Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அம்மா பற்றி

அம்மா பற்றி அய்யா…

ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது. செப்டம்பர் பிறந்தால் 94ஆம் ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன். நான் சென்னைக்கு வந்தால் ‘உண்மை’ மாத இதழையும், சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன்.

சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப் போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில்தான் நடைபெறு கின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப் பண்ணை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக் கணக்கில் வாடகை வரும் பல கட்டடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டியிருக்கிறது.

நான் சென்னைக்கு வந்தால், மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்து விட்டால், திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.        
(‘விடுதலை’ – தலையங்கம் – 19-7-1972)

அம்மா பற்றி அண்ணா…

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது,
இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்.                     -அறிஞர் அண்ணா.

அம்மா பற்றி அய்யா…

மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு – தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண்டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.
– விடுதலை (15-10-1962)

அம்மா பற்றி அய்யா…

எனது காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும், நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரிது.
(தந்தை பெரியார் 89ஆம் பிறந்தநாள் விடுதலை மலர் 17-9-1967)

ஆண்கள் அனுமதியின்றி பெண்கள்
தொழில் துவங்கலாம் சவுதி அரசு அறிவிப்பு

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள், தொழில் துவங்க, ஆண்களின் அனுமதி இனி தேவையில்லை என, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில், இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது, அங்கு, 22 சதவீத பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்; இதை, 2030க்குள், மூன்றில் ஒரு பங்காக உயர்த்த முடிவு செய்துள்ளார். அதற்காகப் பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார். சவுதி விமான நிலையங்களில், பெண்களுக்கென்றே, 140 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பணிபுரிய, ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சவுதி பெண்கள், வாகனங்கள் ஓட்ட, பல ஆண்டு களாகவே அங்கு தடை இருந்தது; சமீபத்தில், அந்தத் தடை நீக்கப்பட்டது. இந்த வரிசையில், சவுதிப் பெண்கள், புதிதாக தொழில் துவங்க வேண்டுமானால், அதற்கு, தந்தை, கணவர் அல்லது சகோதரன் என, யாராவது ஒரு ஆண் உறவின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக சட்டம் இருந்தது. இனி, ஆண்களின் அனுமதி இன்றி, பெண்கள் தொழில் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.