அமைதிப் பூங்காவில் வம்பை விதைக்கலாமா?

பிப்ரவரி 16-28

 

அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீப்பிடித்துக் கொண்டதை ஒரு வாய்ப்பாக _ சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு, பார்ப்பன பா.ஜ.க _ இந்து முன்னணி வகையறாக்கள், நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஹிந்து அறநிலைய பாதுகாப்புத் துறை என்ற மகத்தான ஏற்பாட்டினைக் கலைத்துவிட்டு, பகற் கொள்ளைக் கூட்டமான பார்ப்பனர்களிடம் 38 ஆயிரம் கோயில்கள், மடங்களை ஒப்படைக்க வேண்டும் என்கிறார்கள்.

இப்போது தங்கள் வசம் ஏதோ தமிழக ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதுபோலவே எண்ணி கற்பனைக் குதிரையில் சவாரி செய்யும் பூணூல் கூட்டமும் இதற்குள் சிக்கிக் கொண்ட சில கூலிக்கும்பலும் ‘சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது’ என்று கூறுவார்களே, அதுபோல இக்கோரிக்கையை வைத்துள்ளனர்.

அதனை வலியுறுத்தி ‘ஹிந்துத்வா கருத்தினைப் பரப்பிட இப்போது எந்தச் சம்பவங்கள் நடந்தாலும் அதனைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஊடகங்கள், தொலைக் காட்சிக்கு வேறு ‘தீனி’ கிடைக்காத காரணத்தால் _ இதனை ஊதிஊதிப் பெருக்குகிறார்கள்!

கவிஞர் வைரமுத்து கட்டுரையை பிரச்சினையாக்கி, அதை ஒரு ஹிந்துத்துவ மூலதனமாக்கிட முயன்ற அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் என்ற பூணூல் திருமேனி, “எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்; கல்லெறியத் தெரியும்’’ என்று கூறி தங்களது ‘பூர்வோத்திரத்தை’ மறக்காமல், சொல்லி, கடைசியில், ‘நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்’ என்பதுபோல் ஆகி, மன்னிப்புக் கேட்ட நாடகம் நடந்தேறியது!

‘பார்ப்பனர்களுக்கு முன் புத்தியே கிடையாது!’ என்ற பெரியார்தம் அனுபவ அறிவுரைதான் எவ்வளவு சரியானது என்பது இப்போது புரிகிறது!

இவர்தம் தூற்றல் எத்தகைய எதிர்வினை உருவாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள சற்று நிதானபுத்தி வேண்டும்.

நாடாளுமன்ற மக்கள் அவையில் சில மாதங்களுக்கு முன் எதிர்க்கட்சிப் பொறுப்பில் உள்ள கர்நாடக எம்.பி. மல்லிகார்ஜூன கார்கே   அவர்கள், “கைபர் கணவாய் வழியே வந்த ஆரியக் கூட்டமே உங்களை எங்களுக்குத் தெரியாதா?’’ என்று முழக்கமிட்டது பதிவாகி உள்ளது!

சில நாட்களுக்கு முன் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் டி.இராஜா அவர்கள், “நீங்கள் இப்படி அதீதமாக நடந்துகொண்டால், (சு.சாமிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்) நாங்கள் ஆரிய_திராவிடர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுக்க வேண்டிவரும்’’ என்று முழங்கியதை நாடறியுமே!எனவே, ஒன்றைக் கொடுத்து ஒன்பது பெறும்  மகா அறிவுஜீவிகள் கூட்டத்திற்கு இப்போது இப்படி வாய்க்கொழுப்பு சீலையில் வடிகிறது போலும்!

கர்நாடகத்திலிருந்து ஒரு பார்ப்பன இணை அமைச்சர், மோடி அரசில் ஆனந்தகுமார் ஹெக்டே என்பவர், மதச்சார்பின்மையினர் டி.என்.ஏ. ஆராய்ச்சி செய்யும்படி தரம் தாழ்ந்து பேசி, நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்!

சர்.பி.தியாகராயர் கூறினார்.

‘பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான்

மிஞ்சினால் கெஞ்சுவான்’

If you lick he will kick
If you kick he will lick

என்று. அது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா? அக்காலத்தில் பார்ப்பனர் ‘புல் ஏந்தும் கையில் வாளேந்துவோம்’ என்று சேலம் பார்ப்பன மாநாட்டில் பேசியவுடன், நம் தலைவர்கள் கேட்டார்கள், ‘புல் ஏந்தும் கை வாளேந்தினால், வாளேந்தும் கை என்ன ஏந்தும்?’’ ‘விரல் உரலானால் உரல் என்னவாகும்?’ என்று!

எனவே அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் சமூக உறவுகளை பலப்படுத்த வேண்டும். கலகங்களுக்கு வித்திடக்கூடாது!

கி.வீரமணி,

ஆசிரியர்   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *