் ஓரளவு எதிர்ப்புணர்வைக் காட்டும் தமிழ்நாட்டு பார்ப்பனரல்லாத மக்கள், தமது சக பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களுக்குத் துரோகம் செய்யும் போது, தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போய் பிளவுபட்டு தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். ஏனென்றால், பார்ப்பனரல்லாத மக்களில் பார்ப்பனியத்தை உள்வாங்கியவர்கள் இன்று ஜாதியவாதிகளாகவும், மதவாதிகளாகவும், சுரண்டல்காரர்களாகவும், ஆணாதிக்க வாதிகளாகவும் மாறி நம்மவர்களுடன் மோதிக் கொண்டுள்ளனர். நம் மக்களிடையே உள்ள இந்தப் பிளவுகளும், முரண்களும்தான் சிறுபான்மையான பார்ப்பனர்கள் பெரும்பான்மைப் பார்ப்பனரல்லாத மக்களை அதிகாரம் செய்யவும் அடிமைப்படுத்தவும் வாய்ப்பை வழங்குகிறது.

எடுத்துக்காட்டாக தி.மு.க. அரசு பார்ப்பனரல்லாத மக்களுக்காகக் கொண்டுவரும் எந்தவொரு திட்டத்தையும் (எ-டு : அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம்) பார்ப்பனர்கள் எங்கு எந்தப் பணியில் இருந்தாலும் கடுமையாக எதிர்க்கின்றனர். அதே போல ஒன்றிய பா.ஜ.க. அரசு நமது மக்களுக்கு எதிராகக் கொண்டு வரும் திட்டத்தை (எ-டு: நீட்) கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கின்றனர். ஆனால், பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு நமது பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களில் பலர், தி.மு.க. அரசு கொண்டுவருகின்ற திட்டங்களை எதிர்ப்பதும், பா.ஜ.கவின் திட்டங்களை ஆதரிப்பதும் செய்கின்றனர். இது நமது மக்கள் இன்னும் பார்ப்பனரல்லாதார் எனும் உணர்வையும் ஓர்மையையும் பெறவேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. எனவே, நாம் இன்னும் தீவிரமாகத் திராவிட இயக்க வரலாற்றையும் அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், நமது மக்களைப் பிளவுபடுத்தும் ஜாதி, மத, ஆணாதிக்க மனநிலையிலிருந்து விடுவிக்கவும் வேண்டும்.