வரலாற்றைத் திரிக்க முயலும் வகுப்புவாத சக்திகள்! – மஞ்சை வசந்தன்

அக்டோபர் 16-31

அடுத்தவருடையதை அபகரித்து தனதாக்கி ஆதிக்கம் செலுத்துவது தான் ஆரிய பார்ப்பனர்களின் அடிப்படைக் கொள்கை.

அவ்வகையில் தமிழர் மண்ணை அபகரித்து தனது நாடு (ஆரிய நாடு) என்றனர்.

தமிழ் மொழியை அபகரித்து எழுத்துகளை மாற்றிப் புரட்டிப் போட்டு சமஸ்கிருதத்தை உருவாக்கி சமஸ்கிருதத்திற்குப்பின் வந்தது தமிழ் என்றனர்.

 

தமிழில் உள்ள உயரிய நூல்களில் உள்ள கருத்துக்களை யெல்லாம் திருடி தமிழ் மூலத்தை அழித்து, அக்கருத்துக்கள் தங்களுடையது என்று மோசடி செய்தனர்.
புத்தத்தின் செல்வாக்குக் கண்டு பொறாது, அதிலுள்ள கொல்லாமை, புலால் உண்ணாமை போன்றன தங்களுடைய கொள்கையென்று ஏமாற்றி ஏற்கச் செய்தனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நடக்கும் ஆரியர்களின் இந்த மோசடி இக்காலத்திலுடம் தொடர்ந்து நடக்கிறது.

இந்த மோசடிகளை இக்காலத்தில் செய்ய, அதிகாரத்தைப் பயன்படுத்த முடிவு செய்து, தாங்கள் எப்பொழுதெல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார்களோ அப்போ-தெல்லாம் இந்தத் திரிபு வேலை, திருட்டு வேலை, மோசடி வேலை, ஏமாற்று வேலை-களைச் செய்கின்றனர்.

தற்போது அதிகப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் திட்டங்களை, கொள்கைகளை, விருப்பங்களை, நோக்கங்களை-யெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாய் முயற்சி செய்கின்றனர்.

அவ்வகையில் தங்கள் மொழியான சமஸ்கிருதத்தை புகுத்தத் துடிக்கின்றனர். இடஒதுகீட்டை ஒழிக்க முயல்கின்றனர். தங்கள் புராணங்களை இதிகாசங்களை கீதையை பாடநூல்களாக்கி பள்ளிக் கல்லூரிகளில் திணிக்க முயலுகின்றனர்.

தற்போது இந்திய வரலாற்றையே திரித்து, தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள திட்டம்தீட்டி செயலில் இறங்கியுள்ளனர்.

இந்தியா தமிழர் (திராவிடர்) நாடு இங்கு பேசப்பட்டது தமிழ்மொழி என்ற தொன்மை உண்மைகளை மாற்றி, இது ஆரியர் நாடு, சமஸ்கிருதமே மூலமொழியென்று வரலாற்றை மாற்றி எழுத, வரிந்து கட்டி புறப்பட்டுள்ளனர். அதற்கான செயல்களையும் தொடங்கிவிட்டனர்.

இந்தியாவின் வரலாற்றுக்கு அடிப்படை ஆதாரமாய் நின்று ஒளிகாட்டும் சிந்து சமவெளி நாகரிகத்தை திரித்து மறைத்து, சரஸ்வதி நதி நாகரிகம் என்ற கற்பனையை வரலாறாக மாற்ற திட்டம் தீட்டியுள்ளனர்.

சிந்துவெளியில் கிடைத்தத் தடயங்கள் அனைத்தும் அது திராவிடர் (தமிழர்) நாகரிகம் என்பதையும், தமிழர்களே இம்மண்ணின் மைந்தர்கள் என்பதையும் அய்யத்திற்கிடமின்றி உறுதியாய் நிறுவி நிற்கின்றன.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆரியர்கள், அந்த முடிவுகளை எப்படியெல்லாம் சிதைக்கலாம் என்பதில் பலமுறை முயன்று தோற்றுப்போயினர்.

எருது அடையாளத்தை குதிரையாகக் காட்டினால் தமிழர் நாகரிகத்தை ஆரிய நாகரீகமாக மாற்றிவிடலாம் என்று முயன்று மூக்குடை பட்டு மூலையில் முடங்கினர்.

தற்போது ஆட்சி அதிகாரம் இருப்பதால் மீண்டும் வரலாற்றைத் திரிக்க முயலுகின்றனர்.

அயல்நாட்டார் ஆய்வை ஏற்கமுடியாதாம்!

சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று உறுதி செய்தவர்கள் வெளிநாட்டார். அவர்கள் உண்மையை மாற்றிக் கூறிவிட்டனர். அதை ஏற்க முடியாது என்று அயோக்கியத்-தனமான, பித்தலாட்டமான கருத்துக்களை அடாவடித்தனமாகக் கூறி வரலாற்றைப் புதிதாக நாம் எழுதவேண்டும் என்கின்றனர்.

இந்தியாவின் பூர்வீகக்குடி தமிழர் என்பதும், தமிழ் தான் மூல மொழியென்பதும் உலகின் பலப்பகுதியிலிருந்தும் வந்து ஆய்வு செய்த அறிஞர்களின் ஒட்டு மொத்த ஒப்புதலாகும். இந்தியத் தொல்லியல் அறிஞர்களும் வரலாற்றாய்வாளர்களும் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். உண்மை நிலை இப்படியிருக்க, அடாவடித்தனமாக இதை ஏற்கமுடியாது, புதிதாக வரலாறு எழுதப்பட வேண்டும் என்று ஆரியர்களும் அவர்களின் கைக்கூலிகளான காவிக்கொடி கைக்கூலிகளும் முழங்குகின்றனர்.

டில்லி கருத்தரங்கம்

டில்லிப் பல்கலைக்கழகமும், தேசிய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சமஸ்கிருத ஆய்வு மய்யமும் இணைந்து 3 நாள் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.

இதில் சமஸ்கிருத ஆய்வாளர்கள் மற்றும் வேத ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே சரஸ்வதி நாகரீகம் இருந்ததாகவும் ஆனால் மேலை நாட்டு ஆய்வாளர்கள் இதை மறைத்து சிந்து சமவெளி நாகரிகத்தை முன்னிலைப்படுத்தி, சரஸ்வதி நாகரிகத்தை உலகத்தவர் பார்வையிலிருந்து மறைத்து விட்டனர் என்று அப்பட்டமான ஒரு கற்பனைக் கருத்தை உண்மையாகச் சித்தரித்து அறிக்கையாக அளித்துள்ளனர்.

சரஸ்வதி சமவெளி நாகரிகம்?

வேதகாலத்தில் மெஹெர்கர் நாகரீகம் 7000 ஆண்டு பழமையானதாகும். தற்போது கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள ராக்கிகடி, பிரானா அரியானாவில் உள்ள சந்தாயன், டப்பன் ஆகிய இடங்கள் குறித்து ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சரஸ்வதி நதி ஓடியதாக வேதத்தில் 2449 இடங்களில் கூறப்பட்டுள்ளது. இது சரஸ்வதி மற்றும் சிந்து நதிக்கு இடைப்பட்ட பகுதியாகும். ஆனால் வேதத்தில் சிந்து நதி பற்றி குறைவான குறிப்புகளே உள்ளன. ஆகவே நாம் சிந்து சமவெளி நாகரிகம் என்பதை சரஸ்வதி சமவெளி நாகரிகம் என்றுதான் கூறவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஸ்மிருதி இரானி கோரிக்கை:

மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டில்லியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பேசும்போது நமது வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது என்று கூறினார். அவர் கூறி ஓராண்டு முடிவதற்குள் வரலாற்றை மாற்ற முயற்சிமேற் கொண்டுள்ளனர்.

உண்மையென்ன?

சரஸ்வதி நாகரிகம் என்று கூறி இவர்கள் காட்டும் இடங்கள், பிரான்ஸைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்-பட்ட பகுதிகள் 1974இல் ஜர்ரிகேயும் (யிணீக்ஷீக்ஷீவீரீமீ) அவரது குழுவினரும் இப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகள் இங்கு வாழ்ந்த மக்கள், தெற்காசியாவில் பரவி வாழ்ந்த தொன்மை நாகரிகத்திற்குரிய (திராவிட நாகரிகம்) சான்றுகளே இங்கும் கிடைத்துள்ளன என்று உறுதி செய்துள்ளனர். ஆக எங்கு எவர் ஆய்வுசெய்தாலும் அது தமிழர் நாகரிகம் என்பதை மறுக்க இயலாது!

லலித்கலா அகாடமி ஆய்வறிக்கை:

இந்த அறிக்கை, ரிக் வேதம் முதல் ஒன்பது பழைமையான வேதங்களில் கங்கை நதி பற்றி குறிப்பே இல்லை என்கிறது. ஆனால், ஆரிய பார்ப்பனர்களோ அதைப் புனித கங்கை என்று கூறி பிழைப்பு நடத்துகின்றனர்.

இந்த அகாடமியின் ஆய்வு 10,000 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் இந்தியப் பகுதியில் பரவி வாழ்ந்ததை உறுதி செய்கிறது. பிற்காலத்தில் வந்த ஆரிய நுழைவால் திராவிடர் தெற்கு நோக்கி நகர்ந்தனர் என்கிறது.

கோல்வால்கரின் கோல்மால்:

1939ல் கோல்வால்கர் எழுதிய நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்ற நூலில் இந்துக்களாகிய நாம் – இந்த நிலத்தில் எட்டு அல்லது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அயலவர் படையெடுத்து வந்து கைப்பற்றுவதற்கு முன்பிருந்தே மறுக்க முடியாத வரலாறாக நாம் இருந்து வருகிறோம். இந்துக்களின் நிலம் இந்துஸ்தான் என்று அறியத்தக்கதாய் இருந்தது என்கிறார்.

இவர் கூறுவது அப்படியே அப்பட்டமான பொய். இந்து , இந்து மதம் என்பதெல்லாம் அயல்நாட்டார் இட்ட பெயர்கள் சிந்து நதியின் பெயர் அப்படிப்படையிலே சிந்து ஹிந்து என்று திரித்து அழைக்கப்பட்டது. மாறாக 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஹிந்து தேசமாக இந்தியா எப்போதும் இருந்ததில்லை.

அதேபோல் ஆரியர்களும் இந்தியாவின் தொன்மைக் குடிகள் என்பது அசல் பொய். ஆரியர்கள் வந்தேறிகள் என்பதற்கு ஆயிரமாயிரம் அசைக்க முடியாத சான்றுகள் உள்ளன.

ஆரியர்கள் அயல் இனத்தார், அயல் நாட்டார் என்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக, எத்தனை பித்தலாட்ட முயற்சி செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வருகின்றனர்.

நிலம் நகர்ந்ததாம், மக்கள் நகராமலிருந்தார் களாம்!

இந்த அகா சுகா பேர்வழி ஆர்ட்டிக் மண்டலம் குறித்து ஒரு கற்பனைக் கருத்தையும் வெளியிட்டார்.

ஆர்ட்டிக் மண்டலம் என்பது ஆரம்பத்தில் பீகார் மற்றும் ஒரிசா பகுதியில் இருந்தது. பின்னர் அது வடகிழக்கில் நகர்ந்து, பின்னர் சிலகாலம் மேற்காக நகர்ந்து, பின் சில சமயங்களில் வடக்கே நகர்ந்து பின் இன்றைய நிலைக்கு வந்தது.

ஆர்ட்டிக் மண்டலம் தான் நகர்ந்ததே ஒழிய நாம் அதேயிடத்திலேதான் இருந்தோம். என்கிறார்.

இதை விட உலகமகா அயோக்கியத்தனம் இருக்க முடியுமா?

நிலம் நகர்ந்ததால் அதிலுள்ள மக்களும் மரம், செடி, விலங்கு பறவையெல்லாம் தானே நகரும்? நாம் மட்டும் நகராமல் இந்தியாவிலேயிருந்தோம் என்றால் எப்படி?

நிலம் இல்லாமல் அந்தரத்தில் தொங்கினார்களா? ஆரியர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதை மறுக்க, நிலம் தான் வடக்கிலிருந்து வந்தது. ஆரியர்கள் அல்ல என்று ஒரு புதிய புருடாவை விட்டு புனையப் பார்க்கிறார்கள் வரலாற்றை!

வரலாற்று ஆய்வுகளை திருத்தும் மோசடி:

நேரு நினைவு நூலகத்தின் தலைவரான மகேஷ் ரங்கராஜன் திறமைவாய்ந்த வரலாற்று ஆய்வாளர், இந்த அரசு கொடுத்த நெருக்கடியால் அவர் பதவிவிலகியுள்ளார். அவர் போன்ற தலைசிறந்த ஆய்வாளர்கள் தங்கள் பதவியைத் துறப்பது இந்தியவரலாற்று ஆய்வுத் துறைக்குப்பெரிய இழப்பாகும், அதே நேரத்தில் மத்தியஅரசு தலைசிறந்த வரலாற்று ஆய்வுகளை புறக்கணித்துவிட்டு, இந்துத்துவக் கொள்கைகளை பரப்பும் ஒரு பிரச்சாரத் தளமாக வரலாற்று அறிஞர்களையும் அவர்களது ஆய்வுகளையும் மாற்றப்பார்க்கிறது, இந்த அரசின் கொள்கையும் அதுதான்.

கடந்த ஆண்டு இந்திய வலாற்று ஆய்வு மையத்தில் பல நல்ல வராலாற்று அறிஞர்களின் படைப்புகள் திருத்தப்பட்டதே அப்போதே நேருநினைவு நூலகம் போன்ற தலைசிறந்த வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தளமும் இந்துத்துவக் கொள்கைகள் திணிக்கப்படும் என்று உறுதியாகிவிட்டது.

ஆக, தங்களுக்குச் சாதகமாக, வேண்டியதை-யெல்லாம் புராணங்களாக (கற்பனையாக) எழுதிக் கொண்டது போல, தங்களுக்குச் சாதகமாக வரலாற்றையும் எழுதி மாற்ற முயல்கிறார்கள்.

கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், இந்தியாவெங்கும் வாழும் திராவிட இன மக்கள் சுருங்கச் சொன்னால் ஆரியர் அல்லாத மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் திரண்டெழுந்து இந்த மோசடிச் செயலை முறியடித்து, உண்மை வரலாற்றை உறுதியாய் நிலை நிறுத்த வேண்டும்.

விழிப்பாய் இருந்தால் வாழ்வோம்! இல்லையேல் வீழ்வோம் என்பதே இன்றைய யதார்த்த நிலை. முற்போக்கு சக்திகள் முனைப்புடன் இந்தச் சதியை முறியடிக்க வேண்டும். முறியடிப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *