பதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்!

ஏப்ரல் 16-30 2019

வை.கலையரசன்

உலகில் நடைபெற்றுள்ள அரசியல், சமுகப் புரட்சிகள் அனைத்தும் புத்தகங்களின் தாக்கங்களால் ஏற்பட்டவையாகும். புத்தகங்களே மனிதனின் சிந்தனையை கூர்மைப்படுத்தும் அறிவாயுதங்கள்.

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே தமது கருத்தாக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டான். இத்தகைய சிறப்புப் பண்பைதான் உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் மீம்கள் என்று குறிப்பிடுகிறார். மனிதனின் இன்றைய நாகரீகம், அரசியல், அறிவியல் வளர்ச்சிக்கு இந்த மீம்களே காரணம்.

குகைகளில், கற்களில், ஓலையில் தம் சிந்தனைகளை பதிவு செய்து வந்த மனிதன் அவற்றின் அடுத்தகட்டமாக மை கண்டுபிடித்த பின் தமது கருத்துகளை வேகமாக பரப்பினான். ஜெர்மனிய பொறியாளர் கூட்டன்பர்க் அச்சு இயந்திரத்தை உருவாக்கிய பின் அவை வேகமாக பரப்பப்பட்டன. குறிப்பாக மதப் பிரச்சாரங்களுக்கு பெரிதும் பயன்பட்டன.

தந்தை பெரியார் தமிழ்ப் பதிப்புலகின் போக்கை மாற்றியமைக்கும் வகையில் பதிப்புத் துறையை சமுகப் புரட்சிக்குப் பயன்படுத்தினார். 1929ஆம் ஆண்டு சிவானந்த சரஸ்வதி அவர்கள் ஞானசூரியன் புத்தகத்தில் தொடங்கியது தந்தை பெரியாரின் குடிஅரசு பதிப்பகம். அன்று தொடங்கிய பதிப்புப் பணி 90 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

புத்தகங்களை மலிவுப் பதிப்புகளாக்கி மக்களுக்குச் சேர்ப்பதை தனித்தொண்டாகச் செய்த பெரியார் குடிஅரசு பதிப்பகத்தைத் தொடர்ந்து பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் என்ற பெயரில் ஒரு கூட்டுறவு பதிப்பகத்தைத் தொடங்கினார்.

இரஷ்யா செல்லும் முன்பே மார்க்ஸ் ஏங்கல்ஸ் கூட்டறிக்கையான சோசலிஸ்ட் அறிக்கையை (Communist Manifesto) வெளியிட்டார். தொடர்ந்து மதமும் லெனினும், புது ரஷ்யா, பொதுவுடைமை தத்துவங்கள் போல்ஷ்விக் முறை, சோசலிஷம், இரஷ்யாவின் அய்ந்தாண்டு திட்டங்கள்  சமதர்ம உபன்யாசம், இரஷ்யா பற்றி பெர்னாட்ஷா போன்ற பொதுவுடமை சார்ந்த நூல்களை வெளியிட்டுப் பரப்பினார்.

அமெரிக்காவின் அறிவுலக மாமேதை இராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்களின் உரைகளையும் புத்தகங்களை தமிழில் பதித்து வழங்கியவர் தந்தை பெரியார் ஆவார். பெரியார் வெளியிட்ட இங்கர்சால் நூல்கள்:

1. மதம் என்றால் என்ன?

2. நான் சம்சயவாதி ஆனதேன்?

3. இரண்டு வழிகள்

4. ஆண் பெண் குழந்தை சுதந்திரம்

5. கடவுள்

6. வால்டேயரின் வாழ்க்கை சரிதம்.

இவை இன்று வரை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

மேலும் மேல்நாட்டு தத்துவ சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்களின் புத்தகங்களை மொழியாக்கம் செய்யச் செய்து வெளியிட்டு பதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.

அறிஞர் பெர்னாட்ஷாவின் பெர்னாட்ஷா உபன்யாசம், ஜோசப் மெக்காபி எழுதிய மதப்புரட்சி, கத்தோலிக்க குரு ஜீன் மெஸ்லியரின் பகுத்தறிவு அல்லது மரண சாசனம், பெர்ட்ரண்ட் ரசல் எழுதிய நான் ஏன் கிறிஸ்துவனல்ல?, சார்லஸ் டி கோர்ம் எழுதிய முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை, செனிக்யூ பாதிரியார் எழுதிய பாதிரியும், பெண்களும், பாவமன்னிப்பும், ஜி.டவுசன்ஸ் பாக்ஸ் எழுதிய பாதிரியார்களின் பிரம்மச்சர்ய இலட்சணம், கிராண்ட் ஆலன் எழுதிய கடவுள் தோன்றியது எப்படி? போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழில் வெளிவந்த டாக்டர் அம்பேத்கரின் முதல் நூலான ஜாதியை ஒழிக்க வழி புத்தகத்தை 1935ஆம் ஆண்டு வெளியிட்டவர் தந்தை பெரியார். அதுபோல் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன்? புத்தகத்தையும் தமிழாக்கம் செய்து வெளியிட்டவர் தந்தை பெரியார். இந்நூல் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்ணியத்தின் முன்னோடி நூலான பெண் ஏன் அடிமையானாள்? புத்தகம், 1930இல் வெளிவந்து. இதுவரை முப்பது பதிப்புகளுக்கு மேல் வெளிவந்துள்ளன. மேரிஸ்டோப்ஸ் எழுதிய கட்டுரைகளை இணைப்பாகக் கொண்ட கர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல் என்னும் புத்தகம் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட புத்தகங்கள்.

ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்ட தந்தை பெரியார் அவற்றை அதிக விலைக்குப் போட்டு, கமிஷன் அடிப்படையில் விற்பனைக்கு கொடுக்காமல், கொள்கைப் புத்தகங்களை  மலிவு விலையில் அச்சிட்டு தாமே நேரடியாக கூட்டங்களில் அறிமுகப்படுத்தி அதில் அன்று தள்ளுபடி சலுகை விலை உண்டு என்று அறிவிப்பார்கள். வியாபாரத்திற்கு அல்லாமல் மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். தாம் பேசுவதற்கு முன்பு புத்தகங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி அதில் அடங்கியுள்ள கருத்துகளையும், தகவல்களையும் விரிவாக எடுத்துக் கூறி அதன் பிறகே தமது சொற்பொழிவை தொடங்குவார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் புத்தகங்களை வாங்கவும், படிக்கவுமான ஆர்வத்தை வளரச் செய்தார்.

இவ்வாறு தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய பதிப்புத் துறையில் தொடங்கிய புரட்சிப் பணிகள் இன்றுவரை தொடர்ந்து வருகின்றன. இன்றும் 700க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழிலும், பிற மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. குடிஅரசு பதிப்பகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், விடுதலை வெளியீடு, பகுத்தறிவு வெளியீடு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு என பல்வேறு பெயர்களில் பதிப்பகப் பணி தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *