வள்ளுவரை “வாழ்த்தி” ஒழிக்க முயலும் குள்ளநரிக் (ஆர்.எஸ்.எஸ்) கூட்டம்

ஆகஸ்ட் 01-15

முதலையின் முதுகிலேறி ஆற்றைக் கடக்க தமிழறிஞர்கள் முயற்சிக்கலாமா?

– மஞ்சை வசந்தன்

வள்ளுவர் உலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, உயர்ந்த உன்னத, சிந்தனையாளர். 2000 ஆண்டுகளுக்கு முன் அப்படிப்பட்ட சிந்தனைகளை உலகில் எவரும் வழங்கியவர் இல்லை. அவர் ஒரு மொழிக்கோ, ஒரு இனத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ உரிய கருத்துக்களை வழங்காது உலகம் முழுமைக்குமான உயரிய சிந்தனைகளை வழங்கியவர்.

உலக அதிசயங்களில் எக்காலத்திலும் வீழ்த்த முடியாத முதன்மையான அதிசயம் திருக்குறள். இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்து அதைப் படிப்போரும் வியந்து பாராட்டி, பின்பற்றவே செய்வர். அச்சிறப்பு அந்த நூலுக்கு மட்டுமே உண்டு.

இட்டுக்கட்டி இழிவுபடுத்திய ஆரியர்கள்

மனிதநேயத்திற்கு எதிரான, ஆரிய பார்ப்பனர்களின் வருணாசிரம, சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, மனிதநேயச் சிந்தனைகளை திருக்குறள் மூலம் முழங்கியவர், வழங்கியவர் வள்ளுவர். பிறப்பால் பேதம் பிரித்த ஆரியர் கொள்கைக்கு எதிராய் “பிறப்பொக்கும்’’ என்ற சமத்துவச் சிந்தனையை ஓங்கி முழங்கியவர்.

ஆனால், அவரது அறிவுக் கூர்மையை, சிந்தனைத் தெளிவை, அளப்பரிய ஆற்றலை மறுக்க முடியாத ஆரியர்கள், அவரை இழிவுபடுத்தி ஆறுதல் அடைந்தனர். அவரது அறிவுக்கும் ஆற்றலுக்கும் காரணம், அவர் ஓர் ஆரிய பார்ப்பானுக்குப் பிறந்ததுதான் என்று இட்டுக்கட்டி கதைமூலம் இழிவுபடுத்தினர்.

வள்ளுவருக்கு வரலாறு இல்லை!

வள்ளுவர் பற்றி உறுதி செய்யப்பட்ட வரலாறு இல்லை. கற்பனைக் கதைகள் மட்டுமே உண்டு. அவர் வடிவமே கற்பனையாக வரையப்பட்டது, செதுக்கப்பட்டதேயாகும். உண்மை இப்படியிருக்க, அவர் பறைச்சிக்கும், ஆரிய பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்று அயோக்கியத்தனமாக, அற்பத்தனமாக கதை புனைந்தனர்.

ஆரிய பார்ப்பானே அறிவுக்கு உரியவன்; அடுத்த ஜாதியான் யாராவது அறிவாளியாய் இருந்தால் அவன் ஆரிய பார்ப்பானுக்குப் பிறந்தவனாகவே இருக்க முடியும் என்று ஆணவத்தோடு கூறியலைந்தனர். அதன் விளைவாய்ப் புனையப்பட்டதே வள்ளுவர் பிறப்புப் பற்றிய கதை.

ஆனால், அவர் ஆரியர்க்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய தூயத்தமிழர் என்பதை எவரும் மறுக்க இயலாது. உலக அளவில் ஒப்பிலா பெருமை ஒரு தமிழனுக்குக் கிடைக்கிறதே! ஒரு தமிழ் நூலுக்குக் கிடைக்கிறதே என்ற வயிற்றெரிச்சல் ஆரிய பார்ப்பனர்களுக்கு அன்று முதல் இன்றுவரை ஆறாமலே இருந்து வருவதன் விளைவுதான், இன்றைக்கு நடத்துள்ள அவலங்களுக்குக் காரணம்.

தமிழர்க்கு இல்லாத அக்கறையா?

வள்ளுவரை எப்படிப் பெருமைப்படுத்த வேண்டுமோ அப்படியெல்லாம் தமிழர்களும், தமழக அரசும் செய்துவரும் நிலையில், அவரை இந்தியா அளவிலும், உலக அளவிலும் எடுத்துச் செல்ல முயற்சிகள் நடக்கின்றன. அப்படியிருக்க தமிழர்கள் முயற்சிக்கு வடமாநில மக்கள் உதவியாய் இருந்து செயல்பட்டாலே போதும்.
மாறாக, தமிழர்களுக்கு இல்லாத அக்கறை தங்களுக்கு வந்துவிட்டதுபோல ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் வேடமிட்டு வினையாற்றுவது சூழ்ச்சி, சதி, அணைத்தழிக்கும் முயற்சி என்று தமிழர் தலைவர் கி.வீரமணி போன்றவர்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் தலைவர் கூறியவை தவறாமல் நடக்கின்றனவே!

மக்களிடம் எக்கொள்கை செல்வாக்குப் பெறுகிறதோ, யார் செல்வாக்கு பெறுகிறார்களோ அவர்களை _ அக்கொள்கையை ஏற்று செரித்து அழிப்பதே அன்றுதொட்டு ஆரியத்தின் சதிவேலை! புத்தத்தை அப்படித்தான் அழித்தனர்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் பரவி, பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்ட புத்தத்தையும், உயிர்நேயத்தையும், ஆரியர்கள் உள்வாங்கி அழித்தனர்.

ஆரியர்களின் யாகப் பலிகளை கடுமையாக எதிர்த்து உருவானது புத்தம். புத்தம் உருவாவதற்கு முன்புவரை மாடுகளை நெருப்பில் தள்ளி சுட்டு, அவற்றின் மாமிசத்தை உண்டு கொழுத்த ஆரிய பார்ப்பனர்கள், புத்தர் உயிர் நேயக் கொள்கை தங்களுடையது என்று உள்வாங்கி புத்தத்தை அழித்தனர்.

அதேபோல், ஆரிய கோட்பாட்டிற்கு எதிராய் குரல் எழுப்பிய வள்ளுவத்தின் மனித நேயச் சிந்தனைகள் உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஏற்றுப் போற்றப்-படுவதைக் கண்டு பொறாத ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டம், அவரை உள்செரித்து ஒழிக்க, அவரைப் போற்றி ஏற்றுவதுபோல் புதைகுழியுள் புதைக்க சதிவலை பின்னி  வருகின்றனர்.

தருண் விஜய் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்; ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஹிந்தி “பாஞ்சன்யா’’ என்ற இதழின் ஆசிரியர். சமஸ்கிருதம் இந்தியாவின் ஒரே பொது மொழி ஆகவேண்டும் என்று, வழக்கொழிந்த மொழிக்கு வாழ்வு கொடுக்க முயற்சிப்பவர்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி நயவஞ்சகத்தால் வீழ்த்துவதே இவர்களின் வாடிக்கை. எனவே, தமிழர்களும், தமிழகத் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதை தமிழ் அறிஞர்கள் ஏற்று எச்சரிக்கையுடன் நடக்காததாலே இன்றைக்கு இந்த இழிவு; அவலம் எல்லாம்.

வைத்தியநாதன்களிடம் வைரமுத்துக்கள் ஏமாறலாமா?

வைரமுத்து நல் தமிழ் உணர்வும், தமிழர் பற்றும் உடைய அறிவுநுட்பம் உடையவர். அப்படிப்பட்டவர் சோவின் சீடரான ஆர்.எஸ்.எஸ். வைத்தியநாத அய்யரிடம் ஏமாறலாமா? தமிழ் தொண்டாற்றுகிறேன் என்று சொல்லி தமிழறிஞர்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டு, சோவின் அடியொற்றி அப்படியே நடக்கக் கூடியவர் தினமணி வைத்தியாநாதன். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள். இன்று தமிழுக்கு விழா எடுத்தாலும், திருவள்ளுவருக்கு சிலையெடுத்தாலும் அவை தூண்டிலில் கோர்க்கப்படும் இரை போன்றவை என்பது தீர்க்கமான சிந்தனையுடையவர்களுக்குப் புரிய வேண்டுமே!

மோடி வந்தால் அப்படியே இந்தியா உலகின் உச்சிக்குச் சென்றுவிடும் என்று எத்தனைப் பசப்பு வேலைகளைச் செய்தார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் வளர்ச்சி வந்ததா? ஆர்.எஸ்.எஸ்.இன் அஜண்டாதானே ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கிறது.

இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டவும், தமிழின் உயர்வை புறக்கணித்து, சமஸ்கிருதத்தைத் தூக்கி வளர்க்கவும், தேசிய மொழியாக்கவும், திருக்குறள் இருக்க பகவத் கீதையை தேசிய நூலாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும், அவற்றை சோக்களும், வைத்தியநாதன்களும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிப்பதும் புரியாமல் போவதேன்?

தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்று ஆணையிட்டு, தமிழைச் செம்மொழி யென்று அறிவிக்கச் செய்து, தமிழுக்காக அருந்-தொண்டாற்றும் கலைஞரை ஒழித்துக்கட்டி, சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டுகளை தமிழாண்டு என்று சொல்லி, செம்மொழியைச் சீர்குலைத்து, அண்ணா நூலகத்தையே அழித்தொழித்த ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தத் துடித்த சோவும், வைத்தியநாதனும் எப்படி தமிழர்க்கும்,
திருவள்ளுவருக்கும் தொண்டாற்றிவிடுவார்கள்? அணைத்து அழிக்கும், வாழ்த்தி வீழ்த்தும் சூழ்ச்சிக்-காரர்களிடம் வைரமுத்துக்கள் கைகோர்த்து தமிழுக்கு தொண்டாற்ற முற்படுவது அவர்களின் சூழ்ச்சிக்குத் துணை செய்வதாகவே அமையும். முதலையின் முதுகிலேறி ஆற்றைக் கடக்க தமிழறிஞர்கள் முயற்சிக்கலாமா?
திருக்குறளைத் தேசிய நூலாக்கவும், திருவள்ளுவருக்கு மத்திய அரசின் சார்பில் மாநிலந்தோறும் சிலை வைக்கவும் இவர்கள் முயற்சிப்பார்களா? நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

அரசின் சார்பில் திட்டமிட்டு செய்யப்பட வேண்டிய செயலை அய்ந்தாறு பேர் சேர்ந்துகொண்டு செய்வதன் நோக்கம் என்ன?

ஒரு இடத்தில் சிலை வைத்து அதை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்பதுதானே அப்பட்டமான உண்மை. அந்த ஒரு சிலையை வைப்பதற்குள் வள்ளுவருக்கு ஜாதியைக் கற்பித்து, வள்ளுவர் சிலையை தரையில் தள்ளி, வள்ளுவருக்கு எதிர்ப்பைக் காட்டி, அவரது பெருமையை குலைத்-துள்ளார்கள் என்றால், இன்னும் என்னென்ன எதிர்காலத்தில் நடக்கும்?

கங்கை கரையில் உள்ள ஹர்க் கி பூரி (பிணீக்ஷீ ரிவீ றிuக்ஷீவீ ) என்ற இடத்தில் உள்ள ‘கங்கா சபா’ முன், திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என்பதுதான் ஏற்பாடு. தருண்விஜய் எம்.பி. அவரது எம்.பி. நிதியிலிருந்து ஆகும் செலவினத்தையும் தருவதாகச் சொன்னார்.

இதற்கு 1) ‘கங்கா சபா’ 2) அகில் பாரதீய தீர்த் புரோகித் மஹாசபா என்ற ஹரித்துவாரின் புரோகிதக் கூட்டத்தார், அமைப்பினர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்!

“கங்கை என்பதே கடவுள்(ச்சி) தான் மற்ற தெய்வத்திற்கோ, தெய்வப் புலவர்களுக்கோ, எதற்கு இடம் -_ கூடவே கூடாது” என்றார் _- கங்கா சபாவின் தலைவர், புருஷோத்தம்தாஸ் ஷர்மாகாந்திவாதி என்பவர்!
இவர்களது கடும் எதிர்ப்பு காரணமாக, திருவள்ளுவர் சிலை கங்கா சபா முன் நிறுவப்படும் திட்டம் – மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி சற்று தூரத்தில் உள்ள ‘சங்கராச்சாரியா சவுக்’ என்ற இடத்தில் ஆதி சங்கரர் சிலை அருகில் 29.6.2016 புதன் அன்று திறப்பதென மாற்றப்பட்டது. அதில் கலந்து கொள்ள 5 மாநில ஆளுநர்களும், முதல்வர் ஹரிஷ்ராவத்தும் அழைக்கப்-பட்டிருந்தனர்.

“கீழ்ஜாதிக்காரனான வள்ளுவன் சிலையை ஆதிசங்கரருக்குப் பக்கத்தில் வைக்கலாமா? இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்’’ என்று சாமியார்கள் எதிர்த்தனர். இந்த சாமியார்களுக்கு சுவாமி ஸ்வரூப்பானந்த சரஸ்வதி (என்ற சங்கராச்சாரி) பெரும் ஆதரவு தெரிவித்தார்.

இரண்டாவது இடமான ‘சங்கராச்சாரியா சவுக்’ என்னு மிடத்திற்கு சிலையை நகர்த்தியதை எதிர்த்து, யார் யாருடைய சிலையையெல்லாம் -_ அதுவும் ஆதிசங்கரர் சிலை அருகில்  கொண்டு வந்து வைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம். காரணம், அந்த திருவள்ளுவர் ஒரு கீழ் ஜாதிக்காரப் புலவர்.

அரசியல் லாபம் பெற தருண்விஜய், இப்படி வித்தைகள் செய்கிறார் என்று ஹரித்துவார்காரரே கூறுகிறார்.

 

“எங்கள் ஆதிசங்கரர் டிரஸ்ட்டுக்காக டில்லி -_ ஹரித்துவார் நெடுஞ்சாலையில் 1980இல் எங்களுக்கு _- எங்கள் டிரஸ்ட்டுக்கு வழங்கப்பட்ட இந்தப் பகுதி நிலத்தில் வேறு எவரும் பிரவேசிக்க _- ஆக்ரமிக்க _- சிலை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்கள்.

உலகமே ஏற்றுக்கொண்ட வள்ளுவரை, இந்தியாவில் எல்லோரும் ஏற்கவில்லை என்று ஒரு பொய்யான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சிதானே இவர்கள் சிலைவைக்கும் முயற்சி?

ஓர் இடத்தில் சிலை வைப்பதற்கு முன் அனுமதியாகப் பெற்று, அங்குள்ள மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகையில் சிலை வைப்பதுதானே சரியான அணுகுமுறை. அதைவிடுத்து ஒண்டுக்குடுத்தனக்காரனைப் போல, வள்ளுவரை ஓடஓட விரட்டியடிப்பது அவமானப்படுத்தும் நோக்கல்லவா?

பூங்காவில் நிறுத்தி தரையில் தள்ளிய அவலம்!

இரண்டு இடங்களிலும் எதிர்ப்புக்காட்டி, வள்ளுவர் சிலையை எங்கு வைப்பது என்று தெரியாமல், வள்ளுவரை அனாதையாக்கி, இறுதியில் பூங்காவில் கொண்டுவந்து வைத்து, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையென்று ஒரு போலித்தனமான தீர்வு கண்டனர். ஆனால், என்ன ஆயிற்று? அந்த இடமும் நிலைக்கவில்லை. தலைநிமிர்ந்து நிற்கும் தரணி போற்றும் வள்ளுவரைத் தரையில் தள்ளி, படுதாவால் மூடி இழிவுபடுத்தினர்!

தமிழர் தலைவர் வேதனை!

“இப்படிப்பட்ட அவமானம் திருவள்ளுவருக்கு ஏற்பட்டது தேசிய அவமானம் அல்லவா? தேவையா இது?
திருவள்ளுவருக்கே “ஜாதி முத்திரை” _- எனவே ஆதிசங்கரர் சிலைக்கு அருகில் வைத்தால் தீட்டுப்பட்டு விடுமாம்! என்னே கொடுமை!

5 மாநில ஆளுநர்கள், ஒரு முதல் அமைச்சர், எல்லாவற்றையும்விட பிரதமர் மோடி மிகப் பெருமையுடன் கூறிக் கொள்ளும் அவரது தொகுதியும்கூட, அங்கே திருவள்ளுவருக்கு இப்படி ஏற்பட்ட அவமானம் துடைக்கப்பட வேண்டாமா?

வர்ண _- ஜாதியால் திருவள்ளுவரை அளந்து அவமானப்படுத்தப்படுவது சகிக்கத்தக்கதா, ஏற்கத்தக்கதா?
நடுநிலையாளர்களே! சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி _- ஆட்சியாளர்கள் பற்றி, வாய்மூடி மவுனிகளாக அவமானப் புழுக்களாகத்தான் தமிழர்கள் -_ திராவிடர் திருவள்ளுவரின் பரம்பரையினராகிய நாம் இருக்க வேண்டுமா? உங்களுக்கே விட்டு விடுகிறோம்!’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மனம் நொந்து வெந்து வேதனையுடன் கூறியுள்ளதை ஒவ்வொரு தமிழரும் உள்ளத்தில், உணர்வில் கொள்ள வேண்டாமா?

அடுத்து ஒப்புக்காக, அவமானத்தை மறைக்க ஓரிடத்தில் வள்ளுவர் சிலையை நிறுத்தி வைத்தால் அது நிரந்தரத் தீர்வாகாது.

உலகின் ஒப்பற்ற அறிஞர் திருவள்ளுவருக்கு பெருமை செய்ய நினைத்தால் மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து, திட்டமிட்டு, திருக்குறளை இந்தியா முழுக்க எல்லா மொழியிலும் எல்லா மக்களுக்கும் கற்பிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். திருக்குறளின் கருத்தை, சிறப்பை, வாழ்க்கைக்கு அதன் பங்களிப்பை இந்தியர் ஒவ்வொருவரும் உணரும்படி செய்யவேண்டும்.

இதைச் செய்தாலே, அந்தந்த மாநிலத்திலும் மக்களே திருவள்ளுவருக்குச் சிலை வைக்க முன்வருவர். திருவள்ளுவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவர்.

அதை விட்டுவிட்டு, தான்தோன்றித்தனமாக, ஆளாளுக்கு, சுயவிளம்பரமும், பெருமையும் தேடிக்கொள்ளவும், வள்ளுவரை வைத்து தமிழரின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற அற்ப ஆசையில், அவசரகதியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க முயற்சிப்பதும், விழா எடுக்க முயற்சிப்பதும் உண்மையில் திருவள்ளுவருக்குப் பெருமை சேர்க்கும் முயற்சிகள் ஆகாது.

மாறாக, வள்ளுவரை வாழ்த்தி வீழ்த்த, அணைத்து அழிக்க முயலும் வஞ்சகச் சூழ்ச்சியாகவே அமையும்.
வள்ளுவருக்கு கிடைத்த இடத்தில் சிலை ஒன்றை வைப்பது, வள்ளுவரைக் காட்சிப் பொருளாக ஆக்கும் செயலேயாகும்.

வள்ளுவர் ஒரு மதத்தையோ, ஒரு ஜாதியையோ சேர்ந்தவர் அல்லர். அவரின் திருக்குறளும் ஒரு மதத்தையோ, ஒரு பிரிவையோ சேர்ந்தது அல்ல.

அவர் உலகை ஒரு குடும்பமாக ஒப்புநோக்கிய உயர் சிந்தனையாளர். மனித நேயத்தின் மறுவடிவம். வாழ்வியல் அறிஞர். அவரை இந்தியா மட்டுமல்ல. உலக மக்கள் அனைவருமே ஏற்றிப் போற்றிக் கொண்டாட வேண்டும். அதற்கு முதல்படியாக திருக்குறளை உலகிலுள்ள ஒவ்வொருவர் கையிலும் அவரவர் மொழியில் கொண்டு செல்ல வேண்டும். அதுவே, வள்ளுவர்க்குப் பெருமை சேர்க்கும் வழி. இதற்கு தமிழர்கள் அனைவரும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அயல்நாடுகளில் வாழும் தமிழர்களும் குறள்நெறிப் பற்றாளர்களும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *