நம்முள் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லாரிடமும் போதியப் பண வசதி இருக்காது. எனவே ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியம்தான். மாத ஊதியம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பிறரும் அதிக சிரமமின்றி மருத்துவக் காப்பீடு பெறலாம்.
எல்லோர்க்கும் எளிது: தயக்கம் வேண்டாம்:
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுதோறும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டுமே! எல்ஐசி பாலிசி போன்று முதிர்வு நிலையில் பணம் கிடைக்குமா? எனப் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது மிகவும் தவறானக் கருத்து.
மருத்துவக் காப்பீட்டில் மனதில் கொள்ள வேண்டியவை:
மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியை எடுத்தவுடன், ஆண்டுதோறும் கெடு தேதிக்கு சில நாள்கள் முன்பு அதை புதுப்பிப்பது, மருத்துவக் காப்பீட்டுக்கு உரிய அடையாள அட்டையைப் பராமரிப்பது, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கும் மருத்துவமனைக்கும் இடையே செயல்படும் டிபிஏ எனப்படும் நிறுவனத்தின் (தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர்) தொலைபேசி எண், அதன் அமைவிடம் குறித்தத் தகவல்களை அறிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
பிரீமியம் செலுத்த எளிய வழி:
மாத ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியின் ஓராண்டு தொடர் வைப்புத் திட்டத்தில் (ஆர்.டி.) செலுத்தி வந்தால், மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியம் தொகையைச் சிரமமின்றிச் செலுத்த முடியும்.
ஆயுள் காப்பீடு போல, மருத்துவக் காப்பீட்டில் கெடு தீர்ந்த பிறகு பிரீமியம் செலுத்த நீண்ட கால அவகாசம் கிடையாது. கெடு தேதிக்குப் பிறகு பிரீமியம் தொகையைச் செலுத்த ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்வது அவசியம். அந்த ஒரு வாரத்துக்குள்ளாவது பாலிசியை புதுப்பிக்கத் தவறினால் பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். செல்போன், கடிதம் மூலம் உங்களுக்கு நினைவூட்டல் தவறாமல் கிடைக்கும்படி காப்பீட்டு நிறுவனத்துடன் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
பிரீமியம் தொகை எவ்வளவு?
எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டுப் பாலிசியைப் போன்றே மருத்துவக் காப்பீட்டிலும் காப்பீட்டுத் தொகையின் வரம்புக்கு ஏற்ப பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்படும்.
உதாரணமாக ஒரு பாலிசிதாரர் ரூ.2 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், சிகிச்சை பெறும் மருத்துவமனையின் படுக்கை வசதிக் கட்டணமாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.2,000 (காப்பீட்டுத் தொகையில் 1 சதவீதம் மட்டும்) மட்டுமே கோர முடியும். இந்தத் தொகைக்கு அதிகமாகப் படுக்கை வசதிக் கட்டணம் இருந்தால், அந்தக் கூடுதல் செலவை பாலிசிதாரர்தான் செலுத்த வேண்டும்.
இளம் வயதிலே எடுப்பது நல்லது:
தங்களது வருமானத்துக்கு ஏற்ப ஒருவர் மருத்துவக் காப்பீட்டுத் தொகையைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், குறைந்த வயது காரணமாக பிரீமியம் தொகையும் குறைவாக இருக்கும். மேலும் மருத்துவச் செலவுக்கான இழப்பீட்டைக் கோராத ஆண்டுகளில், மருத்துவக் காப்பீட்டைப் புதுப்பிக்கும் நிலையில், காப்பீட்டுத் தொகையைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பது நல்லது. இவ்வாறு செய்யும் நிலையில் வயது அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி திடீர் மருத்துவச் செலவு ஏற்படும் நிலையில் எளிதாகச் சமாளித்துவிடலாம்.
காப்பீட்டுத் தொகை பெறுவது எப்படி?
மருத்துவக் காப்பீட்டைப் பொருத்தவரை, முன்தொகை செலுத்தாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, மருத்துவச் செலவு செய்து விட்டு, செலவு செய்த பணத்தைத் திரும்பக் கோருவது என இரண்டு வகைகள் உள்ளன.
பாலிசி எடுத்துள்ள காப்பீட்டு நிறுவனத்துக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே தொடர்பாளராகச் செயல்படும் டிபிஏ நிறுவனத்தின் இணையதள முகவரியில் பாலிசிதாரர் சிகிச்சை பெற உள்ள மருத்துவமனை இணைப்புப் பெற்றிருந்தால் கட்டணம் எதுவும் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம். இந்தத் தகவலை நோயாளியை அனுமதிப்பதற்கு முன்பு குறிப்பிட்ட மருத்துவமனையிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும். டிபிஏ நிறுவனத்தின் இணைப்புப் பெறாத மருத்துவமனையாக இருந்தால் சிகிச்சைக்குச் செய்த செலவை வீடு திரும்பிய 15 நாள்களுக்குள் டிபிஏ நிறுவனத்தின் உரிய படிவத்தில் விண்ணப்பித்துப் பெற முடியும்.
எனவே மருத்துவக் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், மருத்துவக் காப்பீடு நிச்சயம் உதவும் என்பதை எல்லோரும் மனதில்கொள்ள வேண்டும்!
மருத்துவக் காப்பீட்டில் முதன்மை நிறுவனங்கள்:
¨ இந்தியாவில் பல ஆண்டுகளாக பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களான யுனைட்டெட் இந்தியா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகியவை, தனியார் நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு சேவை தொடங்கிய பின்னரும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.
பாதுகாப்பாக வைக்க வேண்டியவை
¨ மருத்துவக் காப்பீட்டு ஆவணங்களை (தொடர் ஆண்டு ஆவணம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீட்டில் உள்ளோருக்கு தெரியும் வகையில் பராமரிப்பது அவசியம். திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் வீட்டில் உள்ளோர் உடனடியாக அதை எடுத்து உதவி பெற முடியும்.
¨ மருத்துவச் செலவைத் திரும்பக் கோரும் நிலையில் நடப்பு பாலிசியின் நகலுடன் கடந்த மூன்று ஆண்டுகளின் பாலிசியின் நகலையும் இணைப்பது அவசியம். எனவே, முந்தைய ஆண்டுகளின் மருத்துவக் காப்பீட்டுப் பாலிசிகளைப் பராமரிப்பது அவசியம்.
¨ உடல்நலக் குறைவு ஏற்பட்டு புற நோயாளியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறத் தொடங்கும் நிலையிலேயே மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு, அவரது கட்டண ரசீது, ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்ட அறிக்கைகள், மருந்துகள் வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை ஒரு தனிக் கோப்பில் சேகரித்துக் கொண்டே வருவது நல்லது. ஏனெனில் உடல்நலக் குறைவு நீடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில், புற நோயாளியாக செய்த செலவுக்கும் மருத்துவக் காப்பீடு மூலம் தொகையைத் திரும்பக் கோர முடியும்.
¨ சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில் மருந்துகள் வாங்குவதற்கு ஆன செலவை 30 நாள்கள் வரை (ஒரு மாதம்) காப்பீட்டு நிறுவனத்தில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பெறலாம். எனவே மருந்துகள் வாங்கும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு, ரசீது ஆகியவற்றைப் பாதுகாப்பது அவசியம்.
¨ மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் வருமான வரிச் சட்டப் பிரிவு 80டி-இன் கீழ் அதிகபட்சம் ரூ.25,000 வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்களாக இருந்தால் அதிகபட்சம் ரூ.30,000 வரை வரி விலக்குப் பெறலாம்.
Leave a Reply