Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : தமிழர்க்கொரு திருநாள்!

தமிழர்க் கொரு திருநாள் – அது

தைத்திங்கள் முதல் நாள்

சமயத்துறை அறவே – உயர்

தமிழ் வாழ்த்தும் பெருநாள்.

 

நமை ஒப்பார் யாவர்? – நம்

தமிழ் ஒப்பது யாது?

கமழ் பொங்கல் நன்னாள் – புதுக்

கதிர் கண்ட பொன்னாள்!

 

ஏரோட்டும் இரு தோள் – ஒரு

சீர் போற்றும் திருநாள்!

ஆரோடும் உண்ணும் – நெல்

அறுவடை செய் பெருநாள்!

 

போராடும் கூர் வாள் – பகை

போக்குவ தோர் பெருநாள்!

ஊரோடும் உறவோடும்

உள மகிழும் திருநாள்.

 

மாடுகளும் கன்றுகளும்

வாழியவே என்று

பாடுகின்ற நன்னாள்! – கொண்

டாடுகின்ற பொன்னாள்!

 

வீடுதெரு வெங்கும் – எழிற்

சோடனை விளங்கும்

நீடுதமிழ் நாடு – புகழ்

நீட்டுகின்ற திருநாள்!

– ‘குயில்’ 12.1.1960

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்