அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்கச் சிறப்புக் கட்டுரை
கடந்த இதழ் தொடர்ச்சி ….
தந்தை பெரியார் சிறையில் இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்தை வழிநடத்தினார் . பெரியார் ஜாதி ஒழிப்பு போராட்டம் நடத்தியபோது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது இயக்கத்தை வெளியில் இருந்து நடத்தும் பொறுப்பை பெரியார் மணியம்மையாரிடம் ஒப்படைத்திருந்தார் .
இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்ற இரு தோழர்கள் சிறையிலேயே வீரமரணம் அடைந்தார்கள். இதில் ஒருவர் சடலத்தைக் கொடுத்த நிர்வாகம், இன்னொருவர் சடலத்தை கொடுக்க மறுத்தது. இதனால் கோபம் கொண்ட அம்மையார் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று அப்போதைய முதல்வர் காமராசர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இருவர் சடலத்தையும் பெற்றார். ஒருவர் உடலை சிறைக்குள்ளேயே புதைத்து விட்டார்கள். இருந்தாலும் தோண்டியெடுத்து வாங்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்தார்.
திருச்சியில் பெரியார் கல்வி நிலையங்களையும், மகளிர் காப்பகத்தையும் தொடங்கி அதன் நிர்வாகத்தை அம்மையார் கையில் ஒப்படைத்தார். அவர் ஆற்றிய பணிகளால் இன்று அந்த நிறுவனங்கள் ஆல்போல் வளர்ந்துள்ளன. காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அனாதைக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அக்காலத்திலேயே ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு வைத்தார்.
1973ஆம் ஆண்டு திராவிடர் இயக்கத்துக்குப் பெரிய சோதனை ஒன்று வந்தது. தந்தை பெரியார் மறைந்தார். திராவிடர் கழகத்திற்கு இனி தலைமையேற்கப் போவது யார்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.
1974ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 6ஆம் நாள் மணியம்மையார் திராவிடர் கழகத்தில் தலைவியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் . ஒரு மிகப் பெரிய சமூக சீர்திருத்த இயக்கத்துக்கு ஒரு பெண்ணே முதல் முறையாகத் தலைமையேற்றார். அய்யா (பெரியார்) அவர்கள் ஒவ்வொன்றிற்கும் நல்ல வழிமுறைகள், செயல் திட்டங்கள், கொள்கை விளக்கங்கள், பயிற்சிகள் நமக்கு தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன் படியே ஒரு நூலிழை கூடப் பிறழாமல் இயக்கம் நடக்கும் என்று மணியம்மை உறுதியளித்து அதன்படியே தனது பணியினைத் தொடர்ந்தார்.
தந்தை பெரியார் கடைசியாகத் திருவண்ணா மலையில் சொற்பொழிவாற்றி இருந்தார். அந்த இடத்தில் இருந்து அம்மையார் தனது பணியினைத் தொடங்கினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பெரியார் மறைவால் சோர்ந்திருந்த தொண் டர்களை உற்சாகப்படுத்தினார். தனது சிறந்த சொற் பொழிவுகளாலும், நிர்வாகத் திறமையாலும் தான் தலைமைப் பதவிக்கு ஏற்றவர்தான் என்பதை நிரூபித்தார்.
கிடப்பில் போடப்பட்டிருந்த அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி தான் தலைமைப் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, டெல்லி வந்த மத்திய அமைச்சர் ஒய். பி. சவானுக்கு கறுப்புக் கொடி காட்டினார்.
மணியம்மையாரின் புகழ் இந்தியா முழுவதும் பரவ ஒரு மிகப்பெரிய போராட்டம் காரணமாக இருந்தது. வடநாடுகளில் இராவண லீலா என்ற மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று ஆண்டு தோறும் நடைபெறும். இராமாயண காவியப் படி, தீயவனான இராவணனின் உருவப் பொம்மைகளை எரித்து மக்கள் கொண்டாடுவார்கள். இராவணன் திராவிட மன்னன், மாவீரன் என்பது திராவிடர் கழகத்தின் கருத்து. எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று திராவிட கழகம் கோரி வந்தது. 1974ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமதுவும் கலந்து கொள்வதாக இருந்தது. இது அம்மையாருக்குக் கோபத்தை உண்டாக்கியது. இருவரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதினார். மீறி கலந்து கொண்டால் திராவிட மக்கள் தமிழ்நாடு முழுவதும் இராமனின் உருவ பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்துவார்கள் என்று எச்சரித்தார்.
மணியம்மையாரின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். போராட்டம் அறிவித்த நிலையில் மணியம்மையாருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தாலும் தளராத மனத்தோடு 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இராமன், சீதை லட்சுமணன் உருவ பொம்மைக்குத் தம் கைகளாலேயே தீ மூட்டினார். தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அம்மையார் கைது செய்யப்பட்டார். 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்தத் தண்டனையை எதிர்த்து அம்மையார் வழக்குத் தொடர்ந்தார்.
அதன்பிறகு அம்மையார், தந்தை பெரியார் புகழ் பரப்புவதிலும், அவரது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதிலும், அவர் உருவாக்கிய நிறுவனங்களை கட்டிக் காப்பதிலும் தீவிரமாகப் பணியாற்றினார்.
இதற்கிடையில் நாட்டில் நெருக்கடி நிலை பிரக டனம் செய்யப்பட்டது. தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த நிலையிலும் அம்மையார் கழகத் தோழர்களைச் சந்தித்துச் செயலாற்றி வந்தார். நெருக்கடி நிலைக்குப் பிறகு தமிழகம் வந்த இந்திரா காந்திக்கு, 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் கறுப்புக்கொடி காட்டினார். இதற்காகக் கைது செய்யப் பட்டார்.
ஒரு மாபெரும் தலைவனின், தத்துவஞானியின் உடலையும், உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அதற்குப் பின்னர் அவர் உருவாக்கிய இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அவரது கொள்கையைப் பரப்ப வேண்டிய பணி, அவர் தொடங்கி வைத்த சமுதாயப் பணிகளைத் தொய்வின்றி நடத்த வேண்டிய பணி, இதுதவிர உரிமைக்கான போராட்டம் என்று தன் வாழ்க்கையையே போராட்டமாக அமைத்துக் கொண்ட மணியம்மையார் 1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் காலமானார்.
”மணியம்மையார் தந்தை பெரியாரை காத்தார். அவரது இயக்கத்தைக் காத்தார். தமிழ் இனத்தைக் காத்தார். சாதாரண உதவியாளராகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவியாக வாழ்ந்தபோதும் தனக்கென்று அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. தந்தை பெரியார் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி வைத்த சொத்துக்களைக் கூட அவர் இயக்கத்தின் பொதுச் சொத்தாக மாற்றினார்.”
மணியம்மையார் தந்தை பெரியாரை காத்தார். அவரது இயக்கத்தைக் காத்தார். தமிழ் இனத்தைக் காத்தார். சாதாரண உதவியாளராகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவியாக வாழ்ந்தபோதும் தனக்கென்று அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. தந்தை பெரியார் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி வைத்த சொத்துக்களைக் கூட அவர் இயக்கத்தின் பொதுச் சொத்தாக மாற்றினார்.
பொதுவாழ்விலும், போராட்டத்திலும் ஈடுபட்ட எத்தனையோ தமிழச்சிகள் இருக்கிறார்கள். அவர்களில் மணியம்மையார் என்றும் தனித்தன்மையோடு மிளிர்கிறார். அவரது வாழ்க்கையும், தொண்டும் இனி ஒரு பெண்ணால் வாழ்ந்து காட்ட முடியாததாக இருக்கிறது.
காலம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டாலும் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
(புதிய பார்வை, ஜூன் 16-30, 2017 இதழிலிருந்து…)
Leave a Reply