விழிப்புணர்வுக் கட்டுரை : மலக்கழிவுத் தொட்டியால் மரணங்கள்! தடுக்கும் வழிகள்!

மே 16-31 2019

 

தமிழரசன்

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மலக் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும்போதும், பாழடைந்த கிணற்றைத் தூர் வாரும்போதும், பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும்போதும், தொழிலாளர்கள்  நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு இறப்பது அடிக்கடி நிகழ்கிறது.

அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது வீட்டின் கழிவுநீர்த் தொட்டியின் அடியில் தேங்கிய கழிவை அகற்றுவதற்காக இறங்கிய வீட்டின் உரிமையாளர், அவரைக் காப்பாற்ற முயன்ற மகன்கள் இருவர், உதவவந்த மூவரும், மேலும் இருவர் என மொத்தம் ஆறு பேர் நச்சு வாயு தாக்கி உயிரிழந்தனர்.

கழிவில் நச்சு வாயு வருவது எப்படி?

நமது அன்றாட பயன்பாட்டில் உள்ள கழிவுநீர்க் குழாய்களில் செல்லும் கழிவுநீரிலிருந்து ஹைட்ரஜன் சல்பைட், அம்மோனியா, மீத்தேன், ஈஸ்டர்கள், கார்பன் மோனாக்சைடு, சல்பர் டையாக்ஸைட் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்கள் பணித் தளங்களில் வெளிப்படும். மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சல்பைட் ஆகிய வாயுக்களை மனிதர்களின் நுகர்வு சக்தியை கொண்டு கண்டறிய முடியாது. ஏனென்றால், இந்த வாயு நுகர்வு உணர்வு நரம்புகளை உடனே பாதித்துவிடும். இதனால் மணமில்லை என்று உள்ளே இறங்கக் கூடாது. குறைந்த அளவிலான இந்த வாயுக்களின் வெளிப்பாட்டால் தலைவலி, கண் எரிச்சல், சோர்வு, தொண்டைக்கமறல், இருமல், வாந்தி, கிறுகிறுப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். அதிகமான அளவு வெளிப்பட்டால் உயிரை இழக்க நேரிடும்.

முன்னெச்சரிக்கைகளுடன் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வது, பாழடைந்த கிணற்றைத் தூர்வாரப் போவது, பாதாளச் சாக்கடைகளில் வேலைகள் செய்வது என்பதை மேற்கொண்டால் ஆபத்து ஏற்பட வழிவில்லை.

ஆபத்திலிருப்பவர்களை காப்பாற்றப் போகிறேன் என்று உள்ளே குதிப்பவர்களால்  காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். அவர்களும் உயிரிழப்பர். பாதுகாப்பு வழிமுறையின்படி காப்பாற்றத் தெரிந்தவர்கள் உதவலாம்.

தடுக்கும் வழிகள்!

¨           வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் தொட்டிக்குள் நுழையக் கூடாது.

¨           இதற்கெனப் பயிற்சி பெற்றவர்கள்தாம் உள்ளே இறங்க வேண்டும்.

¨           தொட்டிக்குள்ளிருக்கும் காற்றின் தன்மை, வெளிக் காற்றின் தன்மை ஆகியவற்றை முறையான கருவிகளைக் கொண்டு ஆராய வேண்டும்.

¨           கற்பூரத்தை, மெழுகுவர்த்தியைக் கொளுத்தித் தொட்டிக்குள் போட்டு தொட்டிக்குள் விஷ வாயு இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

¨           கழிவு நீர்த்தொட்டிக்குள் முதலில் விஷவாயுக்கள் எந்த அளவில் உள்ளன என்பதை அதற்குரிய விசேஷக் கருவியைக் கொணடு (Calibrated gas detector) பரிசோதனை செய்து அறிய வேண்டும்.

¨        Multiple-sensor gas monitor-ஐப் பயன்படுத்த வேண்டும்.

¨           உள்ளே சென்று துளைப்பான் மூலம் துளைத்தல் போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது.

¨           தொட்டிக்குள் பல்வேறு இடங்களிலிருந்து வரும் கழிவுக் குழாய்களை அடைத்து வைக்க வேண்டும்.

¨           உள்ளே இறங்குவதற்கு முன்பாக அங்குள்ள திடப் பொருட்கள் மற்றும் கழிவுகளை,  (Jet cleaning) கருவிகளைக் கொண்டு வெளியேற்ற வேண்டும்.

¨           கழிவு நீரையும் அகற்றி, உட்புறம் காற்றோட்டமாக இருக்க வெளிக்காற்றை உள்ளே செலுத்த வேண்டும்.

¨           ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் பின் முகக் கவசம் கொண்ட சுவாச உபகரணம் (Personal Protective equipment) அணிந்து உள்ளே இறங்க வேண்டும்.

¨           அதே நேரம் வெளியிலிருந்து அவரைக் கண்காணிக்கவும், தொடர்பு கொள்ளவும், தேவைப்பட்டால் உதவுவதற்கும் குறைந்தபட்சம் ஒரு பணியாளர் இதே போன்ற சுவாச உபகரணங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

¨           முதலுதவிப் பெட்டி, ஆக்ஸிஜன் ஆகியவையும் தயாராக வைத்திருப்பது அவசியம்.

¨           இப்பணியில் ஈடுபடுபவர், வாடை தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மது அருந்திவிட்டுப் பணியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *