பாதல் சர்க்கார் (15.7.1925 – 13.5.2011)

மே 16-31

வீதி நாடகத்தின் தந்தை

மே-13 அன்று தேர்தல் நாடகத்தின் இறுதிக் காட்சிகள் வெகுவேகமாக அரங்கேறிக் கொண்டிருந்த அதே வேளையில், அரங்கங்களை விட்டு, நாடகங்களை வீதிக்குக் கொண்டுவந்த ஒரு மகத்தான கலைஞனின் இறுதி நொடிகள் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

நவீன சிந்தனையையும், முற்போக்குக் கருத்துகளையும் மக்களிடம் எளிய முறையில் எடுத்துச் செல்ல, முற்போக்கு இயக்கங்கள் பயன்படுத்தும் கலை வடிவங்களில் மிக முக்கியமானது வீதி நாடகம்.  திராவிடர் கழகம், பொதுவுடைமை இயக்கங்கள் உள்பட இந்தியாவில் எங்கெல்லாம் முற்போக்குக் கருத்துகளுடன் வீதி நாடகங்கள் நடக்கின் றனவோ அங்கெல்லாம் நினைவுகூறப்பட வேண்டியவர்தான் பாதல் சர்க்கார்.

வங்காள நாடக உலகில் தோன்றி, முற்போக்குக் கருத்துகளைச் சொல்லிவந்த பொதுவுடைமைத் தோழர்கள்கூட அரங்கங் களிலேயே தங்கள் நாடகங்களை மேடையேற்றிக் கொண்டிருந்தபோது, அவற்றை வீதிக்குக் கொண்டுவந்து, அதற்குள் கலையைப் புகுத்தி, உள்ளடக்கத்துக்கும் கருத்துகளுக்கும் தரும் அதே முக்கியத்துவத்தை, நடிப்புக்கும், புதுமைக் கலைத் தன்மைக்கும் தரவேண்டும் என்பதைத் தீவிரமாய் வலியுறுத்தியவர் – பின்பற்றியவர் – வழிகாட்டியவர் பாதல் சர்க்கார்.

ஒப்பனைக்கும் கலை அலங்காரத்துக்கும் மற்ற மேடை நாடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அதை மாற்றி நடிகனைக் கதாபாத்திரமாக மட்டுமல்லாமல், அரங்கத்தின் ஒவ்வொரு அங்கமாகவும் அமையும்படி, நாடக வடிவத்தை ஆக்கியவர்.  1980 களில் சோழ மண்டலம் கிராமத்தில் பாதல் சர்க்கார் நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றவர்கள்தான், பின்னாளில் தமிழின் மிக முக்கிய நாடக ஆளுமைகளாகத் திகழ்ந்துவரும் மு. இராமசாமி, பிரபஞ்சன், கே. ஏ. குணசேகரன், அக்னிபுத்திரன், வெளிரங்கராஜன், பரீக்ஷா ஞாநி உள்ளிட்டோர் ஆவர்.

மக்கள் உரிமைக்குக் களம்காணும் இயக்கங்களும், இலக்கிய ஆர்வலர்களும், நிகழ்த்து கலை வல்லுநர்களும் இன்று பின்பற்றும் நாடகமுறையை வடிவமைத்துத் தந்த பாதல் சர்க்காரை வீதி நாடகத்தின் தந்தை என்று போற்றுகிறது நாடக உலகம்.  அந்த மக்கள் கலைஞர் மே – 13, 2011 அன்று உடலால் நீங்கினார்.  ஆனால், உரத்துக் குரல் எழுப்பி மக்களை நாடகம் பார்க்க இழுக்கும் ஒவ்வொரு கலைஞனின் அசைவிலும் வாழ்கிறார் பாதல் சர்க்கார்.

– சமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *