மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்![6]

பிப்ரவரி 01-15 2020

மரு.இரா.கவுதமன்

தலைசுற்றல் (Vertigo) எப்படி ஏற்படுகிறது?

உள்காதில் கேட்கும் திறனைத் தரும் நத்தை ஓட்டெலும்போடு, உடலைச் சமநிலைப்படுத்தும் “லேப்ரிந்த்’’ (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு புறம் நத்தை ஓட்டெலும்பும், மறுபுறம் அரைவட்ட குழாய்களும்  (Semi Circular Canals) உள்ளன. லேப்ரிந்த் எலும்பு லேம்ரிந்த், படல லேப்ரிந்த் என இரண்டு வகையாக அமைந்திருக்கும். எலும்பு லேப்ரிந்தில் சுற்றுப்புற நிணநீர் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் உட்புற நிணநீர் திரவமும் இருக்கும். நம் உடல் அசைவுக்கு ஏற்ப உட்புற நிணநீர் திரவம் அசையும். அசைவின் வேகம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக் குழல்களில் குறியீடுகள் தோன்றும். அக்குறியீடுகள் காது நரம்புகள் மூலமாக மூளையை அடையும். இத்தகவல் மூளைக்குச் சென்றதும் நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா என நம் அசைவுகளை மூளை அறியும். அதற்கேற்றாற்போல் உடல் தசைகளுக்கு ஆணையிட்டு, நம்மைச் சமநிலைப்படுத்தும். இந்தத் தொடர் செயல்பாட்டால் ஏதேனும் குறை ஏற்பட்டால் காதிலிருந்து தவறான தவகல்கள் மூளைக்குச் செல்லும். அதனால் மூளை குழம்பி தவறான தகவல்களை தசைகளுக்கு அனுப்பும். இதனால் தசைகள் இயல்பாக சமநிலையில் இயங்காது. அதனால்தான் “தலைசுற்றல்’’ ஏற்படுகிறது. தலைசுற்றல் ஏற்படும்பொழுது காதில் ஒரு வகை ஒலி கேட்கக் கூடும்  (Tinnitus). தலைசுற்றலில், மிதமானது, மத்திய வகை, தீவிரமானது என்று மூன்று வகை உள்ளது. மிதமான குமட்டலும், தலைசுற்றலும் சிறிது நேரமே இருக்கும். படுத்து ஓய்வெடுத்தால் சரியாகி விடும். மத்திய வகையில் தலைசுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு கொண்டால் இதுவும் சரியாகிவிடும். தீவிர வகையிலோ தலைசுற்றல், வாந்தி அதிகமாக இருக்கும். நடந்தால் மயங்கி விழுந்து விடுவோமோ என்கிற பயம் ஏற்படும். தலைசுற்றல் நோய் 80 விழுக்காடு காது கோளாறாலேயே உண்டாகிறது. இதை மருத்துவரின் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.

மினியர் நோய் (Meniere’s Disease)

உள் காதில் நிணநீர் திரவம் அதிக அளவு சுரந்தால் காதுக்குள் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் தலைசுற்றல் ஏற்படும். தூங்கும்போது கூட இது ஏற்படலாம். இது உடனே குறையாது. சில நேரங்களில் இரண்டு நாள்கள்கூட இருக்கும். குமட்டல், வாந்தி, காதில் இரைச்சல், காது மந்தம் ஆகியவை இருக்கும். படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்கிற உணர்வு இருக்கும்.

ஒரு புற தலைச்சுற்றல்:

சிலருக்கு கழுத்தை ஒருபுறம் திருப்பும் பொழுதோ, மேலேயோ, கீழேயோ பார்க்கும்பொழுதோ தலைச்சுற்றல் ஏற்படும். இதற்கு “ஒரு புற தலைச்சுற்றல்’’  (Benign Paroxysmal Positional Vertigo) என்று பெயர். இந்நோயில் காதில் இரைச்சலோ, செவிட்டுத் தன்மையோ ஏற்படாது.

மருத்துவம்:

காது, மூக்கு, தொண்டை மருத்துவர் இந்நோய் குணப்படுத்தலாம்.

 

தடுப்பு முறைகள்:

 

1.    உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.

2.    அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.

3.    சரியான ஓய்வு, உறக்கம் அவசியம்.

4.    இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

5.    புகை, மதுப் பழக்கம் தவிர்க்க வேண்டும்.

6.    தலை சுற்றுவது போலத் தோன்றினால் உடனே படுத்துக்கொள்ள வேண்டும். கால்களை சற்று உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

7.    ‘ரோலர் கோஸ்ட்’ போன்ற இராட்டினங்களில் அமர்ந்து சுழலக் கூடாது.

8.    படுக்கையிலிருந்து சட்டென எழுந்து நிற்கக் கூடாது.

9.    காது, மூக்கு, தொண்டை மருத்துவ ஆலோசனை மிகவும் முக்கியம்.

10.    சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் பலனளிக்கும்.

11.    சில வகை ‘யோகாசனங்கள்’ பயனளிக்கும்.

12.    மன அழுத்தம் குறைக்க வேண்டும்.

13.    மருத்துகளை மருத்துவரின் அறிவுரைப்படி உண்ண வேண்டும்.

மூக்கு:

சிலருக்கு இயற்கையாய் மூக்கு அழகில்லாமல் இருக்கும். கடவுள் அழகில்லாமல் இவர்களைப் படைத்துவிட்டதாகக்கூட கேட்டிருப்போம். இன்றைய மருத்துவம், இதுபோன்று கவலை உடையவர்களின் மூக்கைச் சீராக்கி, அழகுபடுத்துகிறது.

சிலருக்கு மூக்கெலும்பு வளைந்து காணப்படும். மூக்கின் இருபுறமும், நெற்றி எலும்போடு இணைந்து மூக்கெலும்பு இருக்கும். இருபுறம் உள்ள மூக்கெலும்பின் உள்புறம், மூக்கு இடை எலும்பு (Nasal Septum) இருக்கும். மூக்கின் நெற்றிப் பகுதியிலிருந்து மூன்றில் ஒரு பகுதியே மூக்கெலும்பு இருக்கும். மீதிப் பகுதிகளில் குறுத்தெலும்புதான் இருக்கும். மூக்கெலும்புகளின் அமைப்பில், சிறு அறுவை மருத்துவம் செய்வதன் மூலம், கடவுள் படைத்த (?) அழகற்ற மூக்கை மருத்துவர்கள் அழகாக்கிவிடுவர். (சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல தமிழ் நடிகை மூக்கை அழகுபடுத்தும் அறுவை மருத்துவம் செய்து கொண்டு, பின் இந்திப் பட உலகில் கொடிகட்டிப் பறந்தார்.)

மூக்கின் இடை எலும்பு வளைவு (Septal Deviation), பல தொல்லைகளை உண்டாக்கும். இந்த வளைவு அதிகமாக இருந்தால், பாதிக்கப்பட்ட புறத்தில் மூக்குத் துவாரம் நெருக்கமாகி விடும். அதனால் அந்தப் பகுதியில் மூக்கடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிட கடினமாகி விடும். சில நேரங்களில் அடைப்பட்ட மூக்கின் வழியே உதிரப்போக்கும் ஏற்படுவதுண்டு. தூங்கும்பொழுது, ஒருவித ஓசை வரும். இது ஒரு பிறவிக் கோளாறு. பெரியவர்களுக்கு மூக்கெலும்பில் அடிபடுவதால், இந்தக் கோளாறு ஏற்படும். இதற்கும், மூக்கின் உள்புறம் ஒரு சிறிய அறுவை மருத்துவம் செய்வதன் மூலம், முழுமையாகச் சரிசெய்துவிடலாம்.

காற்றறை அழற்சி (Maxillary Sinusities):

முகத்தின் இரண்டு புறத்திலும், மேல் தாடை  (Maxilla) யில் இரண்டு காற்றறைகள் உள்ளன. அதேபோல் முன் மண்டை ஓட்டின் இருபுறமும் காற்றறைகள்  (Frontal Sinuses) உள்ளன. அதேபோல் கண்களுக்கு இடையே இரண்டு காற்றறைகள் (Ethomoid Sinuses),கண்களுக்கு பின்னால் இரண்டு காற்றறைகள்  (Sphenoid Sinuses) என மொத்தம் எட்டு காற்றறைகள் உள்ளன. நமக்குச் சளி பிடிக்கும்போது, இந்தக் காற்றறைகளில் சளி சேர்ந்து, காற்றறைகளில் அடைப்பு ஏற்படும். பெரும்பாலும் மேல்தாடை காற்றறைகள்தான் அதிக அளவு பாதிப்பு எற்படும். முன்பெல்லாம் காற்றறை அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்து சீராக்குவர். இப்பொழுது எளிமையாக ‘உள்நோக்கிக் கருவி’ (Endoscope) மூலம் இவ்வழற்சியைச் சீராக்கி விடுகின்றனர். மூக்கு அறுவை மருத்துவத்தில் இவ்வுள்நோக்கிக் கருவி இப்புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்துகளில் அடிபடும்பொழுது, மண்டையின் அடிப்புறம், அடிபட்டால் மூளை, தண்டுவட நீர் (Cerebro-Spinal Fluid-C.S.F.)  மூக்கின் வழியே வரும். இது ஓர் ஆபத்தான அறிகுறி. இதை உள்நோக்கிக் கருவி மூலம் இப்பொழுது சரியாக்கி விடுகின்றனர். அதேபோல் மண்டை ஓட்டின் அடிப்புறத்தில் விபத்தால் அடிபட்டால் அதையும் இக்கருவி மூலம் சரியாக்கும் வாய்ப்பு உள்ளது. பிட்யூட்டரி எனும் நாளமில்லாச் சுரப்பி மண்டையோட்டின் அடிப்புறம் ஒரு குழிக்குள் (Sells Turcica) அமைந்திருக்கும். இதில் ஏற்படும் கட்டிகளைக்கூட (Endoscope) மூக்கு மருத்துவத்திலும், அடி மண்டை (Base of the skull) அறுவை மருத்துவத்திலும் ஒரு புரட்சியையே செய்துள்ளது என்றால் மிகையாகாது.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *