ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா?

ஜனவரி 1-15 2019

சிகரம்

“சுத்யும்னன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவன் க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவன். தருமசீலன், உண்மை நெறி தவறாதவன். மகாவீரன்! அவன் ஒரு நாள் காட்டில் வேட்டையாடுவதற்காகக் குதிரை மீதேறி சென்றான். அங்கு அடர்ந்த வனம் மேருமலையின் அடிவாரத்தில் இருந்தது. குளிர்ந்த நிழல் படர்ந்து இனிமையான காற்றும் வீசியது. மல்லிகை, மனோரஞ்சிதம், குருக்கத்தி முதலான மலர்க் கொடிகளும் செடிகளும் நிறைந்து மலர் மணம் கமகமவென வீசிக் கொண்டிருந்தது. குயில்கள் முதலான பறவைகள் மகிழ்ச்சியில் கீதமிசைத்து விளையாடின. இவற்றையெல்லாம் கண்ட சுத்யுமன மன்னன் மிகவும் குதூகலத்தோடு அந்த ஆனந்த உத்யான வனத்திற்குள் நுழைந்தான். அவன் நுழைந்த உடனே பெண்ணுருவம் அடைந்தான். அவன்  ஏறியிருந்த குதிரையும் பெண்ணுருவம் அடைந்தது.

‘இந்தப் பெண் வடிவத்தோடு எப்படி என் ராஜ்யத்துக்குச் சென்று ஆட்சி நடத்துவேன்? யார் என்னை இப்படி வஞ்சித்தார்களோ தெரியவில்லையே!’ என்று மனம் நொந்தான். அவனுக்கு அந்த நிலையில் ‘இளை’ என்ற பெயர் ஏற்பட்டது. பெண்ணாகவே வனத்திலேயே வாழ்ந்து வந்தான்.

அந்த வனத்திற்குள் நுழைந்ததும் பெண்ணாக மாறுவதற்கு ஒரு கதை உண்டு என சூத முனிவர் சொல்கிறார்.

ஒரு காலத்தில் சனகாதி முனிவர்கள் சிவபெருமானைப் பார்க்க விரும்பி, ஆகாய மார்க்கமாக அந்த உத்தியான வனத்தை நோக்கிப் பறந்து சென்ற கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வனத்தில், சிவசங்கரர் உமாதேவியோடு உல்லாசமாகக் கூடி மகிழ்ந்து கொண்டிருந்தார். அதை அறியாமல் சவுனகாதி முனிவர் சென்றமையால், அவர்களுடைய சரீர காந்தியானது வனம் முழுவதும் பிரகாசமாகப் பரவியது. அவ்வொளியால் சிவபெருமானோடு கூடிமகிழ்ந்து கொண்டிருந்த உமாதேவி, அவர்களைக் கண்டு நாணமுற்றாள். உடனே சிவசங்கரரின் மடியிலிருந்து உமாதேவி துள்ளியெழுந்து தன் அங்கத்தை ஆடையால் மறைத்துக்கொண்டு, வெட்கத்தோடு தலைகுனிந்து நின்றாள்.

உடனே சங்கரர், “தேவி! இந்த உத்தியானவனம் இன்றுமுதல் எவனொருவன் இதையறியாமல் இந்த வனத்துக்குள் நுழைகிறானோ அவன் பெண் உருவாக மாறக் கடவன்’’ என்று சாபமிட்டார். சுத்யும்ன மன்னன் அதை அறியாமல் அந்த வனத்தினுள் நுழைந்ததால் பெண் உருவமடைந்தான் என்றார் முனிவர்’’ என்கிறது இந்துமதம். வனத்துள் நுழைந்தால் ஆண் எப்படி பெண்ணாக மாறுவான். ஆண் பெண்ணாக மாற உடலில் எத்தனையோ இரசாயன மாற்றங்கள் நடந்தாக வேண்டும். அப்படியே மாறினாலும் உறுப்புகள் மாறிவிடாது. உணர்வு ரீதியாகத்தான் மாறுவான். அறுவை சிகிச்சையின் மூலம்தான் பெண் உருவத்தைத் தரமுடியும். அறிவியல் உண்மை இப்படியிருக்க, அதற்கு மாறாகக் கருத்துக்களைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாக இருக்க முடியும்?

“சந்திரனின் மகனான புதன் தேச சஞ்சாரம் செய்து கொண்டு வந்தான். அவன் இந்த வனத்தின் பக்கமாக செல்லும்போது வழியில் கட்டிளம் பெண்ணான இளையைப் பார்த்து மோகங் கொண்டான். இளையும் புதனைப் பார்த்து அவன் மீது அளவிலாத மோகங்கொண்டு, ‘ஓ, ஆணழகா உன்னை நான் புருஷனாகக் கொண்டு சுகிக்க விரும்புகிறேன் என்று ஆசையோடு கூப்பிட்டாள். இருவரும் கூடிக்கலந்து மகிழ்ந்தார்கள். இளை கருப்பவதியானாள். ஆண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு புரூரவன் என்று பெயர் வைத்தாள். இருப்பது காடு. அங்கு எப்படி நல்ல உணவு, மருத்துவர்கள் யாருமின்றி குழந்தை பிறக்கும்?

குலகுருவாகிய விசிஷ்டன் சத்யும்ன மன்னன் ஸ்திரி ரூபத்தில் குழந்தை ஈன்றதை தமது ஞான திருஷ்டியால் அறிந்தார். சுத்யும்ன மன்னனின் ஸ்திரி ரூபத்தை மாற்றுவதற்காக சிவபெருமானை நோக்கி வசிஷ்டர் தவம் புரிந்தார். அவர் முன் சிவபெருமான் தோன்றி “விசிஷ்டா! உனக்கு வேண்டும் வரத்தைக் கேள்! நான் தருகிறேன்!’’ என்றார்.

வசிஷ்டர் தலைவணங்கி சிவனாரைப் பணிந்து, “எம்மிறையனே! அடியேன் மீது நீங்கள் கருணை வைத்திருப்பது உண்மையானால் பெண்ணாக மாறியிருக்கும் சத்யும்ன மன்னன் மீண்டும் தன் ரூபத்தை அடையுமாறு அருள் புரிய வேண்டும்’’ என்றார். அதற்குச் சிவபிரான் அந்த வனத்தில் நுழைந்தாலும் பெண் ரூபம் அடையக் கடவது என்ற நாமே சபித்திருக்கிறோம். ஆகையால் அதை மாற்ற முடியாது. ஆனால், “அவன் ஒரு மாதம் ஆண் உருவம், மறு மாதம் பெண்ணுருவம் அடையட்டும்!’’ என்று அருள்புரிந்து மறைந்தார். வசிஷ்டர் மகிழ்ந்தார்.

வனத்துள் நுழைந்ததும் ஆண் பெண்ணாக மாறினான் என்று கூறும் இந்து மதம், அடுத்து, சாபத்தால் ஆண் பெண்ணாகவும் மீண்டும் ஆணாகவும் மாறுவான் என்கிறது. சாபத்தால் எதுவும் நடக்காது. வார்த்தைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்பதே அறிவியல். அப்படியிருக்க, சாபத்தால் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறியதாகக் கூறும் இந்து மதம் மடத்தனங்களின் தொகுப்பு என்பதற்கு மாறாய் அறிவியலுக்கு அடிப்படை என்பது அசல் மோசடியல்லவா?

“லஷ்மியின் தவத்தின் பயனாக, தேவியின் அருளினால் நாராயண மூர்த்திக்கும் லக்ஷ்மியின் நினைவு ஏற்பட்டது. அவரும் ஒரு குதிரை வடிவமெடுத்துச் சென்று பெண் குதிரையான லக்ஷ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன் விளைவாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்’’

பெண்ணொருத்தி குதிரையாக மாறமுடியுமா?

ஒரு சமயம், சூரியனின் மகனான ரேவந்தன், உச்சை ஸ்ரவம் என்னும் குதிரையின் மீது சவாரி செய்வதை மஹாலக்ஷ்மி பார்க்க நேரிட்டது. திருப்பாற்கடலில் தன்னுடன் உதித்த குதிரையான அதன் வனப்பை, வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது திருமால் ஏதோ அவளிடம் கூற அதைக் கவனிக்காது திருமகள் அந்தக் குதிரையிடம் மனத்தைப் பறிகொடுத்திருந்தாள். அதனால் கோபங்கொண்ட விஷ்ணு, “நீ பெண் குதிரையாகப் பிறக்கக் கடவாய்’’ என்று சபித்துவிட்டார்.

லஷ்மி அதனைக் கேட்டுக் கண்ணீர் விட்டு, “உமது பிரிய நாயகியான என்னையே சபிக்கலாமா? எனக்குச் சாப நீக்கந்தான் எப்போது?’’ என்று கேட்டாள். அதற்கு விஷ்ணு, “பூலோகத்தில் நமக்கு ஒரு புதல்வன் உண்டாகும் சமயத்தில் நீ வைகுண்டம் திரும்புவாய்’’ என்ற கூறினார்.

ஒரு வனத்தில் லஷ்மிதேவி குதிரை வடிவமெடுத்தாள். அவள் தனது சாப நீக்கத்தைக் கருதிச் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்தாள். சிவபெருமான் தரிசனம் தந்து, “செந்தாமரைச் செல்வியே! உன் கணவனான நாராயணன் ஆண் குதிரை வடிவமெடுத்து உன்னைச் சேர மகாதேவியை வழிபடு!’’ என்று கூறிவிட்டு மறைந்தார்.

அதன்படி லஷ்மி, தேவியை நோக்கித் தவம் செய்தாள். சிவபெருமான், சித்திரரூபன் என்னும் பூதகணத்தை அனுப்பி, லஷ்மி படும் துயரத்தை நாராயணனிடம் விளக்குமாறு கூறினார். சித்திரரூபன் நாராயணனிடம் சென்று லஷ்மிக்கு சாபநீக்கம் அளிக்கும்படி கூறினான்.

லஷ்மியின் தவத்தின் பயனாக, தேவியின் அருளினால் நாராயண மூர்த்திக்கும் லக்ஷ்மியின் நினைவு ஏற்பட்டது. அவரும் ஒரு குதிரை வடிவமெடுத்துச் சென்று பெண் குதிரையான லக்ஷ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன் விளைவாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்’’ என்கிறது இந்துமதம்.

சூரிய வமிசத்தில் பிறந்த யௌவனாஸ்வன் என்பவனுக்கு மக்கட்பேறே இல்லாததால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். அப்போது இரவில் அவனுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. அப்பொழுது அருகிலிருந்த யாகக் கும்பத்தி-லிருந்த தண்ணீரைக் குடித்தான். அதனால் யௌவனாஸ்வன் வயிற்றில் கர்ப்பமுண்டாகியது. அவனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு அவன் புதல்வனான மாந்தாதா வெளியே வந்தான் அவன் ஒரு பெரிய தேவி பக்தன். ஆகையால் அவனது புகழ் எங்கும் பரவியது. அவனுக்கு மாந்தாதா என பெயரும் சூட்டப்பட்டு அரசாட்சியும் வழங்கப்பட்டது’’ என்கிறது இந்து மதம். யாகத் தண்ணீர் குடித்தால் குழந்தை எப்படிப் பிறக்கும்? அறிவியலின்படி ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினையணுவும் சேர்ந்துதான் குழந்தை பெற முடியும். அதற்கு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டும். அறிவியல் உண்மை அது. ஆனால், தண்ணீரைக் குடித்தால் குழந்தைப் பிறக்கும் என்பது அடிமுட்டாள்தனம் அல்லவா? குடிக்கப்படும் தண்ணீர் இரைப்பையை அடைந்து சிறுநீராக வெளியேறும். அது கருப்பைக்குச் செல்லாது. அறிவியல் உண்மை அப்படியிருக்க, தண்ணீர் குடித்தால் குழந்தை பிறக்கும் என்று கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

(சொடுக்குவோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *