ஆவிகள் உண்மையா?

பிப்ரவர் 16-28

சிகரம்

“ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ஆவியுடல் மறைந்துள்ளது. இறந்தவுடன் அவ்வுடல் ஆவியுலகத்தை அடைந்து வாழ்கிறது.’’

“ஆவியுலகம், 1.பாவலோகம், 2.மத்தியலோகம், 3.புண்ணியலோகம் என்று மூன்று பிரிவுகளை உடையது.’’

“ஆவியுலகம் சென்ற ஆவி, தன் வாழ்வில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப இம்மூன்று உலகில் ஏதாவது ஒன்றில் வாழ்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் பிறவியெடுக்கிறது. அல்லது பிறவியே இல்லாமல் அருள் உலகத்திற்குச் சென்று விடுகிறது.’’

“ஆவி பிரியும்போது, வெண்மையான புகைபோன்ற நிலையில் உடலைவிட்டுப் பிரிகிறது.’’

“உயிர் என்பதற்குச் சிறப்புப் பெயரே ஆவி.’’
ஆவிகள் பற்றி, ஆவி நம்பிக்கையுள்ள சிலர் இவ்வாறு விளக்கம் அளிக்கின்றனர்.
வேறு சிலர்,

“ஆவிகள் வேறு, பேய் பிசாசுகள் வேறு.’’

“விபத்துகளால், தற்கொலையால் இறக்கிறவர்கள் பேய்கள், பிசாசுகள் ஆகின்றனர். இயல்பாக இறக்கின்றவர்கள் ஆவியாக வாழ்கிறார்கள்.’’

“ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சம உடல் உள்ளது. அது அந்த மனிதனின் கைப்பெருவிரல் உயரத்திற்கு இருக்கிறது. அது ஆவியாக அலைகிறது.’’

“இந்த சூட்சம உடல், ஒரு மனிதன் உயிரோடு இருக்குங் காலங்களில்கூட, அவரை விட்டு இரவு நேரங்களில் பிரிந்து வெகுதூரம் வரை சென்று வரும்.’’

“இறக்கும் மனிதனின் உடலிலிருந்து பிரியும் சூட்சம உடல், எமலோகத்திற்குச் சென்று, விசாரிக்கப்பட்டு, பின் வேறு உடல் கிடைக்கும்வரை பேயாகவோ அல்லது ஆவியாகவோ அலைகிறது.’’

“ஆவியானது கண்ணுக்குப் புலனாகாது.’’

“மனித உடலிலிருந்து பிரிந்து செல்லும் ஆவியானது, ஆவியுலகம் என்ற தனிப்பட்ட உலகில் வாழ்கிறது.’’

“மனிதன் இறப்பிற்குப் பின், அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனையோ (நரகமோ), சுகமோ (சொர்க்கம்) அனுபவிப்பது ஆவி உடல்தான்.’’

“அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள், தற்கொலை புரிந்து கொண்டவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவியுலகம் போக அனுமதியில்லை. அவர்கள் ஆயுட்காலம் முடிய பேயாக அலைவர்.’’

“ஆவியுலகம் புனிதமான உலகம். அந்த உலகில் குறை ஆவிகள் உள்ளே வரா.’’

“நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பேயாக அலையும் ஆவிகள் உயிருடன் உள்ளவர்களின் உடலுக்குள் புகுந்து, ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன. அதையே பேய் பிடித்தல் என்கிறோம்.’’

“இறந்துபோன ஆவிகள், இறக்கும்முன் என்னென்ன குணங்களைப் பெற்றிருந்தனவோ அப்படியே இறந்த பின்னும் இருக்கும்.’’

“இறந்துபோன ஆவிகள் நம்மைப் போன்ற மனிதர்களேயன்றி தெய்வங்கள் அல்ல. எனவே, அவற்றிற்கு புதிய சக்தி எதுவும் வந்துவிடாது.’’

“நல்ல ஆவிகள் வெண்மை நிறத்துடனும், தீய ஆவிகள் கரிய நிறத்துடனும் ஆவி உலகில் வாழ்கின்றன.’’

“ஆவி உலகில் வாழ்கிறவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நிகழப் போகிறது என்று தெரியாது. ஆனால், நடக்கின்ற செயல்களை அறிந்து வைத்திருப்பர்.’’

“இறந்துபோன ஆவி அறிவாளியாக இருந்தால் அந்த அறிவுத் திறனைப் பயன்படுத்தி தீர்வு காணலாம்.’’

“இறந்து போனவர்களின் ஆவிகள் திரும்பவும் ஒருபோதும் இறந்தவுடலில் சேராது.’’

“ஆவிகளுடன் பேசுவதற்கு சக்தி வாய்ந்த மீடியங்களின் உதவி தேவை. இல்லையேல் பேச முடியாது’’ என்று கூறுகின்றனர்.

உலக அளவில் ஆவிகள் பற்றி கூறப்படும் கருத்துக்களையே மேலே தொகுத்துக் கூறியுள்ளேன்.
இக்கருத்துக்களை கூர்ந்து கவனித்தால், கீழ்க்கண்ட கருத்துக்களைப் பெறமுடியும்.

ஒவ்வொரு உடலுக்குள்ளும் சூட்சம உடல் ஒன்று உள்ளது. இறந்தபின் அது ஆவியாக உலவுகிறது.

இறந்த பின் ஆவியுடல் எமலோகம் சென்று, தண்டனையோ அல்லது சுகவாழ்வோ பெறுகிறது.
ஆவியானது உடலிலிருந்து பிரியும்போது, வெண்மையான புகைபோல இருக்கும். சூட்சம உடலே ஆவியாகப் பிரிந்து செல்கிறது. அது கட்டைவிரல் அளவு உடையது.

ஆவி கண்ணுக்குப் புலனாகாது. உயிரோடு இருக்கும்போதே சூட்சம உடல், உறக்கத்தில் வெகுதூரம் வரை பிரிந்து சென்று மீண்டும் உடலுக்குள் வருகிறது.

இறந்தவர்களின் ஆவி ஒருபோதும் உடலில் திரும்பவும் வந்து சேராது.

உயிரோடு இருக்கும் போதுள்ள குணமே ஆவிகளுக்கும் இருக்கும். அதற்கு மனித சக்தி மட்டுமே உண்டு. அதைவிட அதிக ஆற்றல் கிடையாது. ஆவிகளால் எதிர்காலத்தை அறிய முடியாது.

இறந்துபோனவர்களின் அறிவுத் திறனை அவர்களது ஆவிகள் மூலம் பெறலாம்; பயன்படுத்தலாம்.

அரைகுறை ஆயுளில் இறக்கின்றவர்கள் பேயாக அலைவர், ஆவியாக அலைவதில்லை.

ஆவியுலகில் பேய் ஆவிகள் வராது. ஆவியுடன் நேரடியாகப் பேசமுடியாது. மீடியம் மூலமாகத்தான் பேசமுடியும்.

ஆவிகள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கூறுகின்ற மேற்கண்ட கருத்துக்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தால், அவற்றுள் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றன என்பது தெளிவாக விளங்கும்.
ஆவியென்பது, உயிருடன் இருக்கும் போது உள்ளுக்குள் இருக்கும் சூட்சம உடல்; அதைக் கண்ணால் பார்க்க முடியாது என்றார்கள்.

ஆனால், ஆவி கட்டைவிரல் அளவு உருவம் உடையது என்றும் கூறுகிறார்கள்!

கண்ணால் பார்க்கமுடியாத ஆவிக்கு உருவமும் அளவும் எப்படியிருக்க முடியும்? அதை எப்படி கண்டு கூறினார்கள்?

ஆவி உடலைவிட்டுப் பிரியும்போது வெண்மையான புகைபோல செல்லும் என்று கூறுகிறார்கள்.
கண்ணுக்குப் புலப்படாத ஆவிக்கு வெண்மையான புகையுருவம் எப்படியிருக்க முடியும்?

வெண்மையான புகையுருவம் உடைய ஆவிக்கு கட்டைவிரல் போன்ற வடிவம் எப்படி இருக்க முடியும்?

எவ்வளவு முரண்பாடு பாருங்கள்!

உடலில் இருந்து ஆவி, இறந்தபின்தான் பிரியும் என்கிறார்கள். அவர்களே உயிருடன் இருக்கும்போதே உறங்கும்போது ஆவி பிரிந்து வெகுதூரம் செல்லும் என்கிறார்கள்.

பிரிந்தபின் மீண்டும் உடலுக்குள் ஆவி வந்து சேராது என்கிறார்கள். ஆனால், உறங்கும்போது பிரிந்து சென்ற ஆவி மீண்டும் உடலுக்குள் வந்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

ஏதாவது ஒரு தெளிவு இருக்கிறதா பாருங்கள். உண்மையில்தான் தெளிவு இருக்கும். பொய்யில் குழப்பமும் முரண்பாடுமே நிலவும்.

எனவே, ஆவி நம்பிக்கை பொய்யானது என்பதற்கான அடையாளங்களே இம்முரண்-பாடுகள்.
மனிதனுக்கு உள்ள சக்தியே ஆவிக்கும் இருக்கும் என்கிறார்கள். ஆனால், அது அபாரமான காரியங்களைச் செய்வதாக பின்னால் கதையளக்கிறார்கள். அவற்றை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரிவாக விளக்கவிருக்கிறேன்.

ஆவிகள் வேறு, பேய்கள் வேறு என்று பிரிக்கின்றனர். இதுவே அறியாமையின் அடையாளம்.
விபத்திலும் தற்கொலையிலும் இறந்து போகிறவர்கள் பேயாகவும், இயற்கையாக இறக்கின்றவர்கள் ஆவியாகவும் அலைவார்கள் என்கின்றனர்.

ஆவி நம்பிக்கை கடவுள் நம்பிக்கையோடு தொடர்பு உடையது. கடவுள் நம்பிக்கை விதி நம்பிக்கையோடு தொடர்புடையது.

விதி நம்பிக்கைப்படி உலகில் எச்செயல் நடந்தாலும், அது இறைவன் விதித்த விதியின்படியே!
எனவே, நோயால் இறந்தாலும், விபத்தால் இறந்தாலும், கொலை செய்யப்பட்டாலும், தற்கொலை செய்து கொண்டாலும் அனைத்தும் விதியின்படியே!

அப்படியிருக்க, தற்கொலை செய்து கொள்வது மட்டும் விதிப்படியல்ல. அது மனித விருப்பத்தால் என்று எண்ணுவது தவறாகும்.

தற்கொலைச் செய்துகொள்ளக்கூடிய சூழலை உருவாக்கி, அவனுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்தியதும் விதியின் செயலே என்று கொள்ள வேண்டும்.

அப்படியிருக்க, இறப்புகள் அனைத்தும் விதிப்படியே – இறைவனின் ஆணைப்படியே என்று பொருள். அவ்வாறாயின் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றவர்களும் ஆயுள் முடிந்துதான் இறக்கிறார்கள் என்றே பொருள். அப்படியிருக்க அவர்களுக்கு வாழவேண்டிய ஆயுள் எஞ்சியிருப்பதாகவும், அதுவரை அவர்கள் பேயாக அலைவார்கள் என்றும் எண்ணுவது அறியாமையாகும்.

மேலும் இறக்கின்றவர்கள் அனைவரும் எமலோகம் சென்று அங்கு விசாரிக்கப்பட்டு, தண்டனை அல்லது நன்மை பெற்று அதற்கேற்ப சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்வார்கள் என்றால், அவர்கள் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோதானே வாழ வேண்டும்? அது உண்மையானால், இறந்து போனவர்கள் ஆவியாகவோ, பேயாகவோ அலைகிறார்கள் என்பது அப்பட்டமான பொய்தானே?

இறந்துபோனவர்கள் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோதான் வாழ்வார்கள் என்பது உண்மையானால் ஆவியுடன் பேச அழைக்கும்போது அவர்கள் எப்படி வர இயலும்? ஆவிகளுடன் நாம் எப்படி பேச முடியும்?

இறந்து போனவர்கள்தான் ஆவியுலகம் செல்ல முடியும்; அவர்கள்தான் சொர்க்கம், நரகம் செல்ல முடியும் என்றால், உயிருடன் உலகில் வாழ்ந்தவர்களுக்கு அது எப்படி தெரிந்தது?

இறந்தவர்கள் தங்கள் அனுபவத்தை வந்து சொல்ல இயலாது, உயிருடன் இருப்பவர்கள் அங்கு செல்ல இயலாது, அப்படியிருக்க எமலோகம், சொர்க்கலோகம், நரகலோகம் இவற்றையெல்லாம் பற்றி எவ்வாறு உயிருடன் உள்ளவர்கள் தெரிந்து கொண்டார்கள்?

தெரிந்துகொள்ள முடியாது எனின் இவை அனைத்தும் கற்பனைகள்தானே?

ஆக, மேற்கண்ட கற்பனைகளும், ஆவியைப் பற்றிய முரண்பட்ட கருத்துக்களும் ஆவிகள் இல்லையென்பதற்குப் போதிய ஆதாரங்கள் ஆகும்.

ஆவி உண்டென்பது உண்மையானால் அது எல்லோருடனும் பேச வேண்டும். குறைந்தது அவர்களின் உறவினர்களுடனாவது பேச வேண்டும். ஆனால், அவ்விதம் ஆவிகள் பேசாது, ஆவியுடன் பேச இடையில் ‘மீடியம்’ ஒன்று தேவை; மீடியமாகச் செயல்படுகின்றவர் மூலந்தான் ஆவி பேசும் என்கிறார்கள்.

அப்படியென்றால் ஆவி என்பது எல்லோர் கண்ணுக்கும் புலப்படாது, எல்லோருடனும் பேசாது என்று அர்த்தம்.

எல்லோர் கண்ணுக்கும் தெரியக்கூடிய ஒன்றைத்தான் காமிராவில் படம் பிடிக்க முடியும். எல்லோருக்கும் தெரியாத ஒன்றை காமிராவில் படம் பிடிக்க முடியாது.

ஆனால், ஆவியை காமிராவில் படம் பிடித்துள்ளார்கள் என்று ஆவி நம்பிக்கையாளர்கள் கூறுவது அப்பட்டமான பொய்தானே?

ஆவியை கண்ணால் பார்க்க முடியாது என்றால், அது வெண்மையானது என்று எப்படி கண்டார்கள்? தீய ஆவிகள் கறுப்பு நிறத்தில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஆவியின் நிறம் கருப்பா, வெள்ளையா என்று எப்படி கண்டார்கள்? ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆவியோடு நேரடியாகப் பேச முடியாது. மீடியம் மூலமாகத்தான் பேச முடியும் என்று நிபந்தனை வைத்திருப்பதே, ஆவிப் பிரச்சாரம் அப்பட்டமான மோசடி என்பதற்கு ஆணித்தரமான ஆதாரமாகும்.

இடையில் ஒன்று என்பதே ஏமாற்று வேலைக்கு அடிப்படை. ‘மந்திரம்’ செய்கிறவன் எந்த ஒன்றையும் வெளிப்படையாகச் செய்ய மாட்டான். கருப்புத் துணியில் மூடுவான்; டப்பாவுக்குள் வைப்பான்; பெட்டிக்குள் வைத்து மூடுவான்; திரைக்குப்பின் வைப்பான். இப்படி ஏதாவது ஒன்றை இடையில் வைத்துத்தான் ஏமாற்று வேலை செய்வான்.

அதேபோல், ஆவியோடு பேசுகிறேன் என்று ஏமாற்றுகின்றவர்களுக்கு பயன்படும் கருவிதான் ‘மீடியம்’ என்ற இடைப்பட்ட ஆள்

எனவே, ஆவி என்பது பொய்; கற்பனை என்பதும் அதை வைத்து நடத்தும் ஆவிப் பிரச்சாரம் மோசடி என்பதும் தெளிவாகிறது. மேலும் தெளிவு வேண்டின் ஆவிகள் சம்பந்தமான மறுப்பு நூல்களைப் படியுங்கள்! தெளிவு பெறுங்கள்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *