கவர் ஸ்டோரி : தேர்தல் என்ற பெயரில் தலைமுறைப் போர் ஒரு விரல் புரட்சிமூலம் பா.ஜ.க., அ.தி.மு.க ஆட்சியை அகற்றுவோம்!

ஏப்ரல் 1-15 2019

மஞ்சை வசந்தன்

  தெற்காசியப் பகுதி முழுவதும் வாழ்ந்து  நாகரிகம், பண்பாடு, கலை, வணிகம், வானியல், அணைக்கட்டுகள், கடற்பயணம், கட்டடக்கலை, என்று அத்துணையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முத்திரைப் பதித்ததோடு, மற்றவர்களுக்கு வழிகாட்டிய இனம் தமிழ் இனம்.

உலகின் மற்ற மக்களெல்லாம் மொழியறியா காலத்திலே வளம் வாய்ந்த தமிழ்மொழியை பெற்ற இனம். இன்றைக்கு உலக மொழிகளெல்லாம் தமிழிலிருந்தே வந்தவை என்று மற்ற மொழி அறிஞர்களே கூறுகின்ற அளவிற்குத் தொன்மையான மூலமொழிக்கு உரிய இனம் தமிழ் இனம்.

இப்படிப்பட்ட தமிழ் இனம் வாழ்ந்த பகுதியில் பிழைக்க உள்நுழைந்த ஆரியர்கள் தொடக்கத்தில் தமிழர்களிடம் பிச்சை பெற்றே வாழ்ந்தனர். பிறகு குழுக்குழுவாக குடியேறி வாழத் தொடங்கினர்.

பெரும்பான்மைத் தமிழர்கள் பகுதியில் குடியேறி வாழ்ந்த ஆரியச் சிறுபான்மையினர் சூழ்ச்சியால் பெரும்பான்மையை அடிமை கொள்ள யாகம், கடவுள், மந்திரம், சடங்குகள் என்று பலவற்றை உருவாக்கி அதன்வழி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். மூடநம்பிக்கையற்று,

ஜாதியற்று வாழ்ந்த தமிழகத்தில் கடவுளும், ஜாதியும் ஆரியர்களால் புகுத்தப்பட்டு அதற்குச் சாஸ்திர சட்ட பாதுகாப்பும், அதிகாரமும் அளித்து அதன்வழி தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

தமிழ் மொழியை மாற்றியும், திரித்தும் சமஸ்கிருதத்தை உருவாக்கினர். ‘சமஸ்கிருதம்’ என்பதற்கே உருவாக்கப்பட்டது என்றே பொருள். பின்னாளில் தமிழ் மொழியோடு சமஸ்கிருதம், உருது கலக்க ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் உருவாயின.

வடஇந்தியாவில் ஆரியர், இஸ்லாமியர் ஊடுருவல் அதிகம் நிகழ்ந்ததால் தமிழ், உருது, சமஸ்கிருதம் கலந்து ஹிந்தி உருவாயிற்று. தமிழர்கள் தென்னிந்தியப் பகுதியில் ஒதுங்கியதால் தமிழோடு சமஸ்கிருதம் கலந்து முதலில் தெலுங்கு, பின் கன்னடம், மிகப் பிற்காலத்தில் மலையாளம் உருவாயிற்று.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று மொழிகள் தமிழினின்று உருவானாலும் அவர்கள் எல்லோரும் ஒரே இன மக்களே! ஆனால், மொழியால் வேறுபட்டதால் அவர்கள் ஓர் இனம் என்பதை உறுதிசெய்ய, குறிக்க ‘திராவிடர்’ என்ற இனப் பெயரால் அழைக்கப்பட்டனர்.

இப்படி வடஇந்தியாவிலும் பல கலப்பால் பல மொழிகளும், மொழி சார்ந்த மக்களும் உருவாயினர்.

ஆனால், எத்தனை மொழி, எத்தனை மொழி பேசும் மக்கள் உருவானாலும்; இந்தியா முழுமையும் மதத்தால் இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், புத்தர், சமணர் போன்று பிரிந்தாலும், அதன் மைய அச்சாக ஒரே ஒரு பகுப்பு அடிப்படையாய் நின்று, இருபெரும் பண்பாட்டு வேறுபாட்டை உருவாக்கியது.

இந்த மண்ணின் மனிதநேயப் பண்பாடான திராவிடப் பண்பாடு ஒன்று. அதற்கு நேர் எதிரான ஆதிக்க (பாசிச) வெறிகொண்ட ஆரிய கலாச்சாரம் மற்றொன்று.

இந்த இரண்டு வேறு வேறு கலாச்சார வாழ்வியலில், ஆரியக் கலாச்சாரம் மட்டுமே நிலைநிறுத்தப்பட வேண்டும்; ஆரிய மேலாண்மை மட்டுமே இருக்க வேண்டும்; ஆரிய மொழியான சமஸ்கிருதம் மட்டுமே வழக்கில் நிலைக்க வேண்டும்; மற்ற மொழிகளும் கலாச்சாரங்களும் ஒழிக்கப்பட வேண்டும். மத அடிப்படையில் இந்து மதமும், இராமன் என்ற ஒற்றைக் கடவுளுமே அனைவராலும் ஏற்கப்பட வேண்டும், மற்றவையெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்.

உணவில்கூட காய்கறி உணவு மட்டுமே உண்ணப்பட வேண்டும். மற்றவை உண்ணப்படக் கூடாது என்பன போன்ற ஒற்றை இன ஆதிக்கம், ஒற்றை மொழி ஆதிக்கம், ஒற்றை கலாச்சாரம், ஒற்றை கடவுள் வழிபாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் _ இலக்கில் உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

அந்த ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ் பல கிளைகள் பரப்பி மக்களிடையே ஊடுருவிப் பரவியதுபோல், அதன் அரசியல் கிளையும் உருவாக்கப்பட்டு பரவியது. அது அவ்வப்போது பெயர் மாற்றம் பெற்று தற்போது ‘பாரதிய ஜனதா’ என்றப் பெயரில் வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்றி அதன் கொள்கைகள் – இலக்குகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனால் சமுகநீதி ஒழிக்கப்பட்டு வருகிறது; மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன. அடித்தட்டு மக்களின் கல்வி பறிக்கப்படுகிறது, வணிகம் ஒழிக்கப்படுகிறது, வேளாண்மை நசுக்கப்படுகிறது, வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களின் வருவாய் வழி அடைக்கப்பட்டு, வறுமை உருவாக்கப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாய் கார்ப்பரேட் முதலாளிகள் ஆதரவோடு, ஆரிய உயர் ஜாதி வர்க்கமும் மற்றவர்களைக் கொண்ட சூத்திர வர்க்கமும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

மக்களாட்சி என்ற மகத்தான கட்டமைப்பின் மூலம், காங்கிரஸ் ஆட்சியில் சம உரிமை, சம வாய்ப்பு, சம நீதி என்ற இலக்கு நோக்கி முன்னேறி அடித்தட்டு மக்களுக்கெல்லாம் சுயமரியாதை வாழ்வும், வளர்ச்சியும் பெற்று வந்த நிலையில், கடந்த அய்ந்து ஆண்டு ஆரிய பாசிச பாஜ.க. ஆட்சியில் அனைத்தும் நொறுக்கப்பட்டு ஆரிய ஆதிக்க கட்டமைப்புக்கான அனைத்து அடிப்படைப் பணிகளும் செய்யப்பட்டுவிட்டன.

எனவே, இன்னும் ஓர் அய்ந்தாண்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வருமானால், ஆரிய பாசிச ஆதிக்கமே நடைமுறைப்படுத்தப்படும். ஒரே மதம், ஒரே கடவுள், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், பிராமண, சூத்திர வர்க்கப் பிரிவு என்று எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டு நாட்டில் உள்ள 95% மக்கள் அடிமைகளாய் வாழும் அவலம் கட்டாயம் வரும்!

இது அச்சமூட்டும் எச்சரிக்கையோ, மிகைப்படுத்தப்பட்ட கற்பனையோ அல்ல. மாறாக, நம் முன்னே நிற்கின்ற சிக்கல், பேராபத்து! இதில் அலட்சியமாகவோ, அறியாமையாலோ தப்பான முடிவெடுத்தால் அது நம்மை மட்டுமல்ல நம் தலைமுறையையே அடிமையாக்கும், பாழாக்கும், அழிக்கும்!

எனவே, இன்னும் ஓர் அய்ந்தாண்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வருமானால், ஆரிய பாசிச ஆதிக்கமே நடைமுறைப்படுத்தப்படும். ஒரே மதம், ஒரே கடவுள், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், பிராமண, சூத்திர வர்க்கப் பிரிவு என்று எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டு நாட்டில் உள்ள 95% மக்கள் அடிமைகளாய் வாழும் அவலம் கட்டாயம் வரும்!

கடந்த 5 ஆண்டுகளில் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள்!

மோடி அரசின் பொருளாதாரச் சீரழிவுகள்

2017-_2018இல் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வேலையிழப்பு

2017_-18இல் 6.1% வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு

கிராமம் : ஆண்கள் 17.4% பெண்கள் 13.6%

நகரம் : ஆண்கள் 18.7% பெண்கள் 27.2%

உற்பத்தித்துறை :  2016-_2018 – 35 லட்சம் பேர் வேலையிழப்பு

வேலையில்லா இளைஞர்கள்

தமிழகம் : 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

தமிழகத் தாழ்நிலை

தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மட்டும் 80 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு ‘என்றைக்கு வேலை கிடைக்கும்‘ என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள். அதில் 24 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் மட்டும் 30 லட்சம் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை அரசின் இணையதளத்திலேயே காண முடிகிறது.

சுய தொழில்களை ஊக்குவிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அப்படியே முடங்கிப் போயுள்ளன என்றும், சுய தொழிலை ஊக்குவிப்பதில் தமிழகம் இந்திய மாநிலங்களில் கடுமையாக பின்தங்கி, 18ஆவது இடத்திற்கு கீழிறங்கி விட்டது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2015_-16ஆம் ஆண்டிலேயே தமிழகத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் இந்திய சராசரியான 3.7 சதவீதத்தை விட அதிகமாகி, 3.8 சதவீதம் வரை சென்று இப்போது அது மேலும் உயர்ந்து விட்டது.

புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்காமல், அரசு வேலை வாய்ப்புகளிலும் முறைகேடான தேர்வுகள், லஞ்சம், லாவண்யம் என்ற அளவில் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் பெருத்த ஏமாற்றத்தில் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு – பாதிப்புகளும் வேதனைகளும்

பணம் கிடைக்காமல், ஏடிஎம் வாசலில் வரிசையில் நின்ற பாமர மக்களில் 140 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டு மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2015_-16 ஆண்டு 8% ஆக இருந்தது. இது 7.11% ஆக குறைந்தது. ரூ.2.25 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டது. 35 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

சிறு, குறு தொழில் அழிந்தது.

15 கோடி அன்றாடக் கூலிகள், பல வாரங்கள் வேலை இழந்தனர்.

தமிழகத்தில் குறிப்பாக, தொழில் நகரமான திருப்பூரில் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்.

கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால், சாதாரண மக்களின் வாழ்வாதாரம் சிதைந்தது தான் மிச்சம்!

ரிசர்வ் வங்கி தடுத்தும், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் மோடி.

மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது: organized loot legalised plunder திட்டமிட்ட திருட்டு சட்டரீதியான கொள்ளை.

வங்கியில் வாராக் கடன் அதிகரிப்பு

2013 _- ரூ.1,55,890 கோடி

2017 _- ரூ.8,40,000 கோடி

2018 _- ரூ.10,17,000 கோடி

வசூலான தொகை  2014 முதல் 2017 வரை ரூ.29,343 கோடிகள் மட்டுமே.

2017 மார்ச் மாத முடிவில் ரூ.8.86 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் வாராக் கடன் 2018 மார்ச் முடிவில் ரூ.10.25 லட்சம் கோடி கடனாக உயர்ந்துள்ளது.

இதில் ரூ.2,25,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை சீர்குலைத்தல்:

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க தனித்துவமிக்க அமைப்புகள் அரசியல் தலையீடின்றி செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டவை அவை ஒவ்வொன்றிலும் தன் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கத்தை நிலை நாட்டத் துடித்து அவற்றை நாசப்படுத்தியது பா.ஜ.க அரசு.

1.            திட்டக்குழு திட்டமிட்டே கலைக்கப்பட்டது.

2.            ஒவ்வொரு அமைப்பும் சிதைக்கப்பட்டன.

3.            அய்.அய்.டி, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, உச்ச நீதிமன்றம், சி.பி.அய்., ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

4.            ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜன் ஓய்வுப் பெற்றபின் அடுத்து உர்ஜித் படேல்  நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் உபரி, பணத்தை மத்திய அரசு கேட்க. அவர் தரமறுத்தார். நிதி அமைச்சகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் அவரும் டிசம்பர் 2018-ல் பதவி விலகினார்.

இந்தித் திணிப்பு

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்னர் செய்த முதல் வேலை தமிழகத்தில் இந்தித் திணிப்பை ஆரம்பித்ததுதான். இரகசிய சுற்றறிக்கைகள் மூலம் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்பு, உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத் திணிப்பு என ஆரம்பித்தது  பா.ஜ.க.

பிறகு நெடுஞ்சாலைத் துறை, வங்கிகள் ஆகியவற்றின் மூலமும் கொல்லைப் புற வழியாக தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணித்து வருகிறது.

‘நீட்’ மூலம் கல்வி பறிப்பு

இந்த ‘நீட்’ கொண்டு வந்ததால் என்ன விளைவு? 2016இல் நீட் தேர்வு இல்லாதபோது தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் பெற்ற இடங்கள் 30. ‘நீட்’ வந்த பின் பெற்ற இடங்களோ வெறும் அய்ந்தே அய்ந்து; இதில் இருவருக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரியில். இடம் மூவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில்.

2016இல் ‘நீட்’ இல்லாதபோது மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பெற்ற இடங்கள் 3546. ‘நீட்’ வந்த பிறகு மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் பெற்ற இடங்களோ 2314. இழப்பு 1232 இடங்கள். ஆனால், 2016இல் (நீட் இல்லாதபோது) சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பெற்ற இடங்கள் 62. ‘நீட்’ வந்த பின் இவர்கள் பெற்ற இடங்களோ 1220 பேர். கிட்டத்தட்ட 20 மடங்கு.

முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடாம்? சரிதானா?

அரசமைப்புச் சட்டத்தில் சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்பதுதான் அளவுகோல். பி.ஜே.பி. மத்திய அரசோ பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்துள்ளது.  ஏற்கனவே திறந்த போட்டியில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய உயர்ஜாதியினருக்கு மேலும் 10 சதவீதம் என்பது கொடுமையல்லவா! அதுவும் யார் அந்த ஏழைகள்? ஆண்டுக்கு எட்டு லட்சம், அதாவது மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருமானம் உடையவர்கள் ஏழைகளாம்! பணத்திலும் வர்ணபேதம் பாரீர்! இந்த ஏழைகளுக்குத்தான் இடஒதுக்கீடு என்கிறது பி.ஜே.பி. அரசு.

கல்வி வேலை வாய்ப்புகளில் சமுக நீதிக்கு மரண அடி

1. நேரிடையாகவே சமஸ்கிருத மொழி திணிப்பு.

2. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மட்டுமே மத்தியப் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

3. கல்வியைக் காவிமயமாக்கிடும் வகையில் பாடத் திட்டங்களை மாற்றிடNCERT, Film and Television Institute of India (FTII), வரலாற்று ஆவணத் துறை போன்ற பலவற்றிற்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையே தலைவர்களாக நியமித்து, அதை அவர்கள் கண்விடல்!

4. சென்னை அய்.அய்.டி, அய்தராபாத் மத்தியப் பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் என்று வரிசையாக நாட்டில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் தலையீடும், வன்முறைகளும், அதிகாரமும், உரிமை மறுப்பும் தொடர்ந்து அரங்கேறுகின்றன.

5. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட ஆணை, ஆசிரியர் நாளை ‘குரு உத்சவ்’ என மாற்றி அமைத்தது, பள்ளிப் பாடங்களில் வரலாற்றுத் திரிபு என்று இப்படி கல்வித் துறை மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குருகுலக்கல்வி தொடர்பான 28.4.2018 அண்டு உஜ்ஜைன் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுல வித்யா கல்விப் பிரிவு உருவாக்கப்பட்டு அது மனித வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. விரைவில் இது பல்கலைக்கழகம் நிலைக்குழு மற்றும் தேசிய கல்வி சீரமைப்பு ஆணையத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு நாடு முழுவதும் குருகுலம் உருவாக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

புல்வாமா தாக்குதல்

காசுமீர் பள்ளத்தாக்கில் புல்வாமா பகுதியில் 14.2.2019 அன்று நடைபெற்ற தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பில்

44 இராணுவ வீரர்கள் பலியானார்கள்.

மோடியின் அய்ந்தாண்டு ஆட்சியில்,

498 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 524 இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்துள்ளனர்.

5000 போர் நிறுத்த மீறல்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால், இதையும் மோடி அரசியலாக்குகிறார்.

இப்படி பாதிப்புகளும், உரிமைப் பறிப்புகளும், சனாதன ஆதிக்கமும் ஏராளம் ஏராளம். இதுவரைச் சொல்லப்பட்டவை அவற்றுள் சில:

தேர்தல் அல்ல; தலைமுறைப் போர்!

நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பு என்பது வெறும் தேர்தல் அல்ல. அது தலைமுறைப் போர். ஆரியச் சிறுபான்மைக்கும், ஆரியர் அல்லாத பெரும்பான்மை மக்களுக்குமான தலைமுறைப் போர்.

எனவே, இந்தியா முழுமையும் உள்ள பார்ப்பனர் அல்லாத தலைவர்களும் மக்களும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள், காழ்ப்புணர்வுகளை மறந்து, ஜனநாயகமா? சனாதனமா? ஆரிய ஆதிக்கமா? ஆரியர் அல்லாதாரின் உயர்வா? பாசிசமா? மக்களாட்சியா? என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, நம்முடைய வருங்கால தலைமுறையினரின் பாதுகாப்பும், உரிமையும் காப்பாற்றப்படுவதற்காக ஒன்றுசேர்ந்து பி.ஜே.பி. ஆட்சியை ஒழித்தாக வேண்டும்.

அந்த இலக்கில் உறுதியாய் இருந்து ஜாதி, மதம், பணம், பதவி போன்ற பற்றுகளுக்கோ, சபலங்களுக்கோ, சுயநலத்திற்கோ இடம்தராமல், பி.ஜே.பி.யை இந்தியா முழுக்க தோல்வியடையச் செய்ய வேணடும். யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். எனவே, பி.ஜே.பி.யை தோற்கடிக்க நாம் எதையும் விட்டுக் கொடுக்க, இழக்க, தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும்

அதேபோல் தமிழகத்தில் பி.ஜே.பி.யின் பினாமியாய் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.வின் அடிமை ஆட்சியை உடனடியாக அகற்றியாக வேண்டும். எதிரிகளைவிட துரோகிகளே முதலில் ஒழிக்கப்பட வேண்டும். சுயநலத்திற்காக தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் துரோகம் செய்யும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற அ.தி.மு.க. அணியைப் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.

தூத்துக்குடியில் உரிமைக்குப் போராடிய உண்மைத் தமிழர்களைத் திட்டமிட்டு சுட்டுக் கொன்றது, எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களால் இயற்கை வளங்களை அழித்தது, மாநில உரிமைகளை முற்றிலுமாக விட்டுக்கொடுத்து, பி.ஜே.பி. ஆதிக்கத்தை வளர்த்தது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முடக்கியது, சாலைப் பணியாளர், மக்கள் நலப் பணியாளர் வாழ்வைப் பாழாக்கியது, உழவர் சந்தைகளை ஒழித்தது, நீட் தேர்வை அனுமதித்தது, அடித்தட்டு மக்களின் கல்வியைப் பறித்தது. ஆற்றுமணல், கனிம வளங்களைக் கொள்ளையடித்தது, இயற்கை வளங்களைக் கெடுத்தது என்று அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அடைந்த பாதிப்புகள் ஏராளம்.

பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜ.க._அ.தி.மு.க. அணியினர் திட்டமிடுகிறார்கள். அவர்களை படுதோல்வி அடையச் செய்து பாடம் கற்பிக்க வேண்டியது வாக்காளர் ஒவ்வொருவரின் கட்டாயக் கடமை!

திசை திருப்புவர் எச்சரிக்கை

நமது ஒரே இலக்கு பாஜக– அதிமுக ஆட்சியை அகற்றுவது தான். எதிரிகள் வேறு பிரச்சனைகளை கிளப்பி திசை திருப்புவர். அதற்கு பதில் சொல்லுவதைத் தவிர்த்து பாஜக – அதிமுக ஆட்சியை அகற்றவேண்டிய காரணங்களையே நாம் பேச வேண்டும்.

விழிப்போடு இருந்து தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து, அ.தி.மு.க._பா.ஜ.க. அணியை படுதோல்வி அடையச் செய்வோம், மக்களாட்சியையும், சமுக நீதியையும், சமத்துவத்தையும் காப்போம். ஆரியப் பார்ப்பான் ஆதிக்கத்தை அழிப்போம். இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும்! அதற்கு ஒன்றாக நின்றாக வேண்டும்! ஒருவிரல் புரட்சி செய்தாக வேண்டும்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *